Monday, October 4, 2010

ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள். ராஜன் கொலை வழக்கு.


'மிகமிக நுணுக்கமானவர்களே ஆகச்சிறந்த வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.'

- தஸ்தயேவ்ஸ்கி

மகனை அரசுக்கு பறிகொடுத்து, காணமுடியாது பதறி, உண்மையில் மகன் என்னவானான்...எனத் தேடி ,கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் பரபரப்பும் மகிழ்ச்சியுமாய் அலைந்து, ரகசியங்களால் ஓய்ந்து, இறுதியில் தன் மகன் அரசால் கொல்லப்பட்டான் என்றறிந்து, அவனுடலின் ஒரு துளிச்சாம்பல் கூட கரைக்கக் கிடைக்காது வீறிட்டலறும் குரலுடனும், தன் மகனைக் காக்கமுடியாத இயலாமையால் ஆன்மாவின் குற்றவுணர்ச்சிக்கு பதில் சொல்லமுடியாத துக்கத்திலும் தன் மகனின் இழப்பை பதிவு செய்திருக்கிறார். டி.வி. ஈச்சரவாரியர்.

இந்நுலின் வார்த்தைகளை நம்மிடம் வைப்பதற்காக அவர் கூறிச்செல்லுகிறார்

‘என்னிடம் அழுது தீர்ப்பதற்கான கண்ணீர் இன்னும் மிச்சமிருக்கிறது. உயிரின் துடிப்புகள் இன்னும் இந்த பலவீனமான உடலில் மீதமுண்டு. அதனால்தான் இதையெல்லாம் எழுத்த் தோன்றியது. நான் மனவருத்தம் கொள்ளச் செய்திருப்பதாக யாராவது நினைத்தால் சாபமேற்ற இந்தத் தகப்பனை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து

தன் மகனை பூட்ஸ் கால்களால் அதிகாரத்தின் மமதையும் அதனால் விளைந்த திமிராலும், ஆணவத்தாலும் தன் மகனை எத்திக்கொன்ற காவல் துறை ஆய்வாளாரான புலிகோடனைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஏற்படும் தன் மனதின் குரலை....

டெலிவிஷனில் புலிகோடன் நாராயணனின் உருவத்தைப் பார்க்கும் போது, தெளிவான கருத்துக்களுடன் முறுக்கி விடப்பட்ட மீசையைத் திருகியபடி அவர் பேசும் தோரணையைப் பார்க்கும் போது மனதுக்குள் மின்னல்போல் ஒரு பகையுணர்வு தோன்றுவதுண்டு. என் மகனுக்கு நேரிட்ட அந்த துர்லபமான நிமிடங்கள் அப்போது என் மனதில் அலையடித்து மேலெழும். மனம் என்னையறியாமலேயே ஒரு கோபத்துடன் இழப்புகளைக் குறித்து கணக்கெடுப்பு நடத்தும். மறந்து விட்ட்தாக நினைத்துக்கொண்டிருப்பவை அதிகமாக மனதிற்குள் எழும்.

அரசு தன்னைத் தானே தின்று வளர்வதோடு மட்டுமில்லாது குடிகளின் உதிரத்தை அதிகார நாக்கால் உறிஞ்சும் அதன் ரத்தவெறியை மகனை இழந்த தகப்பன் பதிவு செய்திருக்கிறார். நாம் இன்னும் இந்தப் பூமியில் வசந்த்த்தை நோக்கியும், வாழ்வதற்கான கனவுகள் வரவேண்டி துயிலுக்காகவும் காத்திருக்கிறோம்.

நீதி தன் கால்களில் அணிந்திருக்கும் கனத்த பூட்ஸ்களால் அப்பாவிகளின் விரைகளை நசுக்கும்போது.....பார்வையாளனாய் இருக்கும் மனநிலையையை நானே என் மீது காறியுமிழ வேண்டியிருக்கிறது.

இலக்கியம் செய்யவேண்டிய தார்மீகப் பதிவென இந்நூலைத்தான் நான் கூறுவேன்.

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர்.(மலையாளம்)

தமிழில்; குளச்சல் முகமது யூசுப்.

காலச்சுவடு வெளீயீடு

விலை. 100

No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...