Saturday, March 31, 2012

வணக்கம் நேசமித்ரன்.....பகுதி மூன்று....




 

The page you requested was not found




நீங்கள் கேட்ட இந்தப் பக்கம் இல்லை. ஆம்....நேசமித்ரன் முகப்புத்தகத்தில் என்னைத் தடை செய்திருக்கிறீர்கள்

என் காத்திருப்புகள் எப்பொழுதும் தோற்றதில்லை. பொய்களை பரிதாபமாகச் சொன்னாலும் பொய்கள் தான் நேசமித்ரன். முதலில் என்னை உங்கள் பக்கத்தில் தடை செய்ததே உங்களின் நேர்மையின் அகத்தை, உரையாட விரும்பும் அழகை மிக நேர்த்தியாக சுட்டியிருக்கிறது.

நேசமித்ரன்...பொய்களை பொய்கள் என்றே அறிவிக்க முடியும். நீங்கள் என் கவிதைகள் குறித்த புகழுரைகளை முன்வைப்பது காரிய சித்திக்காகவே என்று எனக்குத் தெரியும். சுயமாய் நான் எழுதுகிறேனா இல்லையா என்பது என் வாசகர்களுக்கும், வெளியிடும் பதிப்பாளருக்கும் தெரியும். ஆனால் உங்கள் எழுத்து கோணங்கியின் அப்பட்டக் கழிவுக் குப்பை என்பதை மறுபடியும் நிறுவுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையில் உங்களது இலக்கிய நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். உங்களிடம் பொய் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் எதைவும் எனக்கில்லை. ஆனால் பொய்களை வலிந்து கூறி இதுவரை எதையும் சுயமாய் செய்யாது, மதுத் தோழமையினாலும், தோளில் கைபோடச் சொல்லி நீங்கள் எடுத்த புகைப்படங்களும் உங்கள் அவஸ்தையை எப்போதும் பறை சாற்றிக் கொண்டிருக்கும். இதற்கு மேலும் விவாதத்தை பொதுவில் கூட வைத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னேன். நேரில் பேசலாம் என்றும் சொன்னேன். ஆனால் தப்பித்து ஓடும் உங்கள் எளிய மனத்தைப் புரிந்து கொள்கிறேன். உங்களுக்கு என்னிடம் பேசுவதற்கு ஒரு சொல்லும் இல்லை என்பது எனக்குத் தெரியும்...ஆம் உண்மையில் ஒரு சொல்லும் சொந்தமாக இல்லை.

உங்கள் பழக்கங்கள் ஒரு இலக்கியவாதியாய் இல்லாது நடிகர்களிடம் போட்டோ எடுத்து மாட்டும் ஒரு ரசிக மனோபாவமாகவே இருக்கிறது. அறைகள் முழுக்க புகைப்படங்கள் தொங்கினாலும் நீங்கள் உங்களை படைப்பாளி என்று சொல்ல முடியாது. மேலும் உங்கள் வார்த்தைகளால் என்னைப் புகழ்ந்த அடையாளங்களுக்கு சாட்சியும் இருக்கிறது. என்னிடம் உரையாட தெம்பு வேணும் என நீங்கள் விதந்தோதிய நண்பர்கள் இருக்கிறார்கள். நீங்களே என்னைப் புகழ்ந்தீர்கள். நீங்களே குற்றம் சாட்டுகிறீர்கள். புகழ்ந்ததற்காக தொட்டில் கட்டிக் கொஞ்சவும் இல்லை. இகழ்ந்ததற்காக வருந்தவும் இல்லை. எல்லாம் வழமை போல்தான். ஒரு இலக்கியக் கூட்டத்தில் உங்கள் படைப்பை கோணங்கியின் பின்னொட்டு என்று சொன்னால் அங்கேயே மறுத்திருக்க வேண்டும். வாயை மூடிக்கொண்டு அமர்ந்தது எதனால் என்று தெரியவில்லை. மேலும் புதிதாக எழுதச் சொன்னால் வலைசைக்கு பீப்பி ஊத, எழுதிய கட்டுரையையே அங்கும் வாசித்தீர்கள். நண்பரே...வலசையை நீங்கள் நடத்துவது சொந்தமாய் நீங்கள் போட்டுக்கொள்ளும் இலக்கிய வேடம்தான். இது யாருக்கும் தெரியாமல் இல்லை.

மேலும் முதல் இதழ் தலையங்கமாக உப்புறையும் சப்தம்( கோணங்கி...கோணங்கி) என்ற பெயரில் ஒன்று வந்திருந்தது. அதில்  சக வாசகராக கார்த்திகைப் பாண்டியன் பெயரையும் இணைத்திருக்கிறீர்கள். கார்த்திக்கைப் பாண்டியணும் கோணங்கியைப் பின் தொடர்கிறாரா என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டாவது இதழில் க்ளெளன் மீன்களின் உடல்மொழி என்ற இடைச்சேர்க்கையில் கார்த்திகைப் பாண்டியனுக்கு எந்தளவுக்கு உடன்பாடு என எனக்குத் தெரியவில்லை. அதில் ஓரளவுக்கு ஜிக்ஜாக் குறைந்திருந்தது. நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு தகவலாகவே இதை  வைக்கிறேன்.

என்னை முகப்புத்தகத்தின் வாயிலாக வெட்டி நீக்கம் செய்ததை அறிந்தேன். பூனை தன் பறவை ங்குலாங்க காண் உடலை நெத்திலி செதில்களாக மாயவுருச் செய்து   கண்களை மூடிக்கொண்டு க்ளெளன்மீன்களின் செதில்களுக்குள் ஒளிந்து பரட்டைத் தலை பிசாசுருவ மாயத்தில் உலகம் இருண்டு விடுமா என்ன. ( இதை பழங்குடி தொன்ம மனமாக பூனைத் தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் யிருண்டு போகுமா வென தமிழக பாட்டிகள் தங்கள் தொங்கு முலையாட சொல்வதாக இங்கு ஒரு நாடோடிக் கதை உண்டு.)
கதைப் பாத்திரத்தில் பரவும் எண்ணற்ற விதைகளை ஆதிக் கிழவன் கோமாளியின் சிரிப்போடு வீசியெறிகிறான்...

சொல் விளையும்
நிலமெல்லாம் கதை விளையும்...
கதை விளையும் பூமியெல்லாம்
மழை பொழியும்...
மழை குடித்து மழை குடித்து
விளையும்
தானியக் கதிர்களறுத்து
இட்ட அடியில் ஆதித் தாய்
குலவையிட
போகிறான் சூதன்
சூர்யப் பூச்சூடி....
சூதனாய் ஒரு
கதை சொல்லியாய்...பித்தாய்...
தமிழ் குடித்து
தள்ளாடும் நடையோடு
மூவிறகால் பறக்கும்
கானக வண்டாய்
வசுமித்ர......

நண்பரே பதட்டம் வேண்டாம்... எனது பொய்களை நீங்கள் தாராளாமக நிரூபிக்கலாம். என்னை நீக்கம் செய்வதன் மூலம் அதை இழந்திருக்கிறீர்கள். இப்பொழுதும் இப்பதிலை நேரடியாகவே உங்கள்  முன் வைக்கிறேன். ஆனால் நீங்கள் எனைப் பற்றி எழுதுவது எனக்குத் தெரிவிக்கவும்.

வழக்கம் போல் காத்திருக்கிறேன்
நீங்கள் சந்தித்த அதே அது வசுமித்ர வாக.....

குறிப்பு;  உங்களது படைப்புகளில் வரும் லத்தின் அமெரிக்க பெயர்கள். அறிவியல் பெயர்களே நீங்கள் அவற்றைப் படிக்காததை உறுதி செய்கிறது. சம்பந்தப்பட்ட அவர்களை நீங்கள் படித்திருக்கும் பட்சத்தில். குறைந்த பட்சம் 5ம் வகுப்புக்கு நீங்கள் அறிவியல் பாடம் எடுக்கலாம். இலக்கியம் கற்றால் சொந்தமாக கவிதை எழுதலாம். ஆனால் அனைத்து பெயர்களையும் வெறும் பெயர்களாகவே இட்டு இங்கு கோணங்கியை காப்பியடிப்பதைச் சகிக்க முடியவில்லை. பூக்கோவை முன் வைப்பவர், நீட்ஷேவைப் படிப்பவர் கோணங்கியை அப்பட்டமாக அக்மார்க் காப்பி அடிப்பது...சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தைத் தேடித் தரும் என்று நினைத்துப் பாருங்கள். ஆவிகள் சூழ் காடு இது....யோசியுங்கள்.

நேசமித்ரன்...கூட்டத்தில் எனை அறிவித்தது இவ்வாறே...நான் கவிஞனோ கதையாளனோ இல்லை ஆனால் வாசகன். கோணங்கி பற்றி அங்கு நடந்த வரிகளில் என் தரப்பை தெளிவாகவே வைத்தேன். உங்கள் எழுத்துக்கள் கோணங்கியின் கழிவுக் குப்பைதான். தூக்கத்தில் அடித்து உசுப்பிக் கேட்டாலும் இதைத்தான் ஒரு வாசகனாகச் சொல்வேன்.

ஆனால் நேசமித்திரன் எழுத்துக்களுக்காக உங்கள் அன்பை எப்பொழுதும் உதாசினம் செய்யமாட்டேன். உங்கள் சேவை தமிழுக்குத் தேவை என்பதை நான் அறிவேன். நிருபித்தலைதலில் அவஸ்தை பொருட்டு வேறு இடங்களுக்குப் போகாமல் இலக்கியக் கூட்டங்களைத் தேர்வு  செய்து வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. ஆனால் நீங்கள் வைக்கும் புகழாரங்கள், சக எழுத்தாளனை நோக்கிய கும்பிடல்களில் எனக்கு உடன்பாடில்லை.

ஒருவன் பீடத்தைக் கட்டியெழுப்பி அதில்  அமர்ந்தால் கூட அதிலிருக்கும் உழைப்பைக் கண்டு மகிழ்வேன். ஆனால் பீடங்களை இன்னொருவருக்குப் போட்டுக் கொடுத்து துண்டைத் தோளில் இடுக்கி ஒரு சிஷ்யனாய்...இன்னும் முதுகு வளைந்து அடிமையாக நிற்க நினைப்பது எனக்கு ஆபாசம் கூடிய நினைவுகளைத் தருகிறது. இதில் மாற்றமில்லை. என் தொகுதிகளை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் என் கவிதைகளை விதந்தோதிய வார்த்தைகளையும் பதிவு செய்திருக்கிறேன். பிரேம் ரமேஷையும் படியுங்கள். ஊன்றிப் படித்து என்னை ஒப்பிடுங்கள். உங்கள் வெற்றிக்காக நான் காத்திருக்கிறேன்.

அப்படி நீங்கள் வெற்றியடைந்தால் குறைந்த பட்சம் அதையாவது சுயமொழியில் எழுதுங்கள் தயவு செய்து கோணங்கியை....அவர் பாவம்...அவர் எனக்குத் தெரிந்து எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். இன்னும்.....எவ்வளவோ...

எனது காத்திருப்புகளை நான் வீணாக்குவதில்லை. உங்களது எழுத்துக்களைப் படித்து நான் வைக்கும் விமர்சனங்கள் நேசமித்ரனைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருந்தால் நான் பொறுப்பேற்க இயலாது. அது நேரடியாகச் சுட்டுவது. நேசமித்ரனின் இலக்கிய காப்பி மனத்தை மட்டுமே. இதை ஒரு தொழிலாகச் செய்யாதீர்கள்.

சிறுகுறிப்பு.

பௌத்தத்தில் ஒரு பால் உறவு பற்றியெல்லாம் பேசினீர்கள். யார் சொன்னது என்றேன் உடனே வேகங்கூடிய அழுத்தத்தோடு கோணங்கி என்றீர்கள். பாவம் கோணங்கிக்கும் உங்களுக்கும் எப்படி விவாதம் நடக்குமென்று நினைத்துப் பார்த்தேன். ஒப்பனை கலைந்த ஒரு டூப்பிடமா கோணங்கி உரையாடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை....இன்னும் ஒன்று நீங்கள் கேட்ட கட்டுரையை வலசைக்கு அனுப்ப இயலாது. அது எப்பொழுதும் அப்படித்தான்...எனக்கு வலசை மேல் நம்பிக்கை உண்டு...ஆனால் அதை நீங்கள் நிரூபித்துக்கொள்ளும் அடையாள அட்டையாய் காண எனக்கு விருப்பமில்லை.

முகப்புத்தகத்தில் என்னை இடை நீக்கம் செய்தாலும் சம்பந்தப்பட்ட விசயங்கள் குறித்து நீங்கள் எழுதிய வெற்று பதில்களைக் கூட பதிவு செய்திருக்கிறேன். ஏனெனில் உரையாடலில் நான் இதைச் சொல்லவேயில்லை என்ற குரல்கள் ஏராளம் என் செவிகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நீங்களே புகழ்ந்து விட்டு நீங்களே மறுப்பீர்கள் என்பதையும் ஆதாரத்துடம் விலக்கியிருக்கிறேன். இக்கடிதத்தை நீங்கள் நேரடியாக முகப்புத்தகத்தில் படிக்க முடியாது என்பதற்காக இதை ஆதிரன் பக்கத்திலும் இணைக்கிறேன்....


வழக்கம் போல் அன்பு கூடும் காத்திருப்போடு
வசுமித்ர


(புகைப் படத்தில் தலையில் கவிழ்த்துப் போட்ட புத்தகத்தோடு காட்சியளிப்பது....காப்ரியல் கார்சியா மார்க்குவெஸ்...கப்ரியேல் கார்ஸியோ மார்குவெஸ்...கப்பிரியல் கார்சீயா மார்க்கு வெஷ்...காப்பிரியேல் கார்ஷியா மார்க்குவெஸு...ஜேப்ரியல்.....இன்னும்.......)

வணக்கம் நேசமித்ரன்...பகுதி 2.



நன்றி

ஒரு போதும் உங்களது எழுத்தை புதிய பதிவு புதிய எழுத்து முறை என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்வதை பொய் என்றே கூறுகிறேன். ஏனெனில் எனக்கு ஞாபகம் என்பது என்றும் மாறாத நோய். முதலில் நீங்கள் பேசியபொழுது உங்களை யாரென்றே தெரியாது என்று சொன்னேன். பார்த்த ஞாபகமும் இல்லை என்று சொன்னேன் இது என் நினைவில் இருக்கிறது. பிறகு ரமேஷ் வைத்யாவின் வீட்டில் நீங்கள் என்னைச் சந்தித்ததாகவும் நான் உங்கள் கவிதைகளை வெறும் ரெட்டாரிக் என்று ஒதுக்கியதாகவும், ( இது ஒரு 8 வருடம் இருக்கும் ) அதன் பின் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு தாங்கள் படிக்கத் தொடங்கியதாகவும் கூறினீர்கள்.


உங்கள் ஞாபகப்பிரதியை மெச்சுகிறேன். மேலும் அடுத்த கட்ட விவாதமாக தேனியில் நான் இருக்கையில் முகப் புத்தக வழியாக தொடர்புக்கு வந்தீர்கள் கவிதைப் புத்தகம் போட இருக்கிறேன் என்றீர்கள் என் முதல் கேள்வி எந்தப் பதிப்பகம் எனக் கேட்டேன் நீங்கள் உயிர்மை என்றீர்கள் என் நம்பிக்கையின்மையை நான் சொன்னதும், உடனே கவிஞர் சுகுமாரன் சொன்னார் என்றீர்கள். இருக்காதே என்று சொன்னேன். இல்லை, அவர்தான் சொன்னார் என்றீர்கள். சுகுமாரனுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கம் நானறியேன். உரையாடல் முடிந்தது.

புத்தகத் திருவிழாவில் வலசையைக் கையில் கொடுத்தபோது நிச்சயம் நல்ல உழைப்பென்றே சொன்னேன். ஆனால் அதை உங்கள் படைப்புக்களுக்கான விமர்சனமாக எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பது இப்பொழுது புரிகிறது. அதிலும் தலையங்கம் சார்ந்த வலசையைக் கையில் கொடுத்ததும் அபார உழைப்பென்று சொன்னேன்., ஆனால் வழக்கம் போல் கோணங்கியின் தலையங்கம் எனக்கு புன்னகையை வரவழைத்தது. நீங்கள் என் கையில் வலசையைக் கொடுக்கும் முன் காசு எடுத்தேன்...நீங்கள் அது கொற்றவைக்கான பிரதி என்றீர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன். அதற்கும் மேலாக என்னைத் தேடி வலசையை நீங்கள் கொடுக்க காரணம் அதற்கு முன் நீங்கள் என்னைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசியதே. அதுவும் முதல் வலசையைப் பற்றி. நான் நேரடியாகச் சொன்னேன் முதலில் நூறு ரூபாய் என்பது கொஞ்சமும் அடிப்படையில்லாத விலை. பின் கதைகள் உட்பட எல்லாவற்றையும் நான் விமர்சிக்க ( அட்டைப் படம் உட்பட எனக்குப் பிடிக்கவில்லை என்பது முதற்கொண்டு) நீங்கள் அதில் வந்திருக்கும் கதைகளை மையமாக வைத்து சொன்னது இந்தக் கதை கோணங்கிக்கு மாற்றாக வைத்தது, அவர் எதிலிருந்து காப்பியடிக்கிறார் என்தை சொல்ல வந்த கதை”, “இந்தக் கவிதை யவனிகாவை முன்வைத்து..... என பல பெயர்களைச் சொன்னீர்கள்... நான் அப்பொழுது சொன்ன வாக்கியம் நேசமித்ரன் இதுதான் உண்மையென்றால் அதை இதழில் பதிந்திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றதும் இல்லண்ணே...ஹி....ஹி......அது.... என்றீர்கள்...அது நட்பு என உணர்ந்தேன், அதைத்தான் முதல் கடிதத்தில் பொறணி எனக் குறிப்பிட்டேன். நிற்க......

விடியல் பதிப்பகத்தில் வலசையை விற்பனைக்கு வைக்கச் சொன்னீர்கள் அப்பொழுதே என் முகத்தில் தெரிந்த புன்னகை தங்களுக்கு ஏளனத்தை நினைவூட்டாததில் எனக்கு மகிழ்ச்சியே. (விடியல் பதிப்பகம் நான் சொன்னால் எதையும் கேட்கும் என்ற உங்களது நம்பிக்கை அப்பாவித்தனமானது. அப்பொழுது நான் உணர்ந்தது...விடியல் பதிப்பகம் வெளியிட்ட எந்த புத்தகத்தையும் நீங்கள் படிக்கவில்லையென்று.....) வலசையை அங்கு வைக்க வேண்டுமாம் என்று விடியல் தோழரிடம் சொன்னதும் அந்தத் தோழர் செய்த புன்னகையும் அவ்வாறே இருந்ததை என் ஞாபகச் சிடுக்கில் இருந்து சொல்கிறேன்.

விடியலில் வலசையா நினைக்கவே அச்சமாக இருக்கிறது நேசமித்ரன். கவிதைகளை விட அதை எழுதும் மனிதனின் மனத் தேவைகள் குறித்து ஓரளவுக்கு புரிந்து கொள்கிறவன் நான். கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என என்னிடம் பாடம் கேட்ட தாங்கள் எனக்கே விளக்குவது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நிச்சயம் கோணங்கி பற்றி நீங்கள் என்னிடம் பேசியது பொறணிதான் மறுப்பதற்கில்லை. மது விசயங்களில் எனக்கு நாட்டமில்லை, ஆனால் இன்னொன்று சொல்வேன் நாலைந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து விட்டால் கவிஞர்களின் தோளில் கைபோட்டு திசை பார்த்து புகைப்படமெடுத்துவிட்டால் தானும் கவிஞராகிவிடலாம் என்ற உங்கள் நினைப்பை போற்றுகிறேன். தன்னம்பிக்கை வாழ்க.

தனிமனித வன்முறை என்னளவில் அளவில் வேறுபட்டது. நான் அனுபவித்த துயரத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் அதிகம். ஆனால் வெறும் வார்த்தைகளை வைத்து கும்மியடிக்க எனக்கு ஒரு போதும் தெரியாது. அதைத்தான் வாசகன் மீது ஆசிரியர் செலுத்தும் ஆகச் சிறந்த வன்முறையாக கருதுகிறேன். கோணங்கியை படித்தது போதாதென்று அதன் மோசமான டப்பிங்கையும் ரீமிக்ஸையும் படைப்பு என்று தாங்கள் சொல்வது தரங்கூடிய வன்முறை மட்டுமல்லாது, வாசகருக்கு துரோகத்தையும், வீணாக மரங்கள் அறுபடுவதையும் நிகழ்த்துகிறது.

உங்களிடம் உரையாடும் எனது எண்ணத்தை தாங்கள் சந்தேகிக்க வேண்டாம். வேண்டுமென்றால் பொதுவில் கூட வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் என்னுடன் உரையாடுவதில் உங்களுக்கு இருக்கும் உவப்பு எனக்கில்லாவிட்டாலும் நீங்களும் நானும் நம்பும் இலக்கியத்திற்காக இதைச் செய்யலாம்.

உங்களுக்கு டப்பிங் பாடல்கள் மட்டுமல்ல ரீமிக்ஸ் மற்றும் ரீமேக் செய்யும் உத்தியும் இருக்கிறது. இதைத்தான் கோணங்கியின் அப்பட்ட கழிவுக் குப்பை என்று சொன்னேன். அப்படி இல்லை என்பது கடவுள் இருக்கிறார் என்று நிறுவ முயல்வதற்கு சமம்.

கோணங்கியிடம் மட்டுமல்ல உங்களது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் கோணங்கியைத் தாண்டாமல் வாசிக்க முடியாது. ஒருவேளை அப்படி வாசிப்பவர்கள் கோணங்கியை வாசிக்காமல் இருந்திருந்தால் உங்களுடைய எழுத்து புது எழுத்து முறை எனச் சொல்லலாம். ஆனால் கோணங்கியை வாசிக்கும் போது அவருக்கு அவரே தன் வாழ்நாளில் காணாத சிரிப்பை கூடுதல் சத்தத்துடன் வெளிப்படுத்திவிடும்.

மேலும் நீங்கள் கோணங்கியின் எழுத்துக்களை பின் தொடரக்கூட இல்லை. அதையும் ஏதோ ஹோட்டல் பில்லைப் போல்தான் கையாளுகிறீர்கள். கோணங்கி எழுத்தைப் போல் நீங்கள் எழுதுவதாக நான் சொல்கிறேன் என்று நீங்கள் தட்டையாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு வேளை கோணங்கி போல் நீங்கள் எழுதக் கூடுமென்றால் அதுதான் கோணங்கியின் மகத்தான தோல்வியாக இருக்கக் கூடும். ஒருவர் எழுத்தை ஒருவர் வெற்றிகரமாக கையாள முடியுமெனில் அது கலை அல்ல தொழில் நுட்பம்.

அடர்த்தியான சொற்செட்டுகள் கொண்டு எழுதுவது என்றெல்லாம் நீங்கள் சொல்வது டூ மச் நண்பரே.....

எனக்கு டப்பிங் பாடல்களும் ரீமேக் படங்களும் பிடிக்காது. அதோடு ரீமிக்ஸும்.  சொந்தமாக உழப்பி வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளுவேன். ஏனெனில் அது சொந்த உழப்பல். நீங்கள் அதையும் கோனங்கியை முன் வைத்துதான் செய்வேன் எனும் போது எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.


மறுபடியும் சொல்கிறேன் கோணங்கியை இவ்வளவு மோசமாக யாரும் அவமானப் படுத்த முடியாதென்றே எண்ணுகிறேன்.

இன்னும் ஒன்று சவாலாகவே சொல்கிறேன்
ஒரு வேளை... புத்தகங்கள், அகராதிகள், ஆங்கில, அறிவியல் அகராதிகள், டூரிஸ்டர் கைடுநிகண்டுகள் இல்லாத அறையில் உங்களை அமர்த்தி வைத்தால், அவ்வறையில்  நீங்கள் கவிதையென்று ஒன்று எழுதும் போது...சத்தியமாக நீங்கள் எனைப் பொருட்படுத்தி எழுதும் வெறும் வசைகளாக மட்டுமே இருக்கும்.

உங்கள் விமர்சனம் கூட  எதோ ஒன்றைக் காப்பி செய்வது போல் இருக்கிறது. வணக்கத்துடன்
வசுமித்ர

வணக்கம் நேசமித்ரன்....

 


வணக்கம் நேசமித்திரன்.... 


எனது நேரடியான மடல் இது. 



ஏதோ நான் உங்கள் படைப்புகளை விமர்சித்ததன் வாயிலாக தாங்கள் உற்சாகம் கொண்டு ஒரு கவிதையை எனக்கு விமர்சன சூசகமாய் அனுப்பியிருந்தீர்கள். என் அன்பு உங்களுக்கு. நேசமித்திரன்.... இன்றல்ல அன்றிலிருந்தே சொல்லித்தான் வருகிறேன். உங்களது எழுத்துக்கள் கோணங்கியின் ஒரு மட்டரகமான காப்பி. அழுத்திச் சொன்னால் கோணங்கி கழித்துப் போட்ட ஆகக் கடைசி குப்பை. இதைச் சொல்ல எனக்கு எந்த வருத்தமுமில்லை. இதை தனி மனிதராக உங்களை முன் வைத்துச் சொல்லவில்லை. இது உங்கள் படைப்புகள் குறித்தே. இதுவரை நீங்கள் சுயமாக எழுதி பொருட்படுத்தக் கூடிய இரு வரிகளைக்கூட நான் கண்டதில்லை. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. இந்த கவிதை போல் எழுதும் நாடகத்தை முடித்து வைக்கலாம். எனக்கு அதை போலியாய் செய்யக் கூட அறுவெறுப்பாய் இருக்கிறது. 

இருந்தும் நீங்கள் இப்பொழுது எனை நோக்கி எழுதிய வசை சார் வரிகளில் மேற்கத்திய எழுத்தாளர்களின் பெயர்களை ஒப்பிக்கவில்லை. அந்தளவுக்கு மகிழ்ச்சியே. வசை வரும்போது எளிய தமிழ் கைகூடுவது இன்னும் மகிழ்ச்சியான ஒன்று. என் படைப்புகள் குறித்து நான் விவாதிக்க தயாராய் இருக்கிறேன். உங்கள் படைப்புகள் குறித்து விவாதிக்க என்னை அனுமதிக்கும் பட்சத்தில் மிகுந்த சித்த சுவாதீனத்தோடு உரையாடுவேன். நீங்கள் நடத்தும் வலசை உட்பட கல்குதிரையின் இன்னொரு ஒட்டு வாலாய் இருப்பது நான் ஏற்கனவே சொல்லியதே. அதில் தலையங்கம் கூட கோணங்கியின் வெட்டியெறியப்பட்ட நகமாய் இருப்பது இன்னும் ஆபாசம். ஒரு தலையங்கத்தைக் கூட கோணங்கியின் வரிகளோடு ஒப்பிப்பதென்பது அளவு கூடிய வருத்தத்தைத் தருகிறது. இன்னும் ஒன்று உண்மையில் கோணங்கியின் அடிப்பொடி என்பது கோணங்கியின் வாசகனாக உங்களை முன் வைக்கவில்லை. கோணங்கியை நான் வாசித்தவன் என வெறும் அரட்டைகளோடு அவரின் நட்பை தாங்கள் சார்ந்த நிரூபித்தலுக்கு சாட்சியாய் வைத்து மட்டுமே செய்கிறீர்கள்.. கோணங்கி குறித்தும் நாம் பேசலாம். 

கொலை தற்கொலையியல் குறித்து நான் உங்களைச் சந்திக்கும் முன்னேயிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே நீங்கள் என்னைக் கொலை..... செய்த புத்தகம் வெளி வந்த ஆண்டை நீங்கள் நோக்கலாம். மேலும் வெளி வரும் முன்னே அது 5 வருடங்களாய் கையெழுத்துப் பிரதியாகத்தான் என்னிடம் இருந்தது. உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன். இதையும் விவாதிக்கலாம். என் கவிதைகளை நீங்கள் புகழ்ந்து பேசியபோது இந்த சாவு கொலை இதுவெல்லாம் உறுத்தவில்லை. உங்களை கோணங்கியின் விசிலடிச்சான் குஞ்சென்றதும் எல்லாம் விமர்சனத்துக்கு வருகிறது. என் கவிதைகளில் இசையும் விறைப்பும் கண்ட நீங்கள் இப்பொழுது விமர்சித்ததும் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. என்னவோ ஒரு இசைத்தன்மையும் விறைப்பும் இந்த வரிகளில்இது என் கவிதைகள் குறித்து நீங்கள் உளறியதுதான். ஞாபகமிருக்கும் என நினைக்கிறேன். 

நல்லது நேசமித்திரன்... என் கவிதைகள் குறித்து உங்களது விமர்சனத்தை அறிய ஆவலாய் உள்ளேன். வேண்டுமென்றால் விலாசம் அனுப்புங்கள். தொகுதிகளை அனுப்பி வைக்கிறேன். 

மேலும் புத்தனின் சுயமைதுனத்தைப் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். எனக்கு மிக ஆபாசமாகத் தோன்றுவது இதுதான் நேசமித்திரன். ஒரு வசை கவிதையைக் கூட சொந்தமாக யோசிக்க முடியாத மூளை மிகவும் சிரமப்படுத்துகிறது. மேலும் நான் புத்தனின் மதுக்குடுவை குறித்துஉங்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். தொலபேசியில் அப்பொழுது நீங்கள் அடைந்த உற்சாகம் சொல்லி மாளமுடியாதது. அது எங்கு கடன் வாங்கப்பட்டது, அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்டது என, என் கவிதைகளிலிருந்தோ... என் படைப்புகளிலிருந்தோ ஒரு இரண்டு வரியை சுட்டினால் நான் எழுத்துப் பணியை விட்டு விலகுகிறேன். ஆனால் இதே வாய்ப்பை உங்கள் படைப்புகளின் வாயிலாக எனக்கு நீங்கள் தரவேண்டும், என நம்புகிறேன். 

எனக்குத் தெரிந்து என்னிடம் பௌத்தம் குறித்து கற்றுக்கொள்ள உங்களுக்கு நிறைய இருக்கிறது. உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வரி கூட இல்லை.மேற்கண்ட கூற்று என்னுடையதல்ல. இதுவும் தங்களுடையதே. இது நீங்களாக சொன்ன கூற்றுதான். எல்லாவற்றையும் பேசத் தயாராய் இருக்கிறேன். விவாதிக்கலாம். என் படைப்புகள் உட்பட. 

மேலும் கோணங்கியைக் கண்டால் நேரில் மதுவருந்திய பற்களோடு இளித்து விட்டு பின்னால் பொறணிகளை முன் வைப்பவன் நானல்ல. நீங்கள் வைத்த இளிப்புகளையும் எழுதுகிறேன். பேசலாம். 

இதையும் ஒரு செய்தியாகவே கூறுகிறேன். பௌத்தம் குறித்தும் கவிதை குறித்தும் நேரடியாக உரையாட நாள் குறியுங்கள். நீங்கள் மேற்கண்ட உங்கள் வசையில் குறித்த நீட்ஷேவையும் சேர்த்து பேச காத்திருக்கிறேன்.... 

ஏனெனில் பௌத்தம் குறித்து ஓரு எளிய அளவுக்குத் தெரிந்த நான் உங்களுக்கு இதையும் சுட்டுவது வருத்தமாக இருக்கலாம்...ஏனென்றால் இரண்டாயிர வருட தமிழ் இலக்கியத்தில் பௌத்தம்தான் உரையாடலையும் வாதிடலையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறது...அறிந்திருப்பீர்கள்...வாதிடவும் விவாதிக்கவும் மிகுந்த அன்புடன் காத்திருக்கிறேன்.... 

கூடிய விரைவில் ஒரு நாளைக் குறிக்கும் பட்சத்தில் வசதியாய் இருக்கும். 


Friday, March 30, 2012

காமத் துறைவனின் கடுஞ்சொல் கேளீர்....



நிச்சலனம் கிழித்தயிருள் மேவி
பித்துப்பிதிருடைத்துத் உடல்கதவைச் சிதறடித்துத்
திறக்கும் பெருந்தாழ்ப்பாள்
கொன்றழித்து புதிருறங்கும் மயிர் வனம்
சித்தம்தனை சிதறவிடும் பைத்தியக் கூச்சல்
கண்களைக்கீறி வளரும் பயிர்விளைச்சல்
முப்போகம் விளைவிக்கும் ஊழிச்சொல்
விரல்களை துளையிடும் ஊதல்
நகங்கள் வழி குருதிபாயும் பெரியாழின் கூர் நரம்பு
மிரளும் கண்பாவை சுவேதன ஒளிப்பரவல்
கைக்கும் வியர்வையில்
துவர்த்தல் வாடை
கிளர்ந்தெழும் காழ்த்தல்
திரளும் தித்தித்தல்
கறுகும் கார்த்தல்
இறுதியில் கசியும் சதைத் துவர்த்தல்
சங்கதனைப் புதைக்கும் வெண்சுடலை
சூதனின் இறுதிச்சொல்
முட்டும் முடிவுறா தசாங்கம்
நித்திலக் குழியூரும் வெண்நஞ்சு
தாவரயோனிமீதேரும் பசலைக்கொடி
பச்சிளம் சிசு
பெருங்களிற்றுவட்டமேங்கும்
எரியின் வட்டம்
புகைச்சுருள் விசனம்
நாடோடி துயிலும் ஆலத்தின் வேர்
இறுகும் கண்ணின் கைப்பு
யாளியுறங்கும் நிசித்தாலாட்டு
பேய்களைக்கொன்று குலவையிடும்
உயிர்ச் சொல்
தாமிரபரணி
ததாகயோனி
சிற்றெழில் உறையும் வதனம்

சொல்
அஃது பெரும்பிழை
உயிர்
இதுவும் அது

நீலகேசி
தாம்பூலவல்லி
சக்கரவாளக்கோட்டம்

கடவுள் மறுத்த சொல்
காமம் பெருந்தீனி
தெறிக்கும் மூளைச் சிதறல்
நிணமொழுகும் கனா
நான்
நீ

தலைகீழ் யோனி
விழி அவி.


ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணர வேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம்
கைகள்....
சம்போ மகா தேவா
சம்போகம்.

Thursday, March 29, 2012

ஆழிப்பெருங்காட்டிலலையும் அடிமையின் நியுத முத்தங்கள்.





மயக்கத்தின் மாயமுயக்கத்தின் மூச்சிலொருவணங்கு
வெண்சடையுதறிச்  சீவனைப் பிழிந்தெடுக்குமொரு
சீல நதி
குருதியுள் ஆடும் பைசாச புத்ரியின்
எழிலவதனச் சுருக்கம் நீக்கியதில்
பிழையற்ற பிரபஞ்சப் புதிரசைத்த தர்மகீர்த்தியேடுகளில்
நாகார்ஜுன இளிவரல் நகைத்து
பௌத்த தூமணிகள்
திரிபீடக குதிரையேறி மழித்த தலை காற்றில் மேவ 
பயணஞ்செய் புத்த விகாரை
யாசோதாவெனும் வனைருளில் வெளிச்சமெனவொன்றைத் தேடி
இருளுக்குள்
பேயிருளுக்குள்
விழி அகற்றி வெண்பா அசையா கைக்கோல் கொண்டொருவன் ஓடுகிறான் ஹே புத்தா
யசோதரைஇயிருளிதுவெனனின்கனவொன்றிலுதித்தவொருபேக்காடு
காம்பீரியமதில் காமக்கோட்டி செலுத்தும் பாய்மரப்படகெனவானதுகான் என் நிதம்பச்சுற்று
பட்டுத்தொழில்கைக்குட்டையிலது கார்ப்பாசம் வெடித்தலையும் நியுத முத்தங்களூனக்கு
உவா நடைபோலனதொரு என் பித்தஞ்ச்செய் கனவுகளில் உழுபடையெனக் கிளர்த்தெழுந்தாய்
மோகத்தைச் சாறாக்கி குருதியை தூரிகைதொட்டு எழுதினாயென் காமத்தில் முதல்வரி
சாக்காட்டில் சுடலை பார்
கதறட்டும் உன் காமம் எழுதிசைக்கும்
அழிஞ்சில் குறியெனநின் காமம் செங்கழுநீர் துயரம்
ஊதம்பயிலமங்குசமிழக்க தெருவெழிய பீஜம்காட்டி அலையும் பாகனொரு உள்ளத்தில் பித்தலைத்து படர்கிரது அங்குச கனவுகள்
ஊமன்விழியிருளில் வெட்கும் வெளிச்சம்தனையிலக்கங்குறிதற்கிடுங்குறியென பாயுதென் பிழையெனும் நதி
நியோகமிதுகாணென
சிபந்நம் மர நிழலில்
கூந்தலுலர்த்தி அலையுமொரு வனக்கிறுக்கியானவென் காதலி
இது கேள்
நிரியாணம் யான் வேண்டேன்
நின் செஞ்ச்சுடர் காலில் ஒரு குறிகண்டேன்
நிதம்பச் சூழ்
மயக்கம்
லிங்கம் சிதறிவெடிக்குமொரு ஏகாந்தம்
தென்றல்துளையிட்டூதிய மெல்லிய விசிறல்
பித்தத்தைக்கரைத்துக்குடிக்குமென் செங்கணல் விழிகள்
கேள் கண்னே ரசவாதமென ஒரு மாயத்தை
உடலெங்குமேற்றியதை நிரந்தரித்தேன்

சாவெனக்குத்தூரமென்பேன்
அருகிலுன்னிழல்குடித்து மயங்கும் சிறுவன் யாம்.


இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...