Thursday, February 9, 2017

அம்பரய



மனிதர்களின் நம்பிக்கைகளை கேள்வி கேள். நீ கலகக்காரனாவாய், ஆனால் ஒரு போதும் அவர்கள் நம்பிய மனிதர்களை கேள்வி கேட்காதே. நம்பிக்கையின் பேரால் நீ வெறுத்தொதுக்கப்படுவாய். காரணம், அவர்கள் நம்புவது நம்பிக்கைகளை அல்ல. நம்பிக்கைகளைச் சொன்ன மனிதனை. அவன் கடவுளாக்கப்பட்டு அவன் பெயரால் ஸ்தோத்திரங்களும் வைக்கப்பட்டால் மூச்சுவிடாதே. கடவுளை அவமதிப்பது எதற்குச் சமம் என்று யோசி. மனிதர்களிடம் பேசு, ஏன் பக்தர்களிடம் கூடப் பேசு, ஆனால் பூசாரிகளிடம் பேசிவிடாதே. அவர்கள் அடுத்த கடவுளாக காத்திருப்பவர்கள். உன்னைப் பலிகொடுப்பதன் மூலம் அவர்கள் கடவுளாக மாறிவிடும் அபாயத்தை நீ வழங்கிவிடாதே.

நிற்க.


தஸ்தாயெவ்ஸ்கியை சீட்டாடும் இயேசுவாக மட்டுமே அடையாளம் கண்டு வந்திருந்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி அடையாளம் காணுவது, தமிழ்ச் சூழல் அவருக்கு  எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றியிருக்கிறது. பக்தர்களின் முன் பகுத்தறிவாளானாக எப்படி நிற்பது. அடையாளங்கள், குறியீடுகள், என வார்த்தைகளை கலைத்துப் போட்டு மானிடரை அடையாளம் காட்ட வந்தவராய், அவரை முன்னிருத்துகையில், தஸ்தாயெவ்ஸ்கியை கேள்வி கேட்பதும், சந்தேகம் கொள்ளுவதும் நம்மை சிலுவையில் அடிக்க அவர்களுக்கு நாமே வாய்ப்புத் தருகிறோமே என்ற சந்தேகத்தால் அலைக்கழிந்திருக்கிறேன்.

ஆனால், அவை அத்தனையையும் மீறி பிடிக்காததை பிடிக்காது என முகத்தில் அறைந்தார் போல் சொல். அதற்கும் முன்னதாக நீ அறிந்து கொண்ட அனைத்தையும், அதனை அறிமுகப்படுத்திய அனைவரும் மனிதர்கள், சார்பு நிலை கொண்டவர்கள் என்பதை மனதில் கொள். வியாக்கியானங்களை விடுத்து, மாற்றத்திற்கான சாவிகளைத் தயாரிப்பவர்களை, அது கள்ளச்சாவிகளானாலும், பரவாயில்லை கண்டுகொள் என்கிற பிடிவாதம் மட்டுமே ஈவு இரக்கம் இல்லாமல் என்னை வாசிக்கவும் வாசித்தபின்பு அதாற்கான கேள்விகளையும் வைக்கத்தூண்டியது.

ஒருவழியாக தஸ்தாவெஸ்கியை எப்படி புரிந்துகொள்வது என எனக்குக் கற்றுக்கொடுத்தவர் மக்சீம் கார்க்கி.

“தஸ்தாயெவ்ஸ்கி உண்மையைத் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்; அவர் தேடினார் ; உண்மையைக் கண்டார்; எல்லாம் உண்மைதான்; ஆனால் மனிதனின் விலங்குத்தனமான இயல்பூக்கங்களுக்கு மத்தியில் உண்மையைக் கண்டார். அப்படிக் கண்டுபிடித்தது, அவற்றோடு போராடி அவைகளை அழிப்பதற்கு அல்ல; மாறாக அவைகளை ஞாபகப்படுத்துவதற்கும், காரண காரியம் கூறி விளக்குவதற்காகவுமே. ”

கார்க்கியின் இந்த வாக்கியங்கள் என் வாசிப்பை இன்னும் கூர் தீட்டியது. வாசிப்பது என்றால் என்ன என்பதையும் சுட்டிக்காட்டியது.

 ‘அம்பரய’ நாவலின் மொழி தஸ்தாவ்யெஸ்கியும் டால்ஸ்டாயும் சேர்ந்து எழுதியது போல் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் மக்சீம் கார்க்கியினுடையதாக இருக்கிறது. அவநம்பிக்கைகளை முன்வைத்து நகரும் கிறிஸ்துவுக்கு அங்கு எந்த இடமுமில்லை. பாவப்பட்ட கிறிஸ்துவையோ, நம்பிக்கைகளை, மதச்சொற்களால் கட்டும் கிறிஸ்துவையோ காணமுடியவில்லை. ஆனால் மனிதன் எத்தகைய அற்புதமான சொல் எனச் சொன்ன கார்க்கியின் மனிதனைக் காணமுடிகிறது. நாவல் நெடுக அம்பரய தன்னைத்தானே வழிநடத்திச் செல்லுகிறான். அவனே சிறுவனாகவும், முழுமனிதனாகவும் நடந்து செல்கிறான்.

பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின்  வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவன் எங்கிருந்து பெற்றான் என்பதற்கு நாவலில் எந்த வார்த்தைகளும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கூவவில்லை. சுமனே சுமனேவிடமிருந்தே அனைத்தையும் பெற்றான் இழந்தான். பெற்றதும் இழந்ததும் சகமனிதர்களால்  மட்டுமே. மேலும் முக்கியமாக சூழலை விதைக்கவும் அறுக்கவுமாக இருக்கும் மனிதர்களாக சூழப்பட்ட ’ ‘அம்பரய’ வின் உலகம்தான் நாவல். கெட்டவர்களாக அறிமுகம் செய்துகொள்கிறவர்களும், நல்லவர்களாக அடையாள அட்டைக் கட்டிக்கொள்பவர்களும் அவ்வுலகத்தில் நிறைந்து இருக்கிறார்கள். சிறுவனாக இருக்கும் அவனுக்குள் பெரியமனிதர்களின் வலிகளும் கடமைகளும்தான் அவனது அலைச்சலை நிர்ணயிக்கின்றன.

அம்பரய
சிறுவன்
ஆம்பல் தேடி அலைகிறவன்
கொலைகாரனின் மகன்

சுற்றியிருக்கும் மனிதர்களில் இத்தகைய அடையாளங்களோடு தன்னை பார்வைக்கு வைத்த அந்த சிறுவன், ஒரு முழுமனிதனின் நம்பிக்கையை தன் பதின்மவயது பருவத்தில் நடந்து கடக்கிறான்.

மொழிபெயர்ப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை.

அம்பரய
சிங்கள் நாவல்
ஆசிரியர் உசுல.பி.விஜய சூரிய
தமிழில் தேவா
வடலி வெளியீடு
விலை; 110

Saturday, November 26, 2016

துப்பாக்கிச் சொல்.







பிடலின் துப்பாக்கி
அஜிதாவின் துப்பாக்கி
பிரபாகரனின் துப்பாக்கி
தமிழ்
மலையாளம்
கியூபா
மக்கள்

கேரள காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமில்லை
புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் சம்பந்தமில்லை
அமெரிக்காவுக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லை

நல்லது அப்படியே ஆகட்டும்
அதிகாரம் துப்பாக்கியால் வடிவமைக்கப்படும்போது
அதிகாரத்துக்கெதிராய் புல்லட்டுகளும் வடிவமைக்கப்படுகிறது

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுத்தான் அரசு கொலை செய்கிறது
விமர்சனங்களை முன்வைத்துத்தான் நாம் தத்துவம் படிக்கிறோம்
குறுக்கும் மறுக்குமான வாதங்களில்
ஒரு குண்டுக்கு பலியாவதென்பது மரணத்தின் முகத்தில் காறி உமிழ்வதுதான்

அரசு என்று உச்சரிக்கும் போது
நாக்குழறுகிறது
அது எந்த வகையான அரசு என்ற விவாதத்தில்
எத்தனை சவப்பெட்டிகளுக்கு நாம் ஆணிகளைத் தயார் செய்யப் போகிறோம்
எண்ணிக்கைகள் இங்கு முக்கியம்

மாவோயிஸ்ட்கள் பலியாவதும்
போலிஸ்காரர்கள் வீரமரணம் அடைவதற்குப் பின்னுள்ள
அர்த்தங்கள் என்ன
என் அகராதியில்
பலி என்றது களப்பலியாகவும்
வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது


அத்தனை துப்பாக்கிகளுக்குள்ளும்
காண முடியாத குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள்
தோழர்களே உறங்குங்கள்
பாழாயப் போன போலிசாரின் துப்பாக்கிப் பின் வேறு என்னதான் இருக்கமுடியும்
துப்பாக்கியைப் பிடித்திருப்பவனுக்கு அரசு சம்பளம் தருகிறது
உங்களுக்கு ஒரு பிடி வாய்க்கரிசி
கேரளாவை ஆளும் கட்சிக்கு என் பலிச்சோறு.


Wednesday, November 16, 2016

மோதி பார்…..( dare to bang )



எனது கருத்துச் சுதந்திரமுள்ள 
இந்த நாட்டைக் கைவிடுகிறேன்
கருத்துச் சுதந்திரமுள்ள ஒரு நாடு அப்பாவித்தனமானது
முட்டாள்த்தனமான ஒரு கருத்தை அறிவிப்பாகச் செய்வதில்
அது சர்வ தேசங்களோடு மோதி பார்க்கிறது


மோதி பார்க்காதே
எனது இந்த நாட்டை
எனது இந்த என்ற வார்த்தையோடு மோதி பார்க்கிறேன்
அசட்டுத்தனமாக இருக்கிறது

சில்லறைக் காசுகளுக்கு
மோதி பார்
சுதந்திரத்திற்கும்
மோதி பார்
உண்மையில் சில்லறை காசுகளுக்கு
மோதி பார்க்க வேண்டும் என்று சொல்லும் நாட்டில் வாழ்வதற்கு
கொடுத்துவைத்திருக்கவேண்டும்
அதா நீ
என நீங்கள் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது


என் நாடு
ஆதாரங்களுடைய நாடு
நான் அதற்கு ஆதாரம் வைத்திருக்கிறேன்
எல்லாவற்றுக்கும் தலைவன் அரசனே என மனு குறிப்பிடுகிறார்
மேலும் நில மகளின் காதலன் அவனென்றும் கூறுகிறார்
கல்வெட்டுக்களைத் தோண்டியெடுக்கும் போது
தேசவராதீப என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது
அவன்
நாட்டினால் சுயவரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் ஆகிறது
வாழ்க சுயவதைகள்

ஆனால்
மோதி பார்க்க வேண்டும்
இத்தகைய நாட்டை

இத்தகைய மக்களை
நவத்துவாரங்கள் கொண்ட பிண்டங்களென 
நாளும் மோதியுணர்கிறான்
என நாம் பொருள்கொள்ளவேண்டும்

மோதி பார்க்க வேண்டும்
பார்க்க வேண்டும் மோதி

சில்லறைகளோடு யுத்தம் புரிந்து
எனது தாத்தாவும்
எனது குழந்தையும்
மரணத்தை மோதுவை
மோதி பார்க்க வேண்டும்
மரணத்தோடு மோதுவதற்கு
மல்யுத்தம் சிறந்த வழி
நாம் மல்லர்களாக மோதி பார்க்க வேண்டும்
மோதி பார்க்க வேண்டும்

இப்படி மோதி வாழும் ஒரு நாட்டில்
தந்தையும் தாத்தாவும்
தாயும் பாட்டியும்
பேரன்களும் பேத்திகளும் வரிசையில் நின்று உயிர் துறக்கலாம்
விதிக்கப்பட்டிருக்கிறார்கள்
மோதி வாழும் நாட்டில்
நாம் என்ன செய்ய முடியும்.





Wednesday, October 19, 2016

சி.பி.ஐ.(எம்) குறித்து மார்க்சிய தீர்க்க்க்க்க்க்கதரிசி அ.மார்க்ஸ்....




மேற்கு வங்க சி.பி.எம் குண்டர்கள் வன்புணர்ச்சி செய்ததை சி.பி.எம்.மின் மார்க்சிய தீர்க்கதரிசி! அ.மார்க்ஸ் அம்பலப்படுத்தியதை முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர்கள் செய்யும் 'பிற' வேலைகளை மார்க்சிய அறிஞராக! மாறி அம்பலப்படுத்துவதைப் பார்க்கலாம்.




“மேற்குவங்கத்தில் ஏதேனும் ஒரு காவல் நிலையம் அல்லது அரசு அலுவலகத்திற்கு சென்றால் அங்கே அந்த அதிகாரியை மட்டுமல்ல உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எந்த அரசு நலத்திட்டங்களையும் அவர்களே பொறுப்பேற்றுச் செயல்படுத்துவர். லஞ்சம், ஊழல்,கட்டப்பஞ்சாயத்து,வன்முறை போலிசுடன் சேர்ந்து எதிர்க் கட்சியினரைத் தாக்குதல் என நாம் கற்பனை செய்ய இயலாத அளவிற்குக் காடையர்களாக(‘ஹெர்மெட்’) அங்கு சி.பி.எம்.தொ(கு)ண்டர்கள் உலவுகின்றனர்."

"அவர்களது மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ.யில் இருந்தால்தான் படித்து முடித்தபின் வேலை வாங்கமுடியும். சிங்கூர்ப் பிரச்சினையின் போது மேற்குவங்க எஸ்.எஃப்.ஐ. தலைவர், “மக்களுக்கு இழப்பு இழப்பு என்கிறீர்களே, டாட்டாவுக்கு ஏற்படுள்ள இழப்பு பற்றி யாராவது கவலைப்படுகிறீர்களா?” எனக் கேட்டதை சுமித்சர்கார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியது இங்கு நினைவிற்குரியது."


"மேற்குவங்க அரசு மேற்கொண்டதாகச் சொல்லப்படும் நலத்திட்டங்கள் பெரும்பாலும் சி.பி.எம். தொண்டர்களையே சென்றடைந்தது. வெறும் 1500 ரூபாய் கட்சி ஊதியம் பெறும் முழுநேர ஊழியர்கள் வேறு வகைகளில் சம்பாதித்துச் சொகுசாக வாழ்ந்ததை சுதித் சர்க்கார்,சைபால் விஷ்ணு உட்படப் பலரும் குறிப்பிடுகின்றனர். கடும் வறுமை, சோறும் குடிநீரும்கூட இல்லாத சூழல்- இவற்றிற்கு மத்தியில் பவிசுடன் நிமிர்ந்து நிற்கும் பளபளப்பான கட்சி அலுவலங்களும் ஊழியர்களின் வீடுகளும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாத ஆபாசத்துடன் துருத்தி நின்றன."

"மக்களுக்கும் சி.பி.எம். ஊழியர்களுக்கும் இடைவெளி மிகுந்ததை மாவோயிஸ்டுகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். லால்கர் பகுதியில் அனுஷ்பாண்டே என்கிற சி.பி.எம்.ஊழியரின் வீடு சமீபத்தில் மக்கள் திரளால் தாக்கி நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.பி.எம்.கட்சி இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இது குறித்த செய்தியைத்தான் வெளியிட முடிந்ததே தவிர, அந்த வீட்டின் படத்தை வெளியிடவில்லை.”"

“ இன்னொரு பக்கம் புத்ததேவ் பட்டாச்சார்யா டெல்லிக்கு காவடி எடுத்தார். படைகளை அனுப்ப வேண்டும் என்றார். கள்ளப் புன்னகையுடன் வேடிக்கை பார்த்து வந்த மன்மோகன் - சோனியா-கும்பல் இரு நிபந்தனைகளுடன் படைகளை அனுப்பியது. மாவோயிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் தடைசெய்ய வேண்டும் என்பது ஒன்று. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை வெறுமனே மத்திய அரசின் இராணுவ நடவடிக்கையாக அன்றி மத்திய - மாநில அரசுகளின் இராணுவ போலிஸ் கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றது.”


-       அ.மார்க்ஸ்.

மேலும் "பெண்கள், பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லோரும் தாக்கப்பட்டனர். சாட்டை அடிக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாயினர்" என்பதை தீர்க்கதரிசனமாக உரைத்தவரை மார்க்சிய அறிஞர்!, மார்க்சிய தீர்க்கதரிசி என சிபிஎம், மற்றும் தமுஎகச சிராஜுதீன் சொல்லுவதை ஆட்சேபிக்கமுடியாது. கூடிய விரைவில் இதை SFI  ம் இதைச் சொல்லுமென ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...