Wednesday, April 22, 2015

காமத்துப்பால் II





இரண்டாம் பத்து
11
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர்வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை

தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்து வீழ்கிறது
அண்டத்தின் இடியொலி

கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்

சம்போ மகாதேவா
சம்போகம்.

12

குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கியில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு

13
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்லக் கால்வைக்கிறது
வரைபடத்தின் தலைவரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்

14

கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்

15

தனிமையைக்
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்

16

கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்

17

கட்டளையை யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்..

எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது

18

தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு

சலித்த காமத்தில்
இறப்பின் ருசி

19

தின்னத் தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெரிகிறது
எரிப்பின் மிச்சத்தின்
இறுதியாய் வீசப்படும்
என் முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை தனது நீர்க்கரத்தால் வாரிச்சுருட்டும்

விதி வலியது கண்ணே

20

அம்மா
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி

பசி மிகுந்த சொற்களோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி

அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசி மிகுந்த குருதிச் சூட்டோடு

முன்னொரு காலத்தில் கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்

அம்மா….

No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...