Friday, March 17, 2017

அடிப்படைவாதம்






அடிப்படைவாதம்
அது
நீ உயர்த்தும் குரலில் இல்லை
கருத்துச் சுதந்திரத்தை அறுத்து
கூறுபோட்டு விற்கும் போதும்
ஆயுதம் உயர்த்தும் போதும்
அதன் கண்களைக் கவனி
கடவுளின் கண்களைக் காண்பது போலிருக்கும்

தொண்டைக்குள்ளிருந்து
நீ அழைக்கும் இறைவனை
இப்பொழுது நான் கைவிடுகிறேன்

கொழுப்புக் கரைவது போல்
உன் கடவுள் கரைந்து கொண்டிருக்கிறார்


தோழர் மார்க்ஸ்...
ரொட்டியில் நீங்கள் சுதந்திரத்தை எழுதினீர்கள்

நாங்களோ
எங்கள் கடவுளின் பெயரை எழுதினோம்

மதம் ஆன்மத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது
பிணத்தேவைகளை நிறைவேற்றுகிறது
அப்படியே ஆகட்டும்
இந்த வார்த்தையை இப்படியே உச்சரியுங்கள்

நான் இந்து
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் இஸ்லாமியன்
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் கிறித்தவன்
நானும் எனக்காகப் பேசிக்கொல்வேன்

கம்யூனிஸ்டுகளே….
நீங்கள் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!

மன்னித்துவிடுங்கள் மார்க்ஸ்….
அடிப்படைவாதம் என்பது
நான் என்ற சொல்லுக்குப் பின்னாலிருக்கும் நலனே

கடவுளை கோபிக்காதீர்கள் சாதுக்களே…
தன் உருவில்தான் மனிதனையும் படைத்தானவன்
மனிதன் வெறுமனே அதை நிகழ்த்திக்காட்டுகிறான்
கொலைகார மனிதன்
கொலைகாரக் கடவுள்
கொலைகார மதம்

அடிப்படைவாதத்தின் வாய்
தன் பெயரை அடையாளத்தின் பெயரால் கூவுகிறது
கொலை
மதங்களின் பிறப்புரிமை

தேசியக் கொடியை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
காவிக்கொலை
வெள்ளைக்கொலை
பச்சைக்கொலை
நழுவிச் சுழல்கிறது பௌத்தப் படுகொலை

ஆகட்டும் கடவுளே
உன் அம்மணத்தை
என் பிணத்தை வைத்து மறைத்துக்கொள்

Wednesday, March 15, 2017

தமுஎகச தொண்டர்களுக்கு…






தமுஎகசவின்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) அவசர அம்பேத்கரான ஆதவன் தீட்சண்யா, தொலைக்காட்சி பேட்டியொன்றில், கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருப்பது குறித்து, தனக்கு கேள்விகள் இருப்பதாகச் சொன்னபோது,  கமுக்கமாய் இருந்த தொண்டர்கள், இப்போது அதே கேள்வியை உடன்பிறப்புகள் கேட்டதாக,  கொதித்தெழுந்து, கம்யூனிஸ்டுகள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு பதறுவது ஏன்.  உங்கள் அடையாளக் கொதிப்பை முதலில் உங்கள் அமைப்பிலேயே காட்டுங்கள்.

உட்கட்சிப் போராட்டம் பற்றித் தெரியவேண்டுமென்றால் லியூ ஷோசியிடம் கேளுங்கள். அது ஒன்றும் தற்கொலைக்கு நிகரானதல்ல.  இன்னும் ஒன்றும் சொல்வேன், கட்சியைக் கலைத்துவிட்டு வேறு தொழில் பார்க்கலாம் என்று சொன்ன மார்க்சிய அறிஞர் அ.மார்க்ஸையும் துணைக்கு அழையுங்கள்.  நந்திகிராமில் நடந்தது என்னவென்று கேளுங்கள். அதோடு முக்கிய மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரையை அழைத்து அவரிடம் பேசுங்கள். ஏனெனில்

“அந்தக் கட்சியின் சி.பி.எம்- தமிழ்மாநிலச் செயலாளர் என். வரதராஜனும், அக்கட்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் மதுரையில் 3.2.2009 அன்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசியதைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் அரிச்சுவடி கற்காதவர்களா என்னும் சந்தேகம் நமக்கு எழுகின்றது. அவர்களது நம்பிக்கைக்குரியவரும் அரசியல் ஆலோசகர்களில் ஒருவருமான என்.ராமால் நடத்தப்படும் ‘ தி ஹிந்து’ நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தியின் அடிப்படையிலேயே நாம் இந்தக் கருத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.”

என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து எது குறித்து என்று தேடிப் படித்து சொல்லுங்கள். இப்பொழுதாவது பிரகாஷ் காரத் அரிச்சுவடி கற்றுவிட்டாரா, அப்படி கற்றுவிட்டது தெரிந்துதான் ராஜதுரை இப்பொழுது உங்களுக்கு முக்கிய மார்க்சிய அறிஞரானாரா என்ன?

“சிபி எம் கட்சியின் மாநிலச் செயலாளரும் பொலிட் பீரோ உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பினரயி விஜயன் மீது மத்தியப் புலனாய்வுத் துறை ஊழல் வழக்குத் தொடர முயற்சி செய்திருப்பது, காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று சிபிஎம் ஆதரவாளர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். எனினும் கேரள மக்களிடையே பரவலாக நிலவும் கருத்து இதுவல்ல. பிற மாநிலங்களில் ஆட்சி செய்யும் குண்டாயிசத்திற்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல விஜயனின் நடத்தை முறைகள் என்னும் கருத்து மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மேலும், கட்சிக்குள் விஜயன் குழு என்றும் அச்சுதானந்தின் குழு என்றும் பிளவு இருப்பதும், அந்த இருவரும் இரண்டாண்டுகளுக்கு முன் கட்சியின் பிலிட்பீரோவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதும், 2004 இல் சிபி எம் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 2009 தேர்தலுக்கு சற்று முன்னதாக காங்கிரஸில் சேர்ந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்குவதில் சிபிஎம் சிபி ஐ கட்சிகளுக்கிடையே மோதல்கள் வலுத்ததும், இந்தக் கட்சிகளுக்கும் பூர்ஷுவாக் கட்சிகளுக்குமிடையே அதிக வேறுபாடு இல்லை என்பதைக் காட்டின ”

என்றெல்லாம் தன் மு‘க்’கிய மார்க்சியத்தைத் திறந்து எழுதியிருக்கிறார். இந்த விமர்சனங்களையெல்லாம் கட்சி இப்பொழுது கடந்துவிட்டதா என்ன? தலித் அடையாள அரசியலுக்குப் பயந்து தன் பாதைகளை மாற்றிக்கொண்டு பம்மும் சிபிஎம்- ன் விளக்கங்கள் என்ன.

இன்று உடன்பிறப்புகள் கேட்டுவிட்டார்கள் என்று கொதித்தெழுந்து பேசும் நீங்கள், அன்று உங்கள் சக தொண்டர் இதே வார்த்தையை தொலைக்காட்சியில் சொன்னபோது,  போட்டுக்கொடுக்கிறான் என்று முணங்கியது ஏன். அன்று இத்தனை விளக்கங்கள் துடிதுடித்து வராமல் இருந்ததன் காரணம் என்ன.? உங்களுக்குள் இருக்கும் அடையாள அரசியலா?, சுயசாதி விருப்பமா, அதுதான் அம்பேத்கரிய அரசியலா?

பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் இருந்தால் அந்தக் கட்சி பார்ப்பனர் கட்சி ஆகிவிடுமா, பார்ப்பனர் நலனுக்காக சிபி எம் எந்தெந்த போரட்டாங்களை நடத்தியது, எங்கு பார்ப்பனரை தூக்கிப் பிடித்தது என்ற எளிய கேள்விகளைக் கூட கேட்கத் தெரியாமல் விழி பிதுங்கி உள்ளுக்குள்ளயே கேள்வி இருக்கே என கையைப் பிசைந்து நின்றது ஏன்.? இது போதாதென்று

“மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்டுதல் என்ற பெயரால் பழங்குடி மக்களை இனக்கொலை செய்வதில் மதச் சார்பற்ற, இந்துதுவ பாசிசவாதிகள் ஒன்று சேர்வதில் வியப்பில்லை. இதில் அவர்களுக்குக் கிடைத்துள்ள புதிய கூட்டாளி சி.பி.எம் ”

என்று மு‘க்’கிய அறிஞர் திருவாய் மலர்ந்துள்ளாரே. உங்களுக்குத் தெரியாதா, எஸ்.வி.ஆரை நீங்கள் படிக்காமல்தான் மார்க்சிய அறிஞர் என்று சொன்னீர்களா.

ஆதவன் கேட்ட கேள்வியை இன்று உடன்பிறப்புகள் கேட்டதும் கொதிப்பது ஏன். அன்று என்ன நீங்கள் திமுகவிலா இருந்தீர்கள்.

சிறுகுறிப்பு;

தோழர்களே ஈவிரக்கமற்ற விமர்சனம் கொஞ்சம் கடினம்தான்.எல்லாவற்றிற்கும் மேலாக எங்களை விமர்சிக்கத் தகுதியில்லை என்று அனைவரையும் விரல் நீட்டும் நீங்கள்,  உங்களை விமர்சிக்க உங்களுக்கே தகுதியுள்ளதா என்றும் கேட்டுச் சொல்லுங்கள்.

அனைத்திற்கும் மேலாக உங்களது மார்க்சியக் கொம்பன் எஸ்.ஏ.பெருமாள் பூனா ஒப்பந்தம் குறித்து கேமரா ரீடிங்கில் படித்து எழுதிய  கட்டுரையை சாதா ரீடிங்கிலேயே படித்துப் பாருங்கள். அக்கட்டுரைக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் கொம்பன் பெருமையுடன் எடுத்தாண்ட பாட்டையும் எடுத்துப் போடுகிறேன்.

ராகம் ஆதி தாளம் சுத்தமொட்டையில் சுருதி சேர்த்து பாடி அனுப்பி வையுங்கள்.


பல்லவி
ஆழ்ந்த யோசனைகள் செய்தார் மகாத்மா காந்தி
ஆத்ம சக்தியைக் காட்டினார் அந்நியர்கட்கு
ஆத்ம சக்தியைக் காட்டினார்( ஆழ்ந்த)
அனுபல்லவி
கரைகாணாத ஆத்மா கருத்துள் மகாத்மா
கருத்தை விளக்கிக் காட்டினார்- கவர்மெண்ட்டோடு
கடிதம் மூலமாய் பேசினார்(ஆழ்ந்த)
தொகையறா
ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பத்திரெண்டு ஆண்டு
செப்டம்பர் இருபதிலே
தாழ்ந்த நம் சகோதரர்க்கு தனித்தொகுதி வேண்டாம்
கூட்டுத்தொகுதி வேண்டுமென
காந்தி உண்ணாவிரதம் பூண்டார்
(பாட்டு)
பட்டினி என்றதுமே பதைத்தது பாரதமக்கள்
பிரார்த்தனை செய்யலுற்றார்- சர்வேஸ்வரனை
பிரார்த்தனை செய்யலுற்றார்( ஆழ்ந்த)
தொகையறா
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும்
கூட்டுத்தொகுதி வேண்டாமென
கரைபுரண்டழுதாரே அம்பேத்கர்- தர்மசீலராம்
காந்தியைத் தரிசித்ததுமே
கூட்டுத் தொகுதிக்கே கையொப்பமிட்டார்
தென்னாட்டுக் காந்தியென
தியாகங்கள் பல செய்த திருராஜகோபாலாச்
சாரியார்தாம்
காந்தி உண்ணாவிரத்தை ஓதியே மக்கள்
ஓட்டுப்போட வேண்டுமென்றார்
(பாட்டு)
ஒற்றுமைப் பட்டாரே மக்கள் உத்திமத்தியயாகியாம் காந்தி
சித்தங்களிக்க வென்று திறந்தார் கோவில்
தீண்டாதார்க்கென்ற(ஆழ்ந்த)

மார்க்சியக் கொம்பன்களும், மு‘க்’கிய அறிஞர்களும் இருக்கும் ஒரு கட்சியில் இதுபோன்றெல்லாம் நடப்பது வருத்தத்தை அளிக்கிறது.

    

Thursday, February 9, 2017

அம்பரய



மனிதர்களின் நம்பிக்கைகளை கேள்வி கேள். நீ கலகக்காரனாவாய், ஆனால் ஒரு போதும் அவர்கள் நம்பிய மனிதர்களை கேள்வி கேட்காதே. நம்பிக்கையின் பேரால் நீ வெறுத்தொதுக்கப்படுவாய். காரணம், அவர்கள் நம்புவது நம்பிக்கைகளை அல்ல. நம்பிக்கைகளைச் சொன்ன மனிதனை. அவன் கடவுளாக்கப்பட்டு அவன் பெயரால் ஸ்தோத்திரங்களும் வைக்கப்பட்டால் மூச்சுவிடாதே. கடவுளை அவமதிப்பது எதற்குச் சமம் என்று யோசி. மனிதர்களிடம் பேசு, ஏன் பக்தர்களிடம் கூடப் பேசு, ஆனால் பூசாரிகளிடம் பேசிவிடாதே. அவர்கள் அடுத்த கடவுளாக காத்திருப்பவர்கள். உன்னைப் பலிகொடுப்பதன் மூலம் அவர்கள் கடவுளாக மாறிவிடும் அபாயத்தை நீ வழங்கிவிடாதே.

நிற்க.


தஸ்தாயெவ்ஸ்கியை சீட்டாடும் இயேசுவாக மட்டுமே அடையாளம் கண்டு வந்திருந்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி அடையாளம் காணுவது, தமிழ்ச் சூழல் அவருக்கு  எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றியிருக்கிறது. பக்தர்களின் முன் பகுத்தறிவாளானாக எப்படி நிற்பது. அடையாளங்கள், குறியீடுகள், என வார்த்தைகளை கலைத்துப் போட்டு மானிடரை அடையாளம் காட்ட வந்தவராய், அவரை முன்னிருத்துகையில், தஸ்தாயெவ்ஸ்கியை கேள்வி கேட்பதும், சந்தேகம் கொள்ளுவதும் நம்மை சிலுவையில் அடிக்க அவர்களுக்கு நாமே வாய்ப்புத் தருகிறோமே என்ற சந்தேகத்தால் அலைக்கழிந்திருக்கிறேன்.

ஆனால், அவை அத்தனையையும் மீறி பிடிக்காததை பிடிக்காது என முகத்தில் அறைந்தார் போல் சொல். அதற்கும் முன்னதாக நீ அறிந்து கொண்ட அனைத்தையும், அதனை அறிமுகப்படுத்திய அனைவரும் மனிதர்கள், சார்பு நிலை கொண்டவர்கள் என்பதை மனதில் கொள். வியாக்கியானங்களை விடுத்து, மாற்றத்திற்கான சாவிகளைத் தயாரிப்பவர்களை, அது கள்ளச்சாவிகளானாலும், பரவாயில்லை கண்டுகொள் என்கிற பிடிவாதம் மட்டுமே ஈவு இரக்கம் இல்லாமல் என்னை வாசிக்கவும் வாசித்தபின்பு அதாற்கான கேள்விகளையும் வைக்கத்தூண்டியது.

ஒருவழியாக தஸ்தாவெஸ்கியை எப்படி புரிந்துகொள்வது என எனக்குக் கற்றுக்கொடுத்தவர் மக்சீம் கார்க்கி.

“தஸ்தாயெவ்ஸ்கி உண்மையைத் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்; அவர் தேடினார் ; உண்மையைக் கண்டார்; எல்லாம் உண்மைதான்; ஆனால் மனிதனின் விலங்குத்தனமான இயல்பூக்கங்களுக்கு மத்தியில் உண்மையைக் கண்டார். அப்படிக் கண்டுபிடித்தது, அவற்றோடு போராடி அவைகளை அழிப்பதற்கு அல்ல; மாறாக அவைகளை ஞாபகப்படுத்துவதற்கும், காரண காரியம் கூறி விளக்குவதற்காகவுமே. ”

கார்க்கியின் இந்த வாக்கியங்கள் என் வாசிப்பை இன்னும் கூர் தீட்டியது. வாசிப்பது என்றால் என்ன என்பதையும் சுட்டிக்காட்டியது.

 ‘அம்பரய’ நாவலின் மொழி தஸ்தாவ்யெஸ்கியும் டால்ஸ்டாயும் சேர்ந்து எழுதியது போல் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் மக்சீம் கார்க்கியினுடையதாக இருக்கிறது. அவநம்பிக்கைகளை முன்வைத்து நகரும் கிறிஸ்துவுக்கு அங்கு எந்த இடமுமில்லை. பாவப்பட்ட கிறிஸ்துவையோ, நம்பிக்கைகளை, மதச்சொற்களால் கட்டும் கிறிஸ்துவையோ காணமுடியவில்லை. ஆனால் மனிதன் எத்தகைய அற்புதமான சொல் எனச் சொன்ன கார்க்கியின் மனிதனைக் காணமுடிகிறது. நாவல் நெடுக அம்பரய தன்னைத்தானே வழிநடத்திச் செல்லுகிறான். அவனே சிறுவனாகவும், முழுமனிதனாகவும் நடந்து செல்கிறான்.

பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின்  வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவன் எங்கிருந்து பெற்றான் என்பதற்கு நாவலில் எந்த வார்த்தைகளும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கூவவில்லை. சுமனே சுமனேவிடமிருந்தே அனைத்தையும் பெற்றான் இழந்தான். பெற்றதும் இழந்ததும் சகமனிதர்களால்  மட்டுமே. மேலும் முக்கியமாக சூழலை விதைக்கவும் அறுக்கவுமாக இருக்கும் மனிதர்களாக சூழப்பட்ட ’ ‘அம்பரய’ வின் உலகம்தான் நாவல். கெட்டவர்களாக அறிமுகம் செய்துகொள்கிறவர்களும், நல்லவர்களாக அடையாள அட்டைக் கட்டிக்கொள்பவர்களும் அவ்வுலகத்தில் நிறைந்து இருக்கிறார்கள். சிறுவனாக இருக்கும் அவனுக்குள் பெரியமனிதர்களின் வலிகளும் கடமைகளும்தான் அவனது அலைச்சலை நிர்ணயிக்கின்றன.

அம்பரய
சிறுவன்
ஆம்பல் தேடி அலைகிறவன்
கொலைகாரனின் மகன்

சுற்றியிருக்கும் மனிதர்களில் இத்தகைய அடையாளங்களோடு தன்னை பார்வைக்கு வைத்த அந்த சிறுவன், ஒரு முழுமனிதனின் நம்பிக்கையை தன் பதின்மவயது பருவத்தில் நடந்து கடக்கிறான்.

மொழிபெயர்ப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை.

அம்பரய
சிங்கள் நாவல்
ஆசிரியர் உசுல.பி.விஜய சூரிய
தமிழில் தேவா
வடலி வெளியீடு
விலை; 110

Saturday, November 26, 2016

துப்பாக்கிச் சொல்.







பிடலின் துப்பாக்கி
அஜிதாவின் துப்பாக்கி
பிரபாகரனின் துப்பாக்கி
தமிழ்
மலையாளம்
கியூபா
மக்கள்

கேரள காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமில்லை
புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் சம்பந்தமில்லை
அமெரிக்காவுக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லை

நல்லது அப்படியே ஆகட்டும்
அதிகாரம் துப்பாக்கியால் வடிவமைக்கப்படும்போது
அதிகாரத்துக்கெதிராய் புல்லட்டுகளும் வடிவமைக்கப்படுகிறது

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுத்தான் அரசு கொலை செய்கிறது
விமர்சனங்களை முன்வைத்துத்தான் நாம் தத்துவம் படிக்கிறோம்
குறுக்கும் மறுக்குமான வாதங்களில்
ஒரு குண்டுக்கு பலியாவதென்பது மரணத்தின் முகத்தில் காறி உமிழ்வதுதான்

அரசு என்று உச்சரிக்கும் போது
நாக்குழறுகிறது
அது எந்த வகையான அரசு என்ற விவாதத்தில்
எத்தனை சவப்பெட்டிகளுக்கு நாம் ஆணிகளைத் தயார் செய்யப் போகிறோம்
எண்ணிக்கைகள் இங்கு முக்கியம்

மாவோயிஸ்ட்கள் பலியாவதும்
போலிஸ்காரர்கள் வீரமரணம் அடைவதற்குப் பின்னுள்ள
அர்த்தங்கள் என்ன
என் அகராதியில்
பலி என்றது களப்பலியாகவும்
வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது


அத்தனை துப்பாக்கிகளுக்குள்ளும்
காண முடியாத குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள்
தோழர்களே உறங்குங்கள்
பாழாயப் போன போலிசாரின் துப்பாக்கிப் பின் வேறு என்னதான் இருக்கமுடியும்
துப்பாக்கியைப் பிடித்திருப்பவனுக்கு அரசு சம்பளம் தருகிறது
உங்களுக்கு ஒரு பிடி வாய்க்கரிசி
கேரளாவை ஆளும் கட்சிக்கு என் பலிச்சோறு.


Wednesday, November 16, 2016

மோதி பார்…..( dare to bang )



எனது கருத்துச் சுதந்திரமுள்ள 
இந்த நாட்டைக் கைவிடுகிறேன்
கருத்துச் சுதந்திரமுள்ள ஒரு நாடு அப்பாவித்தனமானது
முட்டாள்த்தனமான ஒரு கருத்தை அறிவிப்பாகச் செய்வதில்
அது சர்வ தேசங்களோடு மோதி பார்க்கிறது


மோதி பார்க்காதே
எனது இந்த நாட்டை
எனது இந்த என்ற வார்த்தையோடு மோதி பார்க்கிறேன்
அசட்டுத்தனமாக இருக்கிறது

சில்லறைக் காசுகளுக்கு
மோதி பார்
சுதந்திரத்திற்கும்
மோதி பார்
உண்மையில் சில்லறை காசுகளுக்கு
மோதி பார்க்க வேண்டும் என்று சொல்லும் நாட்டில் வாழ்வதற்கு
கொடுத்துவைத்திருக்கவேண்டும்
அதா நீ
என நீங்கள் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது


என் நாடு
ஆதாரங்களுடைய நாடு
நான் அதற்கு ஆதாரம் வைத்திருக்கிறேன்
எல்லாவற்றுக்கும் தலைவன் அரசனே என மனு குறிப்பிடுகிறார்
மேலும் நில மகளின் காதலன் அவனென்றும் கூறுகிறார்
கல்வெட்டுக்களைத் தோண்டியெடுக்கும் போது
தேசவராதீப என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது
அவன்
நாட்டினால் சுயவரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் ஆகிறது
வாழ்க சுயவதைகள்

ஆனால்
மோதி பார்க்க வேண்டும்
இத்தகைய நாட்டை

இத்தகைய மக்களை
நவத்துவாரங்கள் கொண்ட பிண்டங்களென 
நாளும் மோதியுணர்கிறான்
என நாம் பொருள்கொள்ளவேண்டும்

மோதி பார்க்க வேண்டும்
பார்க்க வேண்டும் மோதி

சில்லறைகளோடு யுத்தம் புரிந்து
எனது தாத்தாவும்
எனது குழந்தையும்
மரணத்தை மோதுவை
மோதி பார்க்க வேண்டும்
மரணத்தோடு மோதுவதற்கு
மல்யுத்தம் சிறந்த வழி
நாம் மல்லர்களாக மோதி பார்க்க வேண்டும்
மோதி பார்க்க வேண்டும்

இப்படி மோதி வாழும் ஒரு நாட்டில்
தந்தையும் தாத்தாவும்
தாயும் பாட்டியும்
பேரன்களும் பேத்திகளும் வரிசையில் நின்று உயிர் துறக்கலாம்
விதிக்கப்பட்டிருக்கிறார்கள்
மோதி வாழும் நாட்டில்
நாம் என்ன செய்ய முடியும்.





Wednesday, October 19, 2016

சி.பி.ஐ.(எம்) குறித்து மார்க்சிய தீர்க்க்க்க்க்க்கதரிசி அ.மார்க்ஸ்....




மேற்கு வங்க சி.பி.எம் குண்டர்கள் வன்புணர்ச்சி செய்ததை சி.பி.எம்.மின் மார்க்சிய தீர்க்கதரிசி! அ.மார்க்ஸ் அம்பலப்படுத்தியதை முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர்கள் செய்யும் 'பிற' வேலைகளை மார்க்சிய அறிஞராக! மாறி அம்பலப்படுத்துவதைப் பார்க்கலாம்.




“மேற்குவங்கத்தில் ஏதேனும் ஒரு காவல் நிலையம் அல்லது அரசு அலுவலகத்திற்கு சென்றால் அங்கே அந்த அதிகாரியை மட்டுமல்ல உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எந்த அரசு நலத்திட்டங்களையும் அவர்களே பொறுப்பேற்றுச் செயல்படுத்துவர். லஞ்சம், ஊழல்,கட்டப்பஞ்சாயத்து,வன்முறை போலிசுடன் சேர்ந்து எதிர்க் கட்சியினரைத் தாக்குதல் என நாம் கற்பனை செய்ய இயலாத அளவிற்குக் காடையர்களாக(‘ஹெர்மெட்’) அங்கு சி.பி.எம்.தொ(கு)ண்டர்கள் உலவுகின்றனர்."

"அவர்களது மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ.யில் இருந்தால்தான் படித்து முடித்தபின் வேலை வாங்கமுடியும். சிங்கூர்ப் பிரச்சினையின் போது மேற்குவங்க எஸ்.எஃப்.ஐ. தலைவர், “மக்களுக்கு இழப்பு இழப்பு என்கிறீர்களே, டாட்டாவுக்கு ஏற்படுள்ள இழப்பு பற்றி யாராவது கவலைப்படுகிறீர்களா?” எனக் கேட்டதை சுமித்சர்கார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியது இங்கு நினைவிற்குரியது."


"மேற்குவங்க அரசு மேற்கொண்டதாகச் சொல்லப்படும் நலத்திட்டங்கள் பெரும்பாலும் சி.பி.எம். தொண்டர்களையே சென்றடைந்தது. வெறும் 1500 ரூபாய் கட்சி ஊதியம் பெறும் முழுநேர ஊழியர்கள் வேறு வகைகளில் சம்பாதித்துச் சொகுசாக வாழ்ந்ததை சுதித் சர்க்கார்,சைபால் விஷ்ணு உட்படப் பலரும் குறிப்பிடுகின்றனர். கடும் வறுமை, சோறும் குடிநீரும்கூட இல்லாத சூழல்- இவற்றிற்கு மத்தியில் பவிசுடன் நிமிர்ந்து நிற்கும் பளபளப்பான கட்சி அலுவலங்களும் ஊழியர்களின் வீடுகளும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாத ஆபாசத்துடன் துருத்தி நின்றன."

"மக்களுக்கும் சி.பி.எம். ஊழியர்களுக்கும் இடைவெளி மிகுந்ததை மாவோயிஸ்டுகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். லால்கர் பகுதியில் அனுஷ்பாண்டே என்கிற சி.பி.எம்.ஊழியரின் வீடு சமீபத்தில் மக்கள் திரளால் தாக்கி நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.பி.எம்.கட்சி இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இது குறித்த செய்தியைத்தான் வெளியிட முடிந்ததே தவிர, அந்த வீட்டின் படத்தை வெளியிடவில்லை.”"

“ இன்னொரு பக்கம் புத்ததேவ் பட்டாச்சார்யா டெல்லிக்கு காவடி எடுத்தார். படைகளை அனுப்ப வேண்டும் என்றார். கள்ளப் புன்னகையுடன் வேடிக்கை பார்த்து வந்த மன்மோகன் - சோனியா-கும்பல் இரு நிபந்தனைகளுடன் படைகளை அனுப்பியது. மாவோயிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் தடைசெய்ய வேண்டும் என்பது ஒன்று. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை வெறுமனே மத்திய அரசின் இராணுவ நடவடிக்கையாக அன்றி மத்திய - மாநில அரசுகளின் இராணுவ போலிஸ் கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றது.”


-       அ.மார்க்ஸ்.

மேலும் "பெண்கள், பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லோரும் தாக்கப்பட்டனர். சாட்டை அடிக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாயினர்" என்பதை தீர்க்கதரிசனமாக உரைத்தவரை மார்க்சிய அறிஞர்!, மார்க்சிய தீர்க்கதரிசி என சிபிஎம், மற்றும் தமுஎகச சிராஜுதீன் சொல்லுவதை ஆட்சேபிக்கமுடியாது. கூடிய விரைவில் இதை SFI  ம் இதைச் சொல்லுமென ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...