Thursday, December 2, 2010

நந்தலாலா: இலக்கியவாதிகளின் அம்மணத்தைக் கூவிச் சொல்லும் குழந்தை.

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?
நஞ்சுடைய பாம்பை அணிகலனாய் கழுத்தில் சூடிய தில்லை நாதனே சிவனே நீங்கள் எடுக்கப் போவதோ பிச்சை அதற்கெதற்கு எக்காளம் ஊதவேண்டும், யானையில் ஊர்வலம் வரவேண்டும், கடல் ஒலிபோல் முழங்கும் ஆரவாரங்கள் எதற்கு உடன் வரும் கூட்டம் எதற்கு, அணியும் அரச விருதுகள் எதற்கு, எடுக்கப்போவதோ பிச்சை, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.
- கவி காளமேகம்
நந்தலாலாவை வைத்து இலக்கியவாதிகளின் பொருள்படும் விளக்கங்கள், மகிழ்வுகள், கண்ணீர் மல்கல்கள் அனைத்தும் காணவேண்டிய திருக்காட்சிகள், இசையருவியில் சாரு, மனுஷ்ய புத்திரன், பிரபஞ்சன், பவா செல்லத்துரை பேசி பேசி மாய்ந்தது கண்டு மனம் வருத்தமடைகிறது. ( இதில் பவாவும் பிரபஞ்சனும் பகடைக் காய்கள்) . லெனின் சொன்னதைப் போல எவ்வளவு பெரிய மேதையாய் இருந்தாலும் அவன் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக்கொண்டிருக்கும் என்று கூறியதை உணரமுடிகிறது. சாரு உயிர்மையில் அவர் ரசனையை, படத்தைப் புரிந்துகொண்ட விதத்தை அலறியிருக்கிறார். முதலில் கிக்கிஜிரோ நந்தலாலாவின் ஒருவரிக்கதையாம். சாரு எங்கே சென்று அந்தப்படத்தைப் பார்த்தீர்கள் உங்களுக்காக ஜப்பான் இயக்குனர் நந்தலாலாவுக்கும் கிக்கிஜிரோவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை வெட்டி ஒட்டப்பட்ட காட்சிகளை வைத்துக் காட்டினாரா...
அறுவெறுப்புதரக்கூடிய விசயம் இதில் என்னவென்றால் சாரு மனுஷ்யபுத்திரன், இதற்கிடையில் ஜெயமோகன் இம்மூவரும் (three idiots) அறம் பற்றிக் கதைக்காத நாளில்லை, எழுதாத பத்திரிக்கைகளில்லை சாருவுக்கும் ஜெயமோகனுக்கும், (இவர்கள் idiots ஐயும் தாண்டி) ஒரு ஒற்றுமையுண்டு அதன் பொதுப்பெயர் திருட்டு, மனுஷ்யபுத்திரன் திருட்டுக்கு உடந்தை. ஜெயமோகன் தன் மனைவியின் பெயரில் ஒரு மலையாள இசைக் கட்டுரையைத் திருடி போடவைத்தவர், அவ்வப்போது வசனங்களையும் சுடுவார். (அங்காடித்தெரு படத்தில் கதை நாயகன் முதலாளியைப் பார்த்து யானை வாழ்ற காட்டிலதான் எறும்பும் வாழுது என்ற வசனம், இதைப் பாராட்டி என் நண்பர் உங்காளு அந்த இடத்தில மிரட்டிடான்யா என்றார்...சிறிது நாள் கழித்து பாலகுமாரன் தன் மாத நாவலில் ஒரு அன்பருக்குச் சொன்ன பதில் அது என்று கண்டேன்..அதில் யானைக்குப் பதில் சிங்கம்...இன்னும் சொல்வதற்கு ஏராளம் உண்டு) சாரு முழுத் திருடர் ஆபிதின் நாவல்களை அப்படியே தன் பெயரில் வெளியிட்டவர். மனுஷ்ய புத்திரனோ பிழைப்புக்கு இலக்கியத்தைச் சுரண்டும் வியபாரி. நான் கடுமையாக எழுதக்கூடாதென்ற மனநிலையில்தான் இதை எழுதுகிறேன்...கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.
சாருவின் விமர்சனம் தினத்தந்தியில் 2.12.2010 ல் பக்கம் 18ல் நந்தலாலா படவிளம்பரத்தில் கொட்டை எழுத்தில் அவர் எழுதியிருப்பது தாய்மடி தேடிய அற்புதமனிதனின் காவிய பயணம், ஆனால் உயிர்மை விமர்சனத்தில் அவர் கூறியிருப்பது, அந்தத் தாய்மையை சற்று தள்ளிவைத்துப் பார்த்தால் படம் புரியுமாம், சாரு மனதில் வாசக மதீப்பீடு எவ்வளவு கேவலமாய் உள்ளதென்று இதன் மூலம் அறியலாம்.
மனுஷ்ய புத்திரன் வெளியிட்ட சாருவின் கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்புத்தகத்தில் திகம்பரன் என்று தலைப்பிடப்பட்டு பக்கம் 94ல் பட்டினத்தார் தாயைப் பற்றி விரிவாகப் பாடிய பாடலை குறிப்பிட்டு அப்படிப்பட்ட துறவியவையே தாய்ப்பாசம் விட்டு வைக்கவில்லை ஆனால் பெரியார் அப்படியில்லை, பெரியார் தன் தாயைப் பற்றி மிகுந்த பிற்போக்குச் சிந்தனையும் மனிதாபிமானமும் அற்று வாழ்ந்த என் தாய் இவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்ந்திருக்கக்கூடாது, அதற்கு அவருக்கு அருகதை இல்லைஎனச்சொன்னதாக பதிவுசெய்துவிட்டு தன் தாய் பற்றி அவர் சொல்லுகிறார்
சாருவின் தாய்பக்தி 1
(பக்கம் 94, பாரா 2)
என் மனைவி அவந்திகா அற்புதமான குணநலங்கள் வாய்க்கப்பெற்றவள். அப்பேர்ப்பட்ட பெண்ணை என் தாயார் அவமானப்படுத்தினார்கள்:. மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள் கார்த்திக் என்னுடைய ரத்தம் அல்ல என்பதால் அவனையும் அதே போல் கேவலப்படுத்தினார்கள். ஆனால் இதே அம்மா என்னை மிகவும் பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்தான், தங்கத்தட்டில் தாங்குவது என்பார்களே, அப்படி என்னைத் தாங்கியவர்கள்தான் ஆனால் அவந்திகாவை அவர்கள் தொடர்ந்து வதை செய்தபோது அம்மாவைப் பார்ப்பதையே நிறுத்திவிடேன், ஆறேழு வருடங்கள் இருக்கும் . அவர் இறந்த செய்தி வந்தது, சென்றேன். கொள்ளிவைக்கச் சொன்னார்கள் மறுத்து விட்டேன்.
நிற்க
மேற்கூறிய அதே புத்தகத்தில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்று தலைப்பிட்டு உள்ளே சாரு சொல்கிறார் என்னை மாற்றிய புத்தகங்கள் என்பதை விட என்னை மாற்றிய சிந்தனையாளர் என பெரியாரை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு ஏன் அவரை நான் ஆசானாக ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு அவர் மிக அழுத்தமாக சுட்டிக்காட்டியது பெரியார் தாய்மையைப் பற்றி விமர்சனம் செய்திருப்பதை.
2 சாருவின் தாய்பக்தி சமூக பக்தியாய் மாறிய கதை
(அதே புத்தகம் பக்கம் 130)
உதாரணமாக, என்னுடைய தாயார் மரணமடைந்தபோது நானே வீட்டின் மூத்தமகன் என்பதால் சடலத்துக்கு கொள்ளி போடுதல் முதலான சடங்குகளைச் செய்வதற்காக அழைக்கப்பட்டேன், ஆனால் சுயம்மரியாதைத் திருமணம் செய்துகொண்ட என்னுடைய தந்தை மரணச்சடங்கின் போது வைதீக முறையைக் கடைபிடித்ததாலும்,பிராமணர்களின் உணவுக் கலாச்சாரத்தை நான் சில காலத்துக்குக் கடை பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாலும் என் தாய்க்குச் செய்யவேண்டிய கடமையை நான் செய்யவில்லை. நான் எந்த சாதிக்கும் எதிர்ப்பாளன் அல்ல, ஆனால், தாய்க்குத் தனயன் செய்யவேண்டிய இறுதிக்கடமை என்ற பெயரில் வேறோர் கலாச்சாரம் என் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டதால் நான் அந்தச் சுடுகாட்டில் அதை மறுத்தலித்தேன்.
காரணம் என்னுடைய ஆசான் பெரியார். அவர் தன்னுடைய தாயாரைப் பற்றிச் சொல்கிறார் இவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துக்களையுடைய ஒரு பெண்மணி இவ்வளவு காலம் உயிரோரு இருந்திருக்க எவ்வித நியாயமும் இல்லைஅதனால்தான் குறிப்பிட்டேன் என் ஆசான் பெரியார்.
நிற்க
பெரியார் தன் தாயைப் பற்றி உண்மையிலேயே சொன்னது.
பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள்; நன்றாய் சம்பாதித்து ,நன்றாய் செலவு செய்தவர்கள்; பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள் ; அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள்; எத்தனையோ பேரைத்திருத்திய இராமனால்( ஈ. வெ. ரா) அம்மையாரிடம் தன் கொள்கையைச் சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடங்கொடுக்கவில்லை.
கடைசி வயதில் அம்மையாரைப் பார்க்க வந்தவ்ர்களிடம் என் மகன் ராமனைச் சிறிது பார்த்துக்கொள்ளுங்கள், இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என ஆவலாய்ச் சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலாக்கள் சவுகத் அலி மகமது அலி இருவரும் அம்மாயாரின் தலையில் தங்கள் தலையை ஒட்ட்வைத்து வாழ்த்தும் படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தைச் சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக்காடி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படி செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னைத் தொட்டுவிடுவார்களோ என்று பயந்து , ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்றுதான் அவர்களுடன் பேசுவார். மூட நம்பிக்கைகளுக்கும், குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்ந்து முடிவெய்திவிட்டார்.
எனக்கு அவர் முடிவெய்தியதுபற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. என் கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்தி விடவேண்டுமென்பதே!
என் இஷ்டம் நிறைவேறியது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி ! பூரண மகிழ்ச்சி!
- குடிஅரசு 2.08.1936
நண்பர்களே பெரியார் தன் குடும்ப விபரங்களைக் கூறிவிட்டு தன் தாய் பற்றி இவ்வாறு பதிகிறார். பெரியார் என்னென்ன காரணங்களுக்காக இப்படி எழுதியிருக்கிறார் என்பதை கீழ்கண்ட புத்தகத்தில் படிக்கலாம்.
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் -பெரியார் ஈவெ ராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு பதிப்பாசிரியர் வே ஆனைமுத்து
பக்கம்3110.
சாரு பெரியாரின் வார்த்தைகளை என்ன விதமாக அணுகியிருக்கிறார் அதை சாரு எப்படி எழுதுகிறார் என்பதை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும், அதையும்தாண்டி அவர் தன் தாய்க்கு கொள்ளி வைக்காமல் போனதற்கான காரணங்களாக கூறிய குழப்பங்களையும் கவனிக்கவேண்டும், உயிர்மை விமர்சனத்தில் நந்தலாலா திரைப்படத்தில் தாய்மை பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது அப்படி புரிந்து கொண்டால் அது தட்டையான பார்வையாம். இதை எந்தத் தளத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்று பார்க்கவேண்டும். மிஷ்கின் ஆட்டியர் என்றால் `தகேஷி கிட்டானேவை என்ன சொல்வது. இதுதான் உலகத்திரைப்படங்கள் பற்றிய சாருவின் அளவுகோல்.
ஒரு பேட்டியில் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்ப்பவன் வேலைக்காக பொய்கள் சொல்லலாம், இலக்கியத்தில் உண்மை சொல்லவேண்டும் இங்கேயும் வந்து பிருஷ்டத்தைக்காட்டினால் என்ன சொல்வது என்று கேட்ட சாரு இப்பொழுது உடலின் நவத்துவாராங்களையும் யாருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார் ...காட்டுவதும் ஏன். யாருக்கு எது பிழைப்பு.
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பற்றி விமர்சனத்தில் உடலைச் சுட்டிக்காட்டியதற்கு நொண்டிநாய் என்று சொல்லுகிறான் என அதன் வாசிப்பின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய சாரு சொல்கிறார் நந்தலாலா திரைப்படத்தை தாய்மையைச் சொல்லும் படமாகப் பார்க்கக்கூடாதாம். அதே ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனை நொண்டி நாய், வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் அதன் கூவல் பற்றியெல்லாம் சொல்புதிது இதழில் வெளியிட்டிருந்தாரே. அப்பொழுது சாரு என்ன செய்தார். அப்பொழுது புத்திரனுக்கும் அறம் இல்லை. ஜெயமோகன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் அறம் இருந்தது. மறுபடி சாரு வந்து சுட்டிக்காட்டியதும் அறம் விளங்கிவிட்டது.
இடையில் ஜெயமோகன் படம் பற்றி திருட்டானாலும் பரவாயில்லை...இருக்கட்டும் என்று கருத்து வேறு கூறுகிறார். ஜெயமோகன் உங்களால் வேறு எப்படிச் சொல்லமுடியும். தொழிலுக்கு வந்தாயிற்று காப்பாற்றிக் கொள்ளவேண்டியதுதான்.
சாரு தமிழ் சினிமாவை விமர்சிக்க உங்களைவிட்டால் ஆளில்லை என்கிற தோற்றத்தை அவ்வளவு கஷ்டப்பட்டுக் காட்டிவிட்டு ஆனந்த விகடனில் எழுதுகிறீர்கள் நடிக்கும்போதுதான் தெரிகிறது அது எவ்வளவு சிரம்ம் என்று. ஏன் நீங்கள் நடிக்காதவரை, உலக சினிமாக்களை தமிழக சினிமாக்களை தோண்டித்துருவி பின்நவினத்துவங்களோடு விமர்சிக்கும் போது தெரியவில்லையா, நன்றி சாரு தொடர்ந்து இதே தொனியில் அனைத்தையும் பதிவு செய்யுங்கள், நந்தலாலா உலகப்படம் என்கிற உங்கள் திரை அறிவை நான் மெச்சிக்கொள்கிறேன்.
இசையருவியில் வந்த இயக்குனர் பேட்டியில் மனுஷ்ய புத்திரன் அந்த மாதிரி வீடுகளெல்லாம் அவர் பார்த்தேயிராத வீடாம் அதுவும் சவப்பெட்டிக் கதவுகள் வீடே மரணத்தோற்றம்...புரிந்துகொள்ளமுடிகிறது.
மனுஷ்யபுத்திரன்... சுஜாதா எழுதிய ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலுக்கு நீங்கள் பின்னட்டையில் எழுதினீர்களே ஒரு குறிப்பு அதையும் புரிந்துகொள்கிறேன். நீங்கள் அதில் எழுதியிருப்பது....
சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப்படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும் லட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்கிறார்.....
ஆம் புத்திரன், சுஜாதா அளித்தார் இன்னும் உங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கிறார், புதிதாக அளிப்பவர்களையும் தேடிக்கொள்ளுங்கள்.
மன்னிக்கவேண்டும். எழுதக்கூசுகிறது. இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் அறத்தை விளக்கும் சன்னிதானங்கள். இவ்வளவு கேவலமாக வாசகர்களை மதிப்பிடும் இவர்களை என்ன செய்வது.
ஓய்வில்லாது அறத்தைப் பேசும் இவர்கள் ஒரு படத்தை இவ்வளவு தூக்கு தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால்.. மற்ற படங்களை...யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என நீங்கள் பண்ணும் அரசியலை குறைந்த பட்சம் நீங்கள் ஒரு காலத்தில், அல்லது தோன்றியபொழுதில் திட்டிய வைரமுத்து செய்ததில்லை. அவர் முதலமைச்சருக்கு நண்பர்...தம்பி. ஆனால் புத்தகங்களை விற்க நீங்கள் பண்ணும் காரியங்கள் சகிக்கமுடியாததாக இருக்கிறது.
வெளியீட்டு விழாக்களுக்கு நீங்கள் அழைக்கும் சினிமா ஊடகத் துறையினரை நானும் வரவேற்கிறேன். இலக்கியத்தின் காட்சி ஊடகமாக அவர்கள் அதை அவர்கள் நாளை வெளிப்படுத்தக்கூடும். அதே போல் அவர்களை விமர்சனக் கூட்டங்களுக்கும் அழையுங்கள், வெளியிட்ட நூலை, அவர்கள் பெற்றுக்கொண்ட நூல்களைப் படித்து விமர்சனம் செய்யச் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்து புத்தகங்களை வெளியிட வரும் நடிகர்கள், இயக்குனர்கள், சம்பந்தப்பட்ட புத்தகத்தை விமர்சனம் செய்து ஒரு நாலுவரியை வெளியிட்டதுண்டா... தேவைப்படாதென்று தெரிந்தால் சினிமாவை நக்கல் செய்வது. தேவைப்படும்பொழுது துதி பாடுவது. இதுதானா மனுஷ்யபுத்திரன் உங்கள் தலையங்கத்தில் தலைகொதிக்க நீங்கள் எழுதும் அறம்.
சினிமாக்காரர்களை இலக்கியம் தெரியாதவர்கள் என்பது, அவர்கள் அழைத்தால் பங்கிட்டு விட்டு அவர்தான் இலக்கியத்தின் பிதாமகன் என்பது. நீங்களா தமிழுக்கு இலக்கியத்தை சொல்லித் தரவந்தவர்கள். எனக்கு மிகவும் வெட்கமாகவும் அறுவெறுப்பாகவும் இருக்கிறது.
உண்மையில் நந்தலாலா இலக்கியவாதிகளின் அம்மணத்தை கன்னத்தில் அறைந்து சொல்லும் கவிதை.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோவென்று போவான்.
- மகாகவி.

Monday, November 29, 2010

நந்தலாலா : தாய்மைச் சுமை


அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள் தூக்கிவைத்த பெருஞ்சுமையென தாய்மையைத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஆண் பெண்ணை மதிக்கவேண்டுமானால் ஒன்று கற்போடு இருக்கவேண்டும் இல்லையெனில் தாய்மையோடு இருக்க வேண்டும். இயக்குனர் நிறைய படித்தவர் என்பதை நான் அறிவேன் அவரும் தன்னை இலக்கிய வாசகன் என சொல்லிக் கொள்ள எந்த இடத்திலும் தயங்கியதே இல்லை. அது குறித்து நான் பெருமைப் படுகிறேன்.

படத்தில் எந்த இடத்திலும் பெண்கள் காட்டப்படவேயில்லை. அவர்கள் காட்டப்படுவதெல்லாம் தாய்மையின் வாயிலாகத்தான், பெண்ணுக்கு தாய்மையைத் தவிர வேறு எந்த குணமும் அவர்களை உயரத்துக்கோ அல்லது வெளிச்சத்துக்கோ அவர்கள் விரும்பும் சுதந்திரத்திற்கோ அழைத்துச் செல்லப்போவதில்லை என்று மிக உறுதியாகக் காட்டப்படுகிறது.

படத்தில் கதைநாயகர்கள் இருவரும் அப்பா ஓடிப்போனதை ஒரு சிறு நகைச்சுவையாகக் கையாண்டு விடுகிறார்கள். இதன் மூலம் ஆண்கள் என்றாலே ஓடுகிறவர்கள், பொறுப்பு பற்றி அவர்கள் எதையும் கவலைப் படப் போவதில்லை, அப்படி படவேண்டிய அவசியமும் இந்த ஆண்மையச் சமூகத்தில் இல்லை என்று புரிகிறது. பெண்கள்தான் அதைக் கண்டுகொள்ளாது தனக்கு சமூகம் வழங்கியிருக்கும் தாய்மையை பெரும் படிமமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தூக்கிச் சுமக்க வேண்டும்.

தாய்மையினால். அந்தக் கருத்தினால் ஆண்களுக்கு பெருத்த லாபம் உண்டு. அவன் சுதந்திரமாக எங்கும் திரியலாம், எதையும் செய்யலாம், பொருள் சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் சுதந்திரத்தின் முகத்தில் ஆழ முத்தமிடலாம்...ஆனால் பெண்ணுக்கு...இதில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

பாஸ்கர் மணி அகியின் தாயைச் சந்திக்கும் இடத்தில் அவள் தன் சூழலை விளக்குகிறாள் அதை அமைதியாகவும், இயலாமையோடும், வெளியே நிற்கும் அவள் மகனின் முகத்தை எண்ணி மனதில் துக்கத்தோடும் கேட்கும் பாஸ்கர் மணி அவள் சொல்லி முடித்ததும் சட்டெனக் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே செல்லுகிறான், வெளியே இருந்து உள்ளே ஓடி வரும் அகியை அணைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுச்செல்ல எத்தனிக்க அகி பிடியிலிருந்து மீறி சென்று வாசலில் ஒரு குழந்தை இருப்பது கண்டதும் தன் தாய் அவ்வீட்டில் இல்லை என்று முடிவு செய்கிறான்...பாஸ்கர் மணி தன் தாயைக் காட்டுகிறேன் வா என அழைத்துச் செல்கிறான். நிற்க அப்படி அகியின் தாய் என்ன சொன்னாள். பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று காட்சி விளக்கப் படாமல் நகர்கிறது. நான் விளங்கிக்கொண்டது அவள் தன்னுடைய துயரவாழ்வைச் சொல்லியிருக்கிறாள். வேறொரு ஆணுடன் வாழநேர்ந்த சூழலைச் சொல்லியிருக்கிறாள். மணி அறைந்து விட்டு வெளியே வந்திருக்கிறான். இதில் நான் இன்னொன்றும் புரிந்துகொண்டேன் அவள் தன் இயலாமையை பாஸ்கர்மணி காலில் விழுவதன் மூலமும், கூனிக் கூறுகி கூசி நிற்பதன் மூலமும் விளக்கி விட்டாள். மணிக்கு அவள் செய்தது தவறென்று தெரிந்து அடிக்கிறான். வெளியேறுகிறான்...இதே மணிதான் தன் தகப்பன் பற்றின எந்தக் கேள்வியும் இல்லாது படம் முழுக்க வருகிறான். ஆண் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு சுதந்திரம் உண்டு பெண்ணுக்கு ஒன்றே ஒன்றுதான் அது தாய்மைச் சுமை. அது மனநலம் பிறழ்ந்தவனுக்கும் மாறாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு ஊர்களுமே அன்னைவயல், தாய்வாசல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதிலும் தாய்மை. இதைச் சற்று அரசியலாக்கினால் அன்னை நாட்டைக் காப்பீர், தாய் நாட்டைக் காப்பீர் என்று அரசியல் வாதிகளின் வெற்று முழக்கம் புரியும். இந்த முழக்கம் நாட்டில் வாழும் ஆண்களை மட்டுமே நோக்கி எல்லாக்காலங்களிலும் விடப்பட்ட அறை கூவல். இவை பெண்களுக்கான வார்த்தை இல்லை, (பெண்களுக்கு ஆண்களை நோக்கி எழுப்ப எக்கசக்க முழக்கங்கள் உள்ளது) அன்னை நாட்டை இன்னொருவன் ஆளவிடுவது அன்னையை மற்றொருவன் புணர்வதற்குச் சமம். இதனால்தான் ஆணுக்கு அவன் அன்னையைப் பற்றி இழிவாக பேசினால் வெறியேறுகிறது. இதில் ஏற்படும் வெறி தானொரு தாய்ப்பாசத்தினால் ஆளப்பட்டவன் என்பதல்ல நான் ஒருத்தனுக்கு பிறந்தவன் என்ற ஆணாதிக்கக்கூற்றே. பெரும்பாலும் வசவுகள் தாயின் கற்பை மட்டுமே ஏசும் சொற்களாக உள்ளதையறிவோம், (உதாரணத்திற்கு தேவிடியாமகனே ) ஆண் தன்மீது கொண்ட நல்லொழுக்கத்தை ஆண்மையைக் காப்பாற்ற தாய்மை ஒரு கருவி மட்டுமே.

நாய் வளர்த்தவனுக்கு மட்டுமே விசுவாசம் காட்டும் அதன் நன்றி பொது குணமல்ல, அதன் அறம் நன்றியல்ல. தீ எத்தேசத்திலும் எந்த மூலையில் இட்டாலும் சுடும் அதன் தர்ம்ம் சுடுவது. அதுதான் அதன் பொது அறம் ஆனால் தாய்மை அப்படியல்ல, அவள் தன் குழந்தையை மட்டுமே விசுவாசமாக வளர்ப்பாள். இன்னொரு குழந்தையை அல்ல, எல்லோருக்கும் அவரவர் அம்மா மட்டுமே விசுவாசத்துக்குரியவர்கள், இல்லையென்றால் அம்மா வயதிலுள்ள நடுத்தரவயது பெண்மணியின் மேல் ஒரு ஆணால் காமப் பார்வை பார்க்கமுடியாது. இது ஒரு பொருளாதார உறவு. இதை அந்தளவில் புரிந்து கொண்டால் போதும்.( இளைஞர்கள் பார்க்கும் பெரும்பாலான பாலியல் படங்களில் அவர்களின் அன்னை வயதுள்ளவளைத்தான் அவன் ஆண்டி (aunty) என்ற பார்வையோடு பார்க்கிறான்) இதைத் தாய்மை என்றாக்கி தனக்குகந்தவாறு அதை உன்னதப்படுத்தி ஆண் எல்லாக் காலங்களிலும் தன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறான். பாஸ்கர் மணிக்குக் கூட அன்னை தன்னை பார்க்க வரவில்லை என்ற கோபம் மட்டுமே படத்தின் இறுதி வரை நீள்கிறது. தகப்பன் ஞாபகத்துக்கு வராத காரணம் தகப்பன்கள் எல்லாமே அப்படித்தான் என்ற பொதுபுத்தி அவனை கேள்விகேட்கத் தோன்றவிடாமல் செய்திருக்கிறது.

படம் முழுதும்ஆண்மையப்பார்வையிலேயே நகர்ந்திருக்கிறது. யாருக்கும் பெண்ணின் சுதந்திரம் குறித்தான கேள்விகள் தாய்மையைத்தாண்டி நகரவிடாது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஒரு காட்சியில் உயிரை, கற்பைக் காப்பாற்றும் பாஸ்கர்மணியிடம் ஒரு பெண் கேட்பது நீங்க என்ன ஜாதி...ஒரு வேளை இது நிஜமான நடந்த சம்பவமாகவே இருந்தாலும் அதை ஏன் அவ்வளவு அழுத்தமாகக் காட்சிப் படுத்த வேண்டும். பெண்ணும் ஜாதிய உணர்வால் தூண்டப்பட்டிருக்கிறாள் என்பதாலா, உண்மையில் அவள் கற்பழிக்கப்பட்டு அங்கேயே கொலை செய்யப்பட்டிருப்பாள் .காப்பாற்றியதற்கு சிறிய நன்றி கூட சொல்லமுடியாத அளவிற்கு ஜாதி அப்பெண்ணை ஆளாக்கியதை (அவளுடைய குழந்தை கதறிக்கொண்டிருக்கிறது. ஒடிப் போய் குழந்தையைத் தூக்கியவள் குழந்தையைக் கொஞ்சாமல் கேட்கும் கேள்வி தம்பி நீங்க எந்த ஜாதி)இயக்குனர் பதிவு செய்யும் நுணுக்கம் ஏன் ஆண்களின் பொறுப்பற்ற தனத்தை சிறு அளவிலும் பதிவு செய்யவில்லை. கேள்வி எழுப்பவில்லை.

எழுப்ப முடியாது, அப்படி எழுப்பினால் அவன் தான் செய்யும் இழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் அது தாய்மையை தூக்கிப் பிடிக்க முடியாததாக செய்து விடும், அகி அம்மா செய்தது நியாயம்தானே என்று கேட்க வைத்து விடும். பாஸ்கர்மணியின் சிறு வயது மனநிலை பற்றி படத்தில் சொல்லவில்லை. பாஸ்கர் மணி வளர்ந்து பெரியவனாகி என்ன செய்தானோ அதைத்தான் தாயும் அவன் சிறுவயதில் மனநலம் பிறழ்ந்தபோது செய்திருக்கிறாள், அதைத் தவறென கடைசி வரை நினைத்து அன்னையைக் கன்னத்தில் அறைவேன் என அன்னையைக் கடைசிக்கணம் காணும் வரை வைராக்கியத்தோடு இருக்கும் மணி அன்னை பைத்தியமாய் இருப்பது கண்டு அடைவது தாய்மைப் பாசத்தினால் அல்ல, மனச்சமாதானத்தினால்தான். பாஸ்கர் மணியும் அன்னையை மனநலம் பிறழ்ந்தோர் இல்லத்தில்தானே சேர்கிறான் இதைத்தவிர வேறு மாற்று அவனுக்கு என்ன இருக்கிறது. இதைத்தான் நான் ஆண்மையப் படம் என்கிறேன். ஆண் தன் தாய்க்கு ஏங்குவது படம், முழுக்க பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டு பெண்ணுக்கான தாய்மையை என்னவாக இருக்கும் என்று எந்த இடத்திலும் காட்டாமல் செய்திருக்கிறார். அகியின் அம்மாவுக்கு இன்னொருத்தர் மூலமாக வந்த குழந்தையின் வாழ்வும் இதனால் பறிபோய்விடக்கூடாதே என்ற தாய்மை கூட தடுத்திருக்கிறலாம். பாஸ்கர் மணிக்கு தன் சக நாயகன் ஏமாற்றப்பட்டுவிட்டானே என்று கூட அறைந்திருக்கலாம். அகியின் அம்மா என்ன சொந்த சுகத்திற்காகவா அப்படிச் செய்தாள் புரியவில்லை. கன்னித்தாய்தான் கடவுளுக்கும் வேண்டியிருக்கிறது, மதத்திற்கும் வேண்டியிருக்கிறது, ஆணுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. கதை நாயகன் தன் அன்னை மனநலம் பிறழ்ந்து இருப்பது கண்டு அவளைத் தன் கையால் தூக்கி ஒரு இறங்கற்பா பாடத் தோதாக அண்ணன் மகள் தாயைக் கட்டி வைத்திருந்த சங்கிலியைக் கழற்றுகிறாள். பாஸ்கர் மணி பாடத்தொடங்குகிறான். நன்று. எல்லாப் பாத்திரங்களையும் விட பாஸ்கர் மணி தனது தாய் அபிமானத்தைப் பாடலின் மூலம் விளக்கி விடுகிறார். தாயை மன நலம் குன்றிய நிலையில் பார்த்த அவருக்கு மனம் தெளிந்து விடுகிறது. தாய் அப்படியே விடுதியில் சேர்க்கப்படுகிறாள். பின் விட்டுச் செல்வது தன் மகன் என்றோ அல்லது தன்னைக் கவனித்த ஒருவன் என்றோ அக்கறையுடன் அவனது கையைப் பிடிக்கும் தாயை பாஸ்கர் மணி யதார்த்தம் புரிந்து அங்கேயே ஊசி போடச்சொல்லி விட்டுச் செல்கிறான். பாஸ்கர் மணியின் அண்ணன் கதாப்பாத்திரம் யதார்த்தமற்றவர். அன்னைப் பாசத்தை என்ன செய்வதென்று காரணம் புரியாது கைபிசைந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். கதை நாயகன் வந்து அன்னைப் பாசத்தை அழகாகப் பாடி முடித்து, இறுதியில் தான் அதுவரை மன நலம் குன்றியிருந்தவன் என்பதை உடல் மொழியின் மூலம் காட்டியவர் இப்பொழுது தெளிந்தவன் எனக் காட்டி பலூன் விற்கிறார். சிறுவனுக்கு ஓசியில் பலூன் தந்து விலை மாது பாத்திரத்தை அர்த்தங்கள் விளங்கா புன்னகையுடன் பார்த்து முதுகு காட்டிச் செல்கிறார்.

படம் முடிவடைகிறது.

சிறுவன் தன் தாயை இன்னொரு ஆணுடன், ஒரு குழந்தையுடன் கண்டதும் தன் தாய் தவறானவள் என்பதைப் புரிந்துகொள்கிறான் என்பதை அவன் காட்சியின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கையில் வைத்திருந்த அன்னையின் புகைப்படத்தை வீசிவிடுகிறான். கன்னித்தாய் பட்டம் காற்றில் பறக்கிறது. வேகமாக ஓடி வந்து விலைமாது பாத்திரத்தை கன்னத்தில் மாற்றி மாறி முத்தம் கொடுக்கிறான்...அவன் எதிர்பார்த்த ஒழுக்கமான தாய், தன்னை வரவேற்கும் தாய் என்ற எதிர்பார்ப்புகளை அகியின் தாய் நொறுக்கிவிடுவதால் வரும் விளைவு இது. ஒரு சிறுவனுக்கும் ஆணாதிக்க்க் கூறுகளை பால்யத்திலேயே பதியவைத்து விடுவதை புரிந்துகொள்ள முடிகிறது

என்னால் இசை பற்றிப் பேசமுடியுமென்றால் அது இளையராஜாவைத் தவிர்த்து பேசமுடியாத காரியம். அவரின் ரசிகன் நான். ஆனால் இந்தப்பட்த்தில் அவர் செய்திருப்பது இசை அல்ல. வந்தேன் பேர்வழி போனேன் பேர்வழி. அவ்வளவே. அவர் இசையமைத்து முழுமனதுடன் நான் வெறுத்த இசையமைப்பாய் இப்படத்தையே காரணம் காட்டுவேன். (பரதன் இயக்கிய ஆவாரம் பூ திரைப்படத்தின் அறிமுகப்பாடலும் தளபதி பட்த்தின் கதை நாயகன் அம்மாவைப் பார்த்ததும் வரும் பின்னணி இசையையும் நினைத்து நானே என்னைத் தேற்றிக் கொண்டேன்)

இறுதியாக ஆணுக்குத் தேவை அன்னை, சகோதரி மனைவி தோழி இப்படிமங்களேதானே தவிர சுதந்திரமான பெண்ணல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் அவனுக்கு பெண் உபயோகப்படப்போவதில்லை.

படமும் அன்னையைப் பற்றியானதல்ல, ஆண்தன்மையைப்பற்றியது.

Monday, October 4, 2010

ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள். ராஜன் கொலை வழக்கு.


'மிகமிக நுணுக்கமானவர்களே ஆகச்சிறந்த வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.'

- தஸ்தயேவ்ஸ்கி

மகனை அரசுக்கு பறிகொடுத்து, காணமுடியாது பதறி, உண்மையில் மகன் என்னவானான்...எனத் தேடி ,கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் பரபரப்பும் மகிழ்ச்சியுமாய் அலைந்து, ரகசியங்களால் ஓய்ந்து, இறுதியில் தன் மகன் அரசால் கொல்லப்பட்டான் என்றறிந்து, அவனுடலின் ஒரு துளிச்சாம்பல் கூட கரைக்கக் கிடைக்காது வீறிட்டலறும் குரலுடனும், தன் மகனைக் காக்கமுடியாத இயலாமையால் ஆன்மாவின் குற்றவுணர்ச்சிக்கு பதில் சொல்லமுடியாத துக்கத்திலும் தன் மகனின் இழப்பை பதிவு செய்திருக்கிறார். டி.வி. ஈச்சரவாரியர்.

இந்நுலின் வார்த்தைகளை நம்மிடம் வைப்பதற்காக அவர் கூறிச்செல்லுகிறார்

‘என்னிடம் அழுது தீர்ப்பதற்கான கண்ணீர் இன்னும் மிச்சமிருக்கிறது. உயிரின் துடிப்புகள் இன்னும் இந்த பலவீனமான உடலில் மீதமுண்டு. அதனால்தான் இதையெல்லாம் எழுத்த் தோன்றியது. நான் மனவருத்தம் கொள்ளச் செய்திருப்பதாக யாராவது நினைத்தால் சாபமேற்ற இந்தத் தகப்பனை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து

தன் மகனை பூட்ஸ் கால்களால் அதிகாரத்தின் மமதையும் அதனால் விளைந்த திமிராலும், ஆணவத்தாலும் தன் மகனை எத்திக்கொன்ற காவல் துறை ஆய்வாளாரான புலிகோடனைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஏற்படும் தன் மனதின் குரலை....

டெலிவிஷனில் புலிகோடன் நாராயணனின் உருவத்தைப் பார்க்கும் போது, தெளிவான கருத்துக்களுடன் முறுக்கி விடப்பட்ட மீசையைத் திருகியபடி அவர் பேசும் தோரணையைப் பார்க்கும் போது மனதுக்குள் மின்னல்போல் ஒரு பகையுணர்வு தோன்றுவதுண்டு. என் மகனுக்கு நேரிட்ட அந்த துர்லபமான நிமிடங்கள் அப்போது என் மனதில் அலையடித்து மேலெழும். மனம் என்னையறியாமலேயே ஒரு கோபத்துடன் இழப்புகளைக் குறித்து கணக்கெடுப்பு நடத்தும். மறந்து விட்ட்தாக நினைத்துக்கொண்டிருப்பவை அதிகமாக மனதிற்குள் எழும்.

அரசு தன்னைத் தானே தின்று வளர்வதோடு மட்டுமில்லாது குடிகளின் உதிரத்தை அதிகார நாக்கால் உறிஞ்சும் அதன் ரத்தவெறியை மகனை இழந்த தகப்பன் பதிவு செய்திருக்கிறார். நாம் இன்னும் இந்தப் பூமியில் வசந்த்த்தை நோக்கியும், வாழ்வதற்கான கனவுகள் வரவேண்டி துயிலுக்காகவும் காத்திருக்கிறோம்.

நீதி தன் கால்களில் அணிந்திருக்கும் கனத்த பூட்ஸ்களால் அப்பாவிகளின் விரைகளை நசுக்கும்போது.....பார்வையாளனாய் இருக்கும் மனநிலையையை நானே என் மீது காறியுமிழ வேண்டியிருக்கிறது.

இலக்கியம் செய்யவேண்டிய தார்மீகப் பதிவென இந்நூலைத்தான் நான் கூறுவேன்.

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர்.(மலையாளம்)

தமிழில்; குளச்சல் முகமது யூசுப்.

காலச்சுவடு வெளீயீடு

விலை. 100

Monday, September 13, 2010

அம்மணமானவர்களுக்கு அந்தரங்கம் தேவையில்லை...



குற்றவாளிகளை கைது செய்யலாம்
முறுக்கிய கயிற்றில் அவர்களின் துரோகத்தை எழுதி தூக்கிலிடலாம்
வழியும் கண்ணீரை தூயகைகளால் ஏந்திப்பிடிக்கலாம்
நொறுங்கும் எலும்புகள் புகைய எரியூட்டலாம்
சிதைத்தீயை பாவ நதியால் நனைத்து
அஸ்தி கரைக்கலாம்
நண்பர்களே...

மாறாய்
ஒரு குற்றத்தை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த
நல்லவனின் முகமூடியை கிழித்தெறிய
நீங்கள்
கடவுளாகவேண்டும்
வலதுகையில் உலகை அழிக்க வல்லமை கொண்ட ஆயுதம் வேண்டும்
இடது கையில் குருதியேந்த திருவோடு வேண்டும்...

எல்லாவற்றையும் விட குற்றங்கள் என்ற பதமுடைய வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்கவேண்டும்
துரோகத்தின் மணத்தை உள்நாக்கால் இழுத்து நுரையிரலை நிரப்பியிருக்கவேண்டும்
ஆம்...
நீங்கள் உங்களுக்கெதிராய் முதலில்
புகார் செய்யவேண்டும்
உங்களிடமே
ஈவுஇரக்கமற்று...
கண்ணீர் சிந்தாது.

Saturday, June 19, 2010

காமத்துப்பால் 2




23

வண்ணத்துப்பூச்சிகள்
சபிக்கும் இவ்விரவை
தனிமையின் பெருந்துயர் பற்றி என்மொழியில்
உனக்கொரு கவியெழுத பயன்படுத்துவேன்
அது தன்
இறக்கைகளை அடித்துக்கொண்டு
நிறமற்ற
என் காமத்தின் அனாதைதனத்தை
மொழிபெயர்க்கும்.

24

மின்னும்
இருமுலை நோக்கி
பின்னும்
இரு கண்கள்
நிதம்பமதிர
ஒளிப்பறை கொட்டும் சூரியன்
வெந்துருகும் விரல்களை உதறி
ஆவியெனத்தழுவ
என்முகத்தில்
மின்னும் இருமுலை நோக்கி
பின்னும் இரு கண்கள்

25

வானத்தைத் தானமிடும் கரங்கள் உனக்கு
சகி
ஆகாயம் பார்க்க ஒருமுறை
புணர்ந்தால் என்ன

அதன் விழிநீரை
மழைநீரென
என்னால் மொழிபெயர்க்க இயலாது

26

மழைக்கால
தானம் வேண்டி கரங்கள் நீட்ட
உள்ளங்கைக் கடுங்குளிரில்
பதிக்கிறாய்
நிதம்பவெப்பத்தை

என் கண்ணே...

27

வெப்பம் இளகும்
முன்னொரு கடும்பொழுதில்
என்னுடலை மொழிபெயர்க்க
வந்து விழுகிறது
உன்

அந்தரங்கச்சொற்கள்.

28

காமம் மிகு இரவில்
வானம்
தன்
ஒளியணைய
என்விழியில் மலர்வது
கண்ணே...
உன் யோனி

வெட்கம் தரையில் சிந்த
உன்னிதழில் மலர்வது
யென்குறி.


29

நிதம்பத்தை ஆகாயாத்தில் அழுத்தியுன் உறுதி தந்தாய்
மண்ணில் குறி பதித்து
என் உறுதி நான் தந்தேன்

நாமிருவர் புணர்கையில்
நம்மை வேவு பார்த்தது யார்.

30

உனதுடலின்
கூட்டுத்தொகை
புணர்ந்த வெளிச்சம்

எனதுடலின் கூட்டுத்தொகை
களைப்பின் இருள்.



31

ஒருமுறை
கோபத்தில் உனை நீயும்
கடுங்கோபத்தில்
எனை நானும் புணர்வதாய் சத்தியம் செய்தோம்

உரசிய கைகளில்
பற்றிய வெப்பத்தை
நாம் மீறி
நாமே புணர்ந்தணைத்தோம்.


32

ஒரு
காட்டைத்தணிக்கும்
காற்றைக் கண்டு
கைகொட்டிச் சிரித்தாய்

காடறியும் கண்ணே
புணர்ச்சியில்
நீ
கண்மூடும் பேரழகை.


33

உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
கையளித்த
பீஜமும்
யோனியும்
கல்லறையில் கண்மூடி
தியானத்திலிருக்கின்றன

தோழி
வா
நாம் புணர்வோம்
இன்னொரு கல்லறை தேடி.


34

புணர்ச்சியில் பெருகும் வார்த்தைகளை
தனித்தனியே
எழுதிப்பார்த்தோம்

நல்லது....
நாம் புணரவே செய்திருக்கிறோம்.


35


இறப்பில் சுருங்கியும்
பிறப்பில் விரிவும்
கொள்ளும் கண்கள்
புணர்ச்சியில் தன்னை மறந்து
மூடிக்கொள்கின்றன.

Monday, May 17, 2010

குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்…சிறுமி நேயாவின் நெடுநல்வாடையும்....


1
அப்பா...
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


2
சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.


3
துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.


4
மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.


5
அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....

Sunday, March 14, 2010

ஒரு காதல் கடிதமும்….ஆளற்ற கடற்கரையில் கரையும் கருப்பு நிற காக்கைகளும்….


……….சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல்லப்பட வேண்டியவருக்கு நாம் செலுத்தும் வன்முறையாகவும் மாறுகிறது.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கும் மௌனத்திலிருந்து வார்த்தையின்மைக்கும் தாவிக்கொண்டிருந்தேன் உண்மையில் அது ஒரு ஊசலாட்டம்தான் இருந்துவிட்டுப்போகட்டுமென மனமும் பேசித்தீர் என அடம்பிடிக்கும் நண்பர்களும் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைக்கும் வன்முறையிலிருந்து சதா தப்பியபடியே அலைந்துகொண்டிருந்தவன் நிதானிக்க வேண்டியிருந்தது. நின்றுவிட்டேன். நான் விரும்பிக் கைக்கொண்டிருந்த, எவருக்கும் தர மறுத்த என் அனாதைத்தனத்தை ஒரு சிறு புன்னகையால் பிடுங்கியெறிந்திருக்கிறாள்.வழியும் பெயரற்ற கண்ணீரில் உப்புச்சுவை காற்றில் கரைகிறது.

இப்படியாக......

அவளை சரியாக கடற்கரையில் வைத்து சந்தித்தேன் என்பதை விட பார்த்தேன் என்று சொல்வேன். பார்த்தேன். கவிதைகளையும் கோபங்களையும் உடன் கொண்டு வந்திருந்தாள். நானும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத்தான் போயிருந்தேன். பற்றிக்கொள்ள எதுவும் நடக்கவில்லை. நானறிந்த கவிகளைப் பேசியதைத்தவிர. இன்றுவரை எனக்கு அதில் ஆச்சரியமாய் இருப்பது எந்தப்புள்ளியில் நான் அவளைஅவளை….போகட்டும்….

வாழ்நாள்தோழியாய் வந்து நிற்கிறாள். எதையும் தொலைப்பதில் ஆர்வமுள்ள நான் மிகச்சரியாக என்னைத் தொலைத்திருக்கிறேன். புன்னகையில் கரையும் முகம் அவளுக்கு நித்ராவாகிய அவளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இருக்கிறேன்இருக்கிறேன். இருக்கிறேன்.

வாழ்நாள் தோழனாய் நான் இருப்பேனென்பதை அவளுக்கு அவளை விட அவள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் மீதமர்ந்து சொல்கிறேன்.

நித்ரா உன்னை மிச்சம் வைக்காமல் காதலிப்பேன்னென்பதை நான் உனக்கு வெகு ஆழமாய்ச் சொல்கிறேன். அது என்னையும் இழுத்துச்செல்லும் பாதாளம் என்பதையும் அறிவேன்.

உன் அன்பின் பெருங்கைகளுக்குள் அடக்கிக்கொள் இச்சிறுவுயிரை.

சிறுகுறிப்பு

நண்பர்களின் முகச்சுளிப்புகளை பிரியத்தின் மீது கட்டப்பட்டும் செங்கற்கள் என்பதாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...