Tuesday, February 8, 2011

தேகம் - நாவல்* விமர்சனம்.




 “கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை முனியாண்டியின் நாவலுக்கு எழுதியிருக்கும் தனது விமர்சனத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை இணைத்துத் திரித்து தகிடுதத்தம் செய்திருக்கிறான். அந்தச் சம்பவங்களை உனக்கு உள்ளது உள்ளபடி சொல்லப்போகிறேன் கேள்.”
                                                                       -ஸீரோ டிகிரி. (55)

கதையில் வரும் பாத்திரம் தர்மாவுக்கு சுயமாக சுயமைதுனம் கூடச் செய்யத் தெரியாது என்பது ஒட்டு மொத்த வரிகளினாலும் தெரிகிறது. அவனுக்கு பெண்களைக் கண்டால் பிடிக்கும். ஆனால் வயாதன உடல் ஒத்துழைக்காது, பெண்களை உடல்களால் அணுகமுடியாது வெற்று வரிகளால் அணுகத் தொடங்கும் நிலையே தர்மாவுக்கு வாய்க்கிறது.

தர்மாவுக்கு பன்னி பிடிக்கவும் தெரியாது. பன்னி பிடிப்பது அற்புதமான கலை. உண்மையில் ஆசிரியர் பன்றிகளையே பன்னி என்று தவறாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். பன்றி என்று சொல்லுகையில் அது ஒரு விலங்கு என்றே வாசக மனம் புரிந்துகொள்ளும். ஆனால் பன்னி என்று சொல்லும்போது கூடவே பிய்யும்  மணக்கும்.

இது ஒன்றே போதும் ஆசிரியரின் பன்றி வெறும் கறிப்பன்றி என்று வாசகன் உணர. பன்றியை பொதுவாக வளர்த்து அறுப்பார்கள். ஆனால் பன்னி சுதந்திரத்தின் அடையாளம். அதை வேட்டையாடுவதைத் தவிர வேறு வழியில்லை. மற்றும் பன்றிகளை வளர்ப்பவர்கள்  பன்றிகளுக்கு உயர் ரக காய்கறிகளையே உணவாக வழங்குவர். பன்னிகளுக்கு மலத்தை படைக்க படைக்க முடியாது. அதிகபட்சம் பன்னிகளுக்கு குளுதாடித் தண்ணீர்தான். அதைச் சுமந்து செல்வது என்பது, கடக்கும் தெருவிலுள்ள அனைவரின் நாசியில் பன்னியின் மணத்தை மட்டுமல்லாது சுழற்றிய வண்ணம் இருக்கும் அதன் வால் உட்பட சித்திரமாய் வரும். இறுதியாக பன்றி என்பது பன்னிகளை அவமானப்படுத்தும் சொல்.


காதலைப் பற்றிக் கேட்டால் தர்மாவுக்கு கிழவிகளே ஞாபகம் வருகிறார்கள். தர்மாவுக்கு வதை என்பது உடலில் கூர்மையான அல்லது மொன்னையான ஆயுதங்களை உடலில் குத்திக் கிழிப்பதே. அதையே அவர் வன்முறை என்று நினைக்கிறார். சில சிறுவர்கள் ஓணானை வதைப்பதை பார்த்திருக்கலாம்.

ஒரு உடல் தன் கைக்குக் கிடைக்கும் பட்சத்தில் கருத்துக்களை வைத்து அவ்வுடலைக் கிழிப்பது தர்மாவின் தத்துவம். கொலை செய்வது தர்மாவுக்கு குப்பி கொடுப்பது போன்ற செயல்தான். ஒட்டுமொத்தமாய் நாவல் என்றழைக்கப்படும் இப்புத்தகத்தில் தர்மா தன்னை நிரூபிக்க மட்டுமே எண்ணுகிறான்.

தர்மாவின் கவிதைகள் வாரமலர் புத்தகத்தில் 100 ரூபாய் பரிசு பெறுவதற்கு போடும் போட்டிகள் ஏராளம்.

உடலை தேகம் என்று நாவலாசிரியர் நம்பியதால் வந்த வினை இது. நாவலாசிரியர் தர்மாவைப் பற்றி எழுதும்போது தனது நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்வதை நாவலை வாசிக்கும் வாசகன் உணர முடியும். குப்பி கொடுத்தாவது தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தேகத்தின் வரிகள் முழுக்க சிதறிக் கிடக்கிறது.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தான் 3 வருடங்கள் ஆண் விபச்சாரகனாய் இருந்ததையே தேகம் எனும் நாவலாய் எழுதிவருகிறேன் என குறிப்பிட்டார். அப்பொழுது இதில் வரும் தர்மாவுக்கு பெண்கள் பற்றின கனவுகளை ஆசிரியர் சாரு நிவேதிதாவின் கனவுகளாகக் கொள்ளலாம்.

இயக்குனர் மிஷ்கின் நாவலை வீட்டில் வைத்துப் படிக்கமுடியாது என்று சொன்னதை சாருநிவேதிதாவின் உளவியலைக் கணக்கிட்டே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் நடக்கும் உடல் உரையாடல்களை முடிந்தளவுக்கு குழப்பியதோடு அதை மிகக் கேவலமான ஒன்றாய், காமத்துக்கு எதிரே பழஞ்சாமியார்கள் சொல்வது போல் எழுதியிருப்பதே.

காமம் தவறு என்று கருதும் ஒரு சாமியாரின் தத்துவமனநிலையும், மறைமுகமாகவேணும் அதை செய்வது எப்படி என தெரியாது குஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டே அலையும் ஆணாதிக்கப் பதிவுகள் நிரம்பிய நாவலே இது. இது சம்பந்தமாக அவர் இதற்கு முன்னால் எழுதியிருந்த ராஸலீலாவில் முனியாண்டிக்கு முதல் மனைவி எட்டிக்கசப்பு. நாவல் முழுக்க அவரது x மனைவி வாழும் காலந்தோறும் முனியாணியின் விரைகளில் மேல் நசுக்கியப்டியே இருக்கிறார் என்பது முனியாண்டி சொல்லித் தெரிகிறது. அந்நாவலில் முதல் மனைவியை எவ்வளவுக்கெவ்வளவு அருவெறுக்கச் செய்யவேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு அறுவெறுக்கச் செய்து இந்நாள் மனைவியை தேவதை ஸதானத்தில் முனியாண்டி சொல்லியிருப்பான். இரண்டாவது மனைவி அந்நாவலில் முனியாண்டிக்குச் செய்யும் சேவைகளாவன, முனியாண்டிக்கு வரும் வெளிநாட்டுப் பெண்களில் காம அழைப்பைத் தவிர்க்கும் வேலை. இரண்டாவது முனியாண்டிக்கு கருவாட்டித் தொக்கு வைத்து பரிமாறும் தேவதை. அவ்வளவே.

ராஸ லீலாவையும் தேகத்தையும் ஒப்பீட்டில் வைத்துப் பார்த்தால் இது ராஸலீலாவின் இன்னொரு அத்தியாயமே.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாருவின் நாவல்களில் பெண்கள் ஒன்று காலை விரிக்கவேண்டும். ( கதையில் வரும் ஆணுக்கோ பேச மட்டுமே தெரியும் ) இரண்டு சமைத்துப் போடவேண்டும். நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் செய்யும் வேலைகள் இவையே.

கி.ரா, கழனியூரான்  இருவரும் தொகுத்த பாலியல் கதைகளில் வரும் அனுபவமொழிகள், மனிதன் காமத்தை எவ்வளவு விருப்பமாய், விளையாட்டாய், படைக்கும் கருவியாய், காமத்தை அணுகுகிறான் என்ற பதிவுகள் பக்கத்துக்குப் பக்கம் நிரம்பிக்கிடக்கும். எடுத்துக்காட்டாக, வயதாகிவிட்ட பின்னும் காமம் தேவைதானா  என    ஒரு கிழவி, தனது கிழவரான கணவனை வீட்டை விட்டு வெளியே போய் படுக்கச் சொல்ல கிழவர் இரவில் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராது  “ அரைச் சொட்டோ ஒரு சொட்டோ மனுசப் பயலத் தூங்கவிடுதா” என்று சொல்லுவார்.

பொதுக் கழிப்பறைகளில் கிறுக்கப்படும் உறுப்பு விளக்கப் படங்கள் கிறுக்கிய ஆணின்   கற்பனைக்கேற்ப ஆணுறுப்பு நீட்டப்பட்டிருக்கும். உறுப்பு பெரிதாய்   இருந்தால் சுகம் அதிகம் என்று நம்புகிற மனம்தான் இந்த நாவலில் மையப்பாத்திரம் தர்மா.

காமத்தில் அனுபவம் கொண்ட, அது ஒரே ஒரு தடவை புணர்ச்சி அனுபவம் கொண்டவராய் இருந்தாலும், தேகம் நாவலைப் படித்தால். சிறிய புன்னகை சிந்தகூடும். ழார் பத்தாய் பற்றி பேசும் ஆசிரியர் அன்றாடம் நடக்கும் புணர்ச்சி விசயங்கள் கூட தெரியாது தன்னைத் தேடி பெண்கள் வருவதாய் எழுதும் மர்மம் என்னவென்றே சிந்திப்பார்கள். தேகம் காமத்தை சீரழிவான ஒன்று என்று கருதும் மனநிலை கொண்ட எழுத்து. அவ்வளவே.

நாவலில் பின்னடையில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் பின் குறிப்பு அவரின் வாசிப்புத் திறனைக் காட்டுகிறது. இதே குறிப்பை குற்றவியல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து பல பாகங்களாக உயிர்மை வெளியிடும் பட்சத்தில் இவ்விமர்சனத்தை அப்படியே போடலாம். ஒரு பதிப்பாளர் இவ்வளவு மட்டமான வாசிப்பைக் கைக்கொள்ளக்கூடாதென்பது என் வாசக மதிப்பீடு.

 “வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையே உள்ள மனிதகுலத்தின் சமூக பண்பாட்டு வரலாறுகளை துப்பாகியின் கருகிய குழல் மூலம் ராஜேஷ் குமார் பதிவுசெய்கிறார். வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கனேஷ் வசந்தைப் போல பரத் சுசீலாவும் குற்றங்களை நீதியின் வெளிச்சத்தில் கண்டுணர்கிறார்கள். முக்கியமாக நகுலனின் சுசீலாவைப் போல ராஜேஷ் குமாரின் சுசீலா காமத்தை இரவுகளில் மறப்பதில்லை. சுசீலா பகல்களின் வெளிச்சத்தில் தானணியும் டீ ஷர்டுகளில் அவளது சுதந்திர வாசகங்களைப் பொறித்து அணிகிறாள். அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதோடு. இந்நூலை அனைவரும் விலைக் கழிவில்லாது வாங்கிப் படித்து உதவவேண்டும்.”

என்று மனுஷ்ய புத்திரன் எழுதும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

குறிப்பு;

 *
புத்தகத்தின் முன்னட்டையில் நாவல் என்று பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாவல் எனும் வரையறைக்குள் ஒரு வாசகனாக என்னால் இதை பொருத்திப் பார்க்க முடியவில்லை. தேகம் ஒரு அரிப்பு என்று இருந்திருக்கலாம், அல்லது ராஸலீலாவில் விடு பட்ட பகுதி என்று குறிப்பிட்டிருக்கலாம். விமர்சனத்தில் நான் நாவல் என்று பயன்படுத்திய இடத்திலெல்லாம் மேற்குறிப்பிட்ட பதத்தையே உச்சரிக்குமாறு வேண்டுகிறேன்.


 “பின் குறிப்பு;


A Mystical Experience !
பரமஹம்ஸ நித்யானந்தருடன் நீங்கள் இருந்த நான்கு நாட்களையும் பற்றிச் சொல்லுங்கள்.
( விஷால் இன்று காலை தொலைபேசியில் கேட்ட கேள்வி)

நம் வாழ்வில் நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிச் சொல்லும்போது அது மற்றவர்களுக்கு தமாஷாகத் தெரியலாம். வாழ்வில் தமாஷ் பண்ணவும், சிரித்து மகிழவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமானுஷ்யமான விஷயங்களை வைத்து ஏன் தமாஷ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அனுபவித்த அற்புதத்தை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேண்டுமானால் நானே நித்யானந்தராக மாற வேண்டும். அது சாத்தியமில்லை.”          

 17.08.2009 ( அருகில் வராதே சாரு நிவேதிதா- உயிர்மைப் பதிப்பகம்)

 “.....போக நுகர்ச்சி என்பது நாய் பன்றி முதலிய உடல்கள் வாயிலாகவும் நரகங்களிலும் கூட அனுபவிக்கப்படுகிறது.

-         அத்யாத்ம ராமாயணம்:
 ஸர்கம் 4, ஸ்லோகம் 50.

7 comments:

  1. நல்ல இருக்கு வசு மித்ர...
    ஒரு சந்தேகம்: கட்டுரையில் ராஜேஷ்குமார் -விவேக் ரூபலா என்று நினைக்கிறேன்
    ப.கோ. பிரபாகர் கதையில் தான் பரத் சுசீலா : வெகு நாட்கள் ஆயிற்று இது சரி பார்த்து கொள்ளவும் நண்பரே

    ReplyDelete
  2. நன்றிகள் வேல் கண்ணன். ராஜேஸ்குமார்=விவேக் ரூபலா, பட்டுக்கோட்டை பிரபாகர் = பரத் சுசிலா,
    சாரு நிவேதிதா = முனியாண்டி, கண்ணாயிரம், தர்மா.

    திருத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வசு மித்ர, முதலில் நன்றி.
    தேகம் உலோகம், யாமம் மூன்றும் படித்துவிட்டு விமர்சனம் எழுதவேண்டுமென்ற கோபம் வெகுவாக எழுந்தது. எழுதிய ஒரு விமர்சனத்துக்கே நண்பர்கள் இது தேவையற்ற வேலை என்று சொன்னதனால் சும்மா இருந்துவிட்டேன். தேகம் பற்றி எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்கள். உலோகம், யாமம் இரண்டையும் படியுங்கள் அதற்கும் விமர்சனம் எழுதினால் மகிழ்வேன்.இந்த மும்மூர்த்திகள் செய்வது சகிக்கமுடியவில்லை.
    ராஜேஸ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றவர்கள் வெறும் பொழுதுபோக்குக்காக எழுதுகிறார்கள், ஆனால் இவர்கள் இலக்கியப் போர்வை, பெருமை, ஒளிவட்டம் எல்லாம் தனக்குத் தானே போட்டுக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
  4. மனுஷ்யபுத்ரனின் பின்னட்டை வாசகங்களைப் பற்றிய கருத்தை தவிர நாவல் குறித்த பொது விமர்சனத்தில் முரண்படுகிறேன்.

    ReplyDelete
  5. வணக்கம் கோநா, முயற்சி செய்கிறேன்.

    வணக்கம் லதா மகன். நாவல் குறித்த எனது விமர்சனத்தில் நீங்கள் தாரளாமாக முரண்படலாம். பின்னட்டை குறிப்பை தாங்கள் ஏற்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பின்னட்டைக் குறிப்பைத்தான் தன் நாவலுக்கு வந்த அற்புதமான விமர்சனம் என்கிறார் சாரு நிவேதிதா. வாசகனை மடையனாக்க பதிப்பாசிரியரும் எழுத்தாளரும் இந்த அளவில் கூட்டுச் சேரும் போது நான் என்ன செய்ய முடியும்.

    தேகம் பற்றின உங்கள் கருத்தைச் சொன்னால் நான் மகிழ்வேன். எந்த இடத்தில் உங்கள் முரண்பாடு என தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும்.

    ReplyDelete
  6. வசுமித்ர..
    மிகத் தெளிவான விமர்சனம்...
    நாவல் படித்து முடித்த பின் எனக்கு பெரிய அளவு தாக்கம் எதுவும் ஏற்படவில்லை... வியாபாரத் தந்திரமோ ????
    எனது Google Buzz ல் இந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன். ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.
    நன்றி.

    உங்கள் வாசிப்பனுபவமும் அதை தெளிவாய் வெளிபடுத்தும் மொழிநடையும் என் போன்று ஆரம்ப நிலை வாசகர்களுக்கு ஒரு ஊன்றுகோலாய் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
    ~பாலா

    ReplyDelete
  7. வணக்கம் பாலா...பதியுங்கள். எனக்கு ஆட்சேபனையில்லை. ஆரம்பநிலை வாசகன் என்ற பதத்தை ஜெயமோகினி தன் வாசக வட்டத்துக்காக பயன்படுத்தி அதை மலிந்த சொல்லாக்கிவிட்டார். நீங்கள் அப்படி எதையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து வாசியுங்கள். விமர்சியுங்கள்.

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...