Saturday, September 16, 2017

விஷம்



எனது தனிமை விஷம்
அருந்தி மகிழுங்கள்
ஆண்டவரே

பொல்லாப்புக்கு ஆக்கினையாக்கி
துரோகத்தால் வாழச்சொல்லும் உங்கள் கருணைக்கு அய்யோ பாவம்

ஆண்டவரே
நான் மனிதன்
இது உங்களை மீறிய
செயல்
சொல்
வாழ்க்கை

ஏன் ஆண்டவரே
எங்களை வழிமறிக்கிறீர்கள்

கடவுள்களால் ஆன சாபங்களால்
எங்கள் தேசம் நிரம்பி வழிகிறது
சாலைப் போக்குவரத்தில் நீங்கள் எந்தக் குறியை
மதிக்கிறீர்கள்

பச்சையையா
இல்லை
மஞ்சளையா
தவிர்க்கமுடியாமல் 
சிவப்பையா

எங்கள் தேசத்தில்
ஆளுக்கொரு நிறம்
ஆளுக்கொரு கடவுள்
ஆண்டவரே

ஆளும் அதிபர்
முன் நீங்கள் நின்றால்
அவர் தானே கைகட்டி
ஒரு கம்பெனியும் வைத்துத் தருவார் ஆண்டவரே

வாங்கிப் பிழைத்துக்கொள்ளுங்கள்
கொல்லுங்கள்

எங்கள் தேசம் ஏழைகளின் தேசம்
சிரிப்பில் இறைவனைக் கண்டும்
அழும்போது
புரட்சியாளர்களையும் துணைக்கு அழைக்கிறோம்

நல்லது ஆண்டவரே
இது வழிப்போக்கனின் சொல்
மதிக்க வேண்டாம்

நிச்சயம்
நீங்கள் எங்கள் வழிக்கு வரும்போது
முதலாளிகளுக்கு எதிராய் நிற்பீர்கள்
அப்போது ஆண்டவரே நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்

ஆண்டவர்களைத் தோழர்களாய் அழைப்பது என்பது
அவமானத்திற்குரிய செயல் அல்ல

தோழர்கள்
ஆண்டவர்களை ஆதி முதலே அடையாளம் காட்டி வந்தார்கள்
நாங்கள்தான் ஏமாந்து போனோம்

ஆண்டவர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தினர்
என்கிறார்கள்
கம்யூனிச பூதத்தை 
உசுப்பி விட்ட இரு இளைஞர்கள்

ஆண்டவரே
இப்பொழுது எங்களுக்கு துணைக்கிருப்பது
அந்த இரு சின்னஞ்சிறிய பூதங்கள்தான்

மன்னியுங்கள் ஆண்டவரே
மனிதர்களை அரவணைக்கும்
தோழர்களை பூதம் என்றழைப்பதற்கும்
எதுவுமே செய்யாத
உங்ககளை ஆண்டவரே என்றழைப்பதற்கும்
சற்றுக் கூச்சமாக இருக்கிறது

தயவு செய்யுங்கள் ஆண்டவரே
இப்பொழுது உங்களைப் பார்க்கத்தான்
பயமாய் இருக்கிறது

எங்கள் அதிபர்
முதலாளிகளை ஆண்டவர் என்கிறார்
முதலாளிகளின் சிரிப்பில்
ஆண்டவர் தங்கப்பல் தெறிக்க மின்னுகிறார்


நாங்கள்
அமைதியாய் இருக்கிறோம்

பசித்த வயிறு
தீயாய்
எரிகிறது.






No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...