Showing posts with label ஈழத்துக் கவிதைகள். Show all posts
Showing posts with label ஈழத்துக் கவிதைகள். Show all posts

Monday, May 16, 2011

ஒரு கவிஞனைப் பற்றி பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


ஒரு
கவிஞன் உழைக்கும்போது நாடு அமைதியாக இருக்கிறது
கவிஞர்கள்
உழைக்கும் போது மனம் அமைதியாகிறது
கவிஞர்கள்
உழைத்து உண்ணும் போது இன்னும் அழகாக மாறுகிறது
கவிஞன்
உழைப்பைச் செலுத்தும்போது

கவிஞன் அலுப்பில் உறங்கும் போது
மினுமினுக்கிறது
கவிஞன் குறைந்த பட்சம் மண்வெட்டி பிடிக்கும் போது
மலர்கிறது

கவிதை
கவிதைகள்


கவிஞர்கள்
எழுத
உழைக்க வேண்டும்

காதலையும்
காமத்தையும் எழுதும் தறுவாயில்
கொட்டாவி விடும் கவிஞனை
காமமும்
காதலும்
இறுதியில்
கவிதையும் மன்னிக்காது

சமரசமின்றி
கவிஞன்
கவிஞர்கள் உழைக்க வேண்டும்

உழைப்பை உண்ணாத கவிஞன்
எழுதும் போது
கவிதை
மூச்சடைக்கிறது

அதன் கனங்கூடிய இருதயத்தை நோக்கியாவது கவிஞர்கள் தங்களது
கவிதையை
எழுதும்
கரத்தால் குத்தி தெளிய வைக்கவேண்டும்

கவிதைக்கும்
வார்த்தைக்கும்
சொல்லுக்கும்
உரிமை கோருபவனை
கவிஞன்
கவிஞர்கள் என்று அழைக்கக்கூடாது

கவிஞர்கள் ஆழப் புன்னகைக்க
உழைக்கும் போது
வியர்வை சிதறும்போது
மக்கள் கவிதை எழுதத்தொடங்குவர்

மக்களின்
கவிதையில்
கவிதையோ
கவிஞனோ
கவிஞர்களோ ஒருபோதும் இருக்கப்போவதில்லை

வெறுமனே ஒரு கவிதை
அவ்வளவே

கவிஞன் பிச்சையெடுக்கும் போது
அவன்
கனத்த தும்பிக்கை தூக்கி
ஒற்றை ரூபாயை மிகுந்த வலிவுடன்
இரக்கும் யானை பற்றி விசனங்கொள்ளக்கூடாது
சர்க்கஸ் கரடிகளை பற்றிச் சிந்திக்கக்கூடாது

முக்கியமாய் கவிஞன்
கவிஞர்கள்
அரசியல் பேசும்போது கவனமாயிருக்க வேண்டும்

கவிதையறியாது
கவிஞன்
தெருச்சண்டைகளை
புகார்களை
ஏசல்களை
இயலாமைகளை
வன்மத்தை
பாராளுமன்றத்திற்கோ
சட்டமன்றத்திற்கோ
நாடாளும் மன்றத்திற்கோ
மேலவை
கீழவைக்கோ
இன்னபிற மக்கள் இல்லாத சபைகளுக்கோ
கவிதையை
கைபிடித்து தரதரவென இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்ததாகிவிடும்

எதுகைகளை
மோனைகளை
கொலை செய்வதைப் போல்
கவிஞன்
கவிஞர்கள் எழுத வேண்டும்

ஒரு கவிதையை எழுத கவிஞன் ஓய்வெடுக்க வேண்டி இருந்தால்
அவன்
எவருக்கும்
சொல்லாமல்
தன் இறப்பை தன் காதில்
தனதிரு நாவை மடித்துஅழுத்தமாக ஓதவேண்டும்

பறந்து கொண்டிருக்கும் பறவை
சட்டென மடிந்து
செங்குத்தாய்
நிலம் வீழ்வதைப் போல.....

Tuesday, March 1, 2011

சிறையதிகாரிக்கு விண்ணப்பம் - ஊர்வசி. 1984



ஐயா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவைதைகளையும்
என்னால் தடுக்கமுடியாது
ஏனெனில்,
நான் கைதி
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
‘பயங்கரவாதி’.

உரத்துக் கத்தி அல்லது முனகி
எனது வேதனையைக்
குறைக்கக்கூட முடியாதபோது
எனது புண்களில்
பெயர் தெரியாத எரிதிராவகம்
ஊற்றப்படும் போது
எதையும் எதிர்த்து
எனது சுண்டுவிரலும் அசையாது.
மேலும் அது
என்னால் முடியாதது என்பதும்
உங்களூக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஐயா.
ஒரு தாழ்மையான விண்ணப்பம்
என்னை அடைக்கிற இடத்தில்
எட்டாத உயரத்திலாயினும்
ஒரு சிறு சாளரம் வேண்டும்
அல்லது, கூரையில்
இரண்டு கையகல துவாரம் வேண்டும்
சத்தியமான வார்த்தை இது.
தப்பிச் செல்லத் தேடும் மார்க்கமல்ல
தகிக்கும் எனது ரணங்களில்
காற்று வந்து சற்றே தடவட்டும்
சிறுதுண்டு மேகம்
மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும்
மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில்
எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
தாண்டிப் பறப்பதில், நான்
இதுவரை வாழ்ந்த உலகில்
என் மனிதரைக் காண்பேன்.

பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும்
ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா. 

                                                                                       - மரணத்துள் வாழ்வோம்.
பக்கம் 103- 108
விடியல் பதிப்பகம்.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...