Sunday, May 22, 2011

இறுகக் கட்டிய சொல்.




ஒரு வலி நிரப்பும் எழுத்தை

அதன் இறுகக் கட்டிய சொற்களை
மனப்பாடம் செய்யும் மாயாவியை
கவிதையெனக் கண்டுகொண்டேன்

மாயாவிக்கு நேர்ச் சொல்லென
கவிதை
பெண்பாலை
சூனியக்காரியென வரைந்து வைக்கிறது

ஒவ்வொரு ஆண்மகனும் தனது நிழல் விழா குறியிடத்தில்
அடிமையின் பெயரை வரைந்து வைக்கிறான்

கவிதை
தன் நிதானமில்லாத கால்களால்
நரம்பிறுக
வீசியெறிய முடியாத சொற்களை
கங்குகளென ஊதி
வனமெங்கும் வேர்களில் தீயைப் பற்றவைத்தபடி அலைகிறது
சரியும் பூக்களை
தன்
சிறுகுறிப்பில் வரும் சிறுமிகளுக்கு வாரியிறைக்கிறது

அது
சொல்ல முடியாதபடிக்கு
தன்னைக்
கவிதையென்று நம்பி
மாளமுடியா வலியில் கோணியழும்
தனது முகத்தை நிராதரவாய்
கண்ணாடியில்
வரைந்து வைக்கிறது

பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகளெனவும்
ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்களெனவும்
ஒருமுறை
வசுமித்ர உறுமியது

கோரைப் பற்களில்
இளங்குருதி சொட்ட
கவிதைகள் புன்னகைக்கும் போது
அது தனது மத்தகத்தைக் கருணையில் அறைந்து தாழ்த்துகிறது

கவிதைகள்
தன்னை விளக்க முடியா சொற்களில்
அடகு வைக்கும்போது அர்த்தங்கள்
நுரைகொப்பளிக்கக் கொதிக்கிறது

கவிதையைத் தானமிடுவதென்பது
சாபத்தை ஏவி விடுவதுதான்
சமர்ப்பித்தலென்பது
கல்லறையில் சொற்கள்
தன் தாப  நாவை உளியென
பொறி பறக்கச் செதுக்குவதுதான்

கவிதை
அருந்தும்
பருகும்
தீய்க்கும்
உமிழும்
சாத்தானின் இரட்டை நாவை பிரதியெடுத்து உள்ளிழுக்கும்
சதா உறுமியலையும்

வசுமித்ர
அதுவாகிறபோது
கவிதை தன் சாட்டையை வீசியடிக்கிறது
வரலாறு தன் கண்களை இறுகப்
பொத்திக்கொண்டு அம்மணத்தைத் திறந்து அமர்கிறது

குறியற்ற கவிதை
குறியை
அறுத்தெறிந்த கவி
பளுக்கக் காய்ச்சிய இரும்பென
அம்மணம் குளிர்ந்தடங்குகிறது

வரலாற்றை மொழிபெயர்ப்பதென்பது
ஆண்களை மொழிபெயர்ப்பதுதான்
ஆண்கள்  
தங்களது
அவர்களது விரைத்த குறிகளால்தான்
வரலாற்றை எழுதுகின்றனர்
ஆம்
ஸ்கலிதம்தான் வரலாறு
ஸ்கலிதம்தான் அரசியல்
ஆண்களின் வரலாறு
ஆண்களின் அரசியல்
மற்றும்
ஆண்களால் துடைத்தகற்ற முடியாத கறை

சொல்
வசுமித்ர
கருந்துளைதான்
சூன்யம்
சூன்யம்தான் யோனி

யோனியின் மத்தகம் அடக்க
இனியிருக்கப் போவதில்லை
நீண்ட அங்குசம்
யோனியறிதல் தன்னையறிதல்

கவிதை
தன் சொற்களை ஏவி  விடுகிறது
பரவட்டும் தீ

தீ..............................................



Saturday, May 21, 2011

எனது நாடு எவ்வளவு சிறியது : எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ்



அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச் சண்டைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

மொழிபெயர்ப்பு
எஸ்.வி.ராஜதுரை.
வ.கீதா.

நூல்: மண்ணும் சொல்லும்.

மூன்றாம் உலகக் கவிதைகள்

Monday, May 16, 2011

ஒரு கவிஞனைப் பற்றி பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


ஒரு
கவிஞன் உழைக்கும்போது நாடு அமைதியாக இருக்கிறது
கவிஞர்கள்
உழைக்கும் போது மனம் அமைதியாகிறது
கவிஞர்கள்
உழைத்து உண்ணும் போது இன்னும் அழகாக மாறுகிறது
கவிஞன்
உழைப்பைச் செலுத்தும்போது

கவிஞன் அலுப்பில் உறங்கும் போது
மினுமினுக்கிறது
கவிஞன் குறைந்த பட்சம் மண்வெட்டி பிடிக்கும் போது
மலர்கிறது

கவிதை
கவிதைகள்


கவிஞர்கள்
எழுத
உழைக்க வேண்டும்

காதலையும்
காமத்தையும் எழுதும் தறுவாயில்
கொட்டாவி விடும் கவிஞனை
காமமும்
காதலும்
இறுதியில்
கவிதையும் மன்னிக்காது

சமரசமின்றி
கவிஞன்
கவிஞர்கள் உழைக்க வேண்டும்

உழைப்பை உண்ணாத கவிஞன்
எழுதும் போது
கவிதை
மூச்சடைக்கிறது

அதன் கனங்கூடிய இருதயத்தை நோக்கியாவது கவிஞர்கள் தங்களது
கவிதையை
எழுதும்
கரத்தால் குத்தி தெளிய வைக்கவேண்டும்

கவிதைக்கும்
வார்த்தைக்கும்
சொல்லுக்கும்
உரிமை கோருபவனை
கவிஞன்
கவிஞர்கள் என்று அழைக்கக்கூடாது

கவிஞர்கள் ஆழப் புன்னகைக்க
உழைக்கும் போது
வியர்வை சிதறும்போது
மக்கள் கவிதை எழுதத்தொடங்குவர்

மக்களின்
கவிதையில்
கவிதையோ
கவிஞனோ
கவிஞர்களோ ஒருபோதும் இருக்கப்போவதில்லை

வெறுமனே ஒரு கவிதை
அவ்வளவே

கவிஞன் பிச்சையெடுக்கும் போது
அவன்
கனத்த தும்பிக்கை தூக்கி
ஒற்றை ரூபாயை மிகுந்த வலிவுடன்
இரக்கும் யானை பற்றி விசனங்கொள்ளக்கூடாது
சர்க்கஸ் கரடிகளை பற்றிச் சிந்திக்கக்கூடாது

முக்கியமாய் கவிஞன்
கவிஞர்கள்
அரசியல் பேசும்போது கவனமாயிருக்க வேண்டும்

கவிதையறியாது
கவிஞன்
தெருச்சண்டைகளை
புகார்களை
ஏசல்களை
இயலாமைகளை
வன்மத்தை
பாராளுமன்றத்திற்கோ
சட்டமன்றத்திற்கோ
நாடாளும் மன்றத்திற்கோ
மேலவை
கீழவைக்கோ
இன்னபிற மக்கள் இல்லாத சபைகளுக்கோ
கவிதையை
கைபிடித்து தரதரவென இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்ததாகிவிடும்

எதுகைகளை
மோனைகளை
கொலை செய்வதைப் போல்
கவிஞன்
கவிஞர்கள் எழுத வேண்டும்

ஒரு கவிதையை எழுத கவிஞன் ஓய்வெடுக்க வேண்டி இருந்தால்
அவன்
எவருக்கும்
சொல்லாமல்
தன் இறப்பை தன் காதில்
தனதிரு நாவை மடித்துஅழுத்தமாக ஓதவேண்டும்

பறந்து கொண்டிருக்கும் பறவை
சட்டென மடிந்து
செங்குத்தாய்
நிலம் வீழ்வதைப் போல.....

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...