Pages

Thursday, July 30, 2015

கொலைக் குறிப்பேடு



ஒரு மனிதன் கயிற்றின் முன் நிராதரவாக நிற்கிறான்
கழைக்கூத்தாடியைப் போல் நீதி அங்கும் இங்கும் ஊசாலடிக்கொண்டிருக்கிறது
பார்வையாளர்களுக்கு
நடந்து போகும் மனிதனை விட
கயிறே பார்வையை நிறைத்திருக்கிறது
ஒரு மனிதன் முறுக்கிய கயிற்றுக்குத் தன் தலையைக் கொடுக்கும் போது
தான் மனிதனாக பிறந்ததற்கு இது வேண்டும் என நினைக்கலாம்
தான் கடந்து போகாத பாதையில்
தன் தடத்தைப் பதித்தவனின் முகத்தை நினைக்கலாம்

அரசு ஒரு கழுதை
அதற்கு உண்ணக் காகிதகங்கள்தான் வேண்டும்
என்கிற பழமொழியை நினைவு கூறலாம்

தலையை மூடிய கறுப்புத் துணிக்குள் ஒளிமிகுந்த வார்த்தைகளை அவன் யோசித்துக்கொண்டிருக்கலாம்
அரசு என்ற ஒரு சொல் உண்மையில் குமட்டலை ஏற்படுத்துகிறது
அரசு
நீதியின் பெயராலோ சத்தியத்தின் பெயராலோ அல்ல
சக மனிதனின் பெயரால்
இருக்கவேண்டும்
அவ்வளவு நிச்சயமான தன்மையுடன்

மனிதர்களிடம் பேசவிரும்பாத அரசு
விசாரிக்கவும் ஆணையிடவும் விரும்பும் அரசு
எப்படி மனிதர்களை ஆளும் தகுதி கொண்டதாக இருக்கமுடியும்

இறுதி நொடியில்
மறுக்கவே முடியாத நினைவைப் போல்
அவனது விழிகளை ஈரப்படுத்திக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்
தன் நிழலைப் போல விட்டுச் சென்ற
அவனது குழந்தைகளுக்கு காரணம் சொல்லும்
தூக்குத் தண்டனைக் குறிப்பேடுகளில்

தூக்குத் தண்டனை என்பது
நீதியின் பெயரால் என்ற வார்த்தையால் இணைக்கப்பட்டு
அவர்களுக்குச் சொல்லக் கூடாது
கடவுளின் பெயரால்
என்ற வார்த்தைகளையும் நீக்கவேண்டும்
முடிவாக
ஒரு மனிதனைத் தூக்கிலிட விரும்பிய அரசு
அவர்கள் வாழும் இம் மண்ணில்தான் இருக்கிறது என்பதையும்…


இறுதியாக கயிற்றின் முன் நிற்பவன்
தன்னைப் போலவே இருக்கும் மக்களுக்குச் நினைவூட்ட விரும்புவதெல்லாம் ஒன்றேதான்
மக்களே. அரசு உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறது
அமைதியாயிருங்கள்

பிணத்தைப் போல அவ்வளவு விரைப்பாக

4 comments:

  1. Sindhikka vaikkum visualisation ! Arumai .

    ReplyDelete
  2. arumaiya irukku
    மக்களே…. அரசு உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறது
    அமைதியாயிருங்கள்

    பிணத்தைப் போல அவ்வளவு விரைப்பாக

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன் கருணாநிதி

      Delete