Wednesday, November 4, 2015

கோவனா? - தீப்பொறி ஆறுமுகமா?...






கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ஆணாதிக்கப் போக்கைக் காட்டியிருக்கிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது என்றோ, பிரச்சினையைத் திசை திருப்புகிறேன் என்றோகூட அவர்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பியிருக்கிறது. அதே போல் தீவிர இடதுசாரிகளின் வெளிப்பாடு எவ்வளவு மோசமான சகிப்பின்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உரையாட வேண்டும்.

கோவனைக் கைது செய்தது சரியா எனக் கேட்டால் அது தவறுதான். அதற்காக போராட வேண்டுமா என்றால் போராடத்தான் வேண்டும். கோவனுக்காக மட்டுமல்ல, இன்னும் அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் முதலாளித்துவப் பார்வைகளை எதிர்த்து, நாள்தோறும் கைதாகும் தோழர்களுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டும். அதே சமயம் அவர்களின் போராட்ட வடிவங்களையும், அது அறிவிக்கும் முறைமைகளின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எழுத்துரிமை பேச்சுரிமை இவைகளின் மூலம் கருத்துக்களை முன் வைக்கும் கருத்துரிமையும் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவ்வுரிமையை, நான் இழக்க மாட்டேன்.

கருத்துரிமை என்ற பெயரில் இன்னொருவரின் மீது ஆபாசமான சொற்களை வைப்பது கருத்துரிமையில் சேர்த்தியா..இதுதான் என் கேள்வி.

பாடலில் ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸுல்ல உல்லாசம் என்ற வரிகள் என்ன அர்த்தத்தைத் தருகிறது. ஆண் உத்தமன் எனும் போது அவனது குணங்கள் முன்னுக்கு வருகிறது. பெண் உத்தமி எனும் போது அவளது உடல் முன்னுக்கு வருகிறது. உல்லாசப்பயணம் என்பது வேறு,  ஊத்திக்கொடுத்து ஒரு பெண் உல்லாசமாய் இருக்கிறாள் என்றால் அவ்வரிகள் யாரை எந்த நோக்கத்தில் முன்வைக்கிறது.

மக்களுக்காக ம.க.இ.க போராடுகிறது என்பதற்காக அது தான் மட்டுமே ஒர்ஜினல் இடது சாரி இயக்கம் என்ற இருப்பை கைக்கொண்டுவிட முடியாது. ஆனால். அது தன்னை எப்பொழுதும் அப்படித்தான் அழைத்துக்கொள்கிறது. இணைய வெளியில் மட்டுமல்ல பொதுவெளியிலும் அனைத்து இடது சாரிகளையும் அது போலி கம்யூனிஸ்ட் கட்சி என்றே அதிகாரக் குரலால் அழைக்கிறது.

இப்பொழுது இந்தக் கைதானது வார்த்தைகளுக்கான கைதா. இல்லை மது ஒழிப்பை ஆதரித்ததற்காகக் கைதா என நான் குழம்பியிருக்கிறேன். சி.பிஐ .எம்மின் வெகுஜன அமைப்பான த.மு.எ.க.ச ஒரு கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்றதும், இவ்வாறு கைது, சிறை என்ற நடவடிக்கைகளில் இறங்குகிறது. தேர்தல் சூழல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுக்கிற நடவடிக்கையாகவும் இதைக் காண வேண்டியுள்ளது.

மகஇக அமைப்பின் நிலைபாடுகளிலும் அணுகுமுறைகளிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவர்களது முன்னணிக் கவிஞர்-பாடகர் கோவன் மீது அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச சார்பில் உறுதியாகக் கண்டிக்கிறோம். அரசு உடனடியாக இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கையை விலக்கிக்கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்று இவ்வறிக்கையில் தமுஎகச  சொல்லும் அவ்வரிகள்,  அரசை விமர்சிக்கிறதா அல்லது பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா என்று விளக்கவேண்டும். கலை இலக்கியத்தில் புரட்சியை எடுத்துச் செல்வதோடு, அது நச்சுக்கலை இது நச்சுப் பாட்டு. அது முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் நாவல், இது பெண்ணிய கவிதை என்றெல்லாம் தரம் பிரித்து விமர்சனம் செய்து வரும் அவ்வமைமைப்பு இதனையும் புரட்சிகர விமர்சனங்களைக் கொண்டு இது கருத்தா என விளக்குவதோடு இதுதான் மக்கள் இலக்கியம என்றும் எடுத்தியம்ப வேண்டும்.

இல்லை,.. இப்பொழுது இது போன்ற பாசிச சக்திகள் தலை தூக்கும்போது நாம் இப்படி விமர்சிப்பது நாமே நம் அமைப்புக்களை விமர்சிப்பது போல ஆகிவிடும் என்ற கருத்தை முன் வைத்தால்…நான் அதற்கு பதிலாக சொல்லுவது இதுதான். எப்பொழுதும் மதவாத சக்திகளும் பாசிச சக்திகளும் பிரிந்ததே இருந்ததில்லை. அவைகள் தங்கள் நோக்கத்தை முன்வைத்து வரலாற்றில்  நகர்ந்தபடியே இருக்கத்தான் செய்கிறது. புரட்சி பேசும் அமைப்புகள்தான் மாறி மாறி விலகியும், பேசியும் வருகின்றன. உதாரணத்திற்கு ம.க.இ.க ஆளும் தரப்பை விமர்சிக்க வைத்த வார்த்தைகளின் அளவையும் கனத்தையும் விட, இரண்டு கம்யூனிஸ் கட்சிகளையும், பிற கம்யூனிச அமைப்புகளையும், போலிக் கம்யூனிஸ் கட்சிகள், போலி அமைப்புகள் என்று வைத்து விமர்சித்ததுதான் அதிகம்.

போராட்டத்தை எப்படியும் எடுத்துச் செல்லலாம் என்றால், கோவன் செய்ததும் அதுதான் என்றால், அதிமுக, திமுக இன்னும் வெகுஜனக் கட்சிகள், மேடைகளில் வெகுஜன மக்களை ஈர்க்க ஆடும் காபரே டான்ஸ்க்கும், அசிங்கமான பாடல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். தரங்கெட்ட வரிகளை வைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் மீது, ஒரு தனிமனிதனாக, மார்க்சியத்தைப் படித்து வரும் ஒரு மாணவனாக, எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.  என்பதோடு, மரியாதையும் இல்லை என்றே சொல்கிறேன். வரலாற்றை சாகசமாக திருப்பமுடியாது. #கோவன் இப்பொழுது சாகச நாயகனாயிருக்கிறார். அவரது கைது - வரிகளுக்கா இல்லை அவ்வரிகளுக்கிடையே இருக்கும் மது ஒழிப்புக்கா என்ற குழப்பம் எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இரண்டுக்குமே எனது வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்கிறேன். 

இதற்கிடையே இணையவெளியில் கத்தாருக்கு இணையாக வைக்கப்பட்ட கோவனை இப்பாடல் விசயத்தில் நான் தீப்பொறி* ஆறுமுகம் என்றே சொல்லுவேன். வேண்டுமென்றால் நீங்கள் இனி கோவனை இஸ்க்ரா கோவன் என்று அழைத்துக்கொள்ளலாம்.

மலிந்த ஆபாசாமான வார்த்தைகளை முன்வைத்து சாராய ஒழிப்பைப் பேச வேண்டுமென்றால் என்னிடம் ஏராளமான பாடல்கள் இருக்கிறது. அதையும் மகஇக வுக்கு எழுதித்தருகிறேன். இதை விட ரைமிங்க்காக மெட்டுக்கு இடிக்காத வரிகளாக அவை இருக்கும் என உறுதியும் கூறுகிறேன். அரசை எதிர்ப்பது என்பது மகஇக -வைப் பொறுத்தமட்டில் அது தனிநபர் எதிர்ப்பாகவே இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன் சேகுவேராவை இவ்வமைப்பு புறக்கணித்தே வந்தது. கேட்டால், விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை, அவன் சாகசப்புரட்சியாளன் என்றது.

இப்பொழுது #கோவன் செய்திருப்பது என்ன? வெகுஜன மலிந்த ரசனையை இயக்கப் பார்வையாய் வைத்து, இப்படிச் சொன்னால் ஏதேனும் நடக்கும் என்ற எண்ணைத்தைத்தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது. ஒரு பெண்ணை அவமதிக்கிற சொற்களை வைத்து மது ஒழிப்பைப் பேசுகிறேன் என்பது இன்னும் எனக்கு கூச்சந் தரத்தக்கதாகவே இருக்கிறது. தமு எக ச அறிக்கையில் கூறியிருப்பது போல்

” தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. ”

உத்தமி, உல்லாசம், அவள், இவள் என்பதையெல்லாம்  “கருத்துகள்” என்று சொல்கிற அளவுக்கு சிவப்பு கண்ணை மறைத்திருக்கிற தமுஎகசவுக்கு, இதே குற்றச்சாட்டை ம க இக வின் மீதும் வைக்கலாம் என்பது தமுஎகசவுக்கும்,மற்ற இடதுசாரி தோழர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன். 

பொது வெளியிலும், இணையத்திலும் கம்யூனிசக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் சக தோழர்களை. சக அமைப்புகளை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் #மகஇக   போன்ற சில அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. எடுத்த எடுப்பில் என்.ஜி. ஓ க்கள், முதலாளித்துவ கைக்கூலி, ஆன்டி மார்க்சிஸ்ட், திரிபுவாதி, ஓடுகாலி, சாதியவாதி, பெண்ணியவாதி இதுபோன்ற பதங்களை வைத்துத்தான் வசைபாடுகிறது.

கோவனின் கைதை எதிர்க்கிற நாம் இவ்வரிகளை என்ன செய்யப் போகிறோம்? உத்தமி உல்லாசமாய் இருக்கிறாள் என்று கூறுவதை எப்படிப் பார்க்கப் போகிறோம். கோவன் இவ்வரிகளை ஒரு ஆண் ஆளும் போது பாடியிருந்தால்,  அதாவது முன்னால் முதலமைச்சராய் இருந்த கருணாநிதியாக இருந்தால் ஊத்திக்கொடுத்த உத்தமனுக்கு கோபாலபுரத்துல உல்லாசம்.என்று இருந்திருக்குமா.

#கோவனை தவறாக வழிநடத்தி அவரது வரிகளில் உள்ள கொச்சைத்தனத்தைச் சுட்டாமல் விட்டு, அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிற மகஇக-வின் தலைமைக்குக்கும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்த தமிழக அரசுக்கும் எனது கண்டனங்கள்.

புரட்சியை ஒரு சாகசச் செயலாக கருதும்போது இது போன்ற ஆபாச வரிகளும் வரத்தான் செய்யும். ஏனென்றால் சாகசம், கதாநாயகத்தனம் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தையே வழிமொழியும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

சிறுகுறிப்பு;

#மகஇக தங்களது அமைப்பின் புரட்சிகர தலைவர்களாக முன்வைக்கும் மார்க்ஸோ, எங்கெல்ஸோ லெனினோ, இது போன்ற எதிர்ப்புப் போராட்டங்களில் உத்தமி அவள் இவள் என்ற வார்த்தைகளை வைத்து புரட்சியை நடத்தியிருந்தாகவோ, அல்லது இது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவோ இருந்தால், எனது இந்தப் பார்வைக்கு மன்னிப்புக் கேட்டு, இக்கருத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்வதோடு, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் அவர்களின் ஆணாதிக்கக் குறிப்புகளையும் வைத்து உரையாடுவேன்.



. இஸ்க்ரா  – தீப்பொறி -  லெனின் நடத்திய பத்திரிக்கையின் பெயர்.

Thursday, July 30, 2015

கொலைக் குறிப்பேடு



ஒரு மனிதன் கயிற்றின் முன் நிராதரவாக நிற்கிறான்
கழைக்கூத்தாடியைப் போல் நீதி அங்கும் இங்கும் ஊசாலடிக்கொண்டிருக்கிறது
பார்வையாளர்களுக்கு
நடந்து போகும் மனிதனை விட
கயிறே பார்வையை நிறைத்திருக்கிறது
ஒரு மனிதன் முறுக்கிய கயிற்றுக்குத் தன் தலையைக் கொடுக்கும் போது
தான் மனிதனாக பிறந்ததற்கு இது வேண்டும் என நினைக்கலாம்
தான் கடந்து போகாத பாதையில்
தன் தடத்தைப் பதித்தவனின் முகத்தை நினைக்கலாம்

அரசு ஒரு கழுதை
அதற்கு உண்ணக் காகிதகங்கள்தான் வேண்டும்
என்கிற பழமொழியை நினைவு கூறலாம்

தலையை மூடிய கறுப்புத் துணிக்குள் ஒளிமிகுந்த வார்த்தைகளை அவன் யோசித்துக்கொண்டிருக்கலாம்
அரசு என்ற ஒரு சொல் உண்மையில் குமட்டலை ஏற்படுத்துகிறது
அரசு
நீதியின் பெயராலோ சத்தியத்தின் பெயராலோ அல்ல
சக மனிதனின் பெயரால்
இருக்கவேண்டும்
அவ்வளவு நிச்சயமான தன்மையுடன்

மனிதர்களிடம் பேசவிரும்பாத அரசு
விசாரிக்கவும் ஆணையிடவும் விரும்பும் அரசு
எப்படி மனிதர்களை ஆளும் தகுதி கொண்டதாக இருக்கமுடியும்

இறுதி நொடியில்
மறுக்கவே முடியாத நினைவைப் போல்
அவனது விழிகளை ஈரப்படுத்திக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்
தன் நிழலைப் போல விட்டுச் சென்ற
அவனது குழந்தைகளுக்கு காரணம் சொல்லும்
தூக்குத் தண்டனைக் குறிப்பேடுகளில்

தூக்குத் தண்டனை என்பது
நீதியின் பெயரால் என்ற வார்த்தையால் இணைக்கப்பட்டு
அவர்களுக்குச் சொல்லக் கூடாது
கடவுளின் பெயரால்
என்ற வார்த்தைகளையும் நீக்கவேண்டும்
முடிவாக
ஒரு மனிதனைத் தூக்கிலிட விரும்பிய அரசு
அவர்கள் வாழும் இம் மண்ணில்தான் இருக்கிறது என்பதையும்…


இறுதியாக கயிற்றின் முன் நிற்பவன்
தன்னைப் போலவே இருக்கும் மக்களுக்குச் நினைவூட்ட விரும்புவதெல்லாம் ஒன்றேதான்
மக்களே. அரசு உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறது
அமைதியாயிருங்கள்

பிணத்தைப் போல அவ்வளவு விரைப்பாக

Monday, May 4, 2015

கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள்.




உழைப்பு மிகவும் மனிதத்தன்மை கொண்ட தேவையாகும், ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியேதான், அவனுடைய சாதரணமான  அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்றபொழுது- உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை,உறக்கம் இதரவை- தொழிலாளி தன்னை சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப்பிறவியாக உணர்கிறான். “ எது மிருகத்தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத்தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.



கார்ல்மார்க்ஸ்.

Wednesday, April 22, 2015

காமத்துப்பால் II





இரண்டாம் பத்து
11
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர்வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை

தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்து வீழ்கிறது
அண்டத்தின் இடியொலி

கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்

சம்போ மகாதேவா
சம்போகம்.

12

குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கியில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு

13
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்லக் கால்வைக்கிறது
வரைபடத்தின் தலைவரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்

14

கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்

15

தனிமையைக்
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்

16

கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்

17

கட்டளையை யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்..

எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது

18

தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு

சலித்த காமத்தில்
இறப்பின் ருசி

19

தின்னத் தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெரிகிறது
எரிப்பின் மிச்சத்தின்
இறுதியாய் வீசப்படும்
என் முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை தனது நீர்க்கரத்தால் வாரிச்சுருட்டும்

விதி வலியது கண்ணே

20

அம்மா
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி

பசி மிகுந்த சொற்களோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி

அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசி மிகுந்த குருதிச் சூட்டோடு

முன்னொரு காலத்தில் கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்

அம்மா….

Thursday, February 19, 2015

சுக்குமிளகுதிப்பிலி.





புதிய புத்தகம் பேசுது, 2015, ஜனவரி, மலர் 12, இதழ் 11 ன்றை முன் வைத்து
ஓர் எதிர்வினை.


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர், முதன்மை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவுக்கும், பேட்டியாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவை முன் வைத்தும்..

புதிய புத்தகம் பேசுது மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜனப் பத்திரிக்கை என்பதை நினைவில் வைத்தே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

புத்தகம் பேசுது அட்டைப்படமாக கோணங்கியை பதிந்ததும், அவரது அரசியல் சொல்லாடலாக ( என்னால் அரசியல் இன்றி எதையும் அணுகமுடியாது)  “கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற வார்த்தையைப் பதாகையாய் அட்டைப் படத்தில் இட்டதும், நூலின் மத்தியில், கோணங்கியின் விரல்கள் காட்டும் வித்தைக்கு கீழே இதுவும் ஒரு வித்தையாய் அமைந்திருக்கிறது.

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வர்தும் என்ற சொல்லாடல் கோணங்கியை முதலில் கலைஞன் என உறுதி படுத்துவதோடு, மனித குல மீட்சிக்காக போராடிய பல எழுத்தாளக் கலைஞர்களை அவருக்குத் தெரியும் என்ற தொனியும் உள்ளது. அதோடு அச்சுறுத்தும் வகையில் சமூகத்தின் மீட்சி கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்னும் பிரகடனத்தையும் முன் வைக்கிறது.  அப்பிரகடனத்திற்கு ஆதாரமாக, மனிதகுல மீட்சிக்காக பாடுபட்ட கலைஞன் ஒருவனைக் கூட எழுத்தாக்கம் பெற்ற பேட்டியில் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை தனிப்பட்ட முறையில் அப்படிச் சொல்லியிருந்தால் மனிதகுல மீட்சிக்காக கதை எழுதிய அக்கலைஞனை நானும் நம்பத் தயராயிருக்கேன். நிற்க

உரையாடல் முழுவதும்( இது எழுத்து வடிவில் பார்த்ததால் இதற்கு உரையாடல் என்ற மதிப்பைத் தருகிறேன்.. ஆனால் இது வெட்டி அரட்டை என்றே என் புத்தி வாசிக்கிறது.)  முழுவதும் சுயபுராணத்தை தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதே என் வாசிப்பு.  அதற்கு முழுகாரணம் பேட்டியாளர் கிட்டத்தட்ட கோணங்கியின் மாபெரும் தொழுகையாளராய் மட்டுமே காணக்கிடைக்கிறார். பேட்டி என்றால் என்னவென்றே தெரியாது, தான் நம்பிய மனிதகுல மீட்சியாளனை இச்சமூகமும் நம்ப வேண்டும் என்ற வேண்டுகோளும் கோரிக்கையுமே அதில் கொட்டிக்கிடக்கிறது. பேட்டியின் தலைப்பில் இருந்த மீட்சியானது எவ்வகையிலானது, மீட்சியளிக்கத்தக்கப் படைப்புகளை எழுதியவர்கள் யார் என்ற கேள்வி வரும் வரும் என கடைசிக் கேள்விவரை நான் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இக்கடிதத்தின் வாயிலாக கோணங்கி, தான் நம்பிய அந்த மனித குல மீட்சியை நடத்தும் கலைஞனை அடையாளம் காட்ட வேண்டும். முதல் கேள்வி வழக்கமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றே தொடங்க வேண்டும்… நல்லது.. அது புதிய வாசகர்களுக்கு கோணங்கியை அறியத்தரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த கேள்விதான் பேட்டியை உளறலாய் முன் வைக்கிறது. பேட்டி எடுப்பவரும் உளறி, பேட்டியாளரும் போட்டி போட்டு உளறும் ஒரு பேட்டியை இதற்கு முன் எண்ணற்ற தடவைகள் வாசித்திருக்கிறேன். அதில் இது தலைசிறந்த இடத்தை வகிக்கிறது.

உழைக்கும் மக்களின் தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்துக்கான மாற்றங்களை மார்க்சியத்தில் கண்டடைந்த ஒரு கட்சியின் வெகுஜனப் பத்திரிகை.. இன்னும் யதார்த்த வாதத்தின் அடிப்படையை கட்டுக்குலையாமல் காப்பாற்றி வைத்திருக்கும் ஒரு அமைப்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பேட்டியாளரிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி - கரிசல் காட்டு வெயில், அதில் மண்டையைக் கொடுத்தால் கடித்துக்கொள்ளும் வெள்ளரிக்காய், இதன் சுவைகளைக் கூறுங்கள் என்று. இதுதான் பேட்டியெடுக்கும் முறையா. இந்த உளறலை வைத்ததும் கோணங்கி வெள்ளரிக்காய் தோட்டம் போட்ட கதையை தண்ணீர் பாய்ச்சிய கதையை, மற்றும் அடுத்தடுத்த கேள்விகளில் வெள்ளரிக்காய்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன…இருந்ததில் நல்ல வெள்ளரிக்காயாய் பாரதி புத்தகாலயத்தில் வரப்போகிறது… இந்த வருடத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம் எனத் தொடர்கிறது.. என்ன கூத்து இது.

தோழர்களே, இதில் என் முக்கியமான கேள்வி அசல் வெள்ளரிக்காய் (ஈறுகளுக்கு நைந்து கொடுப்பதாயும் தாடையைப் பதம் பார்க்காத பிஞ்சு வெள்ளரிக்காய்காளாகவும் உள்ள,  மதினி மார்கள் கதையையும் கொல்லனின் ஆறு பெண் மக்களையும்- பாரதி புத்தகாலயம் வெளியிட இருக்கிறது என்று பேட்டியிலும் வெள்ளரி வியாபாரம்)  என கலைஞன் கோணங்கி கருதும் மற்ற பிதிரா, உப்புக்கத்தி, உடைபடும் நகரம். பாழி, பிதிரா, தா, இருள்வ மௌத்திகம் போன்ற வெள்ளரிக்காய்களை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்குமா( இன்னும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டிய வார்த்தை புத்தகாலயம் என்பதாகும்- கோயில் கருவரையில் சாமி இருக்கும் விழுந்து கும்பிடு எழுத்துக் கலையில் எழுத்தாளன்தான்  சாமி அவனைக் கும்பிடு.. என்ன தோழர்களே இது,. அறிவைத் தொழுதலா மார்க்சியப் புரிதல்) என்பதையும் சொன்னால் மேற்கண்ட வெள்ளரிக்காய் வியாபரம் பற்றியும் வெள்ளரிக்காய்கள் பற்றியும் நான் பேசத்தயார்.

முக்கியமாக யதார்த்தவாத்தின் அடிப்படையை இன்னும் நகர்த்தி பல இசங்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பி வைத்த ஒரு அமைப்பு இப்படி ஒரு தனிமனித புளங்காங்கிதத்தை,  தான் அடைந்ததோடு அதை வாசகர்களும் அடைய வாய்புத் தருவது ஏன்? கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு கோணங்கி எப்ப்டி சட்டை போடுகிறார் எப்படி தலை சீவுவார் என்பது ஆராய்ச்சிக்கு உரியதாக இருப்பது அவரளவில் நல்லதே. அதையே இலக்கிய வெள்ளரிக்காய் எனக் கூவி விற்பதது ஏன்? இதில் எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், புதிதாக எழுத வரும் வாசகன் வாயில் வெள்ளரிக்காய் விதையைத் திணித்து இதுதான் கலை, இதை எழுதியவன்தான் கலைஞன், அக்கலைஞனை நம்புவதுதான் உனக்கும் உன்னைப் போன்ற உருவங்களைக் கொண்ட மனிதகுலத்துக்கும் ஒரே மீட்சி எனச் சொல்லாமல் இருந்தால் சரி.

மிகவும் வருத்தமாக இருக்கிறது. பேட்டியாளரிடம் கோணங்கியை வாசித்தவனாக நான் உரையாடவும் காத்திருக்கிறேன்.

நேரில் உரையாட விருப்பமில்லையெனில் எனது பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும்கூட போதும்:

1.    கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற இந்த “தத்துவத்தின்” மூலம் சமூகத்தின் மீட்சிக்கு கோணங்கியும் அதை ஆவலுந்த கேட்ட கீரனூர் ஜாகிர் ராஜாவும் அதை பத்திரிக்கையில் அனுமதித்திருக்கும் ஆசிரியர் குழுவும் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன?

2.    கலை மனிதகுலத்தை மீட்குமெனில், மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சிக்கான, அரசியலுக்கான (பாராளுமன்றவாதமானாலும்கூட பரவாயில்லை) எல்லாவற்றிற்கும் மேலாக  புரட்சிக்கான தேவை இருக்கிறதா இல்லையா? கலையா? புரட்சியா? எது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீட்சிக்கான ஆயுதம்?

3.    கலை என்பது உங்களது பதிலாக இருந்தால், த.மு.எ.க.ச இதுவரை ‘உற்பத்தி’ செய்த, ‘அரவணைத்து’ கௌரவித்த கலைஞர்கள் மனிதகுல மீட்சிக்காக ஆற்றிய பங்கென்ன, இதுவரை கிட்டிய மீட்சிகள் என்னென்ன? மீட்சிக் கர்த்தாக்களாகிய அக்கலைஞர்கள் பட்டியல் கிடைக்குமா? ‘கலைஞர்களால்’தான் மனிதகுல மீட்சி நிகழப்போகிறது என்பதாக கோணங்கியின் பேட்டியின் மூலம் புத்தகம் பேசுகிறது முன்வைக்கிறதா?

4.    என்னைப் பொறுத்தவரையில் கலைஞன் என்றாலே அவன் எழுத்தாளன் மட்டுந்தானா…என் வாசிப்பின் அறிவில் எழுத்தை ஒரு துறையாக மட்டுமே கொள்கிறேன். பழக்கத்தில், ஓரளவு வாசிப்பில், சாத்தியப்பட்டிருக்கும் எழுத்தை மனித குல மீட்சிக்காக எப்படி முன்வைப்பீர்கள். விளக்குவீர்களா…

5.    இறுதியாக, விஞ்ஞானபூர்வமாக சமூகத்தை ஆய்வு செய்து, சமூக ஒடுக்குமுறைக்கான காரணிகளையும், அதைக் களைவதற்கான செயல்திட்டத்தையும் கொடுத்த கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோ மற்றும் இதர புரட்சியாளர்களின் சிந்தனைகளை வழியொட்டி செயல்படும் செயல்வீரர்களால் மனிதகுல மீட்சி சாத்தியமாகப் போவதில்லை, ஆனால் நிகண்டுகளையும், கூகிள் தேடல் பொறியில் கிடைக்கும் சில ‘உயிரிகளின்’ பெயர்களையும் ஒட்டி வெட்டி, அனகோண்டாவின் வாய்க்குள் சிக்கி வெளித்தள்ளப்படும் ஒரு காட்டெருமையின் சிதறுண்ட எலும்புத்துண்டுகள் போல் தமிழை, படிமத்தை இரைத்து, கூழ் காய்ச்சிக் கொடுக்கும் கோணங்கி போன்ற கலைஞர்களால்தான் மனிதகுல மீட்சி சாத்தியமாகப்போகிறது இல்லையா தோழர்களே?


நகைச்சுவைக்காக

“இயேசுவை நம்புவதும் இயேசுவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி”

 “அல்லாவை நம்புவதும் அல்லாவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுலமீட்சிக்கான ஒரே வழி”

 “இராமரை நம்புவதும், ராமரை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி

கடுங்குறிப்பாக

“கோணங்கியை நம்புவதும் (அவரை பேட்டியெடுப்பதும்), கோணங்கியை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழி ”

உரையாட வருபவர்களின் கவனத்திற்கு;

மார்க்சை நம்புவதும் மார்க்சை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியா என்ற கேள்விக்கு அதன் இலக்கியத்தன்மை மதத்தன்மை நீக்கி பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன்.

மரியாதையுடன்

வசுமித்ர.


Sunday, February 8, 2015

கொஞ்சம் மனது வைய்யுங்கள் தோழர் ஃப்ராய்ட்!

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கவிதை.





நான் ஒரு நீண்ட துப்பாக்கியை கனவு கண்டேன்
நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!
ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட
மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட
என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்பு படுத்தக்கூடும்
தயவுசெய்து
உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!
என்னிடமிருப்பதிலேயே
பெரும்பிரச்சனைக்குரிய உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்
அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டு தின்ன இயலாது
தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!
நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்
நான் சாமான்யை
எனக்கு குழந்தைகள் இருக்கின்றன
உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்
ஓர் எளிய  நீதிக்காக 
சட்டத்திற்கு கேட்காதவாறு
ஐந்து தோட்டாக்களை நான்பயன்படுத்திவிட்டேன்
நீங்கள் மனதுவைத்தால்
தடயங்களேதுமின்றி
அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.




வெய்யில்

Monday, February 2, 2015

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்.





தமிழ் புனைவு வெளியில் மொழியின் அர்த்தங்களை, அதன் குறுக்கு வெட்டுத்  தோற்றங்களை, கற்பனையின் யாதார்த்தத்தை, மொழியின் வாழ்நிலத்தில் சொற்களை விதைத்த நாவல் தாண்டவராயன் கதை என்பதே என் வாசக எண்ணம். இதை மீறி ஒரு கதை கூறலும் அதன் காத்திரமும் இன்று வரை தமிழ் புனைவில் சாத்தியமாகாத ஒன்று. அப்புனைவைக் கடக்க வேண்டுமெனில் அதுவும் நூலாசிரியனான பா. வெங்கடேசனாகவே இருக்க வேண்டும். ( இது உண்மையில் அவருக்கு அவராலேயே இடப்பட்ட சவாலாகத்தான் இருக்கவேண்டும்) இதை ஒரு வாசகனாக துணிந்து கூறுகிறேன். இலக்கியத்தை ஒரு துறையாகக் கொண்டு, புனைவை அதன் இன்னொரு கூறாகக் கொண்டு வாசித்தால் தமிழ் புனைவு வெளியில்  தாண்டவராயன் கதை பயணித்த தூரமும் நிகழ்த்திய பாய்ச்சலும் அசாத்தியமானது. அதன் மொழிச்செழுமை ஈடு செய்ய முடியாதது.

டிஸ்கவரிச் சேனல்களில் ஒளியாக உலாவும் மிருகத்தின் கனபரிமாணங்களை வார்த்தைப்படுத்தியும், பழம் பெரும் கதையாடல்களின் கனவை அத்தல் குத்தலாக வெட்டியும்,  பன்மொழி திரைப்படங்களின் சப் டைட்டில் வசனங்களைத் திருடியும்,  தங்களது வரிகளைக் மாற்றுவாக்கம் செய்து.. அதை தன் விரலால் எழுதிப் பார்த்ததினாலேயே.. தன்னை வியப்பதோடு மட்டுமில்லாது கண்டுபிடித்தேன் எனக் கூச்சலிட்டுக்கொண்டே, திருடிய வரிகளை, விளம்பரப்பட பாணியில் கத்தலும் கதறலுமாய் முன் வைத்தும், வார்த்தைகளுக்கு நிறமற்ற சாயத்தைப் பூசி, அதை தங்கள் காமாலைக் கண்களால் கண்டு களித்து, வெற்று அலங்காரம் ஊட்டி எழுதி வரும் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில், விஞ்ஞானத்தின் ஒரு  கருவியான,  ஒரு புகைப்படக் கருவி, தன் வல்லமையால் தன்னை வைத்திருக்கும் ஒரு மனிதனை ஓவியனாய் மாற்றும் வித்தையிலிருந்து தொடங்கி,   ஆதாமும் ஏவாளும் தின்று முடித்த ஆப்பிளின் எச்சில் விதைகளிலிருந்து கிளர்ந்து எழும் சாப வனத்தின் வாயிலாக ஒரு கதை சொல்லி தனது நாவலைக் கட்டமைத்து,  மொழியின் எண்ணற்ற சாத்தியங்களை வழங்கியிருக்கிறான் பா. வெங்கடேசன்.

இலக்கியத்திற்கென வழங்கும் பரிசுகளில் ஒரு இறுதி முடிச்சு நோபல் பரிசுதானென்றால் அதைத் தாண்டவராயன் கதைக்கு வழங்கலாம்.

நேரம் இருப்பின், நாவல் மொழியின் வரைபடங்களை இன்னும் விரிவாக எழுதுவேன்.



Saturday, September 13, 2014

விடியல் பதிப்பகத்தின் மோசடி.



விடியல் டிரஸ்ட், மற்றும் விடியல் பதிப்பகத்தின் மோசடி குறித்த ஓர் அறிவிப்பு.

வணக்கம்,

குறளி ஒரு சிற்றிதழாகத் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதை ஒரு பதிப்பகமாக முன்னெடுக்கும் வேலைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டப் பணியாக தோழர்கள் எஸ். பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ள சிலப் புத்தகங்களை பதிப்பிப்பது எனும் முடிவெடுத்தோம். எஸ். பாலச்சந்திரனும், கோவிந்தசாமியும் மொழிபெயர்த்து தற்போதைய அளவில் 2014 ல் குறளி வெளியீடாக , முதற்கட்டமாக வெளிவரும் புத்தகங்கள்:

பெட்ரோ பராமோ
எரியும் சமவெளி
ஜோதி ராவ் பூலே
முமியா சிறையும் வாழ்வும்
சூரியனைத் தொடரும் காற்று
இந்தியா; காலத்தை எதிர்நோக்கி
பாட்ரிஸ் லுமும்பா அரசியல் சிந்தனைகள்
போர் தொடர்கிறது
தெபாகா எழுச்சி
லுமும்பா இறுதி நாட்கள்
மார்டின் லுதர் கிங்,

ஆகிய 11 புத்தகங்கள் அக்டோபர் இறுதியில் வெளிவருகிறது. இது தவிர எஸ். பாலச்சந்திரன், வெ.கோவிந்தசாமி இவர்களது  மற்ற புத்தங்களுக்குமான உரிமையும் குறளி பதிப்பகத்திடம் உள்ளது.

தோழர்கள் இருவரும் புத்தக உரிமையை எங்களுக்கு வழங்கும்போது ஒரு  பைசா கூட பெறாமல் அவ்வுரிமங்களை எங்களுக்கு வழங்கினர். எங்களுக்கு உரிமம் கொடுத்தது போக சில புத்தகங்களை எங்களுக்கு முன்னமே என்.சி.பி.எச்க்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் உரிமம் கொடுத்துள்ளனர். நிற்க.

மேற்சொன்னப் 11 புத்தகங்களையும் செழுமைப்படுத்தி வெளியிடும் பணியில் குறளி பதிப்பகம் ஏராளாமான பணத்தையும், காலத்தையும் செலவிட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை செய்து, புத்தகங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்களாமே…நல்லது… நாங்கள் பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி, இவ்விரண்டு நூல்களையும் விடியல் பதிப்பக வெளியீடாக கொண்டு வருகிறோம்  எனத் தகவல் சொன்னார்.  எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

விடியல் சிவா உயிரோடு இருந்த காலத்திலேயே அவரோடு பிணக்கு ஏற்பட்டு தோழர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும் விடியலில் இருந்து வெளியேறி இருந்தனர். விடியல் பதிப்பகத்திலிருந்து விலகியபோது தங்கள் படைப்புக்களை வெளியிடக் கூடாது என்று எழுத்து மூலமாக கடிதமும் அறிவிப்பு, கொடுத்திருந்தினர். எனவே சிவா உயிருடன் இருந்தவரை அவற்றை வெளியிடவில்லை. பின்னர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும், அவர்களின் அறத்திற்கும் கொள்கைகளுக்கும் ஒத்து வரும் பதிப்பக சூழல் இல்லாத நிலையில்,  தங்களது மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்வதை தவிர்த்து வந்தனர். இச்சூழலில் விடியல் சிவா இறந்து விட்டார். விடியலை டிரஸ்டாக சுவீகரித்துக் கொண்ட ‘முதலாளிகளின்’ போக்கு எங்களுக்கும் உறுத்தலாக இருந்து வந்த நிலையில், தோழர் கொற்றவை மொழிபெயர்த்த ரோசா லுக்சம்பர்க் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் போனது. இந்நிலையில் பாலச்சந்திரனை சந்திக்க நேர்ந்தது.

இப்படிப்பட்டச் சூழலில் நாமே ஏன் பதிப்பகம் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டு வரக்கூடாது எனும் பேச்சின் முடிவில் உதயமானதே குறளி பதிப்பகம். இதில் ராஜாராமின் போக்கு விடியல் டிரஸ்டி-முதலாளி ராஜாராமின் பதிப்பக அபகரிப்புத் தாண்டி, தோழர் சிவாவின் உறவினரும் தோழருமான கல்யாணி குறித்து அவர் பேசிய ஆணாதிக்க ஆபாசப் பேச்சுக்கள்  செய்திகளாக எங்களுக்கு வரவே, இனி விடியலோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம்.

பால் ஃப்ராலிச் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரோசா லுக்சம்பர்க் – அவரது வாழ்க்கையும், பணிகளும் எனும் புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். விடியலுக்கு அதைக் கொடுப்பதாக சிவா இருக்கும் போது முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவின் மறைவுக்குப் பின்னர், ராஜாராமின் ‘உண்மை’ குணங்கள் தெரிய வருவதற்கு முன் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை விடியலுக்கு மெயில் அனுப்பியிருந்தார் கொற்றவை. விடியல் ராஜாராம் மற்றும் ராமச்சந்திரனின் அதிகாரப் போக்கு பிடிக்காமல் போனதன் விளைவாக அப்பதிப்பகத்திற்கு தருவதாக இருந்த லுக்ஸம்பர்க் புத்தகத்தையும் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என முறைப்படி அறிவித்தார் கொற்றவை. மேலும் அப்புத்தகத்தில் ஆங்காங்கு திருகுவேலைகள் செய்யாதீர்கள் என்பதையும் சொன்னோம். எங்களது இந்த முடிவுக்கு விடியல் பதிப்பகத்தின் புத்தகவிற்பனையாளர் ராமச்சந்திரனின் அணுகுமுறையும் கூடுதல் காரணம். (அப்புத்தகத்தையும் அவர்கள் இதுபோல் திருகு வேலைகள் செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது)

பின்னணி இப்படி இருக்க, பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. யுவான் ரூல்ஃபோவின் படைப்புகளை செழுமைப்படுத்தி புதிய இணைப்புகளோடு வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று விடியல் டிரஸ்டி ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டையும் விடியல் பதிப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அது எப்படி முடியும் அதற்கான உரிமத்தை தோழர் பாலச்சந்திரன் குறளி பதிப்பகத்திற்கு வழங்கி இருக்கிறாரே என்றோம். அதற்கு விடியல் டிரஸ்டி ராஜாராம் அம்மொழிபெயர்ப்புக்கு பாலச்சந்திரன் உரிமை கோரமுடியாது என்று சொன்னதோடு அது ‘கூட்டு உழைப்பு’ என்றும், அது போல் பலவேலைகள் நடந்திருக்கிறது அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார். அதற்கு  நாங்கள் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றதும் ‘வேலைகள் முடிந்து விட்டது வரும் செவ்வாய் புதனில் புத்தகம் வெளி வரும்’, (வரும் செவ்வாய் புதன் 16.09.2014, 17தேதிகளில் வெளிவருகிறது) அவர் பேசினால் நாங்க சமாளிச்சுக்கிறோம் என தெரிவித்தார். பாலச்சந்திரனிடம் நாங்கள் பேசியபோது - அவர் இது ஒரு  முறையற்ற செயல், கயமைத்தனம் அயோக்கியத்தனம் எனக் கூறியதோடு தோழர் கோவிந்தசாமியிடம் கலந்தாலோசித்ததன் படி, வழக்குத் தொடருவதே சரியான வழி என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு மொழிபெயப்பாளர் ராஜாராம் சொன்ன வி.நடராஜ் அவர்களை பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மாதிரியான செயல் இது எனக் கேட்டதற்கு அவர் இவ்வேலையை கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) சொல்லித்தான் செய்கிறேன் அவர்தான் இதைச் செய்யச் சொன்னான் எனக் கூறியுள்ளார் எரியும் சமவெளி தொகுப்பில் பாலச்சந்திரன் மொழிபெயர்த்த 15 கதைகளை அப்படியே எடுத்தாள்வதோடு. மேலும் இரு சிறுகதையைச் சேர்த்து வெளியிடப் போகிறோம். இது கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை)  சொல்லியே நடக்கிறது. மேலும் இதை அவர்கள் புதிதாகச் செய்து தரச்சொன்னாலும் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படையாகத் தெரியும் அம்சம் எஸ் பாலச்சந்திரனின் உழைப்பை சுரண்டும் நோக்கமே. இதில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம். மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன் எம். (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) மூவரும் சேர்ந்து செய்யும் சதியெனவே கொள்கிறோம். சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மேல தொடுப்போம் என்பதை குறளி பதிவு செய்கிறது. மேலும் அவர் பாலச்சந்திரனிடம் இதைச் சொல்லும் போது எங்களது பார்வைகள் பதிவுகள் பதிப்பகத்திற்காக சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நூல்களையும் உங்களிடம் கேட்டு நீங்கள் கொடுக்கவில்லை, அதனால் இதை விடியலில் கொண்டு வருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பெயர்தான் புரட்சிகரப் பதிப்பகமா…தோழர்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனுக்கே தெரியாமல் பதிப்பை மறுபதிப்பு செய்வது என்பது திருட்டுக்கு நிகரானது. அதை விடியல் பதிப்பகம் செய்திருக்கிறது தோழர்களே.
                                            
இது விசயமாக. மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனும், குறளி பதிப்பகமும் வழக்கு தொடரும் என்று ராஜாராமிடம் தெரிவித்தபோது, ராஜாரம் “நீங்க  வழக்கு தொடர்ந்துக்கோங்க” என்று அதிகாரத் தொணியோடு முடித்துக்கொண்டார்.

விடியல் பதிப்பகத்திற்கு டிரஸ்டி-முதலாளி ராஜாராம் தலைமை ஏற்ற பிறகு இது அவர்களின் கைவந்த கலையாக மாறிவிட்டது. தோழர் முருகவேளின் 
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் புத்தகத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பு என்ற பெரியரில் போப்பு என்பவரை வைத்து ஆங்காங்கு அடித்தல் திருத்தல் வேலை செய்து தலைப்பில் உள்ள ‘ஒப்புதலை’ நீக்கிவிட்டு மோசடித்தனத்துடன் வெளியிட்டது.

இதில் மாபெரும் அறுவெறுப்பு எனச் சொல்லத்தக்கது என்னவெனில், ஏற்கனவே முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழெட்டுப் பதிப்புகள் கண்ட ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ’ மொழிபெயர்ப்பை ஆங்காங்கு சில்லறை வேலைகள் செய்து பதிப்பித்ததோடு பின்னுரையில் சிவா உயிரோடு இருந்த பொழுது திருத்த நினைத்தார். இப்பொழுது இறந்துவிட்டார். அதனால் திருத்த முடியவில்லை, அவரது ஆத்மா சாந்தியடையும் விதமாக இம்மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என்ற தொனியில் அப்புத்தகத்தை போப்பு என்பவரின் மொழிபெயர்ப்பாக வெளியிட்டது.

இப்போது அதே போல் தோழர் எஸ் பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பை நாங்கள் வெளியிடுகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்ற வார்த்தைகளை விடியல் ட்ரஸ்டி ராஜாராம் முன் வைக்கிறார்.

முருகவேளுக்கு செய்த அதே மோசடியை தோழர் பாலச்சந்திரன் விசயத்திலும் செய்யத் துணிந்த விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளை அதன் ஆதிக்கப் போக்குகளை முறையாக வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்வோம். பத்திரிக்கைகளுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் விடியல் பதிப்பகத்தின் மோசடிகளை எடுத்துரைப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன். அப்புத்தகத்தில் தனக்குதவியர்களின் பெயர்களை அவர் எழுதியதற்கு, அதைக் கூட்டுழைப்பு எனச் சொல்லும் டிரஸ்டி ராஜாராம் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர்களின் திருகுவேலையாக, சம்பந்தப்பட்ட புத்தகத்தில் வேறொருவரை வைத்து ஆங்காங்கு சில வார்த்தைகளை மாற்றி வெளியிட்டால் அந்த அயோக்கியத்தனத்தையும் சான்றாராதரத்துடன் வெளிக்கொணருவோம்.

நம்மை போன்ற சிறு பதிப்பகங்களில் செழுமை படுத்த உதவுவோர் பெரும்பாலும் சக தோழர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை பதிப்பகங்கள் என்றால் ‘பதிப்பாசிரியர் (எடிட்டர்)’ இருப்பார். ஆனால் சின்ன சின்னத் திருத்தங்கல் சரி பார்த்தல்கள் மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு இணையாக முடியாது. அதன் காரணமாகவே உரிமம் மொழிபெயர்ப்பாளரிடமே இருக்கும்.  அப்படி இருக்கையில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் எனும் ராஜாராமின்  தொனியில் தெரிவது முதலாளித்துவ அதிகாரம், சட்டத்தை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும் எனும் ஓர் அகந்தை.  

தோழர்களே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதற்கான அறிவூட்டும் படைப்புகளைக் கொண்டுவருவதாக மார்தட்டிக்கொள்ளும் விடியல் பதிப்பகம், இப்போது உழைப்பாளிகளைச் சுரண்டி, மொழிபெயர்ப்பாளரின் தக்க அனுமதி இன்றி மோசடி செய்து காசு பார்க்கும் இழி நிலைக்கு இறங்கி விட்டது. இந்நிலைக்கு உடந்தையாக மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன்.எம் (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) உடந்தையாக இருக்கின்றனர் என்பதை அறிய எங்களிக்கு அதிர்ச்சி அளித்தது. (நடராஜை வைத்து கொண்டு வரவிருக்கிறோம் என்று ராஜாராம் சொன்னதை அடுத்து, அவரையும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் என்று ஆலோசித்தோம். பாலச்சந்திரன் தொடர்பு கொண்டு கேட்க -  கண்ணன் சொல்கிறார் நான் செய்கிறேன் என்று நடராஜ் பதில் அளித்திருக்கிறார்…).

நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு தக்க எதிர்வினையாற்ற இருக்கிறோம் என்பதை குறளி பதிப்பகம் அறிவிக்கிறது.

கூட்டு முயற்சி என்ற அபத்தமான வார்த்தையை வைத்து, விடியல் பதிப்பகமானது இவ்வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறது என்பதை இதன் வாயிலாக பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் அறிவித்துக்கொள்கிறோம். விடியலின் இந்த மோசடிக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது எனும் வேண்டுகோளையும் இதன் மூலம் வைக்கின்றோம்.

விடியல் டிரஸ்ட்- விடியல் பதிப்பகத்தின் மோசடிக்கெதிராக குறளி பதிப்பகம் களம் இறங்கிப் போராடும். பதிப்புலகில் தொடர்ந்து வரும் விடியல் பதிப்பகத்தின், உழைப்புச் சுரண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

Related Links

வியாபாரிகளிடம் சிக்கியுள்ளதா விடியல் பதிப்பகம்? - http://tinyurl.com/kvqk3xm

விடியல் பதிப்பகத்தின் விசமத்தனம் - HTTP://WWW.KEETRU.COM/INDEX.PHP/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24651-2013-08-19-18-17-58


“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...