Monday, September 12, 2016

நகரும் பாதங்கள்.

புத்தனின் மதுக்குடுவை

உபாயா கவ்சல்ய. 



இதுவுமது


பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம் புத்தனே…
வேடர்கள் தங்கள் வில்லை அணைத்தவாறு உறங்கும் நேரம் புத்தனே….
நண்பர்கள் பிரியமான எதிரிகளைக் கனவில் காணும் நேரம் எனதருமை புத்தனே….
துக்கம் தன்னுடலை பிம்பமாக்கும் பிரிய இரவிது புத்தனே.

‘அறிந்திருக்கமாட்டீர்கள் பிக்குகளே…’ குரல் மரங்களை அசைத்துப் பின் திசைகளை அடைக்கிறது.

ஆம் நான் கோதமன்.  சுத்தோதனனின் இனிய புதல்வனும், பார்க்கும் கணம்தோறும் மனதில் மாயங்களை ஏற்படுத்தும் பேரழகி யசோதரையின் கணவனும்.  தரை தொடாது மேகத்தில் மிதக்கும் பருவத்திற்குரிய சிசு ராகுலனின் தந்தையுமாவேன்.  நான் ராகுலனின் தந்தை.  ஆம் அழியப்போகிறது.  அனைத்தும் தலை உதறி நிதானத்திற்கு வர இக்கோதமனுக்கு நிதானம் வரவில்லை.  அறைச் சுவர்கள் ஈரத்தைப் போர்த்தி அமைதியாய் இருந்தது.  ஒருமுறை இவற்றை நான் சபித்திருக்கிறேன்.  விழிகளை மூடி நிதானங்கொள்ளும் சுவர்களை யார்தான் விரும்புவார்கள்.  ஆம் கோதமா… அறிந்திருக்கமாட்டாய்.  அறிந்திருந்தாலும் நடித்திருப்பாய்.  நடிப்பின் கைகளை உடல் அழுந்தப்பற்றியவன்தானே நீ… மௌனம் உருக்கொண்டலைந்து உன்னைப் பிரசவித்ததென உன் பின்னால் சுற்றும் கனத்த பிக்குகளின் வார்த்தைகளுக்கு நீ புன்னகையைக்கூட மௌனமாக்கிச் சிரிக்கலாம்.  அவர்களின் வலுத்த கேள்விகளை அவர்களுக்குள்ளேயே புதைத்துவைக்க உதவி செய்யலாம்.  ஆம் புலன்களே அறியாது குழி தோண்டக் கூடியவனல்லவா நீ.

யசோதரை
அழகிய மௌனம்
இல்லையா என் ததாகா…
ஆம்
பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம்

ததாகா…
இதோ அறிமுகமாகிறது முதல் சித்திரம்

தாழ்ப்பாள் திறக்கும் ததாகன்.

கோதமா.. கடும் பனியில் நிலவு தகிக்க குளிரில் உறைந்திருக்கும் தாழ்ப்பாளை நீக்கும் உன் விரல்களை நினைக்கிறேன்.  ஆம் அதே விரல்கள்தான் இன்று ஞானத்தைச் சுட்டும் குறி நிலைகள்.  ஆச்சரியம்.  கொங்கைகளை மறந்த பெண்போல.  ஆம் யசோதரை துயில் கொண்டுள்ளாள்.  அப்படித்தானே தாழ்ப்பாளை நீக்கும் நொடியில் நினைத்துக்கொண்டாய்.  இருக்கலாம். பிரபஞ்சத்தில் ஞானத்தைத் தூங்கவைத்து விழிப்பு நிலை தேடி வெளியே சென்ற நீ வேறு எப்படி நினைக்கமுடியும். அவள் தூங்குவதை உன் விழிகள் உன் விருப்பப்படி நம்பிவிட்டன.  உடன்பட்டாய்.  அதை நீயே பார்த்துக்கொண்டிருக்கிறாய். 

முட்டாள்..  ஒரே ஒரு புன்னகை செய்வதன் மூலம் யசோதரை அன்றிரவே..அந்நொடியே உனை கொலை செய்திருக்கலாம்.  உன் பயம் உன் உடலை எப்படிக் கவ்விப்பிடித்தது என்பதை உன் புலன்கள் அறியும்.  பாதங்களை இறுகப்படித்து தயார் செய்து தொடைகளைத் தளரவிட்டு நடுங்கும் உன் விழிகளால் கட்டிலை நோக்கியது என் ஞாபகத்தில் இருக்கிறது.  உனக்கு… தயவு… செய்து வெட்கப்படாதே.. வெட்கம் அறியாமையின் குழந்தை.  நீயல்ல அது.  அவள் உன்னைத் தப்பிப்போகவிட்டாள்.  அதே.  தப்பியே போகவிட்டாள்.  அவளுக்குத் தெரியாதென்று எண்ணிய உன் முட்டாள்த்தனத்தின் மீது என் வெறிபடர்ந்த முத்தமொன்றை பரிசாகத் தருகிறேன்.  சஞ்சலம்தான் மதுக்குடுவைக்கு ராஜபாட்டை.  இருக்கட்டும்.

அவள் பெண். யசோதரை.

யசோதரை தன்னருகில் உன் மிச்சமான வடிவில் துயிலும் ராகுலனின் சிறு தோள்கள் மீது தனது மூச்சுவிடும் தூரத்தைக் கணக்கிட்டு துயின்றுகொண்டிருந்தாள்.  இல்லை… அது நீ நினைத்தது.  மாறாய் அவள் விழித்திருந்தாள்.  உன் பெருமூச்சின் தகிப்பை அறிந்த அக்கைகள்தான் நீ படுக்கையைவிட்டு விலகிய தருணத்தைக் காட்டிக்கொடுத்தது.  ஆனால் அதற்கு முன்னரே கணித்துவிட்டாள்.  திடுக்கிட்டு விழி சுழற்றும் கோதமா எல்லாம் முடிந்த விசயம் என்று நீ எண்ணிய தருணத்தில் விழுந்த முதல் சவுக்கடி இதுதான்.  அவள் உன் புணர்ச்சித்துணை இல்லையா கோதமா. 

ஆம். கோதமா…

உனக்கும் யசோதரைக்கும் நடந்த அன்றைய இறுதிப் புணர்ச்சியில், நீ கழித்த இந்திரியத்தில் தனிமையின் பெரும் புழுக்கள் ஊர்ந்ததை யசோதை அறிவாள். 

தூங்கும் பெண்ணாய் அவளை கற்பனை செய்த உன் விழிகள் அதை அறியமுடியாதபடிக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தன.  தாழ்ப்பாளில் விரல்களைப் பதித்து விழிகளை யசோதரையின் முகத்தை இறுத்திக்காட்சியாய் பர்த்தாய்.  துக்கத்தை இமைகளாக்கி கருவிழிகளை குரலாக்கி அதை இடதும் வலதும் உருட்டிக் கொண்டிருந்த நீ அவள் விழிப்பை அறிய வழியில்லாது போயிற்று. 

எல்லாம் உன் அறீவின் கப்பில் விளைந்த நீதி.  நீதி தரும் எண்ணற்ற சொற்கள்… இறூதில் வலு மௌனம்.  இரண்டன்றி வேறொன்றை உன்னால் எப்படி நிகழ்த்தமுடியும்.  உன்பயணம் போலிமௌனத்தை தொடமுயற்சிக்கும் எதிர்கால விரல்களுக்காக அவள் தன் மௌனத்தை நம்பியிருந்தாள்.  பித்துப்பிடித்தலையும் பாதங்கள் உனக்கென்பதை தன் முதல் முத்தத்திலேயே அறிந்தாள்.  முத்தமிடுகையில் உன் கால்கள் திசைகளை ஒருபோதும் நம்பாது தவித்தபடியிர்ருப்பை அவள் அறிவாள்.  அதே பாதங்கள் துணுக்குற்றுத் தயங்கி நடுங்குவது கண்டு அவள் தன்னை எழுப்பிக்கொள்ளாது தூங்கும் நடிப்பை தன் உடலுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.  ஒப்பற்ற நாடகத்தின் அரங்கத்தில் நுழையப்போகும் உனக்கு அவளின் அசையாத உடல் உன்னை ஏமாற்றியது.  அவள் நீ நினைத்தபடியே தூங்குகிறாள் என உன் நம்பிக்கை உனக்கு தைரியம் கொடுத்தது.  முதலும் இறுதியுமாய் உன்னை மீறி…  உன் உடலை மீறி… யசோதரையாகிய அவள் கோதமனின் மனைவியாகிய அவளறிந்த தன் உடலை தன் செய்கையை மீறிப் புத்தனாகப் போகும் ஒருவனின் நடிப்பை அரங்கேறவிட்டாள்.  நீ விலகி அறைக்கதவை மூடுகையில் ஒரு முத்தம் ராகுலனின் விழிகளில் பதிந்தது.  உன் பாதங்கள் சந்தேகம் பற்றிப் பின் தொடர ஆரம்பித்தது அங்கேதான் யசோதரையை பிர்யும் கணத்தில் என் கண்ணில் நிழலாடியது என்ன… தீராக்காமத்தின் பெருவிரலா என்ன?


ஓவியம்;


புத்தனின் மதுக்குடுவை: சர்க்கம் 9

இதுவுமது

பித்தேறிய சொற்களின் மீது நின்றுகொண்டு மூத்திரம் பெய்யும் தூர்த்தன்.



 " கனவு ரணங்களைப் பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. அல்லது தனிமைகளால் ஆன தனிமை. நாளும் புண்களை நக்கிக்கொண்டிருக்கும் ஊதாரி,  அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கியூரும் பிராணி. கடவுளைச் சாத்தான் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி. "

சித்தார்த்தன் தன் நெடுவழிப் பயணத்தைத் தொடங்குகையில், தூர்த்தன் வஞ்சனையேறிய புன்னகையோடு வழிமறித்தான்.சித்தார்த்தன் தன் காமத்தை சதையில் ஊறும் தினவாய்  கண்டுகொண்டான். தூர்த்தன் ஞானம் பற்றிய முதல் கேள்வியைத் தொடுத்தான். பற்று எதிலிருந்து தொடங்குகிறது. எதில் முடிவடைகிறது. சித்தார்த்தன் புன்னகை பூக்கும் முன், தூர்த்தன் வழிசெல்லும் யுவதியின் தனங்களை எச்சில் ஒழுகப் பார்த்தான். சித்தார்த்தப் புன்னகை சீரழிந்தது. தூர்த்தன் மிக மெதுவாய்ச் சொன்னான். சித்தார்த்தனே.. உனது ஞானம் சதை மறுத்த ஒன்று. நான் சதைகளால் நாளும் ஞானத்தை மெறுகேற்றி வருபவன். வெற்றுப் புன்னகையால் உன் வார்த்தையின் வாட்களை ஒளித்து வைக்காதே.  வீசு ஒளி சிதற. நான் உன் எதிரியல்ல, இருப்பினும் எனக்கு சொற்கள் இருக்கிறது. தூர்த்தனின் பார்வையில் காமம் களங்கமற்று தூய ஒளியை உமிழ்வதைப் பார்த்தபடி சித்தார்த்தன் சொன்னான். தூர்த்தரே.... சதை தர்க்கத்தையும், தத்துவத்தையும் நாளும் மறுக்கிறது. சொற்களை நம்பும் உடல் தன்னை ஏமாற்றிக்கொள்ளுகிறது. சதையை சொற்களை வைத்து அறுப்பவன் ஞானவானாகிறான். புன்னகையோடு தூர்த்தன்… அப்படியென்றால் என் ஞானத்தை எதனடிப்படையில் விளக்குவாய் சித்தார்த்தனே. சித்தார்த்தன் மிக அமைதியாக அமரலாமா எனக் கேட்க, தூர்த்தன் எச்சில் வடிக்கும் புன்னகையோடு ஒரு சதை அமரசொல்கிறது என்றான். 


சித்தார்த்தனை நோக்கி தனது தூர்த்த விரலை நீட்டி, நீ அறிவாய் சித்தார்த்தனே ,சதைகள் ஞானத்தை கடைவாயில் அரைத்துக் கொண்டிருக்கையில், வழியும் எச்சிலில் எதிர்பால் ஊடுருவுவதை. உன் ஞானம் காமத்தை அறிய மட்டுமே நினைக்கிறது. துறக்க அல்ல, காமத்தை அறிந்தவன் மட்டுமே காமத்தை துறக்க முடியும், என்று நீ உன் கருப்பு விழியைச் சுற்றிச் சுழற்றி சொல்லலாம். ஆனால் அறிதல் என்பது இறுகக்கட்டியெறியப்பட்ட சொற்கள். அவிழ்த்தால் அர்த்தங்கள் தங்களது காலத்தை இழந்து, கலைந்து ஓடும். உன் மௌனத்தை, புன்னகையை, சொற்களை சதைகளால் தீர்மானிக்கும் அலகு காமமே.  காமம் மட்டுமே. 


உடல்களை மறுத்து நீ ஓடியொளியமுடியாது. உன்னிடம் இருக்கும் உடலை மட்டுமே நீ சோதிக்க முடியும்.  உடலையே அல்ல, தன்னுடலில் ஊறியேறும் காமத்தை அறிந்தவனே அதை மற்றொரு உடலில் காணவிழைகிறான். சொற்கள் ஆண் பெண் பேதம் விதிக்கிறது. ஈருடல் அதை கேளிக்கையாக்குகிறது. பேதங்களை சொற்கள்தான் உண்டு பண்ணுகின்றன. காமத்தை அல்ல. எந்த வார்த்தையில் விசையேறித் தைக்கலாம் என்பதை இவ்வுடலான அம்பு அறியும்.


 கேள் சித்தார்த்தனே, சலனம் அது குறையறிதல். காமத்திற்கு சலனம் ஒரு பொருட்டேயல்ல. அது ஒரு வெறுஞ்சொல். அர்த்தத்தைத் தேடி அலைபவன் உடலை இழக்கத் தொடங்குகிறான். காமத்தை அல்ல. இடம், பொருள், ஏவல் மூன்றையும் காமம் நிறைத்து வைத்திருக்கிறது. ஒரு சொல் இத்திசையில் சரியாகச் செலுத்தப்படும், எனும் கவிஞனைக் காமம் தன் அருகதையால் வெல்கிறது. சொற்கள் அர்த்தங்களை இழக்கும் அல்லது இழக்க வைக்கும். காமத்தை நீ விளக்கிவிட, உனக்கு உன் சொற்கள் துணைக்கு வராது. தூர்த்தன் நான்., எனக்கு காமம் ஒரு கருவி. நான் என்னையே வெல்ல நினைப்பது என்பது எனக்கு முன்னால் இருக்கும் உலகை, உன்னையும் சேர்த்து வெல்லுவதுதான். நான் அர்த்தங்களை மறப்பது, அல்லது ஏற்பதும் இதனால்தான் நிகழ்கிறது. என்னை வெறுப்பதற்கு நான் உன்னை இந்த உலகை வெறுக்கவேண்டும். என்னைச் சுற்றி எதுவுமேயில்லை. ஆம் சித்தார்த்தனே வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்தான் புலன்களை காற்றில் அலைக்கழியும் பாய்மரமெனச் செலுத்துகிறது. சொற்கள் தங்கள் அர்த்தங்களை என்று ஏமாற்றுகிறதோ அன்று சூன்யம் மிக சரியான அலகில் உடலை வந்தடையும். தூர்த்தன் எனக்கு என்னுடலில் காமம் எங்கு குடி புகுகிறது என்று நான் ஒரு நாளும் அறிய முயன்றதில்லை. அமைதி. காமம் என்னை தின்றுவிட்டுப்போகச் சம்மதிக்கிறேன். மிருகங்கள் சொற்களை உருவாக்குவதில்லை. சொற்கள் மனிதர்களை உருவாக்கிவிடுகிறது. நீ ஞானம் எனும் சொல்லைத் தேடியலைகிறாய் அது மௌனம் எனும் சொல்லில் கொண்டு போய் விடுகிறது. பாத்திரம் அறியட்டும் சித்தார்த்தரே மழைநீரை. நீ உன் கரத்தால் அதை ஏந்திப் பிடித்தலையாதே. சொற்களைக் குவித்து வைத்து, முத்தமிட்டு, அவற்றின் அர்த்தங்களை நீ செலுத்த முனையாதே, நீ செலுத்தும் அர்த்தங்கள் அக்கணமே நிலைத்து நிற்கும். பின் அவ்வர்த்தத்தை விளக்க வேறொரு சொல்லைத் தேடி இட்டு நிரப்புவாய்.

சொற்கள்….சொற்கள்…பித்தேறிய சொற்கள். சொற்களின் எண்ணிகையையும், அர்த்தங்களின் எண்ணிக்கையும் கூட்டினால் அகராதி தனது எடையை இழக்கும். அர்த்தங்களினால் விளக்க முடிந்த சொல்லை நீக்கிவிட்டால் போதும். பேரமைதி. முற்றிப் பழுத்த சொல் சுக்காகும். சாறு ஆவியாகும் காத்திரு, முதலில் நீ சொற்களை மறக்கவும் துறக்கவும் வேண்டும். யசோதரையைத் துறந்தவனே, இது கேள் சொற்களைத் துறப்பது கடினம். முழுத் துறவு. உலகிடமிருந்து, முடிவாக உன்னிடமிருந்து. இப்பொழுது உன் மனைவி உன் ஞாபகத்தை வழி மறிக்கும் ஒரு சொல், ராகுலன் விளக்கத்தின் பொருட்டு வந்து நிற்கும் துணைச்சொல். சொற்களை இழக்க நீ வெகுதூரம் அலையவேண்டும் காண்பாய், நீ புத்தன் என்பதை, உன் விழிகளால். தூர்த்த விழிகள் மின்னி மறைய புத்தன் கண்விழித்தான். 



கனவு ரணங்களை பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. நாளும் புண்களை நக்கிக் கொண்டிருக்கும் ஊதாரி, அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கி ஊரும் பிராணி. கடவுளைச் சூன்யம் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி.
                                                                                        ...

Tuesday, August 30, 2016

அறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா





நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார் என்ற தகவலைச் சொன்னார். நானும் பரவாயில்லை நூலை முழுதாகப் படித்துவிட்டு அறிவு நாணயத்தோடு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று அந்தக் காணொளியைப் பார்த்தேன். ஏமாந்ததுதான் மிச்சம்.

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு... எனும் நூலை இந்துத்துவ அம்பேத்கர் என்ற நூலோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே, ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூலை முழுதாக இன்னும் படிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரங்கநாயகம்மாவின் நூல் ஆதவன் சொல்லியபடி அம்பேத்கரின் மேற்கோள்களை பிறாய்ந்து எடுத்து தன் மனநிலைக்கு ஏற்றார் போல் எழுதிய நூல் அல்ல. அது, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு ஆய்வில், காணப்படும் முரண்பாடுகளை முழுவதுமாக ஆராய்ந்து எழுதிய நூலாகும். அதே போல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலின் வழி, அம்பேத்கரின் புத்தரைக் கேள்வி கேட்டு விவாதித்து பௌத்தம் போதாது என்பதை முன்வைத்திருக்கிறது. மாற்றாக மார்க்சியத்தை முன் வைத்து அதன் தேவையை வலியுறுத்துகிறது. ஆனால், ரங்கநாயகம்மாவின் நூலைப் படிக்காமலேயே அது அம்பேத்கரை திரித்திருக்கிறது என்ற அவரது அறிவுநாணயமற்ற அவதூறை நினைத்துதான் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.


இந்துத்துவ அம்பேத்கர் நூல் பற்றிச் சொல்லுகையில் அம்பேத்கர் சொன்னதைத்தான் ஆர் எஸ் எஸ் செய்கிறது என்கிற மாதிரி திரிக்கிறார்கள் என்று சொன்ன ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூல் என்ன வகையில் திரிக்கிறது என வெளிச்சம் போட்டுச் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல முடியாமல் தடுத்ததற்கு ஒரே காரணம் அந்த நூலை அவர் இன்னும் முழுமையாகப் படிக்கவே இல்லை என்பதே. ஒருவேளை படித்திருந்தாலும் நூலின் தர்க்க நியாயங்களை எதிர்கொள்ள துணிவின்றி ஊடகங்களில் அவதூறைச் சொல்லி தப்பித்தல் உத்தியை கையிலெடுப்பதே அவரால் செய்ய முடிந்த பணியாக இருக்கிறது. அப்படி அம்பேத்கரை திரித்து  ஆர் எஸ் எஸ் சொன்னது போல் ரங்கநாயகம்மா, அம்பேத்கரை எங்கு எப்படி எவரின் நலனுக்காகத் திரித்திருக்கிறார் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். அதையும் சொல்லவில்லை. எதையோ சொல்ல வந்து தடுமாற்றம் அடைந்து முழித்ததைத் தாண்டி அதில் வேறு விசயங்கள் ஏதுமில்லை.

நூலை ஆதவன் முழுமையாக வாசித்திருக்கும் பட்சத்தில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை எங்கு என்ன விதமாக திரித்திருக்கிறது என்பதை ஆராய்ந்து  இதுதான் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒரு நூலோ, ஏன் நூல் கூட வேண்டாம் ஒரு கட்டுரையாவது எழுதலாம். எழுத வேண்டும். மார்க்ஸியத்தை முன்னெடுக்கும் ஒரு நூலை இந்துத்துவ நூலோடு ஒப்பிடும் அவரது கயமை வருந்தத்தக்கது.

அம்பேத்கரின் நூல்களையும் படிக்காதவர் ஆதவன் என்று உறுதியாக நாம் கூற முடியும், ஒரு நூலைப் படிப்பது என்பது அதை அறிவுக்கு உட்பட்டு ஆராய்வது, காலத்துக்கு ஏற்ற கருத்தா என்று ஆராய்வதே ஒரு நூலைப் படிப்பதாகும். இது என் கருத்து. மாறாக பைபிளை, குரானை, கீதையை தினம் தினம் பாராயணம் செய்யும் சாமியார் படிப்பு படிப்பே அல்ல. மத வாசிப்பு. தொழுகை. பாராயணம். அவ்வளவே! ஆதவன் அம்பேத்கரை விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட கடவுளாக, அறிவுக்கு ஒவ்வாத நிலையில் வைத்திருப்பது அம்பேத்கருக்கே ஒவ்வாத ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சோறு,  மானம், ரோஷம் என்ற கருத்தியல்களைக் கேள்வி கேட்கிறார். உண்மையில் இது நல்ல கேள்வி. சோறு, பணம் இல்லாவிட்டால் மானத்தோடு வாழவே முடியாது. அப்படி யாரேனும் சொன்னால் அது கண்டிக்கப் படவேண்டியதே. ஆனால் அம்பேத்கரின் எழுத்துக்களைப் பைபிள் போல் வேத பாராயணம் செய்யும் ஆதவன் அம்பேத்கரின் மான ரோஷ கருத்தியல்கள் குறித்து படித்திருப்பாரா. 

“நாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பதுதான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக் கேட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவுவிடுதியில் காலை சிற்றுண்டி கொண்டுவரும்படி பணிக்கிறார்கள்; ( பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) “ ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக்கறியும்(கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார்.ஆனால், தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட்டியும் சட்னியும் கூட கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.”

இது அம்பேத்கர் சொன்ன கருத்து. இந்தக் கருத்துக்கும் பொருளாதாரச் சிந்தனைக்கும் மானம் மரியாதைக்கும் விழுமிய வாழ்க்கைக்கும், விபச்சாரத் தொழிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

இதை எந்தத் தொகுதியில் சொல்லியிருக்கிறார் என்பதை அம்பேத்கரின்  எழுத்துக்கள் 7000 பக்கங்களுக்கு மேல்  இருக்கிறது  என பக்க எண்ணிக்கையைச் சொல்லும் அவரே எடுத்துச் சொல்லலாம். அல்லது ஆய்வுக்குழு அமைத்தும் சொல்லலாம்.

இந்துத்துவ அம்பேத்கர் என்று அவர்கள் திரிப்பது போல், இந்துத்துவ மார்க்ஸ் என்றோ, இந்துத்துவ பெரியார் என்றோ திரிக்கமுடியுமா? அப்படித் திரிக்க அவர்களுக்கு ஏதுவான வாசகங்கள் எதையும் மார்க்ஸோ அல்லது பெரியாரோ சொல்லியிருப்பார்களெனில் அவரே  அதை எடுத்து இயம்பலாம். அப்படி திரிப்பதன் மூலம் அவர்கள் யாருக்குச் சாதகமாக தலைவர்களை வளைக்கிறார்கள், என்ன நோக்கமென்றாவது அறியலாம். எதை எதோடு ஒப்பிடுவது என்கிற சிற்றறிவு கூட இல்லாது அம்பேத்கரை ரங்கநாயகம்மா திரிக்கிறார் என்பது அறிவு நாணயத்துக்கு அழகல்ல.

ஆதவன் பேட்டியில் சொல்லியிருப்பதாவது “ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரின் வாசகங்களைத் திரித்து வலிந்து பொருள்கொண்டு தீராத காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், இவனுக்கெல்லாம் வந்த வாழ்வப் பார்த்தியா...உலகம் முழுக்க இவனைக் கொண்டாடுது என்கிற எரிச்சலுற்ற மனநிலையோடு நூல் எழுதப்பட்டிருக்கிறது’ என வலிந்து பொய் கூறும் ஆதவன் அந்த நூலை படிக்காமலேயே இது போன்ற கருத்துக்களை முன் வைத்தற்குக் காரணம், நூல் கூறும் நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத அவரது சுயசாதி மனப் பதட்டமும், பயமும் தவிர வேறெதுவுமே இல்லை.


மேலும் மார்க்ஸியத்தின் அடிப்படை நூல்களைக் கூட ஆதவன் வாசித்தது இல்லை என்பது அவரது உரையாடல்களை வைத்தே அறிந்து கொள்ளலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பொலிட் பிரோவில் பார்ப்பனியர்கள் அதிகம் உள்ளதில் தனது வருத்தத்தைப் பகிர்ந்திருக்கும் அவர் இதுகுறித்து தானும் எழுதியுள்ளதாக கூறியிருக்கிறார். அப்படி எழுதியது என்ன?

அல்லது இது குறித்து அவர் சார்ந்த அமைப்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இது குறித்து ஏதேனும் ஒரு கேள்வியையோ, அல்லது உரையாடலையோ, எழுத்துப் பூர்வமாக விவாதமாக வைத்திருப்பாரெனில் அதைச் சுட்டிக்காட்டலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு  எதாவது முறையான பதிலைச் சுட்டியிருந்தாலும் இணைக்கலாம். அத்தோடு பெரும்பான்மை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி எனக் குறைபட்டுக்கொண்டு, உள்ளத்தில் கேள்விகளை அடக்கி வைத்திருந்த அவர், சம்பந்தப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலித்துக்களுக்கு எதிராக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக எடுத்த தீர்மானங்களை இங்கு ஆதாரத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தக் கடமையும் அவருக்கு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் பிரதிநிதித்துவத்தை எந்த அடிப்படையில் பரிந்துரைக்கலாம்.  அம்பேத்கரை அவர்கள் ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? இல்லை மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? கட்சி கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டுமா? இல்லை அதையும் கழட்டிப் போட வேண்டுமா? ஒருவேளை பிரதிநிதித்துவம் செய்துவிட்டால் எல்லா விடிவும் வந்துவிடுமா என்பதை ஆய்வின் மூலம் விளக்கினால் - அது அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உதவும், அவருக்கும் உதவும், மேலும் எனக்கும் அது உதவுவதோடு, இங்கு இருக்கும் ஏனைய தலித் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைய அல்லது, தலித் கட்சிகளோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

உண்மையில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை வேண்டாம் என்றோ  நிராகரித்தோ பேசவில்லை. அவரது லட்சியம், போராட்டங்களைக் கணக்கிலெடுத்து மதிப்பதோடு, அவரை விமர்சனத்துக்கு உட்படுத்தவும் செய்கிறது. அம்பேத்கரை படிக்காமலேயே நீங்கள் கடவுளாக்கி வணங்குவது போல ரங்கநாயகம்மா வணங்கவில்லை. ஏனெனில் அவர் அம்பேத்கரைப் படித்திருக்கிறார். அதனால் அவரை ஐக்கியம் மற்றும் விமர்சனத்தோடு அணுகியிருக்கிறார். ஆனால் ஆதவனைப் போல் ஏற்றுக்கொண்ட தலைவரை கடவுள் இடத்துக்கு உயர்த்துவது அத்தலைவரை கீழிறக்கும் செயலே அன்றி வேறல்ல. எந்த ஒரு தலைவரையும் விமர்சனப் பூர்வமான அணுகுமுறையின் மூலமாக அணுகுவதே அவரைப் பின்பற்றவும், அவர்தம் லட்சியங்களை வளர்த்தெடுக்கவும் உதவும். மாறாக கடவுள் என்று சொல்வது, அவரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக மாற்றிவைப்பதோடு, பாசிச கருத்தியலையும் முன் வைப்பதென்றாகிறது. இதுதான் அம்பேத்கர் விளக்கிய தலித் பார்ப்பனியம்.

காஞ்ச அய்லய்யாவின் பேட்டி ஒன்றை படிக்கையில் எனக்கு இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அய்லய்யா அம்பேத்கரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஐந்தாவது இறைத்தூதர் என்பேன் என்று பதில் அளித்திருக்கிறார். இதைப் பதில் என்பதற்கு பதில் உளறியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். கார்ல் மார்க்ஸை இறைத்தூதர் என்ற வரிசையில் வைக்கும் அவரது எண்ணம் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரோ பௌத்தத்தைக் குறித்து பேசுகையில் எந்த மதத்துக்கும் ஒரு இறைத்தூதர் இருக்கிறார், புத்தர் அப்படியில்லை என்பதை மத மாற்றக் காரணிகளில் ஒன்றாய், மிக முக்கியமான காரணியாய் முன் வைக்கையில் - அய்யலய்யா அம்பேத்கரையே இறைத்தூதர் என்று முன்வைப்பது அம்பேத்கரை கேலி செய்வதற்கு சமம். இந்த தொழுகை மனப்பான்மையே நேரடியாக பாசிசக் கருத்தியலுக்குக் கொண்டு செல்கிறது. அதோடு  எவர் ஒருவரையும்  விமர்சிக்க அச்சமுறும் நிலையை ஏற்படுத்துகிறது.

இந்து ஆன்மீகமே பாசிசம் என்று சொல்லுகிற போது இஸ்லாம் ஆன்மீகம், கிருத்துவ ஆன்மீகம், பௌத்த ஆன்மீகம் பாசிசம் இல்லையா? அந்தந்த நாடுகளில் கோலோச்சும் மதங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை தெருவுக்குத் தெரு வைத்துக் கொண்டாட்டிக் கொண்டிருக்கிறதா? இப்படி ஆளாளுக்கு ஒரு இறைத்தூதரை நிர்மாணம் செய்தால் கருத்து சுதந்திரத்துக்கும், விமர்சனத்துக்கும் ஒரு சிலை செய்து வைத்து அதை இருட்டறையில் மூடிவிட்டுச் செல்லலாம்.




“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...