Friday, April 4, 2014

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்......




இந்த வக்கிர நோய்  எங்கு தொடங்கியது, எப்படி தொடங்கும், எவர்கள் சந்தித்தால், இந்த நோய் தொற்றி முற்றும் நிலைக்குப் போகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்... இவக்கிரத்தைத் தூண்டியவர்களை, உற்சாகமூட்டி இதில் குளிர்காயும் பழைய நண்பர்களையும் நான் அறிவேன். இலக்கிய வியாதிகளென என்னை அறிந்தவர்கள் எக்காளம் கொட்டி தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டால், என்னால் இனி குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கமுடியாது என்பதை இக்கணம் அறிவிக்கிறேன். எதையோ பேசுவது போல்... எங்கையோ ஒரு உரையாடலைத் தொடங்கி... கடைசியில் இங்கு வந்து முடிவதன் மர்மம் அறிகிறேன் நண்பர்களே...அவ்வாறு அறியப்பட்டவர்களே...

நான் பிறந்த ஊரான, போடிநாயக்கனூர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. காடு மேடெல்லாம் சுத்துனாலும் கண்டமானூரான் கவுட்டுக்குள்ளதான்னு... அந்தப் பழமொழியின் சூத்திரம் எனக்குப் புரிய இத்தனை நாளாகிவிட்டது. நான் கொஞ்சம் மந்தம்தான். ஆகவே.... இவ்வக்கிரத்திற்குத் துணைநின்ற, நண்பர்களாக நான் நினைத்தவர்கள்.. சேர்ந்து  உண்டு உறங்கியவர்கள்...மற்றும், இதன் பின்னால் இருக்கும் நோய்க்குறிகள் அனைத்தையும் எழுத ஆவலாக உள்ளேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

எவன் குடும்பம் எப்படிப் போனால் என்ன..  என் குடும்பம்.. என் பெயர்... என் மானம்... என் மரியாதை என காத்துக்கொள்ளும் அவர்கள் பற்றி,  எனக்கு இனி துளிக் கவலையில்லை என அறிவிக்கிறேன். என்னைப் பேச வைத்து அழகு பார்த்து நீதியும் சொல்லும் அவர்களுக்கு அவர்களைப் பற்றிச் சொல்ல எனக்கு வாய்த்த இந்நல்வாய்ப்பை நான் நழுவவிட மனம் இல்லை.

இதில் முக்கியமான விசயமாக நான் கருதுவது ஒன்றே ஒன்றேதான். திரு கார்க்கி மனோகரன் அவர்கள் வழக்குத் தொடரவேண்டும். அவதூறு என நிருபீக்க வேண்டும். அப்படி  இல்லாத பட்சத்தில் நான் வழக்குத் தொடர்வேன். அது சம்பந்தப்பட்ட ரகசிய வியாதி பீடித்தவர்களை... சில பல குடும்பங்களை, குடும்பமல்லாத இணைப்பில் வாழும் நபர்களின் பெயரை,  வழக்கில் இணைத்துத் தாங்கி நிற்கும்.

இதற்கு மேல் அமைதியாய் இருப்பதென்பது எனக்கு நானே அளித்துக் கொண்டும் தண்டனையாக உணர்வதோடு, எனக்கு நானே சொல்லிக் கொண்ட... இது அடுத்தவர் வாழ்க்கை.... அந்தரங்கம்... சுயமரியாதை... கருணை..இரக்கம் என எண்ணத்தூண்டும் எனது வாசிப்பை, எனது சுயமரியாதையை தள்ளி வைத்ததோடு மட்டுமல்லாது அதன்  மீது காறி உமிழ்ந்துவிட்டு இதன் பின்னால் இருக்கும் நண்பர்களாக அறியப்பட்ட அந்த நல்லிதயங்களின் பெயர்களை நானே நேரடியாக இதை வழக்கில் சேர்த்து எழுதுவேன்.  நெடுஞ்சாண்கிடையாக வழக்கில் வந்து விழுங்கள் என அன்போடு வரவேற்கிறேன். 

எந்தப்பக்கம் சுண்டினாலும் பூ விழும் நாணயம் கள்ள நாணயமென அறிவிப்பேன். இனி தலையும் விழும். மேற்கண்ட வழக்கிற்காகக் காத்திருக்கிறேன். வாழ்க்கை பன்முகம் கொண்ட இட்லி. அஃது வெந்துவிட்டதா எனக் குத்திப் பார்க்க எனது சுட்டுவிரலால் அழுத்தத் தலைப்பட்டுவிட்டேன்.

சிறு குறிப்பு;
இனி இவ்விவாதம் குறித்து


இது எனக்குத் தெரியாது...
இதை நான் வாசிக்கவில்லை...
அய்யோ அப்படியா...
எனக்குத் தெரியாதே....
எனக்கு இருபக்க நீதியும் தெரியாது....
எல்லோருமே நண்பர்கள் இதில் நான் யாரைப் பேசுவது..
பொதுப்பதிவு
தனிப்பதிவு
உள்பதிவு நடுப்பதிவு.....எனச் சமாளிக்கும் வேலைக்கு ஆள் நானில்லை.

முடிவாக.... மேற்கண்ட சொத்தைப் பற்களால் கட்டப்பட்டிருக்கும் கள்ள மௌன வாய்களுக்கு வெளியே தொங்கும், அவ்விறுகிய பூட்டுக்களின் வாயை சாவியால் அல்ல, நான் அறிந்த அ(ர)றத்தால் ராவித் திறப்பேன் என்பதை மிக்க பணிவன்புடன் அறிவிக்கிறேன். கூச்சங்கள் அழிக.

தொடங்கிவிட்டு..... இவ்விவாதத்தில்  எண்ணெய்யை தள்ளி நின்று ஊற்றும் அவ்வாத்மாக்களுக்கு, இனி என் வரிகள் அறம் பாடுமென சொல்லிக்கொள்கிறேன். ஆமென். எனது வீட்டில் நடந்த விசயங்களைக் கேட்க ஆவலாக இருக்கும் அவர்களுக்கு, அவர்களோடு இருந்து என் வீட்டில் என்ன நடந்தது எவரெவர் நியாயவாதிகள் என வெளிச்சமிடுவதில் எனக்கு சந்தோஷம் தான். அது என் சுயசரிதையின் வேண்டாத பக்கங்களாய் இருந்தாலும், சொல்ல எனக்கு ஒரு தொல்லை இல்லைதான். உண்மைகளை கூச்சங்களின் மேலோ, நட்பென்னும் நடிப்பின் ஊத்தைத் தனத்திலோ இனி பொத்த முடியாது. நாறத்தொடங்கினால் தொடங்கட்டும்.

கவலைகள் ஒழிக.


1 comment:

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...