Pages

Sunday, March 20, 2011

சொற்களின் மீது அதிகாரத்தை ஏவுதல்.




மறைக்கமுடியா சொற்களை
கொலை செய்ய காரணங்கள் இல்லை
சொற்களை
கொலை செய்யவோ
தற்கொலை செய்யத் தூண்டவோ முடியாது
சொற்களை நக்கியுண்ண முடியாது
சொற்களை அருந்தவோ புணரவோ முடியாது
முடியும்
சொற்களால்...


சொற்களை
எழுதி வைப்பது
வார்த்தைகளை
வாக்கியங்களாக்குவது
கடவுளர்களின் வேலை

எழுதுபவன் கடவுள்
எதையாவது
பொய்யை எத்தனை முறை எழுதி அழித்தாலும்
தற்காலிக உண்மைகள் முளைத்துக்கொண்டேதானிருக்கும்

எழுதுகிறவன் கடவுள்
வேள்வியோ
பூசாரித்தனங்களோ
கோமணத்துணியில் கிழித்தெடுத்து
நாறாக்கப்பட்ட
பூணூலோ இல்லாத
அம்மணமான
மயிரடர்ந்த சிக்குடைய கடவுள்
அம்மணக்குண்டி கடவுள்

மூக்கில்
சீந்துவதற்கு தயாராக
எந்நேரமும் ஒழுகிக்கொண்டிருக்கும் மூக்குடைய
காலை மாலை இருவேளை
அல்லது
மூளைக்கொதிப்பால் குதம் இறுக
மலம் கழிக்க இயலாது முக்கும் கடவுள்

வாசக வாசகிகளை
அதட்டும்
கெஞ்சும்
வேண்டுகோள் வைக்கும்
கடவுள்


அதிகாரத்தை
சொற்களில் ஊதி மந்திரமென மாற்றி
அரசு தன் ஊத்தை வாயால்
சட்டங்களாய்
கட்டளையாய்
ஜனங்களின் முன் அள்ளியெறிகையில்

கால்களை அகல ஊன்றி
மக்களுக்குதவாத வார்த்தைகளை
சட்டங்களெனச் சொல்லாதே...
அவை
மலந்துடைக்கும் காகிதங்களெனச் சொல்
என தொண்டை கிழிய
கதறும் கடவுள்

மரங்களை கூர்முனை கொண்ட உருளைகளாகச்  செதுக்கி
இற்றுப்போய் துருப்பிடித்த
மற்றும் செலுத்துவதற்கு கடினமான
அரசியலாளர்களின் குதத்தில்
மக்கள் வியர்வை
வழிய
வழிய
ஐலசா பாடி  திணிக்கமுடியாது தத்தளிக்கும் போது

ஆப்புகளை
காகிதங்களாக்கி
எழுத்துக்களைத் தீட்டி
எதிர்பார்க்காதவாறு செலுத்தும் கடவுள்கள்

அரசியலுக்கு
அரசியலாளர்களுக்கு எதிராய் எழுதுபவன் கடவுள்
கடவுளுக்கு எதிராகவும்
சில சமயம்
தனக்கெதிராகவும்
எழுதுபவன் கவிஞன்.

[மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு]

1 comment:

  1. //அரசியலுக்கு
    அரசியலாளர்களுக்கு எதிராய் எழுதுபவன் கடவுள்
    கடவுளுக்கு எதிராகவும்
    சில சமயம்
    தனக்கெதிராகவும்
    எழுதுபவன் கவிஞன்.//
    fantastic

    ReplyDelete