Monday, January 2, 2012

மான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....



சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற்றெறிச்சலை காதின் வழியாகவும், இன்ன பிற துவாரங்களின் வழியாகவும் இலக்கிய பெருமூச்சாய் விட்டிருப்பதோடு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்று மார்க்சியம் பற்றியும் பேசியுள்ளார்.

அவருக்கு ஒரு வாசகனாக நான் சொல்லுவது இதுதான். அய்யா உங்களது பின்னட்டைக் குறிப்புகளை விடவும், அதை சற்று நீளமாக எழுதி கவிதை.... கவிதை என்று கொட்டை எழுத்தில் உயிர்மையில் போடுவதை விடவும் சு. வெங்கடேசன் அவ்வளவு மோசமாக காவல் கோட்டத்தை எழுதியதில்லை. வாசிக்க சந்தர்ப்பமும், நேரமும் வாய்த்தால் நாவலைப் படித்து விமர்சனம் செய்யுங்கள்.

அதோடு அதே உயிர்மையில் கட்டங்கட்டி தேவதச்சனுக்கு அமெரிக்காக்காரர்கள் விள்ள்ள்ள்....க்கு விருது வழங்கியிருக்கிறது என்று குதங் குளிர்ந்திருக்கிறீர்கள். அவரும் இலக்கிய மேப்பார்வையோடு படத்தில் காட்சியளிக்கிறார். எனக்குத் தெரிந்து அவர்கள் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டைத்தான் அப்பெயரில் அளிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நல்லது.

அறிவு நாணயம், மற்றும் அறிவுச் சில்லறைகளை தாங்கள் கல்லாக் கட்டும் உயிர்மையின் வாயிலாக நான் அறிய முடிகிறது. அதோடு பாம்புக்கு கால் முக்கியமோ தலை முக்கியமோ என்று தேவதச்சன் அவர்கள் எழுதித் தந்தால் அதையும் வாசிக்க தயாராயிருக்கிறேன். புதிய எழுத்தாளனை வரபேற்பதில் ஒரு சக இன்பம் கிடைக்கிறது. நாளை சோடை போனாலும் போனால் போகிறது என்று விட்டு விடலாம். ஆனால் காலஞ்சென்ற பிணங்களை ஊதிப் பெருத்த உடலோடு கவிஞன் என்று தூக்கிச் சுமக்க சற்று அதீத தைரியமும் வலிவும் வேண்டும்...நீங்கள் தூக்கிச் சுமந்த பிணங்களின் பிரிவைக் கண்ணீராகவும் வசையாகவும் இறக்கி வைக்க ஒவ்வொரு இதழையும் பயன்படுத்துகிறீர்கள். நல்லது ஒப்பாரியையும் இலக்கியத்தில் சேர்த்த பெருமை உங்களுடையது.

உக்களுக்கு ஒரு விருதை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு காலமாகலாம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஒரு, ஒரு ரூபாய்க்குரிய விருதை வழங்குகிறோம். ஆனால் அந்த ஒரு ரூபாய் சுஜாதா சாகும் தறுவாயில் உங்களுக்களித்த ஒரு ரூபாயை விட அறத்திலும் கனத்திலும்...இன்னும் காலத்தால் புளிப்பேறாத புத்துயிருப்பு தத்துவ தரிசனத்தோடு இருக்காது. அதற்கு வருந்துகிறோம்.


சிறு குறிப்பு;

பின்னட்டை எழுதும்போது இந்த அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் இது போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள். அது ஒரு தொற்று நோய் போல உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது. அழுக்குத் தீரக் குளியுங்கள். அல்லது வாசியுங்கள். இதுதான் இப்பொழுதைய மருந்து. இலவச இணைப்பாய் நீங்கள் உங்களையே கவிஞன் என்று விதந்தோதிக் கொண்டு கையில் வெள்ளைக் குவளையோடும் நீயா நானா சோஃபாவிலும் அமர்ந்து நேர் கோணத்தில் இடது கையை சோஃபாவைத் தடவிய கோலத்தில் வெளிவந்த உங்களது புகைப் படம் தாங்கிய பின்னட்டைக் குறிப்புகளான இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் என்ற உள்ளட்டைக் குறிப்புகளை தயவு செய்து புரட்டி பத்தாம் பக்கம் உள்ளதை ஒரு முறை வாசியுங்கள். கவிஞர்கள் ஈரம் காயாமல் எழுதும் வித்தையை குறித்து எழுதியிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.  

19 comments:

  1. உழைப்பை உழைப்பே போற்றும்.உயிர்பான பதிவு வசுமித்ர.

    ReplyDelete
  2. அன்பு வசுமித்ர,

    சு.வெங்கடேசனுக்கு விருது அளித்ததை விமர்சித்த மனுஷ்ய புத்திரனுக்கான பதிலாக மட்டும் இருப்பின் எனக்கு இங்கு பேசுவதற்கு எதுவுமில்லை.

    தேவதச்சனை நீங்கள் விமர்சித்திருப்பதில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. அவர் கவிதைகள் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதாகவே உணர்கிறேன். தனது கவிதை மொழியை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களில் தேவதச்சன் மிக முக்கியமானவர் என்பது என் அபிப்பிராயம்.

    ReplyDelete
  3. வணக்கம் வா.மணிகண்டன். தேவதச்சனை கவிஞர் என்றழைப்பதில் எனக்கும் எள்ளளவும் உடன்பாடு இல்லை. கீழ்க்கண்ட ஒன்றை கவிதை என அவர் நம்பியதோடு வாசகருக்கும் அவர் உவந்து உயிர்மையில் தருவதை நான் என்னவென்று சொல்வது. ஒரு வாசகன் ஒரு கவிஞனை வாசிக்க அவன் அரசனா ஆண்டியா தத்துவஞானியா...நிறைய தொகுப்புகள் எழுதியுள்ளாரா என்றெல்லாம் கவனத்தில் வைத்துத்தான் வாசிக்கவேண்டுமென்றால் என்னால் அத்தகைய வாசிப்புக்கு உடன்படமுடியாது.

    தேவதச்சன் தன் கவிதைகளுக்கு தானே வாசகனாக முடியாத அவலத்தில் இருப்பவராக உணர்கிறேன். அதோடு கவிதை குறித்து அவர் கல்குதிரைக்கு உரையாடல் என்ற பெயரில் ஒரு பில்டப்பையும் அள்ளிவிட்டார். உண்மையில் அவர் கவிதை எப்படி இருக்கவேண்டும், இலக்கியம் எப்படிச் செய்யவேண்டும் என்று அவர் விரும்பிச் சொன்னது போல் எனக்குத் தெரிந்து ஒரு கவிதையும் எழுதவில்லை.

    எடுத்துக்காட்டு; 1

    நரம்புகளுக்கும் வார்த்தைக்கும் இடையே ஊடுருவும் கவிஞன் கபால வாசலில் எவ்வேளை அலைவுறுகிறான்?

    ஆமாம். மிக ஆரம்ப காலத்திலேயே religion person ம் poet ம் mirror உடையதைக் கண்டுபிடிச்சிட்டாங்க. Mirror வந்து முக்கியமான Regligianல் ஒரு Metaphor ங்கிறத கண்டுபிடிச்சதே தரிசிகள்தான்,மதவாதிகள்தான்.தங்களுடைய ஆழமான பார்வையை வெளியிடுவதற்கு அப்போதைய யதார்த்தமான மொழி காணாம உருவமொழியை உருவாக்குறாங்க. அதுல வந்து நதியை ஓடக்கூடிய கண்ணாடியாப் பார்க்கலாம். கண்ணாடியை ஓடாத நதியாகக் கூடப் பேசமுடியும்.கண்ணாடிங்கிற buddhismத்தில ஏகப்பட்ட விதமான பேச்சுக்கள் பேசியிருக்காங்க. எப்படி ஒரு mirror image ஐ capture பண்ணுது..............



    எடுத்துக்காட்டு 2

    கவிதை - பற்றி?

    கவிதைக்குள் புயலின் நுண் வெற்றிடம் இருக்கிறது. இசைகள், வியாக்கியாணங்கள், மிகப்படுத்தல்கள், அதை நிரப்பமுடியாத போது வெற்றிடம் பேய்மை உருக்கொள்கிறது. அது,எப்பொழுதுமே நிற்காத பிரபஞ்சத்தை ஒரு விநாடி நிறுத்தி வேறு சூழ்நிலைகளில் சுழலவிடுகிறது.

    புத்தரும் இதர சிந்தனையாளர்களும் ஒரு புதிர் இருக்கிறதா என உருவகித்து கூறி தொளையிடவோ அறியவோ முயன்றிருக்கிறார்கள். ஒரு புதிர் அல்ல கோடிக்கணக்கான புதிர்களை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு புதிருக்குள்ளும் திரிந்து கொண்டு இருப்பது எதிர் புத்தர் என்று சொல்லலாம்.

    தன்னிச்சையான இருப்பு அவைகளுக்கு கொடுத்து விஞ்ஞானத்தில் வழியாகவோ தத்துவத்தின் வழியாகவோ அதை ஆய்வு செய்யும் பணியை கலை..........



    இந்த 2002 உரையாடலில் கசிந்துவந்த கவிதை 2011 இல் பாம்பு பம்பு என்றளவில் தத்துவச் சரட்டை இறுக்கி வெளிவிடுகிறது. கொடுமைடா சாமி. புத்தரை இப்டி கற்பனைக்குள்ளயே முக்கி மூச்சுத் திணற சாகடிக்க வேண்டுமென்பது எத்தனை பேர் கனவோ....

    (- கல்குதிரை 2002, பதிமூன்று – பதினான்கு கவனமாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் )


    நீ
    எனக்கு
    எவ்வளவு முக்கியம் தெரியுமா
    பாம்புக்கு

    துணைக்கால்

    எவ்வளவு முக்கியமோ
    அவ்வளவு முக்கியம்.


    இதை கவிதையென்று என்னை உரித்து உப்பைத் தடவினாலும் நான் கூற மாட்டேன்.

    பதிலுக்கு நீங்கள் வேறு கவிதைகளை எடுத்தாளாலாம். ஆனால் அக்கவிதைகளை வைத்து இப்பொழுது என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஒரு காலத்திய பிணங்களை இன்னும் உருவம் இல்லாது சுமக்க சிரமமாக இருக்கிறது வா.மணிகண்டன்.


    இடைக்குறிப்பாக நான் சொல்ல வருவது இதையும் சேர்த்துத்தான். இது போன்ற மூத்த பெருசுகள் வாயில் வெளிவந்ததெல்லாம் தங்களது சிஷ்யப் பிள்ளைகளின் பெயர்களே ஒழிய கவிஞர்கள் பெயர்கள் அல்ல. எனக்குத் தெரிந்து அப்படி தேவதச்சன் நவீன கவிஞர்களின் வாசிப்பில் அப்படி எடுத்தாண்ட கவிதைகள் என்று எதுவுமில்லை. கவிஞனுக்கு இருக்க வேண்டியது காலமனம் போத மனம்...இன்னும் அபோதம் மட்டுமல்ல வாசிப்பு மனமும் தேவையென்றே எண்ணுகிறேன். அதோடு....


    கலை கலைக்காகவே என்ற குரல்களில் மேற்குல மூன்றாம் உலக குரல்கல் யாருடைய தொண்டையிலிருந்து வந்தனவோ எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அவை பார்ப்பனத் தொண்டைகளாகவே இருந்தன. இருக்கின்றன. அவைகளில் இந்துத்துவ தொண்டைகள் இன்னமும் அறம் பற்றின பாடல்களையும் பஜனை கோஷமாய் வைத்து வருகிறது. உரையாடலாம்.

    நன்றி.

    ReplyDelete
  4. விரிவான இடுகைக்கு நன்றி வசுமித்ர.

    தேவதச்சன் முடிந்து போன கவிஞர் என்று நீங்கள் குறிப்பிடுகையில்- அதனை மறுப்பதற்காக நிச்சயமாக நான் வேறுகவிதைகளை எடுத்தாள வேண்டியிருக்கும். ஆனால் அக்கவிதைகளை நீங்கள் இப்போது கவனிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருப்பதனால்-

    எனக்கு சில வினாக்கள் இருக்கின்றன.

    - தேவதச்சனின் வேறு கவிதைகளை எடுத்தாளக் கூடாது என நீங்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? எந்தக் கவிஞனும் 100% கொண்டாடக் கூடிய கவிதைகளை எழுதிவிடப் போவதில்லை. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத இக்கவிதையை எழுதிவிட்ட ஒரே காரணத்திற்காக தேவதச்சனை முடிந்துபோன கவிஞர் என்று குறிப்பிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

    - ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருக்கும் 'யாருமற்ற நிழல்' தொகுப்பை முக்கியமான தொகுப்பாகவும் அதில் சில முக்கியமான கவிதைகளையும் சுட்டிக் காட்ட முடியும். கவனம் பெறத்தக்க தொகுப்பு ஒன்றினை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஒரு கவிஞனை மரணித்த கவிஞன் என்று சொல்வதற்கு இந்த ஒரு கவிதையை காரணமாக சுட்டுவதை நியாயப்படுத்துகிறீர்களா?

    -தேவதச்சனின் கவிதைவரிகள் இடதுசாரிப்பார்வைக்கு எதிரானது என்ற கருத்து உண்டு. அதனடிப்படையில் அவரது கவிதைகளை அணுகுகிறீர்களா?

    - பார்ப்பனீயம்/இந்துத்துவ என்பனவற்றினை எதற்காக தேவதச்சனோடு இணைத்துப் பேசுகிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  5. வணக்கம் மணிகண்டன்...

    இங்கு பிரச்சினை.. ஒரு கவிதையை எந்தத் தளத்தில் அணுகுகிறேன் என்பதல்ல. அப்படி அணுகவேண்டுமெனில் க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாருக்கும் தன் படைப்பு குறித்து விதந்தோத உரிமை உண்டு.

    கவிதைகளில் இன்னின்ன வேண்டும் என்பவர் பாம்பு பம்பு என்று உளறுவது எதற்காக... வாசகனை தான் இதுவரை எழுதிய கவிதையின் நிழலில் முழந்தாளிடவா. தேவதச்சன் மட்டுமல்ல கபிலரில் தொடங்கி இன்னும் முடிவடையாத கவிஞர்களும் தமிழில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இன்னும் முடியவில்லை. அவர்களின் எழுத்துக்குப் பின்னால் எது இருக்கிறது, அவர்களை தக்கவைப்பது அவர்களின் எழுத்தில் உள்ள இலக்கியப்பண்பா, அல்லது கருத்தின் துணிவா, சமகால அரசியலா என்றெல்லாம் பார்க்கப்படுவதோடு விவாதிக்கப்படவும் வேண்டுமென்றே நினைக்கிறேன்.

    பார்ப்பனிய இந்துத்துவத்தோடு நான் தேவ தச்சனை இணைக்கவில்லை. அது ஒரு இணை கூற்று. எனக்குத் தெரிந்து கலை ஒரு மாயவசீகரம், அல்லது அந்தராத்மாவில் புகுந்து வருகிறது என்று பொருளற்ற கோஷங்களை வைப்பது பார்ப்பனியத்திற்கு பணிந்து போனதற்கான அடையாளங்களே. தேவதச்சனின் அந்த உரையாடல் முழுக்க அப்பணியையே செய்திருக்கிறார். இங்குள்ள பெரும் படைப்பாளிகள் தங்களை அறியாமலேயே இக்கூற்றைத்தான் இன்னும் உளறிவருகின்றனர்,

    மாறாய் உளறுபவர்கள் தங்கள் வாயில் வரும் நெருடா தொடங்கி ழாக் ப்ரெவர் வரை கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியும் என்று நம்புகிறேன்., அது அவர்களுக்கும் இவர்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதே. மேற்பட்ட கவிஞர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அமைப்பில், அல்லது ஒரு குறிப்பிட்ட தத்துவத்தில் அல்லது இறுதியாக மக்களை நோக்கி எழுப்பிய குரலாக முனவைக்கையில் இவர்கள் அவர் பெயர்களை முன் வைத்து பேசுவது அநாத்மம்...சூன்யம், பிரக்ஞை நினைவோடை..தானியங்கி எழுத்து இன்னும் ஏதோதோ குப்பைகள்.

    தாஸ்தாவ்யெஸ்கி பற்றி டால்ஸ்டாய் பற்றி பத்து லட்சம் பக்கங்கள் உரையாற்ற முடியும் என்று மார்தாட்டி பிழைப்பை ஓட்டுகிற ஜெயமோகனும் ராமகிருஷணனும் மொழி அடிப்படையில் ஒரு சில படைப்புகளை எழுதி வருகிறவர்கள்தான். அவர்கள்தான் ஒரு படைப்பை ஆயிரம் பக்க அபத்தம் என்றும், இன்னொருவர் நொண்டி நாய் என்றும் அதுவும் வாங்குசொல்வது போல் ஒலிக்கும் நொண்டிநாய் என்று எழுதுகையில் அவர்களின் ஒட்டுமொத்த படைப்புகளின் மையக்குரலான அறத்தின் மதிப்பென்ன. அப்படி எழுதியவர்தானே இப்படி எழுதியவர் என்று மன்னிக்க, எடை பார்க்க படைப்பு எடைக் கற்கள் அல்லவே. இந்த பாம்பு பம்பை என்ற கவிதைக்கு கீழ் தேனாம்பேட்டை அப்புராஜா என்று போட்டிருந்தால் அது உயிர்மையில் வந்திருக்குமா. மணிகண்டன் இப்பொழுது நான் கவிதைகளை மதிப்பிடுவது அவ்வரிகளை அவ்வரிகள் சொல்லும் உணர்ச்சிகளையே தவிர பெயர்களை அல்ல. நீங்கள் தேவ தச்சன் எழுதிய ஆகச் சிறந்த கவிதையொன்றை கையால் எழுதி கீழே குரும்பூர் சுப்பிரமணி என பெயரிட்டு யாராவது ஒரு வாசகனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். விளைவு. கைமேல் பலன். அன்று உழைத்தோம் இன்று கொள்ளையடிக்கிறோம் அதற்கு தகுதி எங்களுக்கு உள்ளது என்று சொல்லும் அரசியல்வாதிகளுக்கும், அன்று நான் சீந்துவாரற்று எழுதினேன்....இன்று நான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் இலக்கியவாதிக்கும் எனக்குத் தெரிந்து எந்த வித்தியாசமும் இல்லை.

    ReplyDelete
  6. முழு முற்றாக...முடிவாக....ஆகச் சிறந்த என்ற அளவுகோலை இலக்கியத்தில் படைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அது மேற்சொன்ன உதாரணத்தை மட்டுமே முன்மொழியும். இன்னும் சொல்லப் போனால், வைரமுத்து அவர்கள் எழுதியதில் நல்ல கவிதைகள் என ஒரு 100 கவிதைகளை( ஒரு எண்ணிக்கைக்காக ) என்னால் தேர்ந்தெடுக்க முடியும் என்றே நம்புகிறேன். அவரும் தன்னை புதுப்பித்துக்கொண்டேதான் வருகிறார்.

    அவருக்கும் தேவதச்சனுக்கும் உள்ள வித்தியாசம் மிக முக்கியமானதென்றே கருதுகிறேன்.

    இக்கருத்தை முன்வைத்து கவிதையைக் குட்டிக்கரணம் போடச் செய்வது எப்படி என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன். அது குறித்தும் உரையாடலாம் என்றே நம்புகிறேன்.

    இன்னும் விரிவாக ஒரு கவிஞன் தனது பதிப்பகத்தை தேர்ந்தெடுப்பது முதற்கொண்டு அரசியல் இருக்கிறது. அதை மேற்சொன்ன கவிஞர்கள் தாங்கள் கவிதை எழுதிய மனோநிலையிலேயே செய்யவில்லை என்று நம்புகிறேன். அதற்கு பின்னால் இன்று வரை காசு கொடுத்து புத்தகம் போடுவது, சம்பந்தப்பட்ட பதிப்பகத்தில் வரும் படைப்புகள் மட்டும் ஆகச்சிறந்த இலக்கியங்கள் கொடுப்பது என்பது மூட நம்பிக்கையும் பழக்க தோஷமுமே ஆகும். இன்னும் அழுத்தமாக குறிப்பிட வேண்டுமென்றால்... உயிர்மையில் மட்டுமல்ல மணிமேகலைப் பிரசுரத்திலும் காசு கொடுத்து புத்தகத்தை அச்சிட்டுக் கொள்ளலாம். நவீனர்கள் ஏன் அதைச் செய்யவில்லை. ஏன் உயிர்மை. அது இலக்கியத்தை தூய முறையில் அங்கிகரிக்கிறது என்கிற போலித்தனமா......

    தேவ தச்சனை முன் வைத்தாவது இவ்வுரையாடல் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் உயிர்மையில் புத்தகம் போட அவர் காசு கொடுத்திருப்பாரா....இல்லை மனுஷ்யபுத்திரன் கேட்டிருப்பாரா என்றெல்லாம் கவிதையில் தொடங்கி எனக்கு கவிதைமீதான விமர்சனம் வரை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.

    நான் சிறிய கேள்வியாய் முன் வைப்பது இதுவே. தேதச்சனோ இன்னும் பழம் ஆளுமைகளோ முன் வைக்கும் கவிதைத் தொகுதிகள் எவை என்பதே என் கேள்வி. கவிஞர்கள் கவிதை எழுதுவதோடு கவிதை பற்றி உரைவிலக்கணத்தை வைப்பதனால்தான் இக்கேள்வி எழும்புகிறது.

    அதோடு குறிப்பிட்ட கவிஞர்கள் எந்த கவிதை எழுதுகிற உள்ளுணர்வோடு உயிர்மைக்கு புத்தகங்களையும், அதோடு அச்சிட காசையும் அனுப்புவது ஏன்.

    தேவதச்சனின் கடைசி டினோசர் கவிதைத் தொகுதியில் பின்னட்டை:

    சாதரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவைகள் தேவதச்சனின் கவிதைகள், அறிவின் பாதையிலும் உணர்ச்சிப் பெருக்கின் பாட்டையிலும் மாறி மாறிப் பயணம் செய்பவை. வாசக மனத்தின் நனவிலித் தளத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு.........

    ReplyDelete
  7. கீழ்க்கண்டது இன்னொரு கவிஞருடைய பின்னட்டை

    தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் இவரின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிறாயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல...உணர்வுலகிலனைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையில் உணரப்படும் தனிமை இவருடையது.....பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு அறுபட்டுத் தொலைந்து போகும் மன்நிலையது.....


    இதுவும் இன்னொரு கவிஞருடைய பின்னட்டை

    கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்து கொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன இவரின் கவிதைகள். இச்சைகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.


    இந்தப் பின்னட்டையை வெட்டி ஒட்டினால் நாம் கண்டடைகிற வரிகளை கூசாமல் கவிதை அதுவும் தத்துவச் சரடோடும் கவிதைகள் எனச் சொல்லலாம்.


    கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
    இருந்தும் இல்லாததுமாய்

    உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

    இச்சை கனவு
    நிராசைகளுக்கிடையே
    எண்ணற்ற கேள்விகள்....


    இவ்வரிகளுக்குக் கீழே தேவதச்சன் என்று பெயரிட்டால் அவை வேறு மாதிரிகளில் புரியக் கூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளன. அதே போல் ழாக் ப்ரெவர். ப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பு வெ.ஸ்ரீராம் எனப் பெயரிட்டால் இன்னும் புரிதலுக்கான சாத்தியங்கள் தனது கதவை உடைத்துத் திறக்கும். அத்தகைய சாத்தியங்களை அறிந்து அதைத் தூக்கிப் போட்டு உடைக்கும் சந்தர்ப்பத்தில் நான் தேவதச்சனை
    நாம் உரையாடலாம் மணிகண்டன். அவரவர் கைமணல், மற்றும் அத்துவான வேளை பற்றியும் இன்னும் அவருக்கு வரவிருக்கிற இரண்டு சூரியன் குறித்தும். அந்த கவிதை விளம்பரக் குறிப்பு இன்னும் அபத்தமாய் இருக்கிறது. மிக அபூர்வமான கவித்துவ படிமங்கள், பார்வைகள், தத்துவச் சார்பு கொண்டது போல் தோற்றம் கொண்டிருந்த போதும்....தினசரி வாழ்வின் விசித்திரங்கள், அற்புதங்கள்...என விளக்கம் கூரையைப் பிரிக்கிறது...நாம் உரையாடலாம்.


    வா.மணிகண்டன் நான் கவிதை குறித்து உரையாடுவதற்கான சூழலை ஏற்படுத்துகிறேனே ஒழிய விவாதத்தை திசை திருப்ப அல்ல என்று தாங்கள் புரிந்து கொண்டால் எனக்கு மகிழ்ச்சி. நாம் உரையாடலாம்.

    ஏனெனில் இத்தகைய வாசிப்பை கைக்கொள்ள முடியாத வாசக மனதினால்தான் பழம் பெருசுகள் தாங்கள் எழுதிவருவதெல்லாம் தத்துவ முத்துக்கள் என்று கூறிவருகின்றன. வணக்கம்.

    ReplyDelete
  8. இது பற்றி இன்னும் விரிவாகவே விவாதிக்க முடியும் என்று நம்புகிறேன். எழுதுகிறேன். உயிர்மையில் காசு கொடுத்து புத்தகம் போட்டிருக்கிறாரா தேவதச்சன் என்ற ஒரு வாக்கியத்திற்கு மட்டும் உடனடியாக எழுதிவிடுகிறேன். இதுவரை உயிர்மையில் என்னுடைய ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. எந்தச் செலவும் எனக்கு இல்லாமல்.

    ReplyDelete
  9. சண்டைச் சச்சரவுகளின்றி இவ்விவாதம் உங்களுக்கும் மணிகனண்டனுக்கும் இடையில் தொடர்ந்தால் அமைதியாகவும் கவனமாகவும் வாசித்துவரும் நான் தன்யனாவேன்.

    ReplyDelete
  10. வணக்கம் மணிகண்டன் தேவதச்சனிடம் காசு வாங்கி போடுமளவுக்கு உயிர்மை வளரவில்லை. நீங்கள் காசு கொடுத்து புத்தகம் போடாத காரணத்திற்காக எனது வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். காசு கொடுத்து புத்தகம் போட்டவர்களுக்கு என் அனுதாபங்கள். மறைப்பவர்களுக்கு எனது இரக்கங்கள். காசு பிரச்சினையோடு தேவதச்சனின் கவிதை குறித்தும் உரையாடலாம்.

    வணக்கம் சிவக்குமார்.

    ReplyDelete
  11. * தேவதச்சன் கல்குதிரையின் நேர்காணலில் பேசியிருப்பனவற்றையெல்லாம் தன் கவிதையில் பின்பற்றியதில்லை என்பது உங்கள் வாதம் என புரிந்துகொள்கிறேன். கவிதையைப் பற்றி பேசுவனவற்றையெல்லாம் நாம் எழுதும் கவிதையில் பின்பற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை வசுமித்ர. இதனை என் அனுபவமாகவேதான் சொல்கிறேன். வேறொருவரின் கவிதைக்கான விமர்சனத்தைச் செய்யும் போது Weak points என்று நான் குறிப்பிடுவனவற்றையெல்லாம் என் கவிதைகளில் கண்டறிய முடிகிறது. அதேசமயத்தில் கவிதைக்கான உரையாடலை நிகழ்த்த வேண்டிய சூழல் வருமானால் இந்த அம்சங்களை நிச்சயம் குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அந்த அம்சங்களைத் தவிர்த்துவிட்டு என்னால் கவிதை எழுதிவிட முடிந்ததில்லை. இது கவிஞனும் விமர்சகனும் சந்திக்கும் ஒரு புள்ளி. அதில் விமர்சகன் வெல்வதாகவும், கவிஞன் தோற்பதாகவும் பிம்பம் உருவாவது இயல்பானதுதான். தேவதச்சனுக்கும் இதே சூழல்தான் நிகழ்ந்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

    * கலை கலைக்காகவா அல்லது கலை மக்களுக்காகவா என்பது தொடர்ச்சியான விவாதம் இதில் கலை கலைக்காகவே என்று சொல்பவர்களைத்தான் உளறுகிறார்கள் என்று சொல்கிறீர்களா? உங்களின் வாதம் கலை கலைக்காக என்பதே உளறலா அல்லது கலை கலைக்காக என்று சொல்பவர்கள் நெரூடா அல்லது ழாக் ப்ரெவர் போன்றவர்களை தங்களின் பிரதிநிதிகள் என்று சொல்வது உளறலா?

    * கலை கலைக்காகவே என்று சொல்வதே கூட உளறல்தான் என்று குறிப்பிடுவீர்களேயானால் அதனை என்னால் நிராகரிக்க முடியும். இது குறித்த நண்பர் ஒருவரின் வினாவிற்கு சிறு குறிப்பு ஒன்றினை எழுதியிருக்கிறேன். தங்களின் பார்வைக்கு அதனைக் கொண்டுவரவும் விரும்புகிறேன். http://www.nisaptham.com/2012/01/blog-post_04.html

    * நீங்கள் பின்னட்டைக் குறிப்புகளை சுட்டுவது 'கலை கலைக்காகவே' என்பது அபத்தம் என நீங்கள் நம்புவதன் வெளிப்பாடு என நினைக்கிறேன். இதில் என் நிலைப்பாடு என்ன என்பதற்கு என் பதிவு பதிலாக அமையலாம் என நம்புகிறேன்.

    * கவிஞன் பதிப்பகத்தை தேர்ந்தெடுப்பதில் அரசியல் இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எதிர்ப்பேதுமில்லை. இப்படியான ஒரு சூழல்தான் நிலவுகிறது என நினைக்கிறேன். படைப்பாளிகள் தங்களுக்கான இடம் குறித்தும் பீடம் குறித்தும் அதீத கவலை கொண்டிருப்பவர்களாகவும் பதிப்பகங்கள் தங்களின் இருப்பை அழிக்க முடியாத நிறுவனங்களாக்குவதிலும் முனைப்பு காட்டுவதன் விளைவாகவும் இது இருக்கிறது.(இதனைச் சுட்டிக் காட்டுவதனால் என்னை அரசியல் சாயல் இல்லாத தூயபிம்பன் என்று சொல்லிக் கொள்ளவில்லை என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்). படைப்பாளி தன் படைப்புகளை வாசகனிடத்தில்- சரியான வாசகனிடத்தில் சேர்க்கும் பதிப்பகம் என தான் நம்பும் இடத்தில் படைப்பினை புத்தகமாக்க தருவதில் இருக்கும் நியாயத்தை நான் புரிந்துகொள்ளவே விரும்புகிறேன்.

    * நீங்கள் கவிதை குறித்த உரையாடலுக்கான சூழலை உருவாக்குகிறீர்கள் என நானும் நம்புகிறேன். நம் உரையாடல் உங்களின் நிலைப்பாட்டையோ அல்லது எனது நிலைப்பாட்டையோ புரட்டிப் போடப் போவதில்லை என்றும் நம்புகிறேன். கவிதை என்ற ஒரு மையம் நோக்கி நாம் நகர முயற்சிக்கிறோம். அது கலைடாஸ்கோப்பைப் போல நமக்கு வெவ்வேறு நிறத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. அதுதானே கவிதையின் தனித்தன்மையும்.

    ReplyDelete
  12. வணக்கம்..good discourse...hope it continues in good understanding levels...யார் யாரை வென்றெடுக்கிறார்கள் என்பதை விட வெவ்வேறு பரிமாணங்கள் வாசகருக்கு வரைந்து காட்டப்படுகிறது என்பதே இது போன்ற விவாதங்களில் கிடைக்கும் பரிசு...

    மணிகண்டன், ஒரு சிறு விளக்கம்: கலை மக்களுக்காக என்பது இடது சாரி (மார்க்சியப்) பார்வை என்பதை கவனத்தில் கொள்வது ச , அதேவேளை 'தனி மனித சிக்கல்களை' அதில் பேசக்கூடாது என்பதாக அப்பார்வை எங்கும் வலியுறுத்தியிருக்கவில்லை என்றே கருதுகிறேன்....இன்னும் சொல்லப்போனால், தனி மனித மன அழுத்தங்களுக்கு சமூகமே பெரும் பங்கு வகிக்கிறது என்பதே மார்க்சியப் பார்வை, அதனால் அது அத்தகைய படைப்புகளை வரவேற்கும்...

    மாறாக கலை கலைக்காகவே என்பது பார்ப்பனிய / முதலாளித்துவ / 'அதிகார வர்க்க சிறுபான்மையினரின்' மேன்மை வாதம் என்கிற அளவில் அது மறுக்கப்படுகிறது என்பது என் புரிதல்...அதாவது கலை என்பது புனிதமானது, மேன்மையானது, கலைஞர்கள் ஒரு தெய்வப்பிறவி என்பன போன்ற அதிகார மையங்கள் உண்டாக்கப்பட்டு, மக்களிடமிருந்து கலை அன்னியப்படுத்தப்படுகிறது, குறிப்பாக அக்கலைகள் folk art என்று சொல்லக்கூடிய மக்கள் கலையை இரண்டாம் நிலைக்கு தள்ளி விடுகிறது...ஆகவே 'கலையோ, கலைஞனோ' பீடம் அமைத்து உட்கார்ந்து விடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றிலும் மக்களை முன்னிறுத்தி மார்க்சியம் பேசுகிறது...

    'உண்மையான மக்கள் கலைஞர்கள்' என்றும் பசியில் உழன்று கொண்டும் கலையை வளர்த்தெடுக்க வறுமையில் உழன்று இருப்பு மறுக்கப்பட்டு மடியும் போது, பார்ப்பனிய இந்துத்துவம், முதலாளித்துவ ஆதரவு பெற்ற கலையும், கலைஞர்களும் 'பெரும் வளர்ச்சியை' அடைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது..

    உங்கள் இருவரின் வாதங்கள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. அன்பு மணிகண்டன் எனது விளக்கம் நீளமாக இருப்பதால் பதிவாக இடுகிறேன். த
    வறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நன்றி. தொடர்வோம்.

    ReplyDelete
  14. அன்பு கொற்றவை,

    நன்றி. கலை மக்களுக்காக/கலை கலைக்காக என்பதில் உங்களின் புரிதல் தெளிவாக இருக்கிறது. கலை கலைக்காக என்பதன் அடிப்படையான நோக்கம் மக்களிடம் கலையை அந்நியப்படுத்துதல் அல்லது கலைஞன் என்பவன் பீடத்தில் அமர வேண்டியவன் என்பதை நோக்கியதாக இருந்திருக்க முடியாது. கலையை ரசிக்க ரசனை மட்டுமே போதுமானது என்பதன் விரிவாகவே பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

    நீங்கள் குறிப்பிடும் பீடம் அமைத்தல் போன்ற சில்லரை அரசியல் விஷயங்கள் இடைப்பட்ட காலத்திய செருகல்கள் என்பது என் நம்பிக்கை.

    புரட்சிகளும் போராட்டங்களும் கோட்பாடுகளின் உருவாக்கத்தின் நோக்கங்களை - அவை எத்தகைய உயரிய தன்மை கொண்டிருப்பவை என்றாலும்- அதனைப் பற்றிய கவலை கொண்டிருப்பதில்லை. அந்தக் கோட்பாடுகள் சமகாலத்தில் உருவாக்கியிருக்கும் வீழ்ச்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றன, எனில் 'கலை கலைக்காகவே' என்ற கோட்பாடு தற்காலத்தின் இலக்கியச் சூழலில் உருவாக்கியிருக்கும் வீழ்ச்சிகளுக்காக அடித்து நொறுக்கப்பட வேண்டுமா என்ற வினா எழுகிறது.

    தேவையில்லை என்பது என் பதிலாக இருக்கும்.

    கலை என்பது கலையாகவே இருக்கிறது. நாம் பேசிக் கொண்டிருக்கும் மற்ற அத்தனை சிக்கல்களும் கலையைச் சுற்றி அதன் சூழலில் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. நபர்கள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க கலையை ரசிப்பதில் சித்தாந்தங்களை சிதைக்க தேவையில்லை என நினைக்கிறேன். நீங்கள் முன்வைத்திருக்கும் வாதத்தை ஒட்டித்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்? பாதத மாறுகிறேனா?

    தேவதச்சன் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் கோட்பாடுகள் என சற்று திசை மாறுவதாகவும் தெரிகிறது. வசுமித்ரவின் பதிவிற்கு விரிவாக எழுத வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  15. நன்றி மணிகண்டன்…விவாதம் திசை திரும்பவில்லை...உடையாடல்கள் இப்படித்தான் நகரும்...உங்கள் blogல் சொன்ன குறிப்புக்கே எனது மேற்சொன்ன பதில்...

    முதலில் கலை என்றால் என்னவாக பார்க்கிறோம் (அவரவர் பார்வையில்) என்பதை தெளிவு செய்யாமல், ஒரு கவிதை / கலை அந்த நபரால் எக்கோணத்தில் விமர்சிக்கப்படுகிறது என்று புரியவைப்பது கடினம்...

    //நீங்கள் குறிப்பிடும் பீடம் அமைத்தல் போன்ற சில்லரை அரசியல் விஷயங்கள்// - சில்லரை அரசியல் அல்ல என்பது என் கருத்து....அதுவே பண்பாட்டு அதிகார அரசியலாய் மாறிவந்திருக்கிறது...இதற்கு வரலாறு நெடுக ஆதாரம் இருக்கிறது...மண்பாண்டம் செய்வதும் கலைதான்....ஆனால் அத்தகயவை கலை என்றல்லாமல் ‘craft' கைவினைப் பொருள் என்று அழைக்கப்படுகிறது...இடைச் செறுகல் இல்லை...அது பின்னர் கட்டுடைப்பின் மூலம் கண்டறியப்பட்டது....அது சற்று நீளமான விவாதம்...பிறகொருமுறை தொடர்வோம்...

    //கலை என்பது கலையாகவே இருக்கிறது.// - எதுவும் அதுவாகவே தன்னளவில் இருப்பாக இருக்க வாய்ப்பில்லை..(ப்ரம்மம், ஞானம் போன்று).மனித்ர்களே அதை உருவாக்குகிறார்கள், அதை வளர்த்தெடுக்கிறார்கள், அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறார்கள்...அதை சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகும்பொழுது, அதை தகர்த்தெரிய வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள்....அப்படி மனித வாழ்வின் சிக்கல்களை அணுகவும், மேம்படுத்தவும் உருவாகுபவை கோட்பாடுகள்...

    புரட்சியும், போராட்டங்களும்..’உயரிய’ தன்மை? கேள்விக்குறியது...எவரின் அளவுகோல் படி அது ’உயரிய’ என்பது? சமகால வீழ்ச்சியை மட்டுமே கணக்கில் கொள்ளும் என்பதாக நான் அக்கோட்பாடுகளைக் காணவில்லை...இன்னும் சொல்லப்போனால், ‘இலக்கிய’ப் புதுப்பித்தலுக்கு நிகராக கோடுபாட்டு புதுப்பித்தல்கள் நிகழ்ந்து வருகின்றன...அதிலும் கூட ‘மொழி’யானது சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...ஆனால் அதையும் விளக்க மொழியே உதவி செய்கிறது...

    ReplyDelete
  16. ஒருவர் பசித்திருக்கும் போது ‘ரசனை’ என்பதை எப்படி அவருக்கு உணர்த்துவது...அந்த கலையை, ரசனையை அவர் நிராகரிக்கும் பட்சத்தில் அவர் ‘ரசனையற்றவர்’, ‘காட்டு மிராண்டி’, ‘அறிவில்லாதவர்’ என்று ஏளனம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது...இன்னொன்று ‘ரசனை’ என்பதும் ஒரு relative term என்றே நான் பார்க்கிறேன்...ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை...(உ.ம்) என்னால் கர்நாடக இசைக் கச்சேரியை சகித்துக் கொள்ளவே முடியாது, அதே வேளை ‘தப்பாட்ட’ இசையைக் கேட்டால் என்னையறியாமல் ஆடுவேன்...இது ‘ரசனை’ சார்ந்த ஒன்றாக என்னால் பார்க்க முடியவில்லை, இது உணர்வு (உண்ர்வு இயல்பில் தோன்றுவது, ரசனை கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது என் புரிதல்) சார்ந்த ஒன்று அதாவது, மண்ணோடு நான் கொண்டுள்ள தொடர்பின் விளைவு...மற்றொன்று பண்பாட்டு ஒடுக்குமுறை...ஒரு சபாவிற்குள் ‘பார்ப்பன இசைக் கச்சேரி’ நடக்கும் பொழுது நான் மிக அடக்கமாக உடகார்ந்திருக்க வேண்டும் என்பது மறைமுக விதியாக உட்புகுத்தப்பட்டிருக்கிறது...அது ‘சபை நாகரீகம்’...ஆனால் பொதுவாக மக்கள் கலைகள், தெருவில், மண்ணில் நிகழ்வதால் அதை முழு சுதந்திரத்தோடு அனுபவிக்கும் வாய்ப்பை அது தருகிறது...அதனால் தான் அதை ‘ரசிக்க’ முடிகிறது...என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்....இங்கு தான் ‘அந்நியப்படுதல்’ என்பதை புர்ந்து கொள்ள மார்க்சிய சித்தாந்தங்கள் உதவிக்கு வருகின்றன...கலை என்பது ‘கூட்டுச் சமூக’ கொண்டாட்டமாக இருந்ததை சிதைத்து ஒரு குறிப்பிட்ட வர்க்கம் / நபர் ‘உருவாக்கவும்’, மற்றவர் ‘நுகரவும்’ எனும் நிலைமை இடையில் உருவானது என்று புறம் தள்ளி விட முடியாது, அது 2000 கால வரலாறு, அது இப்போது உலக மயமாக்கலில் தீவிரமடைந்திருக்கிறது, தீவிர தன்மைகேற்ப விமர்சனங்கள் பெருகி வருகிறது....

    இதற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றினால், இது போன்ற ஒரு ‘ரசனை’, ‘அறிவு’ ’மொழி’ எனும் அளவுகோளை வைத்து கவிதை / இலக்கிய வட்டத்திலும் அதிகார மையங்கள் தோன்றி விடுகின்றன (தனி நபர் கூட அதிகார அமைப்பாக இருக்க முடியும் தானே)....பின்னர் அதுவே அந்த கலையின் தன்மையாக மாறிவிடுகிறது...அது நடக்காமல் இருக்கவே இத்தகைய கோட்பாடுகள் உதவுவதாக நான் கருதுகிறேன்...

    வசுமித்ரவுடன் நடக்கும் உரையாடலுக்கு இடையில் என் கருத்து இரண்டாம் தடத்தில் புகுந்து விட்டது தடையாக இருப்பின், நாம் வேறொரு சந்தர்ப்பத்தில் உரையாடலாம்...நன்றி....

    ஒரு சிறு குறிப்பு: சமீபத்தில் திரு. கறுத்தடையான் எழுதிய ஊட்டு கவிதை தொகுப்பை வாசித்தேன்...அவரது மொழி என்னை வியப்பில் ஆழ்த்தியது..(மொழித் திருகல், மொழிக் கணிதம் அல்ல) அது சுட்டும் உட்பொருள் அவர் வட்டாரத்தின் வாழ்வை, மக்களை சுட்டுவதாக இருக்கிறது...மொழியோ வேறொரு தளத்தில் அச்சுறுத்துகிறது...என் அறிவுக்கு வேலை கொடுக்கிறது....ரசனையை உயர்த்தவில்லை...மாறாக அம்மக்களின் வாழ்வுக்குள் பயணிக்க என்னை அழைக்கிறது..புரிதலை நோக்கி நகர்த்துகிறது....அதாவது நிலத்தில் நின்று கொண்டு பார் என்பது போல் கட்டளையிருகிறது......ஆனால் வேறு சில மொழி விளையாட்டு கவிதைகள் அறிவையும் வளர்க்கவில்லை....ரசனையையும் வளர்க்கவில்லை.....ஏனென்றால் அது ‘கலையாக்கும்’ என்று எச்சரிக்கிறது...இதற்கு நீ தகுதியுடையவர் அல்ல என்று எழுதுபவரின் மனவோட்டத்தை மட்டுமே சுட்டுகிறது... என்பது என் அனுபவம்.....

    ReplyDelete
  17. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    புத்தகக் கண்காட்சிக்கு பயணிக்கிறேன் என்ற உற்சாகம் மனதினை கவ்விக் கொண்டது. வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. திரும்பிய பிறகு வாங்கிய புத்தகங்களை வாசிக்க அமர்ந்துவிட்டேன்.

    கொற்றவை- கவிதை என்பது மொழியின் உச்ச வடிவம் என்பதாகச் சொல்லப்படுகிற வாதத்திலிருந்தே நீங்கள் குறிப்பிடும் 'உயரிய' என்பதான புரிதல் உருவாகியிருக்கக் கூடும். நவீன கவிதைகள் தங்களின் 'உயரிய' என்ற அந்தஸ்தை உருவாக்கிக் கொள்ள அதன் 'புரியாத'தன்மையைத்தான் அடிநாதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என நம்புகிறேன். நவீனகவிதைகள் புரியாத மொழியில் எழுதப்பட்டிருப்பவை என்றும் அவை மெத்த வாசித்தவர்களுக்கான ஒரு மொழியமைவு என்பதான பிம்பமும் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த பிம்பத்தை நவீன கவிதையில் புழங்கிய கிட்டத்தட்ட அனைவருமே முன்னெடுத்திருக்கிறார்கள்- நேற்றைக்கு கவிதை எழுத வந்திருக்கும் நான் உட்பட.

    அதற்கு அடிப்படையான காரணம்- நவீன கவிதையை புரிந்துகொள்ள தொடர்ச்சியான வாசிப்பனுவம் தேவை என்றும்,'தொடர்ச்சியினால்' மட்டுமே புரிந்து கொள்ளல் நிகழக்கூடும் என பெரும்பாலான நவீனகவிஞர்கள் நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.

    இந்த இடத்தில் ஒருவர் பசித்திருக்கும் போது 'ரசனை' என்பதனை எப்படி அவருக்கு உணர்த்துவது என்ற வினா முக்கியமானதாகப்படுகிறது. இதனை கலைக்காகxமக்களுக்காக என்ற விவாதத்தின் மறு தொடக்கப்புள்ளி எனலாமா? மொழி என்பதன் பரிணாமம் 'உச்ச'நிலையை கவிதையில் அடைகிறது என்று சொல்லும் போது அது உச்சம் இல்லை என்று நிராகரிக்கிறீர்களா. நிராகரிப்பின் ஏன் என்று தெரியப்படுத்துங்கள்- [உங்கள் தளத்தில் கூட விவாதிக்கலாம்] அல்லது ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மொழியின் உச்சத்தை நோக்கி மக்கள் நகர வேண்டியிருக்கிறதா அல்லது மொழி மக்களின் புரிதலில் இயங்க வேண்டுமா? உங்களின் நிலைப்பாடு என்ன?

    ReplyDelete
  18. வணக்கம் மணிகண்டன். வேலைப் பளு. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். கவிதையை எழுதியதுமல்லாமல் அதற்கு உரை செய்வதை, அதை புரிந்து கொள்வதை ஒரு புனித செயலாக நான் கருதவில்லை. இங்கு எனக்கு மொழியோ, அதை உச்சத்திற்கு அழைத்துச் செல்வதோ பிரச்சினையில்லை. அதன் வளர்ச்சியில் மானுடம் தன்னை வளர்த்துக்கொள்ளுகிறதோ, இல்லைத் தாழ்த்திக்கொள்கிறதோ அதை காலம் தீர்மானிக்கட்டும். அப்படி அதன் உச்சத்தை கவிஞர்கள்தான் ஏற்படுத்துகிறார்கள் என்றால் அது ஒரு தொழில் முறை மட்டுமே. சங்ககாலக் கவிதைகளும் இவ்வாறே படித்த சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. நான் வலியுறுத்திக்கேட்பது தொடக்கத்தில் இருந்து இதுதான் உச்ச கவிதை அதற்காக வாசிப்பின் உயரத்தை எட்டுதல் எல்லாம் பிரச்சினையில்லை. ஆனால் நவீன கவிதை என்ற பெயரில் பாம்புக்குத் துணைக்கால் தத்துவம் என்றெல்லாம் எழுதுவதற்கு எந்த மனநிலை கவிஞர்களைத் தயார்படுத்துகிறது. இன்னொன்று ஜெயமோகன் தனது இளம் வாசகர்களுக்கு தன்னிடம் கேள்வி கேட்ட வாசகரை முன்னுன்னிருத்திப் பேசுகிறார். அதாவது ஒரு வாசகர் ஜெயமோகனிடம் உங்கள் விஷ்ணு புரம் நாவல் படிக்கச் சிரமமாக இருக்கிறது என்று கேட்டதற்கு ஜெயமோகன் சற்றுக் கடுப்போடு உங்களுக்காகவே பனிமனிதன் என்ற நாவலை எழுதியிருக்கிறேன் ( அது குழந்தைகளுக்கானது) என்ற அடைப்புக்குறிப்போடு பதில் எழுதியிருக்கிறார். நிற்க சம்பந்தப்பட்ட அந்த நூலிலேயே கோணங்கியின் எழுத்துக்கள் வெற்று மொழி சார்ந்த பதிவுகள் என்றும் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றால் அதைப் படித்த வாசகன் கோணங்கி மதினிமார்கள் கதை என்ற ஒன்றை எழுதியிருக்கிறார்...நீங்கள் அதைப் படிக்கலாம் என்று பரிந்துரைக்கலாம் இல்லையா...


    ஆனால் என்முடிவுறாத கேள்வி இவ்வளவு தத்துவ வியாக்கியானங்களை எழுதி உரை சேர்க்கும் ஆகப் பெரிய ஆளுமைகள் தனிப்பட்ட முறையில் ஒரு எழுத்தாளரை சாதி சொல்லித் திட்டுவதும். நொண்டி நாய் என்று பதிவிடுவதும் ஏன். அப்படியென்றால், அவர்களின் கவிமனம் எங்கு பூக்கிறது. அவர்களின் மொழி உச்சம் வாசிப்பு எதன் பொருட்டு. மொழியின் பயன்பாடு தன்னளவில் மட்டும்தான. கவிஞர்கள் கூறுவது வெறும் இலக்கணமும் மொழி வளர்ச்சியும் வாசிப்பு மட்டும்தானா. அப்படியெனில் மொழி மொழிக்கு மட்டுமே, தன்னை வளர்த்துக்கொள்ள மனித விரல்களை பயன்படுத்திக்கொள்ளுகிறதா. இங்கு மானுட ஆதாரமான பசி கூட பிரச்சினையில்லை. ஆனால் குணம்...எப்படி மணிகண்டன் பத்தாயிரம் பக்கங்கள் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றியும் டால்ஸ் டாய் பற்றியும் வகுப்பெடுத்து அவர்களின் அற வெளிச்சத்தில் பல்லிளித்துவிட்டு எழுத்து அரசியலில் தங்களது இடத்தை தக்க வைக்க போராடுவது ஏன் நிகழ்கிறது.

    நான் மறுபடி மறுபடி கூறி நிற்பது ஒன்றுதான், ஒரு நவீன கவிஞர் தொடர்ந்து தத்துவம் போல் எழுதி வந்து அவருக்கு பிரபல இதழ் தத்துவக் கவிஞர் என்று பட்டம் கொடுத்துவிட்டால் அவர் எழுதும் அனைத்தும் தத்துவமாகும் அவசியமென்ன. இங்கு ஒரு நடிகனுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் உள்ல வேறுபாடுகள் வித்தியாசப்படுத்தல்கள் என்ன.....இங்கு வாசகனுக்கும் ரசிகனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ஒரு ரசிகன் இன்னொரு நடிகனின் ரசிகனைத் தரக்குறைவாகப் பேசுவதும், ஒரு வாசகன் அதைச் செய்தாலும் அதை அறிவின் தளத்தில் வைத்தே உரையாட வேண்டிய அவசியம் என்ன. அங்கு என்ன நடக்கிறது. ஒரு ரசனை சார்ந்த விசயத்தில் இது உன்னதம் இது அறிவு என்று எழுத்தாளர்கள் எதன் அடிப்படையில் தீர்மானிக்கின்றனர்.

    மொழியோ வேறு எதுவோ அது படைக்கப்பட்டால் நிச்சயம் அது இன்னொரு மனிதருக்குப் பயன்படும். அவன் தன்னளவில் எழுதினால் கூட அது அவன் கண்ட சமூகத்தின் மனதை பதிந்திருக்கும் இல்லையா. ஆனால் எழுத்தாளர்கள் எழுதாமல்...எழுத்தாளனாய் இருப்பதாலேயே அவன் ஒட்டுமொத்த எழுத்துக்கும் உரிமை கோருவதோடு, புரியாத எழுத்துக்கள், மற்றும் கவித்துவத்தின் உச்சம் அடைந்தவர்களாக கருதப்படுவதும், அவர்கள் புரியாத, புரிய விரும்பாத சமுகத்திற்கும் மக்களுக்கும் சில வியாக்கினங்களை வழங்குவதும், உற்சாகத்தோடு வாசகர் படைகளை சேர்ப்பதும் ஏன். மொழியால் இவர்கள் அடைவதும் இழப்பதும் என்ன......

    ReplyDelete
  19. ஒரு கவிதையை புரிந்து கொள்ளமட்டுமல்ல, எதையும் புரிந்து கொள்ள வாசிப்பும் பயிற்சியும் வேண்டும். வாசிப்பு வேண்டுமென்பது கவிதைக்கு மட்டுமல்ல கணிதம் கூட அதைக் கோரி நிற்கும். ஆனால் கவிஞர்கள் சகலமும் தெரிந்த ஆத்மா என்ற அகம்பாவத்தினால் மட்டுமே அதற்கு புனித பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. மொழி தன்னளவில்வளரும் அல்லது தேயும் ஆனால் ஒரு கவிதையை உச்சமென்றே, கீழான கவிதை என்றோ இறக்குவது....பொது புத்தி சார்ந்த அல்லது உணர்ச்சி வசப்பட்ட உணர்வைக் குறிக்கிறது, அல்லது புழங்கிய மற்றும் புழங்காத சொற்களை பயன்படுத்துகிறது என்றளவில் வைக்கலாம். நான் இங்கு கேட்பது கவிஞர்களில் மிகப் பெரும்பாலோனோர் கவிதை அதுவாக்கும், இதுவாக்கும், மனோநிலை...சூன்யம்,....மற்றும் அது தத்துவத்தை, தூயதை அடைகிறது, அதைப் புரிந்து கொள்ள கவிமனம் வேண்டுமென்பதெல்லாம் என்று வாக்கியங்களில் கூறுவது மிகையாகத் தோன்றுகிறது.

    நாம் இப்பொழுது கலை கலைக்காகவே அல்லது கலை மக்களுக்கே என்று உரையாடவில்லை. மொத்தமாக கலையின் பயன்பாடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

    மானுடத்தை இயற்கையை வியந்து தன் மொழிக்குள் கொண்டுவந்த கவிஞர்கள் போர்களை ஆதரிப்பதும், அழிவை கொண்டாடுவதும் ஏன். சம்பந்தப்பட்ட கவிஞர்களுக்கு தங்களது படைப்புகள் தாண்டி இந்த புவியில் எதுவுமே முக்கியமில்லையா.

    இந்த மனநிலையில் என்னால் ஒரு கவிதையை ஒரு படைப்பை வெறும் பதிவென்றே சொல்லத் தோன்றுகிறது. அது சம்பந்தப்பட்ட மொழியை வளர்க்கும் ஒரு மொழியின் வளர்ச்சியென்ற இலக்கணம் மட்டுமே. அங்கு இருப்பது வெறும் வார்த்தைகள்..........வார்த்தைகள்.

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...