Sunday, November 12, 2017

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.





மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -
பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் 
(hit-or-miss reformers)

“ மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன், அம்பேத்கரின் சாதி ஒழிப்பு இயக்கத்தை இணைப்பதென்பது இந்தியப் புரட்சிக்கு ஒரு பரந்த பாதையை இடும் என்று கே.ஜி. சத்தியமூர்த்தி கருதுகிறார். ரங்கநாயகம்மாவுக்குப் பதிலாக அவர் எழுதிய ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ எனும் தத்துவார்த்த ஆய்வறிக்கையில், இந்த அம்சத்தை அவர் விரிவாக விளக்கியுள்ளார்.” (ஆந்திர ஜோதி, ஏப்ரல் 30).

கடந்தகாலத்திலும் சரி, இன்றைக்கும் சரி ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ நூலை எனது நூலுக்கான பதிலாக நான் கருதவே இல்லை. ஆனால், அந்த நூல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் கலப்பது எனும் மாபெரும் ‘தத்துவார்த்த ஆய்வாக’ முன்வைக்கப்படுவதால், அதில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன்.

சத்தியமூர்த்தி (மக்கள் யுத்தக் கட்சி, சிபிஐ-எம்எல்லின் ஒருமுறை செயலாளர், பின்னர் அவர் பிஎஸ்பியில் சேர்ந்தார், பின்னர் பஹுஜன் குடியரசு கட்சியில் சேர்ந்தார், அதன் பின்னர் பல அமைப்புகளில் இருந்தார். சமீபத்தில் காலமானார்). தங்களுக்கு விருப்பமான வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் என்றெல்லாம் வளைக்க முயற்சிக்கும் ஏனோதானோவென்று அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளுள் ஒருவர்.

தொழிலாளர்வர்க்கம் வர்க்கப் போராட்டம் தொடுப்பதன் மூலம் சுரண்டல்வாத வர்க்க உறவுகளையும், சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையையும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்ஸின் மார்க்சியமானது வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, வர்க்க முரண்பாடு நிலவும் எந்த ஒரு நாட்டிலும் வர்க்கப் போராட்டமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானக் கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட பிரச்சினையானது, அந்தப் பிரதானக் கொள்கையால் ஆளப்பட்டு, அடிப்படை நிலைமைகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் விளைவால், சுரண்டும் வர்க்கமும் உற்பத்தியாளர்களாகி, தம் உழைப்பில் வாழத் தொடங்கும். எஜமானர்-தொழிலாளர் உறவுகள் மறையும். இந்த உண்மையை வலியுறுத்தும் மார்க்ஸின் கோட்பாட்டை சுரண்டும் வர்க்கம் நிராகரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், உழைப்புச் சுரண்டலை ஒழிக்கச் சொல்லும் அக்கோட்பாட்டை இந்தியாவின் பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கங்களான பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட ஏற்காதது வியக்கத்தக்கதே. ஆனால் அவர்களின் தலைவர்கள் இதைப் பற்றி ஏதும் கற்றுக்கொடுக்காததே இந்த நிராகரிப்புக்குக் காரணம். பூர்ஷுவாமயமாதலே அவர்களின் இலக்கு! சுரண்டல் முறையிலேயே முன்னேறுவது. இது காரணமில்லையென்றால், மார்க்சியத்தை இத்தனை தூரம் அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் அத்தகைய தலைவர்கள் தாமாக மார்க்சியத்தைப் படித்து, தங்களுக்கென ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கலாம், தங்களின் மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து, தங்களின் முன் இருக்கும் புரட்சிகர இலக்கைப் புரிய வைக்கலாம். மார்க்சியம் ஒன்றும் ஏற்கனவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல.

சத்தியமூர்த்தி போன்ற ஒரு தலைவரை நாம் எடுத்துக் கொண்டால், அவருடையது ஒரு கோட்பாடல்ல, முரண்பாடான இரண்டு கோட்பாடுகளின் கலவையாகும். ஒருபுறம், அவர் அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை தழுவிக் கொள்கிறார்  அதேவேளை பொதுமக்களிடம் மார்க்சியத்திற்கு இருக்கும் ‘மவுசை’ அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. இத்தகைய தலைவர்கள் மார்க்சியத்தை முழுமையாக கைவிட மாட்டார்கள். அதனால் அவர்கள் சில புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கு வருகின்றனர்.

இந்த நாட்டில் கிடைக்கும் உடனடித் தீர்வு என்னவெனில், அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைப்பது! அல்லது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் காந்தியையும் கலப்பது!

பெயர்கள் தானே எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, கோட்பாட்டளவில் அந்த இரண்டையும் கலக்க முடியுமா? இணைக்க முடியுமா?

மார்க்சின் கோட்பாடு என்னது? உழைப்புச் சுரண்டல் உறவுகளை ஒழிப்பது. வர்க்கப் போராட்டம் வன்முறையல்ல. உழைப்புச் சுரண்டலைத் தொடர்வதற்காக எஜமானர்கள் தொடுக்கும் வன்முறையை நிறுத்துவதற்காகத் தேவைப்படும் வன்முறை அது. தொழிலாளர் வர்க்கத்திற்கான தற்காப்பு தவிற வேறெதுவுமில்லை. பழைய முரண்பாடான நிலைமைகளை மாற்றியமைத்தாலன்றி  வர்க்க உறவுகளிலிருந்து எழும் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையையும் தனியாகத் தீர்க்க முடியாது. மார்க்சிடம் மதமில்லை. அவருடையது பொருள்முதல்வாதமாகும்.

அம்பேத்கருடையக் கோட்பாடு என்னது? வர்க்கப் போராட்டமே தேவையில்லை! சீர்திருத்தம் இருக்கிறது. சாதி கூடாது! மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம்! ஆன்மீகத்தைக் கைவிடக் கூடாது. சாதியை ஒழித்த பின்னர் நாம் வர்க்கம் பற்றி கவலைப்படுவோம்!

காந்தியின் கோட்பாடு என்னது? தொழிலதிபர்களைத் தொடாதீர்கள்! அவர்கள்தான் அனைத்து சொத்துகளின் தர்மகர்த்தாக்கள்! இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி? நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது! இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம்! வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா? கூடாது! கூடவே கூடாது! அது வன்முறையானது. இருப்பினும், அரசாங்கத்திற்கு காவல்காரர்களும், இராணுவ வீரர்களும் தேவை. அது வன்முறையாகாது.

அப்படியென்றால் வர்க்கப் போராட்டம்? அது கொடுமையான வன்முறை.

இப்போது, நாம் இம்மூன்று கோட்பாடுகளையும் அல்லது இரண்டையாவது இணைக்க வேண்டும். சரி இணைப்போம்! ஒன்றுகலக்குமா?

அம்பேத்கரின் கோட்பாடு: காந்திக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.
காந்தியின் கோட்பாடு: அம்பேத்கருக்கு எதிரானது. மார்க்ஸுக்கு 
எதிரானது.



மார்க்சின் கோட்பாடு: இரண்டிற்கும் எதிரானது.
                                  
வர்க்கக் கலப்பு மற்றும் சீர்திருத்தத்தவாதத்திற்கு எதிரானது.

புத்தரை எடுத்துக்கொண்டால், அவருடைய அஷ்டாங்க மார்க்கம், ஒன்றுக்கும் உதவாது.

இவற்றில் எந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது என்பதை இக்கோட்பாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை அறிந்தவர்கள் என்ன சொல்ல வேண்டும்? காந்தியின் கோட்பாடு பயனற்றது என்று தூக்கி எறிய வேண்டியும்.

அம்பேத்கரின் கோட்பாட்டிலிருந்து ‘சாதி ஒழிப்பு’ எனும் அம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் சாதியை ஒழிப்பதற்கு, உழைப்புசார் உறவுகளை தலைகீழாக மாற்றியமைக்கும் இலக்கைக் கொண்ட வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே முடியும். கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.

எல்லாவற்றிலும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தந்த தர்க்கத்தின்படி, ஒற்றுமையும், முரண்பாடும் உருவாகின்றன. ‘குறிப்பிட்ட பிரச்சினைகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே தீர்க்க முடியும்’ என்று சொல்லக்கூடிய ஒரு கொள்கையை, ‘சாதியை ஒழித்த பின்பு மட்டுமே வர்க்கப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் மற்றொரு கொள்கையை எப்படி இணைக்க முடியும். சத்தியமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளுக்கு எதுவும் சாத்தியம். தர்க்க நியாயங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைக்க முடியும். இரண்டையும் ஒரு கோட்பாடாக்க முடியும். பிறகு, மார்க்சியத்தை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போராட்டங்களைக் கைவிட்டு, கூட்டிணைப்புகளை விரிவுபடுத்தலாம். மார்க்சியத்தை நாம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற வேண்டும். அதுதான் நமது நாட்டின் தேவை. அதாவது, மார்க்சியம் ஜெர்மனியில் ஜெர்மானிய மார்க்சியமாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலேயே மார்க்சியமாகவும், ஃப்ரான்சில் ஃப்ரெஞ்சு மார்க்சியமாகவும் இருக்கும். அதேபோல், இந்திய மார்க்சியம் என்று ஒன்று வேண்டும். நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் ஏற்றார்போல் மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

நமது மண்ணுக்கேற்ற மார்க்சியமானது அம்பேத்கர், புத்தர் மற்றும் மார்க்சின் கலவையாக இருக்கும். காந்தி பக்தர்கள், ‘காந்தியையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்!’ என்பார்கள். சாய்பாபாவின் பக்தர்கள் ‘பாபாவையும்’ சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.

இது எப்படி ஒரு விவேகமுள்ள இணைப்பாக இருக்க முடியும்?  வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன! காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார்! (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார்? அப்படியென்றால், புத்தர் யார்? அவர் இரண்டாம் சூரியனா? மார்க்ஸ் யார்? மூன்றாம் சூரியனா? மூவரும் சமம் என்று சொல்லிவிட்டு அம்பேத்கரை மட்டும் ’சூரியன்’ என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகள் எழாதா? ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே! சரியோ தவறோ, ‘மூன்று சூரியன்கள்’ என்று ஏன் அவர் சொல்லவில்லை?

கன்ஷிராம் மற்றும் மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் பார்வையில் அம்பேத்கர் சூரியனாக இருப்பது சரி, ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார், மார்க்ஸ் இல்லை. ஆனால், சத்தியமூர்த்தியின் வாதப்படி, ஒற்றைக் கண் பார்வையுடைய அறிவுஜீவி இல்லை அவர். மூன்று கண் பார்வை கொண்டவர்! அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார்? மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர்! புத்தரும், மார்க்ஸும் அம்பேத்கரின் இடம், வலம் என்று அருகில் நிற்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக இருக்க முடியும்.

சத்தியமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியை கைவிடலாம் பரவாயில்லை, ஆனால் அவர் கம்யூனிசத்தையும் கைவிட்டு அடையாள அரசியலை தம் முக்கிய குறிக்கோளாகக் கைகொண்டார். ஒவ்வொரு அடையாளக் குழுக்களும் வெவ்வேறு பிரிவுகள். அவரவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்க குறிப்பிட்ட இயக்கங்கள் தேவை! அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது? பூர்ஷுவாமயமாதல்!

பூர்ஷுவாமயமாதல் மட்டுமே மார்க்சியத்திலிருந்து வர்க்க உணர்வை பிரிக்கக் கூடியது. நாம் பூர்ஷுவாக்களாக வேண்டும்! நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும்! அது நடந்தால் அது ஒரு தலித் அறிவுஜீவிக்கு நல்லது. ஒரு தலித் முதலாளி ஆனால், தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான தலித்துகளை தொழிலாளர்களாக அமர்த்தி சுரண்டிப் பிழைப்பது அவருக்கு ஆனந்தம் தரலாம். இத்தகைய குறுங்குழுவாத இயக்கங்கள் அத்தகைய தலித் வளர்ச்சியையே விரும்புகின்றன.

அடையாள, குறுங்குழுவாத இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய பாத்திரம் என்ன, தங்களுடைய இடம் என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். சமத்துவமற்ற உற்பத்தி உறவுகளில் அவர்களுடைய அடையாளக் குழு சிறைபட்டுக் கிடப்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது குழுக்கள் சுதந்திரமானவை, தங்களுடைய பிரச்சினைத் தனியானது மற்ற பிரச்சினைகளோடு தொடர்பில்லை, ஆகவே தனியான தீர்வைப் பெற முடியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.

பூமியானது, தன்னைத் தானே சுற்றி வருவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. இயற்கை விதி அது. ஒவ்வொரு குழுக்களுக்கும் அத்தகைய சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குழுக்களும் தங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினையைச் சுற்றி வருவதோடு, தனது வர்க்க உணர்வையும் சுற்றி வரவேண்டும். இல்லையென்றால் எந்த அடையாள-சூரியனும் எந்த அடையாளக் குழுக்களையும் காக்க இயலாது.

தலித் சாதிகளுக்காக அம்பேத்கர் எனும் சூரியன் ஏற்படுத்திய இடஒதுக்கீடு எனும்  வெளிச்சம் எத்தனை காலம் தொடரும்? உலகம் இருக்கும் வரையிலுமா? அப்படியென்றால் கீழ்நிலை சாதிகளும் அப்படியே இருக்க வேண்டும் இல்லையா? சாதி இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கும், இல்லையா?

ஆனால், இடஒதுக்கீடு என்பதும் ஒருவகையான பாகுபாடே. அது சுய-மரியாதை இன்மையைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டை தற்காலிக நிவாரணமாகக் கருதி நிரந்தர தீர்வை நாம் தேடிப்போக வேண்டாமா? இல்லை இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கி, கீழ்நிலை சாதிகளின் நிலையையும் என்றென்றைக்கும் தக்கவைக்கப் போகிறோமா?

சரி, இடஒதுக்கீடு என்பது தற்காலிக நிவாரணம் என்றால் சாதியமைப்பை ஒழிக்க நிரந்தரத் தீர்வு என்னது? கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பாதை தெரிய, ஒரு நூறு கலப்புத் திருமணங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். (அம்பேத்கருடையதையும் சேர்த்து). என்னக் காரணங்களால் அந்த கலப்புத் திருமணங்கள் சாத்தியமாயிற்று என்று பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் கலப்புத் திருமணங்கள் நிகழ்வதற்கான நிலைமையை உருவாக்குவது அவசியம். இதுவே சாதி ஒழிப்பிற்கு நிரந்தர தீர்வு, இல்லையா?

மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற நினைக்கும் அறிவுஜீவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அவர்களைக் காணலாம். புச்சலப்பள்ளி சுந்தரைய்யாவை ‘மார்க்சிய காந்தி’ என்று குறிப்பிட்ட ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். ஒரு மார்க்சியருக்கும் காந்திக்குமான ஒப்புமைதான் சாத்தியமா? காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா? பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா? இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா? எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர்? சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும்? கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் வெட்கப்படுவதே இல்லை. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை எனும் அளவுக்கு பிடிவாதம் கொண்டவர்களாகி விட்டனர். தங்களது கூட்டங்களுக்குப் பெரும் மரியாதையுடன் பூர்ஷுவா அமைச்சர்களை கூப்பிட்டு மகிழ்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தை பூர்ஷுவா மார்க்சியமாக மாற்றுவதற்கான வெளிப்பாடுகளே.

பூர்ஷுவாமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளை பாட்டாளி வர்க்கம் சகித்துக் கொண்டால், அதற்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் கிடைக்கும். அது, பூர்ஷுவா ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் சட்டபூர்வ மார்க்சியமன்றி வேறில்லை. அதன் விளைவாக நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே இருப்போம்: அடையாளக் குழுக்கள் அதே கீழ்நிலை உடல் உழைப்பிலும்; பெண்கள்  சமையலறையிலும்!

எந்த சூரியனும் நம்மைக் காக்க இயலாது. மார்க்சியம் பூர்ஷுவாமயமாக்கப்பட்ட பின்பு சூரியன் என்ன செய்கிறதென்று பார்ப்போம்!



                                                                             - ரங்கநாயகம்மா

Wednesday, November 1, 2017

த.மு.எ.க.ச என்னும் முகமூடிக்குப்பின் ஒளிந்திருப்பவர்கள் யார் ?




த.மு.எ.க.ச : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


தோழர்களே...

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, இலக்கியமோ, தத்துவமோ, அல்லது தங்களது சொந்த நிலைப்பாடுகளைக் கூடச் சொல்வதாக இருந்தாலும், அது கட்சிக்கு விரோதமாகிவிடுமோ என்ற எச்சரிக்கையோடு, கட்சிக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பல தோழர்களை நான் சிபிஎம்மில் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் தங்களது கருத்துக்களை, அவர்கள் எத்தனை நாளைக்கு மூடி வைக்கப் போகிறார்கள், அல்லது நடைமுறை சார்ந்து, உள்கட்சி விவாதமாகவாவது அவர்களது கருத்தை முன்னெடுப்பார்களா என்று அவர்களிடம் கேள்விகளையும் வைத்திருக்கிறேன்.

சில தோழர்கள், தங்களது முடிவுகள் கட்சிக்கு எதிராக இருந்தாலும், கட்சி சொல்வதே எங்களது இறுதி இலட்சியம், அதுவே எங்களது வழிகாட்டி. மேலும் தங்களது கட்சி ஒரு போதும் தவறு செய்யாது என்று நம்பிக்கையுடன் கூறுவதும் உண்டு. அத்தகைய தோழர்கள் இன்று வரை சிபிஎம் கட்சியில் உண்டு. அது கட்சிக்கும், கட்சியின் திட்டத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பட்டு நிற்கும் ஒரு ஒழுங்கமைந்த பகுதி. கட்சியின் மீதான நற்புரிதலை மக்களுக்கு முன்வரிசையில் காட்டும் முகம்.

ஆனால் இப்பொழுது, பொது வெளியில், தங்களுக்கு எந்த இடமும் கிடைக்காத அடையாளப் பிரச்சினையில், தமுஎகச  அமைப்பை விசிட்டிங் கார்டாகவும், கம்யூனீஸ்ட் என்பதை ஒரு அடையாள பிரச்சினையாகவும் முன்வைத்து, தங்களுக்கான ஒரு இடத்தை அதில் உறுதி செய்தவர்களே, அங்கு நிறைந்துகொண்டிருக்கிறார்கள்.

வெற்றுக்கோஷங்களை தத்துவ முகத்தோடு வைக்கையில், அது இலக்கிய முகமாகவும், விருதுக்கு உரியதாகவும் தேர்தெடுக்கப்படுகிறது.  அப்படி விருது வாங்கிய பலர், விருது கொடுத்த அமைப்பின், இலக்கிய முகத்தை தங்களது அவதூறான எழுத்துக்களின் மூலமே சாட்சியமும் கூறி வருகின்றனர்.

மிகக் குறிப்பாக, அங்குள்ள பலருக்கு மார்க்சியத்தின் அடிப்படைக் கல்வி கூட கிடையாது. தேனி தமுஎகசவின் மாவட்டச் செயலாளராகவும், மாநில அளவில் உயர்ந்த பொறுப்புகளிலும் இருந்த தோழர் சீருடையானிடம், இராஜதுரை குறித்து உரையாடியதில், ராஜதுரை, செம்மலரில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார், அதை நான் படித்தேன், அதனால் அவரை மார்க்சிய அறிஞர் என்றே சொல்லுவேன் என்கிறார். கிட்டத்தட்ட தத்துவ வாசிப்பைக் கொன்றே விட்டார்கள்.


அடையாளம் வேண்டி வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவே, அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அப்படி அடையாளப் பிரச்சினையில் உள்ளவர்கள், தங்களது அடையாளங்களை முன்னிருத்த, தொடர்ந்து தங்களது இலக்கியப் பிரச்சாரத்தை அவதூறுகளாக, ரசிகர் மன்ற பாணியில் மட்டுமே முன்வைப்பார்கள். தமுஎகசவிலிருந்து சிபிஎம் கட்சிக்கு ஓரிரு தோழர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் கட்சிக்குப் பொய்த்துப் போனது. வந்த ஒரு சிலரும் தங்களது அடையாளத்தை வெற்றிகரமாக அங்கு நிறுவியே விட்டார்கள்.

மேலும் இத்தகையோருக்கு, தமுஎகசவில் இருந்தாலே, அது ஒரு புரட்சிகரமான இலக்கிய செயல்பாடாகிப் போனதால், அங்கு மார்க்சியம் கற்கவேண்டிய அடிப்படையும் அவர்களுக்கில்லை. அதன் விளைவு சிபிஎம் கட்சி குறித்தும், மார்க்சியம் குறித்தும் அவர்களுக்கு அறிய வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டது. தமுஎகச என்ற இலக்கிய அமைப்பு, சிபிஎம்மின் வெகுஜன அமைப்பு என்று கூடத் தெரியாத தமுஎகச தோழர்கள் பலர் அங்கு இருக்கின்றனர். அதே சமயம் சிபிஎம் கட்சியும், அதை ஒரு இலக்கிய அமைப்பாக மட்டுமே கருதுவதால் அவதூறாளர்கள் மீதான தனது தலையீடையும் தவிர்க்கிறது.

ஆக, இதுபோன்ற அடையாளப் பிரச்சினையில் உள்ளோருக்கு, முற்போக்கு முகமும், கம்யூனிஸ்ட் என்கிற அடையாளமும் இரட்டிப்பாகக் கிடைக்கிறது. இவர்கள் வெகுஜன மத்தியில் அறிமுகப்படுத்துவது, தங்களது அடையாள  இருப்பன்றி வேறும் எதுவும் இல்லை.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், தமுஎகசவை முன்னிருத்தியும், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் அட்டை வைத்துக்கொண்டும் அவதூறு செய்பவர்கள், மார்க்சியம் குறித்து பொருட்படத்தக்க நாலு பத்தியையாவது  எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தால் எதுவும் இல்லை. தங்களை முன்னிருத்தும் அவதூறு பாணியிலான, இலக்கிய அடையாளத்தை முன்வைத்து நகர்வதே இவர்களது பிரதான பணி.

கட்சியின் தத்துவார்த்த முகத்தை, சிபிஎம் கட்சியின் அதிகாரப் பூர்வமான நிலைப்பாடுகளை, தமுஎகசவின் இலக்கிய முகத்தை, இந்த அவதூறாளர்கள். தங்களது அடையாள அரசியலின் மூலம், பொதுவெளியில், தமுஎகசவை ஒரு தான்தோன்றித்தனமான அமைப்பு என்ற ரீதியில் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவதூறுகளை முன்வைத்து நகர்வதன் மூலம், தங்களது அடையாளத்தை அவர்கள் முற்போக்குப் பணியாக அறிவிக்கிறார்கள். இத்தகைய போக்கானாது சிபிஎம் கட்சிக்கே அவமானம் தேடித்தருவதாய் அமைகிறது. இவர்களை அம்பலப்படுத்துகையில், வெற்றிகரமாக அமைப்பின் பின் பதுங்குவார்கள். தங்களைத் தோழர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். 

இந்த போக்கானது, தமுஎகசவின் வேலைப்பட்டியலில் வரலாற்றுத்தவறு என்கிற ஒரு வார்த்தையை சேர்த்து வைப்பதில்தான் போய் முடியும். அற்ப பாராட்டுதலுக்காக தங்களை மார்க்சியர்கள் என்று அழைத்துக்கொண்டு, நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இலக்கியத்திலோ, மார்க்சியத்திலோ, இல்லை சிபிஎம்மின் அமைப்பு விதிகளோ கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கத் தேவையில்லை. அதையும் மிகுந்த பெருமையுடன் அறிவிக்கவும் செய்கிறார்கள்.

பொதுவெளியில் இத்தகைய அவதூறுகளையும், வசைகளையும், கேலி கிண்டல்களையும் முன் வைப்பவர்கள், தங்களது படைப்புக்களில் முற்போக்காளராக அறியப்படும் அவலமும் மிஞ்சுகிறது. எப்படியோ, சிபிஎம்மின் கட்சிக் கட்டுப்பாட்டை தமுஎகசவில் இருக்கும் அடையாள அரசியல்வாதிகள் வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கண்டிக்க வேண்டிய தமுஎகச பொறுப்பாளர்களும், புத்தகம் எழுதியவர்களும் இந்த அவதூறைச் செய்வதால் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

உதாரணங்களாக;

பாரதிப் புத்தகாலயத்தின் பதிப்பாசிரியராக இருக்கும் ப.கு.ராஜன் “ஏன் வாப்பா ஒரு பெண் ரௌடி இல்லைஎன்று கேட்டது கூட அத்தகைய நிலைப்படுதான். ஒரு பதிப்பாசிரியராக இருப்பவர், தனது  பணி எத்தகையது என்று கூடத் தெரியாது, இஸ்லாமிய மதத்திற்கெதிராக முன்வைத்த அக்கலகக் கவிதையை, தனது கச்சடாவான அவதூறுக்கு சேவகம் செய்ய வைக்கிறார். கிண்டல் செய்வது மட்டுமே மார்க்சிய நிலைப்பாடாக மாறிக்கொண்டிருக்கிறது. நையாண்டிகளின் மூலம் மார்க்சியத்தை நிலைநிறுத்தலாம், அல்லது தனது இருப்பையும் முன்வைக்கலாம் என்கிற மனோநிலையைத்தாண்டி இவர்  வளரவேயில்லை.

தமுஎகசவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராய் இருக்கும் இருக்கும் கருப்பு கருணா  “வக்காலி  என்கிற வார்த்தையை பொதுவெளியில் உபயோகிக்கிறார். என் வரையில் வக்காலி என்ற சொல்  ‘வக்காலவோழிஎன்பதிலிருந்து துண்டித்து சுருக்கப்பட்ட வார்த்தை. இதற்கு அக்காளைப் புணர்பவன் என்ற அர்த்தம் இருக்கிறது. வேறு அர்த்தங்கள் இருப்பினும் அதை முன்வைக்கலாம். அவ்வார்த்தையை  வன்மக் கூச்சலோடு அவர் வைக்கிறார். அதற்கு அவ்வமைப்பைச் சார்ந்த பெண்ணியலாளர்கள், தத்துவவியலாளர்கள் தங்களது வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். அக்காளைப் புணர்பவர்கள் என்கிற வார்த்தை கூட தற்போது தமுஎகசவின் அரசியல் சொல்லாடலாய் மாறிய காலமிது. கண்டிப்பதற்கு யாரும் இல்லை. மேலும் தமுஎகசவின் மாநிலப் பொறுப்பாளராக இருக்கும் ஒருவரே, இது போன்ற மோசமான வார்த்தைகளை முன்வைத்து நகர்வதை எப்படி முற்போக்கு முகாம் என்று நாம் அழைக்கமுடியும்.

தமுஎகசவின் இலக்கிய முகமான ஆதவன் தீட்சண்யா, பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள், தலித்துகள் இல்லை என்பதாக  பொது ஊடகத்தில் கூறியவர். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், அதன் கட்சிப் பொறுப்புக்களில் சாதி உட்பட, எந்த வகையான இடஒதுக்கீடும் இல்லை. ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக இது சிபிஎம்முக்கும் பொருந்தும்.  இது தெரிந்தும், கட்சியின் மீது தலித் அமைப்புகள், அடையாள அமைப்புக்கள் வைக்கும் அதே குரலில் பேசுகிறார்.

மேலும், இப்பொழுது வந்த தடம் நவம்பர் 2017 இதழில்  மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் குறித்த, அவரது மார்க்சிய புரிதலை முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

அதாவது “பொருளாதார அமைப்பே அடிப்படைக் கட்டுமானம், சாதி போன்றவை மேற்கட்டுமானம். அடிக்கட்டுமானத்தை மாற்றிவிட்டால் மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்பது  கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு. அடிக்கட்டுமானத்தை மாற்ற வேண்டுமானால், முதலில் அதன் மீதுள்ள மேற்கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் நிலைப்பட்டிற்கு காலத்தின் போக்கில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை இணைத்துக்கொண்டால் தூயவடிவிலான வர்க்கப் போராட்டம் தீட்டாகிவிடும் என்கிற சிலரது சனாதன மனதை எதிர்த்தும் இடதுசாரிகள் போராட வேண்டியுள்ளதுஎன்று கூறியிருக்கிறார்.

அவரது அறிமுகக் குறிப்பில் தமிநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் என்றும், த.மு.எ.க.ச வின் மாநில துணைப்பொதுச் செயலாளர் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அவரது அடிக்கட்டுமான, மேற்கட்டுமான புரிதலை ஒட்டி, எந்தக் கம்யூனிஸ்ட் கட்சி அம்பேத்கரின் மேற்கட்டுமானக் கருத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை விளக்கவேண்டும்.

அவர் சார்ந்த இவ்விரண்டு அமைப்புகளின் மையக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அப்படியெனில் அக்கட்சியானது, அம்பேத்கர் வழிக்குச் சென்றுவிட்டதா என்பதை விளக்கும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது, மார்க்சியர்களும் இதைக் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தூயவடிவிலான வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?


மேலும் எந்தக்  கம்யூனிஸ்ட் கட்சி இதை விவாதித்து, காலப்போக்க்கில் அம்பேத்கரின் வழிக்குச் சென்றது என்பதை தத்துவார்த்தப் போக்கில்    விளக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அவர் கௌரவ ஆசிரியராக இருக்கும் அவரது புதுவிசை பத்திரிக்கை தொடங்கி இக்குரலே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. வர்க்கப் பார்வையை விட, சாதி அடையாளப் பார்வையே மேலோங்கியிருக்கிறது.

இவ்வாறாக ஒவ்வொரு ஊரிலும் தங்களுக்கென ஒருசில ரசிகர்களை இவர்கள் வளர்த்துவிடுகிறார்களே தவிர, வர்க்கப் பார்வையுடன் கூடிய படைப்பாற்றலையோ, தத்துவ வகுப்புகளையோ, அரசியல் உணர்வை உருவாக்கும் வேலைகளைச் செய்வதில்லை. குழுவாதமாக மட்டுமே பெரும்பாலான இடங்களில் நிகழ்ந்துவருகிறது.

சிபிஎம்மின் கட்சிக் கட்டுப்பாட்டுக்கும், திட்டத்திற்கும், அதன் மையத் தத்துவத்திற்கும் எதிராகவும், பொது ஊடகத்தில் பேசுவதன் மூலம் அவருக்கு அம்பேத்கரிய அடையாளம் கிடைக்கிறது. அம்பேத்கரின் நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி, அவற்றையும், வரலாற்றுக்குப் புறம்பான போக்கில், எந்த ஆய்வும் இன்றி,  தன்போக்கிலான அம்பேத்கரியமாக அறிமுகப்படுத்தி வருகிறார். மார்க்ஸ் அவசியத்தேவை என்கிற நூல் இவருக்கு நரகலுக்கு ஒப்பாக இருக்கிறது. அழுத்தமாகச் சொன்னால், அம்பேத்கர் மார்க்சியத்தை பன்றித்தத்துவம் எனச் சொன்னதை நியாயப்படுத்தும் இராஜதுரை, இவருக்குக் குருவாக இருப்பதால், இவருக்கும் மார்க்சியம் பன்றித்தத்துவமே. இவரைப் பொறுத்தவரையில் தமுஎகச என்பது தலித்திய அடையாள அரசியல்.

பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் முகமது சிராஜுதினுக்கு, தமுஎக்ச என்பது இஸ்லாமிய அடையாள அரசியல். அவரது மதத்தை சேர்ந்தவர்களை துணைக்கு அழைத்து, இஸ்லாமிய மார்க்சியமாய் முன்வைப்பவர். அ.மார்க்சின் சீடராக இப்பணியை தேர்ந்தெடுத்துச் செய்வதோடு, அவரையும் அடுத்த மார்க்சிய அறிஞராய் முன்வைப்பவர். அ.மார்க்ஸ். சிபிஎம் செய்த நந்திகிராம் விசயத்தை முன்வைத்து, சிபிஎம்மை குண்டர்களின் அமைப்பு, வன் புணர்ச்சி செய்பவர்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியை வேறு தொழில் செய்யப் போகலாம் என்றும் சொன்னவர். ஆனால், அ.மார்க்சின் இத்தகைய வாதங்களை கேள்விக்கு வைக்காமல், விவாதிக்காமல், அவரை குருவாக ஏற்று, அவரது இஸ்லாமியச் செயல்பாட்டுக்கு ஆதரவாகக் களம் அமைக்கும், இஸ்லாமிய முகமாக இவர்கள் ஒரு கோஷ்டி சேருகின்றனர். மார்க்சியப் பார்வையில் இஸ்லாம் குறித்து அங்கு விவாதங்கள் நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  இது தமுஎகசவில் இருக்கும் இஸ்லாமிய அடையாள அரசியலின் இன்னொரு முகம்.

மேலும் இவர்களை வைத்து தமுஎகசவை நாம் அடையாளம் காண்பதா எனக் கேள்வி  எழும்பினால்,    இவர்களை அப்படி நாம் வகைமைப் படுத்த முடியாது, இவர்கள் யாரும் எதுவுமே அறியாத நபர்கள் அல்ல, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள். கட்சியிடம் இருந்து சம்பளம் வாங்குபவர்கள், சிலர் முழுநேரப் பணியாளர்கள். வாங்கும் சம்பளத்திற்கு முதலாளிக்கு விசுவாமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை தாண்டி, தத்துவத்துக்கும் இவர்களுக்கும் இருக்கும் தொடர்பு எதுவுமில்லை.

தமுஎகசவின் சுய ஒழுங்குக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் (பதவிகளை மட்டுமே சொல்கிறேன், நபர்களை அல்ல) இருப்பவர்களே, வக்காலி, என்றும் ஏன் வாப்பா ஒரு ரவுடி இல்லை, என்றும் பேசுவதும்தான் தமுஎகசவின் இலக்கிய முகமா?

தமுஎகசவின் மாநிலச் செயலாளரான தோழர்.சு.வெங்கடேனிடம் ராஜதுரை எப்படி  மார்க்சிய அறிஞராவார், அவர் மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் என்ன என்று நேரடியாகவும், பொதுவெளியிலும் கேள்வியை வைத்து, அவர் எந்தப் பதிலும் சொல்ல வில்லை. ஆனால் இத்தகைய அவதூறாளர்கள் எங்கள் அமைப்பில் யாருக்கு வேண்டுமானாலும் விருது கொடுப்போம் என்று கூக்குரலிட்டதோடு தங்கள் பணியை முடித்துக்கொள்ளுகின்றனர். இந்த அவதூறுகள் எல்லாம், மாநிலத் தலைமையின் கவனத்துக்குப் போகிறதா. தமுஎகசவில் இத்தகைய அவதூறாளர்கள் இருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியுமா?

சிபிஎம் கட்சியின் கட்டுப்பாட்டை விட்டு, அதன் மார்க்சிய முகத்தைவிட்டு, இதுபோன்ற அவதூறாளர்களின் கையில் தமுஎகச நழுவிக்கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் தலைதூக்க ஆரம்பித்து சில பல வருடங்களாயிற்று.  இன்றுள்ள நிலையில், இதுபோன்ற அவதூறாளர்களால், மத அடிப்படைவாத, சாதி அடிப்படைவாத, அவதூறு முகமாக திரிந்து காணப்படுகிறது. அம்முகத்திற்கு முன்னால் சிபிம்மில் இருக்கும் பல தோழர்கள் என்ன செய்வதென்றே தெரியாது இருக்கிறார்கள். இவர்களைப் பொருட்படுத்துவதா, இல்லை விமர்சிப்பதா என்கிற கேள்வியை, எப்படிப் பொருத்திப் பார்ப்பதென்ற குழப்பமும் அங்கு இருக்கிறது.


கட்சிக்கும், தமுஎகசவுக்கும் உழைத்த பல தோழர்கள் மறக்கப்பட்டு, இப்படி அவதூறு செய்பவர்கள், தாங்களே சிபிஎம் கட்சியின், தமுஎகசவின் உண்மையான  முகம் என்று பொதுவெளியில் அறிவித்து, தங்களை வெற்றிகரமாக நிறுவியும் வருகின்றனர்.

மேலும், இந்த அவதூறாளர்களை விமர்சிப்பதன் மூலம், ஒட்டுமொத்த தமுஎகசவையும், சிபிஎம்மையும் விமர்சிப்பதாக அடையாளப்படுத்தியும் வருகிறார்கள்.

வர்க்க அரசியலை முன்னெடுக்காமலும், வர்க்க உணர்வை மளுங்கடிக்கும் விதமாகவும் செயல்பட்டு, தனித்தனி அடையாள அரசியலை முன்வைத்து இயங்குவதென்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கு சமமானதாகும்.


கட்சி இந்தப் போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதென்பது ஆபத்தானதாக முடியும். கட்சித் தலைமை இதை உணராதிருப்பது, நாளைய வரலாற்றுத் தவற்றுக்கு இன்றே இடம் கொடுப்பதாகும்.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...