Tuesday, November 10, 2009

காமத்துப்பால்


1
யசோதரையை
சித்தார்த்தன் புணர்ந்தான்
புத்தனை
புணர்கிறது தனிமை
சம்போ மஹாதேவா....

தவமெனப்படுவது
காமத்தின் ஓய்வு
ஓய்வெனப்படுவது
புணர்ந்ததின் களைப்பு.


2
புணர மறுத்து
இமை மயிர்கள் தரை புரள
தவஞ்செய்த
புத்தனின் கைகளில் வந்து வீழ்ந்தது
முற்றிப்பழுத்த யோனிப்பழம்.


3
குறிமடக்கி
அமரும் புத்தனின் விழிகளில் படர்கிறது
யோனியின் ரேகை.

4
எருமையைப் புணரும்
காமத்தின் முகத்தில்
எமனின் விழிகள்.

5
சங்கை அறுக்கும்
காமத்தின் விரல்களில்
தசைகளைத் தானமிட்டேன்
தானத்தை மறுத்த காமம்
பிடுங்கியது தன்னை
என்னிடமிருந்து.




6
நிதானத்தின் விழிகளில் படரும்
காமத்தை
நிதானமாய்ப் பார்க்கும்
நிதானத்தின் குறியில்
நிதானமின்றி வழியும் காமம்
நிதானத்தின்
காதில் கூவியது

நிதானம்
நிதானம்...


7
இரவுக்குள் திமிறும் குறியை
பகலில் கொலை செய்கிறேன்
இரவில் ஆகிறது
உடலே குறியாய்.

8
தவமெனப்படுவது
யோனியின் வெறுமை
அவ்வெறுமையைப் புணரும்
சூன்யக்குறி.

9
இமைக்குள் ஊறும்
நீர்ன் கரங்கள் இசைக்கிறது சோகத்தை
படகோட்டி நதியை கரையேற்றுகிறான்
பெண்ணுடல் சாந்தமுறுகிறது
ஒரு முனிவன் காடேகுகிறான்.

தனிமை வலிய புண்களுடன் குகைக்குத் திரும்புகிறது
நக்கியுண்கிறது வலியின் ருசியை
விழிகளின் நாவால்.

10
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர் வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை

தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்துவீழ்கிறது
அண்டத்தின் இடியொலி

கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்

சம்போ மஹாதேவா...
சம்போகம்.



11
குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கையில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு.

12
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்ல கால்வைக்கிறது
வரைபடத்தின் தலை வரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்.

13

கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்.

14
தனிமையை
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்.

15
கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்.



16
கட்டளையை
யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்...

எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது.


17
தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு

பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு

சலித்த காமத்தில்
இறப்பின் ருசி.

18
தின்னத்தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெறிகிறது
எரிப்பின் மிச்சத்தில்
இறுதியாய் வீசப்படும்
என்
முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை நீர்க்கரத்தால் வாரிச் சுருட்டும்
விதி வலியது கண்ணே.


19
அம்மா...
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி

பசி மிகுந்த வெறியோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி

அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசிமிகுந்த குருதிச்சூட்டொடு

முன்னொரு காலத்தில்
கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்
அம்மா......

20
கண்ணீராய்
வழியும் காமத்தை
மிருகமாய்
நக்கிக்குடிக்கிறேன்
குருதிவாசம் சதையெங்கும் பரவுகிறது

சகி
உன் மௌனத்தின் தனத்திலிருந்து
ஓர்நாள்
என் கவிதையை உறிஞ்சி எடுப்பேன்.




21

இப்
பூமியைக் கவ்விப்பிடிக்கும்
என் குருதியில் தெறிக்கிறது
உன் குருதி வாசம்

கண்ணிமைக்கும் சூரியனின்
உடலெங்கும் பற்கடிகள்

நிகழ்கிறது
ஒரு
தற்கொலை.



22உனதொரு
நிதம்ப மலரில்
எனதிரு வண்டின் கண்கள்.

குற்றத்தின் தனிமையும்….. தீராத்துயர் நிரம்பிய வரிகளும்…



ஆதியில் வார்த்தை இருந்தது.
அது நீதி, குற்றம் எனும் இரண்டு சொல்லாயிருந்தது நாம் அதை வாக்கியமாக்கினோம். வாக்கியத்தில் நடுவே நாம் திணித்த விருப்பங்கள் நம்மை வேவு பார்க்கத்தொடங்கின. குற்றம் தன்னிடத்தை தானே நிரப்பிக்கொண்டது. மனிதர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. அச்சம் தன் சொற்களை மனித உடல்களில் பயிரிடுகிறது. அறுவடைக்குத் தயாராகும் பலிகளுக்கு கருத்துகள் தேவைப்படுகிறது. வீரம், ஈகை, காதல். அவற்றினடிப்படையில் நீதி. நீதியில் விரியும் நிழலாய் உண்மை. (பாழாய்ப் போக)

அன்பின் கால்கள் தயக்கம் கொண்டபடியே அலைகிறது.
நீங்கள் நேசிக்கும் ஒவ்வொருவரும் இன்னொருவரை நேசித்து வருவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நிற்க…………அது உங்களை எப்படியெல்லாம் காயப்படுத்தும் ஒப்பிட்டுக்கொள்ளத்தோணும் என்பதை நானறிவேன். என் அன்பு என்னை காயப்படுத்தும் பொழுது அது உங்களை விட்டுவைக்குமா என்ன….மனம் திறந்து கூறுங்கள் நீங்கள் இதுவரை அதிக நேசத்துடன் நேசித்த நபர் இன்னொரு நபரில் தன் நேசத்தைக்கொட்டுகையில் அதையும் நேசம் என்றே கொள்வீர்களா.. அப்படி ஏற்றுக்கொள்வீர்கள் எனில் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன் உங்கள் அன்பு பிளவுபடாதது, சார்பற்றது, மாறாய் அது என் நண்பர் செய்த தவறு என நீங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் நான் அயோக்கியத்தனத்தைத்தான் பரிசளிக்கமுடியும்.

குற்றவாளி எனும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருப்பதன் அடிச்சொற்கள் உங்களுக்கான நீதிபதி உடைகளை தன் கைவலிக்க நெய்து கொண்டிருக்கிறதன்றி வேறெதுவும் கிடையாது நண்பர்களே. குற்றவாளிக்கென எந்த உரிமையும் இல்லை குற்றத்தை நீங்கள் விரும்பிய வடிவில் அவன் ஒப்புக்கொள்வதைத்தவிர, அவன் தனிமை அவனுக்கானது என்பதில் அவன் பிடிவாதமாக இருக்கிறான். அவன் செயல்கள் மூலமாகத்தன் அறியப்படுகிறான். அச்செயல்கள் குற்றத்தன்மையுடையவை என உங்கள் அறிவு எள்ளிநகையாடக்கூடும். அன்பர்களே நீங்கள் நீதிமானாயிருங்கள். உங்கள் தனிமை நீதிக்குணம் கொண்டதாக இருக்கட்டும். நீதிக்கு பல முகங்கள் உண்டென்பதை அறிந்தவனே குற்றம் செய்கிறான். நிற்க. அழும் மனிதன் காரணத்தைச் சொல்லிவிடத் துடிப்பான் அல்லது உங்களுக்கு காரணம் தேவைப்படும். மாறாய் அழுவதில் உள்ள அனுபவத்தை ஒருபோதும் நாம் யாரும் வாங்கிவிட முடியாது. பிடிவாதம் மிக்க ஒருவன் தான் விரும்பிய வகையில் தன் பிடிவாதத்தை பிரியமானவனிடம் விட்டுச் செல்வான். தலையில் கல்லைத் தூக்கிப்போடுவத்தைத் தவிர வேறு வழியில்லை. துரதிருஷ்டம்….. என்னிடம் சீரழிக்கப்பட்ட வரிகளே உள்ளன. என் முத்தம் காட்டிக்கொடுக்கும் கருவியாக நான் சித்தரித்து வைத்திருக்கிறேன். மன்னித்துவிடுங்கள் நான் யூதாஸ் ஆனாலும் ஆவேனே தவிர உங்களை தேவகுமாரானாக்கமாட்டேன். என் பிடிவாதம் மட்டுமே என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது. பிடிவாதத்திற்கு அடிப்படைத்தேவை திமிரன்றி வேறென்ன.

என் வன்மம் எனை மட்டுமே பழிதீர்க்கும் வகையில் அதை கையாண்டு வந்திருக்கிறேன். அதற்கு என் நிழலும் தேவையில்லை.

பரபாஸின் கைகளும் யூதாஸின் உதடுகளும் நெடுங்காலத்திற்கு நினைவில் வாழும். அவை சூன்யத்தையே இடறச்செய்யும் வல்லமை கொண்டது.

காத்திருக்கும் மொழியின் தனிமையில் பட்டாம்பூச்சி சிறுநீர் கழிக்கிறது
பெயர் தெரியா கடவுள் புன்னகைக்கிறான்
அந்தப்புரங்கள் குற்றங்களை உண்டு கொளுத்து புரண்டு படுக்கிறது
ஒற்றையடிப்பாதையில் எதிர்படும் எதிரியென்றைழைக்கபடுபவனுக்ககாக என்னுடலைத் திறக்கிறேன்
நதி தன்னை திசை மாற்றுகிறது
காரணமற்ற துக்கம் உங்களைத் தீண்டுகையில் நீங்கள் நீங்களாக சபிக்கப்படுகிறீர்கள்
பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
மூடிய இமைகள் திறக்கும் பொழுது உலகம் அழுதுவடிகிறது
இதுவரை அறியப்பட்ட அத்தனைக்கும் நீங்கள் பெயர் வைத்திருக்கிறீர்கள்
என்னால் அறியமுடியவில்லை

அது
காத்திருக்கிறது
வெந்து
ஊறி
நனைந்து
அதன் உதடுகள் பெருங்கடலாய் விரிய
சதையற்ற
வெதுவெதுப்பான
துரோகத்தின் அடிநாதமான
விரும்பியவர்களுக்கு வேண்டிய தற்கொலையைச் சமைத்துக் கொடுப்பதற்கான
எதிரிகளின் விரல்களை காதலியை புணரும் தறுவாயில் அவள் விரல்களைப்போல் பிடித்துக்கொள்ள
புத்தனை பின்புறம் இருந்து உதைத்துத்தள்ள
(அமைதி
இது அன்பைப்பற்றியதல்ல)

உங்களை மனம் போன போக்கில் போகவிட
அல்லது
அம்மனம் போன போக்கில் போகும் மனதைக் கொலைசெய்ய

காத்திருக்கிறது.
உங்கள் கருத்துக்களாலான அன்பின் மெழுகுப்பூச்சு.

Friday, November 6, 2009

பெருங்கனவின் ஒற்றை ஓவியத்தில் எனக்கு சிறகுகள் இல்லை...


நான் உங்களிடம் அனுமதி கோருகிறேன். அன்பை யாசிக்கிறேன். உங்களை நான் நன்கு காதலிப்பேன். நம்பிக்கையின் உச்சத்தில் நான் உங்களை தென்றல் ஆசிர்வதிக்கும் வசந்தத்தின் உச்சியில் நிறுத்தி உங்கள் கண்களை உங்கள் அனுமதியோடு மூடி இமையில் என் துரோகம் பாயாத உதடுகளால் முத்தமிடுவேன். அன்பர்களே...இப்படியெல்லாம் நான் உங்களை ஏமாற்றுவேன். என் நடிப்பின் அத்தனை ஊற்றுக்கண்களையும் திறப்பேன்.உங்களை முத்தமிடுவேன் என்று சொன்னேனில்லையா நீங்கள் மெய்மறந்து கண்களை மூடி ஆமாம் என்று தலையசித்தீர்கள் அல்லவா அத்தலையில் கல்லைத் தூக்கிப் போடுவேன். நிற்க. உங்கள் நன்மைகளின் மீது சாத்தானின் பரிசுத்தத்தை ஏவுவேன். உங்கள் காதலின் அன்பை பாம்புகளுக்கு தாரை வார்ப்பேன். அவை மண்ணோடு மண்ணாக ஊறும். உங்களை காதலிக்கிறேன் எனச் சொல்லி உங்களை ஏமாற்றுவதில் நான் அடையும் ஆனந்ததத்திற்கு அளவே இல்லை. உங்கள் சகிப்புத்தன்மைக்குள் இருக்கும் கொடிய மிருகத்திற்கு என் உதட்டால் அளவிலா முத்தமிடுவேன்.நிற்க. என் ஆகச்சிறந்த தற்கொலைக்கு இப்பொழுது உங்களை பார்வையாளராக உங்கள் வேரோடிய பாதங்களின் மீது என் சிரசை இறக்குகிறேன். நண்பர்களே....நிகழ்கிறது.

Tuesday, October 20, 2009

இதை எழுதும் கணத்தில் என் மனநிலை.....




நாசமாய் போவது எப்படியென கற்றுத்தந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்பு. எப்படியோ வெற்றிகரமாய் அறிவு என்னை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எனதறிவின் மீதான வன்முறைக்கு நானே முத்தம் கொடுக்க முயல்கிறேன். மூர்க்கம் முகத்தைக் கிழிக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு நான் கூறிக்கொள்வதெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொள்ள நம்பிக்கையூட்டப்படாத துக்கம் இருக்கிறது. எவருக்கும் தரக்கூடதென அதை நிழலிறுகப் பற்றுகிறேன். பரிசுப்பொருளை தானமாய் வழங்கமுடியாதென்பதையும் நானறிவேன். என்னை நானே அயோக்கியன் என்றைப்பதில் உள்ள அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வேன் எனத்தெரியவில்லை. எல்லோரின் பாதங்களிலும் விழுந்து நெக்குறுக வணங்கத்தோன்றுகிறது. வணங்கிமுடித்தபின் அப்படியே அவர்களின் கழுத்தை நெரித்து கொலை செய்யவும் தோன்றுகிறது. சிறுமூளையில் விழும் இடியையொத்த சொற்களை தாய் மொழியில் மொழிபெயர்த்தால் என்னை நானே பிளப்பேன். எவரையும் நம்பி மோசம் போகமுடியாத அளவுக்கு அறிவு கொழுப்பெடுத்துத் திரிகிறது. பிதற்றலைக்கூட உதடு துரடிக்க சொல்லமுடியாதவனாகி விட்டேன். தூக்கத்தில் வரும் கனவுகளோ பெரும்பாய்ச்சல் கொண்ட வாட்கள் உரசுவதைப்போல் இருக்கிறது. நிற்க. நான் எல்லோரையும் அவர்களுக்கு பிடித்த விதத்தில் காதலிக்கிறேன்.நண்பர்களே சிறுவ, சிறுமியர்களே...உங்களுக்கு என் அன்பு. என் செல்ல முத்தம்...ஜுஜ்ஜு....புஜ்ஜு....உம்மா....

Monday, October 19, 2009

நிற்கும் பறவை





நறுமணம் சூழும் உனது முத்தங்களின் மீது மூளும் தீயென துரோகத்தை ஊதுவேன்
காயங்களில் ஆரஞ்சுவண்ண ஓவியம் வரைவேன்
தானமிடும் உன் கைகளின் முன் என் வன்மத்தை வரவழைப்பேன்
கண்ணே உனக்கு என் அன்பு

எனது பீதிக்கு உனது பெயர்
பீறிட்டு இமை கருக வெடிக்கும் உன் புன்னகைக்கு என் வாதை
என் விரல்களைத் தறித்து உன் முன் பணிவாய் ஏந்துவேன்
என்
காதல் உனக்கு

நிச்சயமற்ற கருணையின் முன் நான் நின்றபடி தவிக்கையில்
என்
அன்பே
தாழைத் திறக்காதே
உன் பொருட்டு என்னுடலை
நான் நரகத்திற்கு ஈந்துள்ளேன் கண்மணி

கண்மணி
சிந்தும் என் தசையில் உன பெயரைப் பொறித்துக்கொள்
சத்தமிடு
கூச்சல்
மெளனம்
அமைதி
நான் நிற்கும் பறவை
காற்று துருப்பிடித்திருக்கிறது
என்
சாவு உனக்கு.

ஆசைப்படுவது எப்படி….






7 . நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்திரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
8 . என் சுதந்திரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய்க் கர்ச்சிக்கிறது. ஆதலால் அதை வெறுக்கிறேன்.

எரேமியா அதிகாரம் 12/7

உங்களிடம் பொறுமையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
நேற்று ஒரு கொலைகாரனைச் சந்தித்தேன். நெருக்கமாக முத்தம் கொடுப்பது போல் மிகமிக அருகாமையில் வந்து கொலைகாரனென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். உன் மூச்சுக்காற்றில் மணப்பதென்ன நண்பனே என வாஞ்சையுடன் கேட்டேன். புன்னகையாய் உதடுகள் விரிய என் கண்களைப் பார்த்தவன் எதையும் சொல்லாமல் புன்னகையோடு முடித்துக்கொண்டான். அவனது தோளில் உராய்ந்த குருதியின் இறுகிய நிறத்தை ஆட்காட்டி விரலால் சுரண்டியபடி இருந்தவனைப் பார்த்து உனக்காக நான் இரக்கப்படுகிறேன் என்றேன். மெதுவாய் கன்னங்களை முழங்காலில் அழுத்தியபடி பார்வையைத் தழைத்து கொலையுண்டவன் தன் குருதி காற்றில் இறுகும்முன் இதைத்தான் சொன்னான் என கலங்கிய தன் விழிகளைத் துடைத்தபடி சொன்னான்.

நான் அமைதி காத்தேன். ஏதாவது பேசு என்றான். ஒரு கொலை செய்தவனிடம் என்னால் பேசமுடியாதென்றேன். மெதுவாய் மறுபடியும் புன்னகை. வன்மத்தோடு எழுந்து கைகளை உதறி உன் புன்னகைதான் கொலைக்கருவியென்றேன். ஆமாம் என்று சொல்வேன் என எதிர்பார்க்காதே என்றான். நான் வன்மத்தை ஒலியாய் எறிந்தேன். தோல்வியுற்றாய் முட்டாளே என்றான் இறுதியாய் வேறுவழியின்றி அவன் எனக்கீந்த புன்னகையோடு அவனைக் கொலை செய்தேன். உனக்காக இரக்கப்படுகிறேன் என்றான். நான் ஒரு கொலைகாரனானேன். காத்திருக்கிறேன்.

தகிக்கும் மரணம்




நிச்சயம் சொல்வேன்
நான்
தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கிறேன்
மணக்கும் என் பொசுங்கிய தசையிலிருந்து வாழ்த்துக்களுடன் ஒரு முத்தம் உனக்கு
என்னை நிதானமாய் புகை பொங்கும் கண்களுடன் நெருங்குகிறாய்
உனது மயக்கத்திலிருந்து கருணையை தடவிப்பார்க்கிறேன்
உனது கொலுசின் அடியிலிருந்து
மரணம் காது கூசும் இன்னிசையுடன் வெளிவருகிறது
சகி
காத்திருக்கும் தருணங்களில் நான் நடனமாடிக்கொண்டிருக்கிறேன்
நடனத்தில் முடிவில் உதடுகள் சிந்த
உன் முத்தத்தை
பொறுக்கிக்கொண்டிருப்பேன்
கடவுளைக் கொலை செய்யவும்
எனை முத்தமிடவும் ஒரே ஆயுதம் உனக்கு
நிழலை மந்திரமாய் மாற்றி உன் வீதியில் ஊதுவேன்
நாய்கள் காது விடைக்க என் காதலை உன் வீட்டு முற்றத்தில் கத்தி அறிவிக்கும்
நான் அறிவேன்
உன் கனவுகள் பெரும் பாறைகளாய் அவற்றின் தலையில் தன் வருகையை அறிவிக்கும்
என் அன்பு

ஆமென்

நிச்சயம் சொல்வேன்