Thursday, September 22, 2016

கொட்டேஷன் நிரப்பியான அ.கா.ஈஸ்வரன் அவர்களை முன்வைத்து....




கொட்டேஷன் நிரப்பியான இவர் முக நூலில் எங்கு யார் மார்க்சியம் குறித்துப் பேசினாலும் ஒரு கொட்டேஷனை நிரப்பிவிட்டு அமைதியாக காத்திருப்பார். மார்க்சியம் குறித்து கேள்வி கேட்டவர் மார்க்சியத்தை தன்னளவில் படித்துப் புரிந்தவராய் ( பிழைகள் இருந்தாலும்) அதை தன் சொந்தவார்த்தைகளில் முன்வைத்து பேசுவார் ஆனால் கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரன் அனைத்திற்கும் மார்க்சிய கொட்டேஷன்களையே பதிலாய் வைப்பார். கேள்வி கேட்டவர் திக்குமுக்காடி புரிந்தும் புரியாமலும் மார்க்சிய மூல ஆசிரியர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்களா என்பதில் தன் சொந்த வார்த்தையை முன் வைத்து கேள்வி கேட்பார் ஆனால் பாருங்கள் அதிலும் மார்க்சிய கொட்டேஷன்களே பதிலாய் வந்து விழும்.

இத்தகைய போக்குக்குப் பின்னால் இருக்கும் அடையாள இருப்பு அரசியலை இந்த சமயத்தில் வெளிக்கொண்டு வரவேண்டும் என நண்பர்களும் தோழர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வகைமாதிரிகள் குறித்து விரிவாக எழுதுகிறேன்.

மார்க்சிய கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரன் மார்க்சியத்தை விளக்குவதாய்ச் சொல்லி  வெட்டி ஒட்டும் அறிவையே தன் அறிவாய் முன் வைத்து, மார்க்சியத்தின் மூல ஆசிரியர்களில் ஒருவராய் தன் பெயரைச் சேர்க்கும் ஆவலாதியில் எழுதியும் வருகிறார்.  விளக்கம் கேட்டால், ஜார்ஜ் தாம்சன் லெனின் என்று உளறுவதும் நடக்கிறது. ஏன் சொந்த வார்த்தையில் முன் வைக்கவில்லை என்ற கேள்வி ஒன்றும் ஆபத்தான கேள்வி இல்லை. அதற்கு பதிலும் கூற முடியும். ஆனால் இந்த கொட்டேஷன் நிரப்பியோ அதற்கு எந்தப் பதிலையும் வைக்காது தன் அறிவு மடமையை முன் வைத்து தன் பக்கத்தில் எதையேனும் கொட்டேஷனாய்ப் போடுவார்.

தோழர்களே உங்கள் சொந்த வார்த்தையில் மார்க்சியத்தை எளிய முறையில் முன் வையுங்கள் என்று கேட்பது ஒரு குத்தமா. ஜார்ஜ் தாம்சனோ லெனினோ ஏன் இதுவரை இந்திய அளவில் இது போன்ற கொட்டேஷன் நிரப்பிகள் எவருமில்லை என்பதற்கு இவர் ஒருவரே சாட்சி. இவரைப் போல் உலக அளவில் கொட்டேஷனை எடுத்துப் போட்டு மார்க்சியத்தை விளக்க நினைத்த ஒருவரையாவது சுட்டமுடியுமா.

இது மிக எளிதான வேலையாக இருக்கிறது என்ற ஈஸ்வரனின் சுயவிளக்கமே அவரது உழைப்புச் சோம்பேறித்தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததோடு அவரது தன்னம்பிக்கையின்மையையும் சுட்டிவிட்டது. இந்தக் கொட்டேஷன் நிரப்பி தான் இதுவரை புரிந்து கொண்ட மார்க்சியத்தை முன் வைத்து,  சமூக நிகழ்வுகளை, பிரச்சினைகளை தன் சொந்த வார்த்தைகளில் வைத்திருக்கிறாரா, இல்லை ஏதேனும் ஒரு கட்டுரையாவது எழுதியிருப்பாரா என்று தேடிப் பார்த்தால் பதில் பூஜ்யம். மார்க்சியத்தை அவருக்கு அவரே விளக்கிக் கொள்ளும் அளவுக்கு வார்த்தைகளில் கவனம் இல்லாத  கொட்டேஷன் நிரப்பியான இவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட எளிய வழி வெட்டி ஒட்டும் கலை.

மேலும் ஈஸ்வரனிடம் ஏன் இத்தனை கொட்டேஷன்கள் என்றால் ரங்கநாயகம்மா அம்பேத்கரை கொட்டேஷன்களாக போடவில்லையா என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஒரு விமர்சன நூலை எப்படிப் படிக்க வேண்டும், ஒரு கோட்பாட்டு நூலை எப்படி எழுத வேண்டும் என்ற அறிவு கூட இல்லாது, மூளை மழுங்கிய கேள்வியை நம் முன்வைத்தால் நாம் என்னதான் செய்வது.

ரங்கநாயகம்மா அம்பேத்கரின் வார்த்தைகளை முன்வைத்து அந்த நூலை விமர்சனம் செய்திருக்கிறார். அம்பேத்கரை முன்வைத்து விமர்சிக்கும் போது அம்பேத்கரின் வார்த்தைகளையே மேற்கோள்களாய்  வைத்து விமர்சிப்பதே அறிவு நாணயம். ஆனால் மார்க்சியத்தை, தத்துவத்தை தன் சொந்த சொற்களில் விளக்க, மார்க்சியத்தைப் பயின்ற யாராலும் முடியும். அப்படி வந்த நூல்கள் பல ஆயிரம் இருக்கிறது. ஆனால் ஈஸ்வரன் கேட்கும் கேள்வியோ விமர்சன நூலில் அம்பேத்கர் கொட்டேஷன்கள் ஏன். இந்தக் கொடுமையை என்னவென்று அழைப்பது. இதுதான் இவரது பொருள்முதல்வாத அறிவு.


கேள்விகளை முன்வைத்து, உங்கள் சொந்த வார்த்தைகளில் மார்க்சியத்தை எழுதுங்கள் என்றதும் உடல் வியர்த்து, தொடக்க நிலை வாசகர்களுக்கு எழுதுவேன் என்கிற ஈஸ்வரனது எதிர்காலப் பதில் எத்தனை சிறுபிள்ளைத்தனமானது என நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இவரது ஜல்சாப்புகளையும் நாம் காணலாம்.

தமிழில் நா.வானமாமலை தொடங்கி எத்தனையோ பேர் மார்க்சிய மூல ஆசிரியர்களின் கொட்டேஷன்களை தேவைப்படும் இடங்களில் மட்டும் பொருத்தி, தங்கள் வாதங்களை மிக எளிய எடுத்துக்காட்டுகளாய் விளக்கி எழுதியிருக்கின்றனர். ஆனால் கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரனோ ம்...என்றால் மார்க்சிய அர்த்தம். ஏன் என்றால் லெனிய விளக்கம் என்று ஏகத்துக்கும், பக்கம் பக்கமா கொட்டேஷன்களை நிரப்பிவிட்டு, பொருள்முதல்வாதத்தை நான் விளக்கிவிட்டேன் என தன் சொந்த அகங்காரத்தை முன்வைத்துப் பேசி வருகிறார். அத்தகையோர் ஏன் சொந்த சொற்களை வைத்து பொருள்முதல்வாதத்தை விளக்கக் கூடாது.

அவர்களால் அது முடியாது. காரணம், அவர்களது சொந்த விளக்கங்கள் அவர்களது அரைகுறைப் புரிதல்களை வெளிப்படுத்திவிடும். இதற்கு அவர்கள் சொந்தமாக எழுதிய வார்த்தைகளில் இரண்டு வாக்கியங்களை எடுத்துப் படித்தாலே நன்றாக விளங்கும்.

மேலும் ரங்கநாயகம்மா கறாரான பார்வையில் அம்பேத்கரை விமர்சித்திருப்பதை ஏன் இப்படி என்ற இவர் அதையே மார்க்சிய மூல ஆசிரியர்கள்  கறாராக முன் வைக்கும் போது, தத்துவம்... ஆகா அற்புதம் என்ற துதி பாடும் மனநிலையும், தலைவர் வழிபாட்டுணர்வுமே இவரை இப்படி எழுத வைக்கிறது.  மார்க்ஸ் முதலாளித்துவ வர்க்கத்தை ஏன் வாட்டி வறுத்தெடுக்கிறார் என்ற கேள்விகளை முன்வைப்பதில்லை.

இவர்களின் நோக்கம் எல்லாம், தன்னை மார்க்சிய மூல ஆசிரியர்களில் ஒருவராய் இணைத்துக் கொள்ளும் அறியாமையும். மார்க்சிய வெளிச்சத்தில் தங்கள் விற்பனைப் பண்டங்களை முன்வைத்தும், கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினைத் தொழுவதும்தான். இவர்களுக்கு இதில் வசதியாக இருப்பது இந்த விற்பனைத் தந்திரமே. இந்த தந்திரத்துக்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான் மார்க்சிய விமர்சனம். மார்க்சிய எழுத்து, மார்க்சிய நூல். பொருள்முதல்வாதம்.( உண்மையில் இது பொருளை முன் வைத்து எழுதும் வாதம்தான்)

ரங்கநாயகம்மா An introduction to Marx’s Capital’ என்ற நூலை  1900 பக்கங்களுக்கு மேல் புரிந்து கொள்ளும் வகையிலான விளக்கங்களை, அவரது சொந்த மொழியில் வைத்திருக்கிறார். நீங்கள் அதில் கொட்டேஷன்களை தேடுவதே மிகுந்த சிரமத்துக்குரிய பணியாக இருக்கும். ஆனால் ஈஸ்வரன் போன்ற கொட்டேஷன் நிரப்பியோ ஒரு கட்டுரையை எழுத முப்பது கொட்டேஷன்களை நிரப்புவதோடு, அது சரிதான் என் பொருள்முதல்வாத விளக்கமும் கொடுப்பார். இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது.

மேலும் ரங்கநாயகம்மா “குழந்தைகளுக்குப் பொருளாதாரம்” என்ற நூலை குழந்தைகளுக்கும் புரியும்படி, மூலதனத்தை ஒரு பாடத்திட்டமாக முன்வைத்து எழுதியிருக்கிறார். அதில் ஏதேனும் கொட்டேஷன்கள் இருக்கிறதா என்று தேடிப்பாருங்கள்.


ஈஸ்வரன் என்ற கொட்டேஷன் நிரப்பியோ, இனி எழுதுவேன், பார்க்கலாம் என்ற வார்த்தைகளை வைத்துவிட்டு, நூலை தன் சொந்த மொழியில் எழுதாத தற்குறித்தனத்தை மறைக்க கொட்டேஷன்களை இட்டு எழுதுவதே அருமையான வேலை எளிதான வேலை எனச் சொல்லும் துணிகர முயற்சியைச் செய்கிறார்.

அவர் எழுதியதாய் சொல்லும் ஒரு நூலில் கொட்டேஷன்களை தவிர்த்துப் பார்த்தால் அவர்  சுயமாக எழுதியது பத்து பக்கங்களுக்கு மேல் வருமா என்பது சந்தேகமே. அதுவும் அவரது சொந்த புரிதலில் உள்ளது அல்ல.

கொட்டேஷன்களுக்கு அவர் பாணியில் ஒரு கோனார் உரை அவ்வளவே. அவர் எழுதிய அந்தப் பக்கங்களை வைத்துத்தான் ஒட்டு மொத்த நூலையுமே தன் நூல் என்றும் பொருள்முதல்வாதத்தை விளக்கிவிட்டேன், அடுத்து இயக்கிவியலை விளக்கப் போகிறேன் அதற்கடுத்து இன்னும் சிலதை விளக்குவேன் எனச் சொல்லும் அறிவின் மடைமையை கூசாமல் சொல்ல வைக்கிறது. மூல ஆசிரியர்களின் மேற்கோள்களை அப்படியே எடுத்து வைத்து, அதை ஓரிரு பாராக்களில் தன் வரிகளை அடைத்து, மூல ஆசிரியர்களின் ஒட்டுமொத்த உழைப்பை தன் உழைப்பாக முன்வைத்து மார்க்சிய மூல ஆசிரியர்களை அவமானப்படுத்தி வருகிறார். இங்குதான் அவர் உழைப்புச் சுரண்டலிலும் ஈடுபடுகிறார்.

முதலாசிரியர்களின் நூல்களை தொகுத்து புரியவைக்க சொந்த வார்த்தைகள் இல்லாத இவரது உழைப்புச் சோம்பேறித் தனமும், அதை சொந்த வார்த்தையால் விளக்க இயலாத அறியாமையுமே இவரை வழி நடத்துகிறது.

கேட்டால் என் நூல் இத்தனை வந்திருக்கிறது. அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது என்று சமீபத்தில் வந்த இரண்டு மூன்று நூல்களின் பெயர்களைச் சொல்லி, அவற்றையும் விற்கும் தந்திர எண்ணத்தோடு செயல்படும் உத்தி இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வாசகர்களை கவர்வதையே மையமாக வைத்து வெட்டி ஒட்டிய பக்கங்களை, மூல ஆசிரியர்களின் பெயரோடு தன் பெயரையும் இட்டு தானே எழுதியது போன்ற தோன்றங்களையும் முன்வைக்கிறார்.

மேற்கோள் போடுவதற்குக் கூட நியாயம் கற்பித்து, அதையும் மூல ஆசிரியர்களின் மேற்கோளை வைத்து விளக்கும் இவர், தன்னை ஒரு மார்க்சியவாதி எனச் சொல்லிக் கொள்வது மார்க்ஸையே அவமானப்படுத்துவதற்குச் சமம். மேலும்  இதைத்தான் லெனினும் சொன்னார்,  செய்தார் என்று புரிந்து கொள்ளும் வகையில், லெனினது மேற்கோளையே இவர் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தும் குணமும் இவரை விட்டுவைக்கவில்லை.


மார்க்சிய நூல்களுக்கு வழிகாட்டி என்ற நூல்களும் நம் முன்னால் இல்லாமல் இல்லை. இவர் மார்க்சியம் பற்றி ஏதேனும் ஒரு நூல் எழுதவேண்டுமென்றால் இது போன்ற நூல்களை சுட்டிக் காட்டித் தன் கடமையைச் செய்யலாம். ஆனால், மார்க்சிய மூல ஆசிரியர்களின் எழுத்துக்களை அப்படியே எடுத்துப் போட்டு, தனி நூலாக்கம் செய்வதற்கு ஒரே ஒரு காரணம், நூல்களைச் சுட்டி எழுதினால், அடையாளம் காட்டினால் எந்தப் பெயரும் கிட்டாது. ஆனால் கொட்டேஷன்களால் நிரப்பி வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தால் மார்க்சிய எழுத்தாளராக அறியப்படுவோம் என்ற ஆசையில் இது போன்ற வெட்டி ஒட்டி ஜாயிண்டடிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்.

மேலும் விவாதம் செய்யலாம் என்றால், நீயா நானா மேடையா என விளக்கம் கொடுக்கும் இவர், அதையாவது பொருள்முதல்வாத அடிப்படையில் விளங்கிக்கொள்ள முயற்சித்தாரா எனில் அதுவும் இல்லை. நீயா நானா போன்ற விவாத முறைகளில் நமக்கு விமர்சனமிருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்ல நமக்கு ஏன் தயக்கம் ஏற்பட வேண்டும். ஊடகம் சார்ந்த இது போன்ற போக்குகளைக் கூட பொருள்முதல்வாத, இயங்கியல் அடிப்படையில் பார்க்கத் தெரியாத இவர்தான், சம்பந்தப்பட்ட நூலில் மார்க்சிய உப்பு இல்லை, லெனினிய புளி இல்லை என்று ஞானப்பழம் போல் விளக்கி வருகிறார்.

எனக்குத் தெரிந்து இதுவரை மார்க்சியம் குறித்து ஏதேனும் ஒரு உரையையாவது சொந்த மொழியில் பேசியிருப்பாரா, இல்லை இயல்பான யதார்த்தமான முறையிலாவது தனி நபர்களிடமாவது உரையாடியிருப்பாரா. எழுதியிருப்பாரா.? எதுவும் கிடையாது. ஏன். இதுபோன்ற முயற்சிகளை ஒருக்காலும்  அவரால் செய்யமுடியாது. காரணம், தன் கொட்டேஷன் நிரப்பி மட்டுமே என்கிற உண்மை அவருக்கு நன்றாகத் தெரியும்.

குறிப்பு: வேண்டுமென்றால் பாருங்கள்... நான் எழுதிய இந்த சுட்டலுக்கும் அவர் மார்க்சிய மூல ஆசிரியர்களின் கொட்டேஷன்களைப் போடாமல் எழுதவே முடியாது. எழுதவும் மாட்டார்.

மார்க்சியர்களே..தோழர்களே... கொட்டேஷன் நிரப்பிகளிடம் உஷாராய் இருங்கள்.


Monday, September 12, 2016

நகரும் பாதங்கள்.

புத்தனின் மதுக்குடுவை

உபாயா கவ்சல்ய. 



இதுவுமது


பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம் புத்தனே…
வேடர்கள் தங்கள் வில்லை அணைத்தவாறு உறங்கும் நேரம் புத்தனே….
நண்பர்கள் பிரியமான எதிரிகளைக் கனவில் காணும் நேரம் எனதருமை புத்தனே….
துக்கம் தன்னுடலை பிம்பமாக்கும் பிரிய இரவிது புத்தனே.

‘அறிந்திருக்கமாட்டீர்கள் பிக்குகளே…’ குரல் மரங்களை அசைத்துப் பின் திசைகளை அடைக்கிறது.

ஆம் நான் கோதமன்.  சுத்தோதனனின் இனிய புதல்வனும், பார்க்கும் கணம்தோறும் மனதில் மாயங்களை ஏற்படுத்தும் பேரழகி யசோதரையின் கணவனும்.  தரை தொடாது மேகத்தில் மிதக்கும் பருவத்திற்குரிய சிசு ராகுலனின் தந்தையுமாவேன்.  நான் ராகுலனின் தந்தை.  ஆம் அழியப்போகிறது.  அனைத்தும் தலை உதறி நிதானத்திற்கு வர இக்கோதமனுக்கு நிதானம் வரவில்லை.  அறைச் சுவர்கள் ஈரத்தைப் போர்த்தி அமைதியாய் இருந்தது.  ஒருமுறை இவற்றை நான் சபித்திருக்கிறேன்.  விழிகளை மூடி நிதானங்கொள்ளும் சுவர்களை யார்தான் விரும்புவார்கள்.  ஆம் கோதமா… அறிந்திருக்கமாட்டாய்.  அறிந்திருந்தாலும் நடித்திருப்பாய்.  நடிப்பின் கைகளை உடல் அழுந்தப்பற்றியவன்தானே நீ… மௌனம் உருக்கொண்டலைந்து உன்னைப் பிரசவித்ததென உன் பின்னால் சுற்றும் கனத்த பிக்குகளின் வார்த்தைகளுக்கு நீ புன்னகையைக்கூட மௌனமாக்கிச் சிரிக்கலாம்.  அவர்களின் வலுத்த கேள்விகளை அவர்களுக்குள்ளேயே புதைத்துவைக்க உதவி செய்யலாம்.  ஆம் புலன்களே அறியாது குழி தோண்டக் கூடியவனல்லவா நீ.

யசோதரை
அழகிய மௌனம்
இல்லையா என் ததாகா…
ஆம்
பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம்

ததாகா…
இதோ அறிமுகமாகிறது முதல் சித்திரம்

தாழ்ப்பாள் திறக்கும் ததாகன்.

கோதமா.. கடும் பனியில் நிலவு தகிக்க குளிரில் உறைந்திருக்கும் தாழ்ப்பாளை நீக்கும் உன் விரல்களை நினைக்கிறேன்.  ஆம் அதே விரல்கள்தான் இன்று ஞானத்தைச் சுட்டும் குறி நிலைகள்.  ஆச்சரியம்.  கொங்கைகளை மறந்த பெண்போல.  ஆம் யசோதரை துயில் கொண்டுள்ளாள்.  அப்படித்தானே தாழ்ப்பாளை நீக்கும் நொடியில் நினைத்துக்கொண்டாய்.  இருக்கலாம். பிரபஞ்சத்தில் ஞானத்தைத் தூங்கவைத்து விழிப்பு நிலை தேடி வெளியே சென்ற நீ வேறு எப்படி நினைக்கமுடியும். அவள் தூங்குவதை உன் விழிகள் உன் விருப்பப்படி நம்பிவிட்டன.  உடன்பட்டாய்.  அதை நீயே பார்த்துக்கொண்டிருக்கிறாய். 

முட்டாள்..  ஒரே ஒரு புன்னகை செய்வதன் மூலம் யசோதரை அன்றிரவே..அந்நொடியே உனை கொலை செய்திருக்கலாம்.  உன் பயம் உன் உடலை எப்படிக் கவ்விப்பிடித்தது என்பதை உன் புலன்கள் அறியும்.  பாதங்களை இறுகப்படித்து தயார் செய்து தொடைகளைத் தளரவிட்டு நடுங்கும் உன் விழிகளால் கட்டிலை நோக்கியது என் ஞாபகத்தில் இருக்கிறது.  உனக்கு… தயவு… செய்து வெட்கப்படாதே.. வெட்கம் அறியாமையின் குழந்தை.  நீயல்ல அது.  அவள் உன்னைத் தப்பிப்போகவிட்டாள்.  அதே.  தப்பியே போகவிட்டாள்.  அவளுக்குத் தெரியாதென்று எண்ணிய உன் முட்டாள்த்தனத்தின் மீது என் வெறிபடர்ந்த முத்தமொன்றை பரிசாகத் தருகிறேன்.  சஞ்சலம்தான் மதுக்குடுவைக்கு ராஜபாட்டை.  இருக்கட்டும்.

அவள் பெண். யசோதரை.

யசோதரை தன்னருகில் உன் மிச்சமான வடிவில் துயிலும் ராகுலனின் சிறு தோள்கள் மீது தனது மூச்சுவிடும் தூரத்தைக் கணக்கிட்டு துயின்றுகொண்டிருந்தாள்.  இல்லை… அது நீ நினைத்தது.  மாறாய் அவள் விழித்திருந்தாள்.  உன் பெருமூச்சின் தகிப்பை அறிந்த அக்கைகள்தான் நீ படுக்கையைவிட்டு விலகிய தருணத்தைக் காட்டிக்கொடுத்தது.  ஆனால் அதற்கு முன்னரே கணித்துவிட்டாள்.  திடுக்கிட்டு விழி சுழற்றும் கோதமா எல்லாம் முடிந்த விசயம் என்று நீ எண்ணிய தருணத்தில் விழுந்த முதல் சவுக்கடி இதுதான்.  அவள் உன் புணர்ச்சித்துணை இல்லையா கோதமா. 

ஆம். கோதமா…

உனக்கும் யசோதரைக்கும் நடந்த அன்றைய இறுதிப் புணர்ச்சியில், நீ கழித்த இந்திரியத்தில் தனிமையின் பெரும் புழுக்கள் ஊர்ந்ததை யசோதை அறிவாள். 

தூங்கும் பெண்ணாய் அவளை கற்பனை செய்த உன் விழிகள் அதை அறியமுடியாதபடிக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தன.  தாழ்ப்பாளில் விரல்களைப் பதித்து விழிகளை யசோதரையின் முகத்தை இறுத்திக்காட்சியாய் பர்த்தாய்.  துக்கத்தை இமைகளாக்கி கருவிழிகளை குரலாக்கி அதை இடதும் வலதும் உருட்டிக் கொண்டிருந்த நீ அவள் விழிப்பை அறிய வழியில்லாது போயிற்று. 

எல்லாம் உன் அறீவின் கப்பில் விளைந்த நீதி.  நீதி தரும் எண்ணற்ற சொற்கள்… இறூதில் வலு மௌனம்.  இரண்டன்றி வேறொன்றை உன்னால் எப்படி நிகழ்த்தமுடியும்.  உன்பயணம் போலிமௌனத்தை தொடமுயற்சிக்கும் எதிர்கால விரல்களுக்காக அவள் தன் மௌனத்தை நம்பியிருந்தாள்.  பித்துப்பிடித்தலையும் பாதங்கள் உனக்கென்பதை தன் முதல் முத்தத்திலேயே அறிந்தாள்.  முத்தமிடுகையில் உன் கால்கள் திசைகளை ஒருபோதும் நம்பாது தவித்தபடியிர்ருப்பை அவள் அறிவாள்.  அதே பாதங்கள் துணுக்குற்றுத் தயங்கி நடுங்குவது கண்டு அவள் தன்னை எழுப்பிக்கொள்ளாது தூங்கும் நடிப்பை தன் உடலுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.  ஒப்பற்ற நாடகத்தின் அரங்கத்தில் நுழையப்போகும் உனக்கு அவளின் அசையாத உடல் உன்னை ஏமாற்றியது.  அவள் நீ நினைத்தபடியே தூங்குகிறாள் என உன் நம்பிக்கை உனக்கு தைரியம் கொடுத்தது.  முதலும் இறுதியுமாய் உன்னை மீறி…  உன் உடலை மீறி… யசோதரையாகிய அவள் கோதமனின் மனைவியாகிய அவளறிந்த தன் உடலை தன் செய்கையை மீறிப் புத்தனாகப் போகும் ஒருவனின் நடிப்பை அரங்கேறவிட்டாள்.  நீ விலகி அறைக்கதவை மூடுகையில் ஒரு முத்தம் ராகுலனின் விழிகளில் பதிந்தது.  உன் பாதங்கள் சந்தேகம் பற்றிப் பின் தொடர ஆரம்பித்தது அங்கேதான் யசோதரையை பிர்யும் கணத்தில் என் கண்ணில் நிழலாடியது என்ன… தீராக்காமத்தின் பெருவிரலா என்ன?


ஓவியம்;


புத்தனின் மதுக்குடுவை: சர்க்கம் 9

இதுவுமது

பித்தேறிய சொற்களின் மீது நின்றுகொண்டு மூத்திரம் பெய்யும் தூர்த்தன்.



 " கனவு ரணங்களைப் பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. அல்லது தனிமைகளால் ஆன தனிமை. நாளும் புண்களை நக்கிக்கொண்டிருக்கும் ஊதாரி,  அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கியூரும் பிராணி. கடவுளைச் சாத்தான் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி. "

சித்தார்த்தன் தன் நெடுவழிப் பயணத்தைத் தொடங்குகையில், தூர்த்தன் வஞ்சனையேறிய புன்னகையோடு வழிமறித்தான்.சித்தார்த்தன் தன் காமத்தை சதையில் ஊறும் தினவாய்  கண்டுகொண்டான். தூர்த்தன் ஞானம் பற்றிய முதல் கேள்வியைத் தொடுத்தான். பற்று எதிலிருந்து தொடங்குகிறது. எதில் முடிவடைகிறது. சித்தார்த்தன் புன்னகை பூக்கும் முன், தூர்த்தன் வழிசெல்லும் யுவதியின் தனங்களை எச்சில் ஒழுகப் பார்த்தான். சித்தார்த்தப் புன்னகை சீரழிந்தது. தூர்த்தன் மிக மெதுவாய்ச் சொன்னான். சித்தார்த்தனே.. உனது ஞானம் சதை மறுத்த ஒன்று. நான் சதைகளால் நாளும் ஞானத்தை மெறுகேற்றி வருபவன். வெற்றுப் புன்னகையால் உன் வார்த்தையின் வாட்களை ஒளித்து வைக்காதே.  வீசு ஒளி சிதற. நான் உன் எதிரியல்ல, இருப்பினும் எனக்கு சொற்கள் இருக்கிறது. தூர்த்தனின் பார்வையில் காமம் களங்கமற்று தூய ஒளியை உமிழ்வதைப் பார்த்தபடி சித்தார்த்தன் சொன்னான். தூர்த்தரே.... சதை தர்க்கத்தையும், தத்துவத்தையும் நாளும் மறுக்கிறது. சொற்களை நம்பும் உடல் தன்னை ஏமாற்றிக்கொள்ளுகிறது. சதையை சொற்களை வைத்து அறுப்பவன் ஞானவானாகிறான். புன்னகையோடு தூர்த்தன்… அப்படியென்றால் என் ஞானத்தை எதனடிப்படையில் விளக்குவாய் சித்தார்த்தனே. சித்தார்த்தன் மிக அமைதியாக அமரலாமா எனக் கேட்க, தூர்த்தன் எச்சில் வடிக்கும் புன்னகையோடு ஒரு சதை அமரசொல்கிறது என்றான். 


சித்தார்த்தனை நோக்கி தனது தூர்த்த விரலை நீட்டி, நீ அறிவாய் சித்தார்த்தனே ,சதைகள் ஞானத்தை கடைவாயில் அரைத்துக் கொண்டிருக்கையில், வழியும் எச்சிலில் எதிர்பால் ஊடுருவுவதை. உன் ஞானம் காமத்தை அறிய மட்டுமே நினைக்கிறது. துறக்க அல்ல, காமத்தை அறிந்தவன் மட்டுமே காமத்தை துறக்க முடியும், என்று நீ உன் கருப்பு விழியைச் சுற்றிச் சுழற்றி சொல்லலாம். ஆனால் அறிதல் என்பது இறுகக்கட்டியெறியப்பட்ட சொற்கள். அவிழ்த்தால் அர்த்தங்கள் தங்களது காலத்தை இழந்து, கலைந்து ஓடும். உன் மௌனத்தை, புன்னகையை, சொற்களை சதைகளால் தீர்மானிக்கும் அலகு காமமே.  காமம் மட்டுமே. 


உடல்களை மறுத்து நீ ஓடியொளியமுடியாது. உன்னிடம் இருக்கும் உடலை மட்டுமே நீ சோதிக்க முடியும்.  உடலையே அல்ல, தன்னுடலில் ஊறியேறும் காமத்தை அறிந்தவனே அதை மற்றொரு உடலில் காணவிழைகிறான். சொற்கள் ஆண் பெண் பேதம் விதிக்கிறது. ஈருடல் அதை கேளிக்கையாக்குகிறது. பேதங்களை சொற்கள்தான் உண்டு பண்ணுகின்றன. காமத்தை அல்ல. எந்த வார்த்தையில் விசையேறித் தைக்கலாம் என்பதை இவ்வுடலான அம்பு அறியும்.


 கேள் சித்தார்த்தனே, சலனம் அது குறையறிதல். காமத்திற்கு சலனம் ஒரு பொருட்டேயல்ல. அது ஒரு வெறுஞ்சொல். அர்த்தத்தைத் தேடி அலைபவன் உடலை இழக்கத் தொடங்குகிறான். காமத்தை அல்ல. இடம், பொருள், ஏவல் மூன்றையும் காமம் நிறைத்து வைத்திருக்கிறது. ஒரு சொல் இத்திசையில் சரியாகச் செலுத்தப்படும், எனும் கவிஞனைக் காமம் தன் அருகதையால் வெல்கிறது. சொற்கள் அர்த்தங்களை இழக்கும் அல்லது இழக்க வைக்கும். காமத்தை நீ விளக்கிவிட, உனக்கு உன் சொற்கள் துணைக்கு வராது. தூர்த்தன் நான்., எனக்கு காமம் ஒரு கருவி. நான் என்னையே வெல்ல நினைப்பது என்பது எனக்கு முன்னால் இருக்கும் உலகை, உன்னையும் சேர்த்து வெல்லுவதுதான். நான் அர்த்தங்களை மறப்பது, அல்லது ஏற்பதும் இதனால்தான் நிகழ்கிறது. என்னை வெறுப்பதற்கு நான் உன்னை இந்த உலகை வெறுக்கவேண்டும். என்னைச் சுற்றி எதுவுமேயில்லை. ஆம் சித்தார்த்தனே வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்தான் புலன்களை காற்றில் அலைக்கழியும் பாய்மரமெனச் செலுத்துகிறது. சொற்கள் தங்கள் அர்த்தங்களை என்று ஏமாற்றுகிறதோ அன்று சூன்யம் மிக சரியான அலகில் உடலை வந்தடையும். தூர்த்தன் எனக்கு என்னுடலில் காமம் எங்கு குடி புகுகிறது என்று நான் ஒரு நாளும் அறிய முயன்றதில்லை. அமைதி. காமம் என்னை தின்றுவிட்டுப்போகச் சம்மதிக்கிறேன். மிருகங்கள் சொற்களை உருவாக்குவதில்லை. சொற்கள் மனிதர்களை உருவாக்கிவிடுகிறது. நீ ஞானம் எனும் சொல்லைத் தேடியலைகிறாய் அது மௌனம் எனும் சொல்லில் கொண்டு போய் விடுகிறது. பாத்திரம் அறியட்டும் சித்தார்த்தரே மழைநீரை. நீ உன் கரத்தால் அதை ஏந்திப் பிடித்தலையாதே. சொற்களைக் குவித்து வைத்து, முத்தமிட்டு, அவற்றின் அர்த்தங்களை நீ செலுத்த முனையாதே, நீ செலுத்தும் அர்த்தங்கள் அக்கணமே நிலைத்து நிற்கும். பின் அவ்வர்த்தத்தை விளக்க வேறொரு சொல்லைத் தேடி இட்டு நிரப்புவாய்.

சொற்கள்….சொற்கள்…பித்தேறிய சொற்கள். சொற்களின் எண்ணிகையையும், அர்த்தங்களின் எண்ணிக்கையும் கூட்டினால் அகராதி தனது எடையை இழக்கும். அர்த்தங்களினால் விளக்க முடிந்த சொல்லை நீக்கிவிட்டால் போதும். பேரமைதி. முற்றிப் பழுத்த சொல் சுக்காகும். சாறு ஆவியாகும் காத்திரு, முதலில் நீ சொற்களை மறக்கவும் துறக்கவும் வேண்டும். யசோதரையைத் துறந்தவனே, இது கேள் சொற்களைத் துறப்பது கடினம். முழுத் துறவு. உலகிடமிருந்து, முடிவாக உன்னிடமிருந்து. இப்பொழுது உன் மனைவி உன் ஞாபகத்தை வழி மறிக்கும் ஒரு சொல், ராகுலன் விளக்கத்தின் பொருட்டு வந்து நிற்கும் துணைச்சொல். சொற்களை இழக்க நீ வெகுதூரம் அலையவேண்டும் காண்பாய், நீ புத்தன் என்பதை, உன் விழிகளால். தூர்த்த விழிகள் மின்னி மறைய புத்தன் கண்விழித்தான். 



கனவு ரணங்களை பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. நாளும் புண்களை நக்கிக் கொண்டிருக்கும் ஊதாரி, அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கி ஊரும் பிராணி. கடவுளைச் சூன்யம் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி.
                                                                                        ...

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...