Saturday, March 31, 2012

வணக்கம் நேசமித்ரன்.....பகுதி மூன்று....




 

The page you requested was not found




நீங்கள் கேட்ட இந்தப் பக்கம் இல்லை. ஆம்....நேசமித்ரன் முகப்புத்தகத்தில் என்னைத் தடை செய்திருக்கிறீர்கள்

என் காத்திருப்புகள் எப்பொழுதும் தோற்றதில்லை. பொய்களை பரிதாபமாகச் சொன்னாலும் பொய்கள் தான் நேசமித்ரன். முதலில் என்னை உங்கள் பக்கத்தில் தடை செய்ததே உங்களின் நேர்மையின் அகத்தை, உரையாட விரும்பும் அழகை மிக நேர்த்தியாக சுட்டியிருக்கிறது.

நேசமித்ரன்...பொய்களை பொய்கள் என்றே அறிவிக்க முடியும். நீங்கள் என் கவிதைகள் குறித்த புகழுரைகளை முன்வைப்பது காரிய சித்திக்காகவே என்று எனக்குத் தெரியும். சுயமாய் நான் எழுதுகிறேனா இல்லையா என்பது என் வாசகர்களுக்கும், வெளியிடும் பதிப்பாளருக்கும் தெரியும். ஆனால் உங்கள் எழுத்து கோணங்கியின் அப்பட்டக் கழிவுக் குப்பை என்பதை மறுபடியும் நிறுவுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையில் உங்களது இலக்கிய நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். உங்களிடம் பொய் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் எதைவும் எனக்கில்லை. ஆனால் பொய்களை வலிந்து கூறி இதுவரை எதையும் சுயமாய் செய்யாது, மதுத் தோழமையினாலும், தோளில் கைபோடச் சொல்லி நீங்கள் எடுத்த புகைப்படங்களும் உங்கள் அவஸ்தையை எப்போதும் பறை சாற்றிக் கொண்டிருக்கும். இதற்கு மேலும் விவாதத்தை பொதுவில் கூட வைத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னேன். நேரில் பேசலாம் என்றும் சொன்னேன். ஆனால் தப்பித்து ஓடும் உங்கள் எளிய மனத்தைப் புரிந்து கொள்கிறேன். உங்களுக்கு என்னிடம் பேசுவதற்கு ஒரு சொல்லும் இல்லை என்பது எனக்குத் தெரியும்...ஆம் உண்மையில் ஒரு சொல்லும் சொந்தமாக இல்லை.

உங்கள் பழக்கங்கள் ஒரு இலக்கியவாதியாய் இல்லாது நடிகர்களிடம் போட்டோ எடுத்து மாட்டும் ஒரு ரசிக மனோபாவமாகவே இருக்கிறது. அறைகள் முழுக்க புகைப்படங்கள் தொங்கினாலும் நீங்கள் உங்களை படைப்பாளி என்று சொல்ல முடியாது. மேலும் உங்கள் வார்த்தைகளால் என்னைப் புகழ்ந்த அடையாளங்களுக்கு சாட்சியும் இருக்கிறது. என்னிடம் உரையாட தெம்பு வேணும் என நீங்கள் விதந்தோதிய நண்பர்கள் இருக்கிறார்கள். நீங்களே என்னைப் புகழ்ந்தீர்கள். நீங்களே குற்றம் சாட்டுகிறீர்கள். புகழ்ந்ததற்காக தொட்டில் கட்டிக் கொஞ்சவும் இல்லை. இகழ்ந்ததற்காக வருந்தவும் இல்லை. எல்லாம் வழமை போல்தான். ஒரு இலக்கியக் கூட்டத்தில் உங்கள் படைப்பை கோணங்கியின் பின்னொட்டு என்று சொன்னால் அங்கேயே மறுத்திருக்க வேண்டும். வாயை மூடிக்கொண்டு அமர்ந்தது எதனால் என்று தெரியவில்லை. மேலும் புதிதாக எழுதச் சொன்னால் வலைசைக்கு பீப்பி ஊத, எழுதிய கட்டுரையையே அங்கும் வாசித்தீர்கள். நண்பரே...வலசையை நீங்கள் நடத்துவது சொந்தமாய் நீங்கள் போட்டுக்கொள்ளும் இலக்கிய வேடம்தான். இது யாருக்கும் தெரியாமல் இல்லை.

மேலும் முதல் இதழ் தலையங்கமாக உப்புறையும் சப்தம்( கோணங்கி...கோணங்கி) என்ற பெயரில் ஒன்று வந்திருந்தது. அதில்  சக வாசகராக கார்த்திகைப் பாண்டியன் பெயரையும் இணைத்திருக்கிறீர்கள். கார்த்திக்கைப் பாண்டியணும் கோணங்கியைப் பின் தொடர்கிறாரா என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டாவது இதழில் க்ளெளன் மீன்களின் உடல்மொழி என்ற இடைச்சேர்க்கையில் கார்த்திகைப் பாண்டியனுக்கு எந்தளவுக்கு உடன்பாடு என எனக்குத் தெரியவில்லை. அதில் ஓரளவுக்கு ஜிக்ஜாக் குறைந்திருந்தது. நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு தகவலாகவே இதை  வைக்கிறேன்.

என்னை முகப்புத்தகத்தின் வாயிலாக வெட்டி நீக்கம் செய்ததை அறிந்தேன். பூனை தன் பறவை ங்குலாங்க காண் உடலை நெத்திலி செதில்களாக மாயவுருச் செய்து   கண்களை மூடிக்கொண்டு க்ளெளன்மீன்களின் செதில்களுக்குள் ஒளிந்து பரட்டைத் தலை பிசாசுருவ மாயத்தில் உலகம் இருண்டு விடுமா என்ன. ( இதை பழங்குடி தொன்ம மனமாக பூனைத் தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் யிருண்டு போகுமா வென தமிழக பாட்டிகள் தங்கள் தொங்கு முலையாட சொல்வதாக இங்கு ஒரு நாடோடிக் கதை உண்டு.)
கதைப் பாத்திரத்தில் பரவும் எண்ணற்ற விதைகளை ஆதிக் கிழவன் கோமாளியின் சிரிப்போடு வீசியெறிகிறான்...

சொல் விளையும்
நிலமெல்லாம் கதை விளையும்...
கதை விளையும் பூமியெல்லாம்
மழை பொழியும்...
மழை குடித்து மழை குடித்து
விளையும்
தானியக் கதிர்களறுத்து
இட்ட அடியில் ஆதித் தாய்
குலவையிட
போகிறான் சூதன்
சூர்யப் பூச்சூடி....
சூதனாய் ஒரு
கதை சொல்லியாய்...பித்தாய்...
தமிழ் குடித்து
தள்ளாடும் நடையோடு
மூவிறகால் பறக்கும்
கானக வண்டாய்
வசுமித்ர......

நண்பரே பதட்டம் வேண்டாம்... எனது பொய்களை நீங்கள் தாராளாமக நிரூபிக்கலாம். என்னை நீக்கம் செய்வதன் மூலம் அதை இழந்திருக்கிறீர்கள். இப்பொழுதும் இப்பதிலை நேரடியாகவே உங்கள்  முன் வைக்கிறேன். ஆனால் நீங்கள் எனைப் பற்றி எழுதுவது எனக்குத் தெரிவிக்கவும்.

வழக்கம் போல் காத்திருக்கிறேன்
நீங்கள் சந்தித்த அதே அது வசுமித்ர வாக.....

குறிப்பு;  உங்களது படைப்புகளில் வரும் லத்தின் அமெரிக்க பெயர்கள். அறிவியல் பெயர்களே நீங்கள் அவற்றைப் படிக்காததை உறுதி செய்கிறது. சம்பந்தப்பட்ட அவர்களை நீங்கள் படித்திருக்கும் பட்சத்தில். குறைந்த பட்சம் 5ம் வகுப்புக்கு நீங்கள் அறிவியல் பாடம் எடுக்கலாம். இலக்கியம் கற்றால் சொந்தமாக கவிதை எழுதலாம். ஆனால் அனைத்து பெயர்களையும் வெறும் பெயர்களாகவே இட்டு இங்கு கோணங்கியை காப்பியடிப்பதைச் சகிக்க முடியவில்லை. பூக்கோவை முன் வைப்பவர், நீட்ஷேவைப் படிப்பவர் கோணங்கியை அப்பட்டமாக அக்மார்க் காப்பி அடிப்பது...சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தைத் தேடித் தரும் என்று நினைத்துப் பாருங்கள். ஆவிகள் சூழ் காடு இது....யோசியுங்கள்.

நேசமித்ரன்...கூட்டத்தில் எனை அறிவித்தது இவ்வாறே...நான் கவிஞனோ கதையாளனோ இல்லை ஆனால் வாசகன். கோணங்கி பற்றி அங்கு நடந்த வரிகளில் என் தரப்பை தெளிவாகவே வைத்தேன். உங்கள் எழுத்துக்கள் கோணங்கியின் கழிவுக் குப்பைதான். தூக்கத்தில் அடித்து உசுப்பிக் கேட்டாலும் இதைத்தான் ஒரு வாசகனாகச் சொல்வேன்.

ஆனால் நேசமித்திரன் எழுத்துக்களுக்காக உங்கள் அன்பை எப்பொழுதும் உதாசினம் செய்யமாட்டேன். உங்கள் சேவை தமிழுக்குத் தேவை என்பதை நான் அறிவேன். நிருபித்தலைதலில் அவஸ்தை பொருட்டு வேறு இடங்களுக்குப் போகாமல் இலக்கியக் கூட்டங்களைத் தேர்வு  செய்து வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. ஆனால் நீங்கள் வைக்கும் புகழாரங்கள், சக எழுத்தாளனை நோக்கிய கும்பிடல்களில் எனக்கு உடன்பாடில்லை.

ஒருவன் பீடத்தைக் கட்டியெழுப்பி அதில்  அமர்ந்தால் கூட அதிலிருக்கும் உழைப்பைக் கண்டு மகிழ்வேன். ஆனால் பீடங்களை இன்னொருவருக்குப் போட்டுக் கொடுத்து துண்டைத் தோளில் இடுக்கி ஒரு சிஷ்யனாய்...இன்னும் முதுகு வளைந்து அடிமையாக நிற்க நினைப்பது எனக்கு ஆபாசம் கூடிய நினைவுகளைத் தருகிறது. இதில் மாற்றமில்லை. என் தொகுதிகளை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் என் கவிதைகளை விதந்தோதிய வார்த்தைகளையும் பதிவு செய்திருக்கிறேன். பிரேம் ரமேஷையும் படியுங்கள். ஊன்றிப் படித்து என்னை ஒப்பிடுங்கள். உங்கள் வெற்றிக்காக நான் காத்திருக்கிறேன்.

அப்படி நீங்கள் வெற்றியடைந்தால் குறைந்த பட்சம் அதையாவது சுயமொழியில் எழுதுங்கள் தயவு செய்து கோணங்கியை....அவர் பாவம்...அவர் எனக்குத் தெரிந்து எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். இன்னும்.....எவ்வளவோ...

எனது காத்திருப்புகளை நான் வீணாக்குவதில்லை. உங்களது எழுத்துக்களைப் படித்து நான் வைக்கும் விமர்சனங்கள் நேசமித்ரனைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருந்தால் நான் பொறுப்பேற்க இயலாது. அது நேரடியாகச் சுட்டுவது. நேசமித்ரனின் இலக்கிய காப்பி மனத்தை மட்டுமே. இதை ஒரு தொழிலாகச் செய்யாதீர்கள்.

சிறுகுறிப்பு.

பௌத்தத்தில் ஒரு பால் உறவு பற்றியெல்லாம் பேசினீர்கள். யார் சொன்னது என்றேன் உடனே வேகங்கூடிய அழுத்தத்தோடு கோணங்கி என்றீர்கள். பாவம் கோணங்கிக்கும் உங்களுக்கும் எப்படி விவாதம் நடக்குமென்று நினைத்துப் பார்த்தேன். ஒப்பனை கலைந்த ஒரு டூப்பிடமா கோணங்கி உரையாடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை....இன்னும் ஒன்று நீங்கள் கேட்ட கட்டுரையை வலசைக்கு அனுப்ப இயலாது. அது எப்பொழுதும் அப்படித்தான்...எனக்கு வலசை மேல் நம்பிக்கை உண்டு...ஆனால் அதை நீங்கள் நிரூபித்துக்கொள்ளும் அடையாள அட்டையாய் காண எனக்கு விருப்பமில்லை.

முகப்புத்தகத்தில் என்னை இடை நீக்கம் செய்தாலும் சம்பந்தப்பட்ட விசயங்கள் குறித்து நீங்கள் எழுதிய வெற்று பதில்களைக் கூட பதிவு செய்திருக்கிறேன். ஏனெனில் உரையாடலில் நான் இதைச் சொல்லவேயில்லை என்ற குரல்கள் ஏராளம் என் செவிகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நீங்களே புகழ்ந்து விட்டு நீங்களே மறுப்பீர்கள் என்பதையும் ஆதாரத்துடம் விலக்கியிருக்கிறேன். இக்கடிதத்தை நீங்கள் நேரடியாக முகப்புத்தகத்தில் படிக்க முடியாது என்பதற்காக இதை ஆதிரன் பக்கத்திலும் இணைக்கிறேன்....


வழக்கம் போல் அன்பு கூடும் காத்திருப்போடு
வசுமித்ர


(புகைப் படத்தில் தலையில் கவிழ்த்துப் போட்ட புத்தகத்தோடு காட்சியளிப்பது....காப்ரியல் கார்சியா மார்க்குவெஸ்...கப்ரியேல் கார்ஸியோ மார்குவெஸ்...கப்பிரியல் கார்சீயா மார்க்கு வெஷ்...காப்பிரியேல் கார்ஷியா மார்க்குவெஸு...ஜேப்ரியல்.....இன்னும்.......)

No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...