Wednesday, March 2, 2011
Tuesday, March 1, 2011
சிறையதிகாரிக்கு விண்ணப்பம் - ஊர்வசி. 1984
ஐயா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவைதைகளையும்
என்னால் தடுக்கமுடியாது
ஏனெனில்,
நான் கைதி
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
‘பயங்கரவாதி’.
உரத்துக் கத்தி அல்லது முனகி
எனது வேதனையைக்
குறைக்கக்கூட முடியாதபோது
எனது புண்களில்
பெயர் தெரியாத எரிதிராவகம்
ஊற்றப்படும் போது
எதையும் எதிர்த்து
எனது சுண்டுவிரலும் அசையாது.
மேலும் அது
என்னால் முடியாதது என்பதும்
உங்களூக்கு நன்றாகத் தெரியும்.
அதனால்தான் ஐயா.
ஒரு தாழ்மையான விண்ணப்பம்
என்னை அடைக்கிற இடத்தில்
எட்டாத உயரத்திலாயினும்
ஒரு சிறு சாளரம் வேண்டும்
அல்லது, கூரையில்
இரண்டு கையகல துவாரம் வேண்டும்
சத்தியமான வார்த்தை இது.
தப்பிச் செல்லத் தேடும் மார்க்கமல்ல
தகிக்கும் எனது ரணங்களில்
காற்று வந்து சற்றே தடவட்டும்
சிறுதுண்டு மேகம்
மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும்
மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில்
எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
தாண்டிப் பறப்பதில், நான்
இதுவரை வாழ்ந்த உலகில்
என் மனிதரைக் காண்பேன்.
பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும்
ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா.
- மரணத்துள் வாழ்வோம்.
பக்கம் 103- 108
விடியல் பதிப்பகம்.
Saturday, February 19, 2011
இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்.
இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்
காலம் இருளாயிருக்கிறது அடிமையே.
ஆம் இளவரசியே…
இருள் வாசனையாகவும் இருகிறது.
அடிமையே நான் அறிந்து உனக்கு வாசனைப் புலன்கள் அடைத்து விட்டதாகவே எண்ணினேன்.
ஆம் இளவரசி. உங்கள் வலிமை பொருந்திய நா, அடிமையின் முன் எப்பொழுதும் சற்றும் சஞ்சலமில்லாது, உண்மையை உரைப்பதாகவே இருக்கிறது. இளவரசி தன் புருவத்தை உயர்த்தத்தொடங்கினாள்.
அடிமை தோள்களைத் தளரச்செய்து இயல்பாய் குனிந்து இளவரசியே நான் நிற்கலாமா. இளவரசி தனங்களை குழைத்து ‘ம்’ என்றாள்.
அடிமை மண்டியிட்டபடி இளவரசி... சொற்களை சைகையால் இசைத்து, அதன் அர்த்தங்களை இறுக வைக்கும் தங்களது இரு புருவங்களில் இடது புற புருவத்தை இறக்குவீர்களானால் நான் உங்கள் முன் பயமற்றுப் பேசமுடியும். பேசு அடிமையே. முதலில் இளவரசியின் முகம் பார்த்து பேச நினைத்தவன் பின் பார்வையை பூமிக்கு இறக்கி.. நான் உங்கள் நாவில் விளையும் நிமிர்ந்த சொல்லுக்கு எப்பொழுதும் தலைவணங்குபவன். என் கண்கள் எப்பொழுதும் அடிமைக்குண்டான துயருடனே இருப்பதை தாங்கள் அறீவீர்கள். அடிமையின் முன் மட்டுமல்ல பேரரசர்களின் வாளின் முன்னும் உங்கள் குணங்கள் மணம் வீசத் தயங்கியதேயில்லை. உங்கள் அலங்காரங்கள் எப்பொழுதும் உங்களுக்கானதாகவே இருக்கிறது. எவர் பொருட்டும் நாணாத சொல்லுக்கு மட்டுமே உங்கள் இதழ் திறக்கிறது.
இளவரசி அடிமையின் பாதவிரல்களைப் பார்ப்பது தனக்கிழுக்கு என நினைத்தவாறு, எனக்குப் புரிகிறது அடிமையே நீ வலியறிந்தவன். கண்களை உள்ளுக்கிழுத்தபடி அடிமை சொல்லத்தொடங்கினான்.
மன்னித்துவிடுங்கள் இளவரசி நான் அடிமை என்று எப்பொழுது எண்ணத் தொடங்கினேனோ, அப்பொழுதே என்னை நான் தனிமைக்கு பருக கொடுத்தேன். தனிமை, அகண்ட வாய்களையும் பெரும் கூரான அம்பெனச் சுழலும் நாவையும் கொண்டது. அதன் பற்கள் கனவுகளையும், கனவு காணும் விழிகளையும் கசக்கிச் சாறு பிழியும் தன்மையும் கொண்டது.
ஆம் இளவரசியே... அஃது, உள்ளது உள்ளபடி முதலில் என் விழிகளைத்தான் காவு கொண்டது. அது வலிதரும் விதத்தில்தான் என்னை வந்தணுகுமென ஏமாந்து என் உடலில் வலிமையேற்றி, எதிர்க்கும் துணிவோடு காத்திருந்தேன். முட்டாள் என்று என்னை எனக்கு அது மிகவும் வன்முறையோடு அடையாளப்படுத்தியது. அடிமையின் சொற்களை தற்சமயம் கேட்கும் நிலையிலிருந்த இளவரசி, அவன் உடலைப் பாராது, வனமெங்கும் பச்சை இலைகளை வரைந்து வைத்திருக்கும் வனத்தைப் பார்வைக்கு வைத்தபடி ஏன் அடிமையே எப்படி அதை அனுபவித்தாய் என தன் வார்த்தையை முடிக்கையில்,
தற்சமயம் கேட்கும் அடிமை தன் தலையை வானம் பார்த்து குவித்தபடி தொடங்கினான்.
இளவரசியே... ஒரு அடிமை அறிந்ததை விட இளவரசி நீங்களும் உங்கள் புலன்களும் அனுபவித்தவை ஏராளம். ஓர் அடிமை சொல்லி தாங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்றுமில்லை. இருந்தாலும் இவ்வடிமையின் சொற்களுக்கு அமைதி காக்கும் உங்கள் பேரன்பில் விளையும், நெற்கதிரொத்த அன்புக்கு நானும் என் வார்த்தைகளும் இருப்பதில் ஆனந்தமடைகிறேன். கேளுங்கள் இளவரசியே… மன்னித்து விடுங்கள். கேளுங்கள் என அகம்பாவத்தோடு சொல்லியது தவறுதான். கேளுங்கள் என நான் சொன்ன என் அகம்பாவத்தை மன்னித்து விடுங்கள் சொல்கிறேன் எனத்தொடங்கி சொல்லியிருக்க வேண்டும்.
நிறுத்திக்கொள் அடிமையே.. உன் பணிவான சொற்களை. உன் உடம்பில் பாயும் குருதியின் வெளிச்சம் என் நிழலால்தான் என்பதை நீ எனக்கு ஞாபக மூட்டவேண்டியதில்லை. கொடுப்பவளுக்குத் தெரியும், உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் பொருளின் இறுக்கம்.
நன்றி இளவரசியே உங்கள் இதழால் என்னை மன்னித்ததற்கு. நான் தனிமையை எனக்கு என் உடலுக்கு, என் வாக்கிற்கு அறிமுகப்படுத்தியபோது, அது கொடுங்காட்டின் ஒற்றை உடல் கொண்ட சர்ப்பமாக வழிந்து நெளிந்து கொண்டிருந்தது. அதன் கூரிய பற்கள் எப்பொழுது பதியுமோவென என் தசைகள் புணர்ச்சிக்குத் தயாராவது போல் நடுக்கத்துடனே, அல்லது எதிர்பார்த்தபடி தசையை தின்னுமோ என்கிற அச்சம் தவிர வேறெதுவுமில்லை. ஆனாலும் தனிமை எனக்கு உற்ற துணையாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
இளவரசி கரும் விழிகளால் அடிமையின் உடலை ஒருமுறை வெறுப்பும் கசப்பும் நிரம்பித்துள்ளும் பார்வையால் நோட்டமிடுவதையும், உணர்ந்த அடிமை, தனிமைதான் இப்பொழுது தன்னை கவ்வியிழுக்கிறதென உணர்ந்து தசைகளை இறுக்கிக்கொண்டபடி இளவரசி அருகில் பயமின்றி தனிமை தன்னுடலில் எப்படி பயமின்றி ஆட்சிசெய்யமுடியும் என்ற குழப்பத்தோடு நிமிர்ந்தவன் விழிகளை மறைத்துக்கொண்டிருந்தது, இளவரசியின் கரும்நிற பாவைகள்.
திடுக்கிட்டபடி கால்கள் உதற இளவரசி... என்ற சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிப்பும் பயமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அவனுடலை திருப்தியோடு விழிகளால் விழுங்கியவாறு, தான் அவன் பயத்தை உண்டு வாழ்வதை அவனுக்கு காட்டிக்கொடுக்கக்கூடாதென்ற சிறு விதியுடன் ஏன் அடிமையே உரையாடலில் எடுத்துக்காட்டென நீ சொன்ன புணர்ச்சி என்கிற வார்த்தையை எப்படி அச்சத்துக்கு நிறையான சொல்லாக முன்வைத்தாய், அது வெறும் வார்த்தைதானா, அல்லது அனுபவத்தின் சதையறிந்த சொல்லா, இல்லை என்னுடலை அவ்வார்த்தையின் முன் வைக்கும் உன் விருப்பமா…ம். என்றாள்.
தயங்கி தன்னுடலை தானே அறுவெறுப்போடும், தானே அப்பார்வையை தன்னுடலுக்கு தன் விருப்பமின்றித் தருவதால் கூசிச்சுருங்கும் நரம்புகளையும் அகத்தால் பார்த்தபடி மனதின் பற்களால் தான் கூறிய வார்த்தை, இளவரசியின் ஆளுமை உடலில், திமிந்த தசையின் நுண்ணிய துவாரத்தில் சொறுகிவிட்டது. இப்பொழுது வந்து வீழ்ந்தது, துவாரத்தில் சொறுகிய வார்த்தையின் வழி கசியும் சிறு நிணத்துளியே, எனபதுடன் தான் காவு கொள்ளப்படுவோம் என்ற உறுதியான சிந்தனையுடன் கெண்டைக்கால்களை இறுக்கமாக்கி மரணத்தின் முன் ஒன்றும் செய்ய இயலாது, காலம் தோறும் முயன்று அதன்முன் தோல்வியை வைத்துவிட்டுப்போன தன் மூதாதையரை நினைத்து, ஒரு துளிக் கண்ணீர் சிந்தினால் கூட இளவரசியின் முன் அடிமை உணர்ச்சியைக் காட்டக்கூடாது என்ற அடிமையின் அகராதி மனதில் விரிந்து, காற்றில் படபடத்தலைய கன்னங்களால் காற்றை உள்ளுக்கிழுத்து. அடிமை பிதற்றத் தொடங்கினான்.
இளவரசி... ஒரு அடிமை தன்னைக் கொல்லுங்கள் என்றோ, அல்லது தண்டியுங்கள் என்றோ ஆள்வோருக்கு வேண்டுகோள்களாகவோ விருப்பமாகவோ, அல்லது தன்னிச்சையாகக் கூடக் கூறக் கூடாதென்பதையும், நீங்கள் உங்கள் தகுதியையும் தாண்டி எளிய ஜீவன் என்ற கருணையோடு பார்க்கும் என்னுடலும் மனமும் அறியும் தேவி. நான் பிழை செய்தது உங்கள் அன்பின் பார்வையில் எப்படி என்னுடல் மீறி விழுந்து பதிந்தது என்பதையறியா என் அகத்தை சுட்டுப்பொசுக்குங்கள் உடலை காகங்களுக்கு உங்கள் தேச எல்லை தாண்டி கொண்டு செல்லச் செய்து கொத்தி உண்ணவிடுங்கள். வார்த்தைகளை மேலும் மேலும் இறைப்பதால் தன் சாவினால் கூட இளவரசியை திருப்தி செய்யாமல் போய்விடக்கூடும் என்ற பதைபதைப்பில் தன் நாவைத் தின்ன வரும் வார்த்தைகளை பற்களால் அரைத்து விழுங்கியபடி அமைதியாகி கண்கள் தாழ தரையைப் பார்த்தபடி நின்றான் அடிமை.
Tuesday, February 8, 2011
தேகம் - நாவல்* விமர்சனம்.
“கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை முனியாண்டியின் நாவலுக்கு எழுதியிருக்கும் தனது விமர்சனத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை இணைத்துத் திரித்து தகிடுதத்தம் செய்திருக்கிறான். அந்தச் சம்பவங்களை உனக்கு உள்ளது உள்ளபடி சொல்லப்போகிறேன் கேள்.”
-ஸீரோ டிகிரி. (55)
கதையில் வரும் பாத்திரம் தர்மாவுக்கு சுயமாக சுயமைதுனம் கூடச் செய்யத் தெரியாது என்பது ஒட்டு மொத்த வரிகளினாலும் தெரிகிறது. அவனுக்கு பெண்களைக் கண்டால் பிடிக்கும். ஆனால் வயாதன உடல் ஒத்துழைக்காது, பெண்களை உடல்களால் அணுகமுடியாது வெற்று வரிகளால் அணுகத் தொடங்கும் நிலையே தர்மாவுக்கு வாய்க்கிறது.
தர்மாவுக்கு பன்னி பிடிக்கவும் தெரியாது. பன்னி பிடிப்பது அற்புதமான கலை. உண்மையில் ஆசிரியர் பன்றிகளையே பன்னி என்று தவறாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். பன்றி என்று சொல்லுகையில் அது ஒரு விலங்கு என்றே வாசக மனம் புரிந்துகொள்ளும். ஆனால் பன்னி என்று சொல்லும்போது கூடவே பிய்யும் மணக்கும்.
இது ஒன்றே போதும் ஆசிரியரின் பன்றி வெறும் கறிப்பன்றி என்று வாசகன் உணர. பன்றியை பொதுவாக வளர்த்து அறுப்பார்கள். ஆனால் பன்னி சுதந்திரத்தின் அடையாளம். அதை வேட்டையாடுவதைத் தவிர வேறு வழியில்லை. மற்றும் பன்றிகளை வளர்ப்பவர்கள் பன்றிகளுக்கு உயர் ரக காய்கறிகளையே உணவாக வழங்குவர். பன்னிகளுக்கு மலத்தை படைக்க படைக்க முடியாது. அதிகபட்சம் பன்னிகளுக்கு குளுதாடித் தண்ணீர்தான். அதைச் சுமந்து செல்வது என்பது, கடக்கும் தெருவிலுள்ள அனைவரின் நாசியில் பன்னியின் மணத்தை மட்டுமல்லாது சுழற்றிய வண்ணம் இருக்கும் அதன் வால் உட்பட சித்திரமாய் வரும். இறுதியாக பன்றி என்பது பன்னிகளை அவமானப்படுத்தும் சொல்.
காதலைப் பற்றிக் கேட்டால் தர்மாவுக்கு கிழவிகளே ஞாபகம் வருகிறார்கள். தர்மாவுக்கு வதை என்பது உடலில் கூர்மையான அல்லது மொன்னையான ஆயுதங்களை உடலில் குத்திக் கிழிப்பதே. அதையே அவர் வன்முறை என்று நினைக்கிறார். சில சிறுவர்கள் ஓணானை வதைப்பதை பார்த்திருக்கலாம்.
ஒரு உடல் தன் கைக்குக் கிடைக்கும் பட்சத்தில் கருத்துக்களை வைத்து அவ்வுடலைக் கிழிப்பது தர்மாவின் தத்துவம். கொலை செய்வது தர்மாவுக்கு குப்பி கொடுப்பது போன்ற செயல்தான். ஒட்டுமொத்தமாய் நாவல் என்றழைக்கப்படும் இப்புத்தகத்தில் தர்மா தன்னை நிரூபிக்க மட்டுமே எண்ணுகிறான்.
தர்மாவின் கவிதைகள் வாரமலர் புத்தகத்தில் 100 ரூபாய் பரிசு பெறுவதற்கு போடும் போட்டிகள் ஏராளம்.
உடலை தேகம் என்று நாவலாசிரியர் நம்பியதால் வந்த வினை இது. நாவலாசிரியர் தர்மாவைப் பற்றி எழுதும்போது தனது நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்வதை நாவலை வாசிக்கும் வாசகன் உணர முடியும். குப்பி கொடுத்தாவது தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தேகத்தின் வரிகள் முழுக்க சிதறிக் கிடக்கிறது.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தான் 3 வருடங்கள் ஆண் விபச்சாரகனாய் இருந்ததையே தேகம் எனும் நாவலாய் எழுதிவருகிறேன் என குறிப்பிட்டார். அப்பொழுது இதில் வரும் தர்மாவுக்கு பெண்கள் பற்றின கனவுகளை ஆசிரியர் சாரு நிவேதிதாவின் கனவுகளாகக் கொள்ளலாம்.
இயக்குனர் மிஷ்கின் நாவலை வீட்டில் வைத்துப் படிக்கமுடியாது என்று சொன்னதை சாருநிவேதிதாவின் உளவியலைக் கணக்கிட்டே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் நடக்கும் உடல் உரையாடல்களை முடிந்தளவுக்கு குழப்பியதோடு அதை மிகக் கேவலமான ஒன்றாய், காமத்துக்கு எதிரே பழஞ்சாமியார்கள் சொல்வது போல் எழுதியிருப்பதே.
காமம் தவறு என்று கருதும் ஒரு சாமியாரின் தத்துவமனநிலையும், மறைமுகமாகவேணும் அதை செய்வது எப்படி என தெரியாது குஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டே அலையும் ஆணாதிக்கப் பதிவுகள் நிரம்பிய நாவலே இது. இது சம்பந்தமாக அவர் இதற்கு முன்னால் எழுதியிருந்த ராஸலீலாவில் முனியாண்டிக்கு முதல் மனைவி எட்டிக்கசப்பு. நாவல் முழுக்க அவரது x மனைவி வாழும் காலந்தோறும் முனியாணியின் விரைகளில் மேல் நசுக்கியப்டியே இருக்கிறார் என்பது முனியாண்டி சொல்லித் தெரிகிறது. அந்நாவலில் முதல் மனைவியை எவ்வளவுக்கெவ்வளவு அருவெறுக்கச் செய்யவேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு அறுவெறுக்கச் செய்து இந்நாள் மனைவியை தேவதை ஸதானத்தில் முனியாண்டி சொல்லியிருப்பான். இரண்டாவது மனைவி அந்நாவலில் முனியாண்டிக்குச் செய்யும் சேவைகளாவன, முனியாண்டிக்கு வரும் வெளிநாட்டுப் பெண்களில் காம அழைப்பைத் தவிர்க்கும் வேலை. இரண்டாவது முனியாண்டிக்கு கருவாட்டித் தொக்கு வைத்து பரிமாறும் தேவதை. அவ்வளவே.
ராஸ லீலாவையும் தேகத்தையும் ஒப்பீட்டில் வைத்துப் பார்த்தால் இது ராஸலீலாவின் இன்னொரு அத்தியாயமே. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாருவின் நாவல்களில் பெண்கள் ஒன்று காலை விரிக்கவேண்டும். ( கதையில் வரும் ஆணுக்கோ பேச மட்டுமே தெரியும் ) இரண்டு சமைத்துப் போடவேண்டும். நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் செய்யும் வேலைகள் இவையே.
கி.ரா, கழனியூரான் இருவரும் தொகுத்த பாலியல் கதைகளில் வரும் அனுபவமொழிகள், மனிதன் காமத்தை எவ்வளவு விருப்பமாய், விளையாட்டாய், படைக்கும் கருவியாய், காமத்தை அணுகுகிறான் என்ற பதிவுகள் பக்கத்துக்குப் பக்கம் நிரம்பிக்கிடக்கும். எடுத்துக்காட்டாக, வயதாகிவிட்ட பின்னும் காமம் தேவைதானா என ஒரு கிழவி, தனது கிழவரான கணவனை வீட்டை விட்டு வெளியே போய் படுக்கச் சொல்ல கிழவர் இரவில் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராது “ அரைச் சொட்டோ ஒரு சொட்டோ மனுசப் பயலத் தூங்கவிடுதா” என்று சொல்லுவார்.
பொதுக் கழிப்பறைகளில் கிறுக்கப்படும் உறுப்பு விளக்கப் படங்கள் கிறுக்கிய ஆணின் கற்பனைக்கேற்ப ஆணுறுப்பு நீட்டப்பட்டிருக்கும். உறுப்பு பெரிதாய் இருந்தால் சுகம் அதிகம் என்று நம்புகிற மனம்தான் இந்த நாவலில் மையப்பாத்திரம் தர்மா.
காமத்தில் அனுபவம் கொண்ட, அது ஒரே ஒரு தடவை புணர்ச்சி அனுபவம் கொண்டவராய் இருந்தாலும், தேகம் நாவலைப் படித்தால். சிறிய புன்னகை சிந்தகூடும். ழார் பத்தாய் பற்றி பேசும் ஆசிரியர் அன்றாடம் நடக்கும் புணர்ச்சி விசயங்கள் கூட தெரியாது தன்னைத் தேடி பெண்கள் வருவதாய் எழுதும் மர்மம் என்னவென்றே சிந்திப்பார்கள். தேகம் காமத்தை சீரழிவான ஒன்று என்று கருதும் மனநிலை கொண்ட எழுத்து. அவ்வளவே.
நாவலில் பின்னடையில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் பின் குறிப்பு அவரின் வாசிப்புத் திறனைக் காட்டுகிறது. இதே குறிப்பை குற்றவியல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து பல பாகங்களாக உயிர்மை வெளியிடும் பட்சத்தில் இவ்விமர்சனத்தை அப்படியே போடலாம். ஒரு பதிப்பாளர் இவ்வளவு மட்டமான வாசிப்பைக் கைக்கொள்ளக்கூடாதென்பது என் வாசக மதிப்பீடு.
“வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையே உள்ள மனிதகுலத்தின் சமூக பண்பாட்டு வரலாறுகளை துப்பாகியின் கருகிய குழல் மூலம் ராஜேஷ் குமார் பதிவுசெய்கிறார். வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கனேஷ் வசந்தைப் போல பரத் சுசீலாவும் குற்றங்களை நீதியின் வெளிச்சத்தில் கண்டுணர்கிறார்கள். முக்கியமாக நகுலனின் சுசீலாவைப் போல ராஜேஷ் குமாரின் சுசீலா காமத்தை இரவுகளில் மறப்பதில்லை. சுசீலா பகல்களின் வெளிச்சத்தில் தானணியும் டீ ஷர்டுகளில் அவளது சுதந்திர வாசகங்களைப் பொறித்து அணிகிறாள். அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதோடு. இந்நூலை அனைவரும் விலைக் கழிவில்லாது வாங்கிப் படித்து உதவவேண்டும்.”
என்று மனுஷ்ய புத்திரன் எழுதும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
குறிப்பு;
புத்தகத்தின் முன்னட்டையில் நாவல் என்று பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாவல் எனும் வரையறைக்குள் ஒரு வாசகனாக என்னால் இதை பொருத்திப் பார்க்க முடியவில்லை. தேகம் ஒரு அரிப்பு என்று இருந்திருக்கலாம், அல்லது ராஸலீலாவில் விடு பட்ட பகுதி என்று குறிப்பிட்டிருக்கலாம். விமர்சனத்தில் நான் நாவல் என்று பயன்படுத்திய இடத்திலெல்லாம் மேற்குறிப்பிட்ட பதத்தையே உச்சரிக்குமாறு வேண்டுகிறேன்.
“பின் குறிப்பு;
A Mystical Experience !
பரமஹம்ஸ நித்யானந்தருடன் நீங்கள் இருந்த நான்கு நாட்களையும் பற்றிச் சொல்லுங்கள்.
( விஷால் இன்று காலை தொலைபேசியில் கேட்ட கேள்வி)
நம் வாழ்வில் நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிச் சொல்லும்போது அது மற்றவர்களுக்கு தமாஷாகத் தெரியலாம். வாழ்வில் தமாஷ் பண்ணவும், சிரித்து மகிழவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமானுஷ்யமான விஷயங்களை வைத்து ஏன் தமாஷ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அனுபவித்த அற்புதத்தை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேண்டுமானால் நானே நித்யானந்தராக மாற வேண்டும். அது சாத்தியமில்லை.”
17.08.2009 ( அருகில் வராதே – சாரு நிவேதிதா- உயிர்மைப் பதிப்பகம்)
“.....போக நுகர்ச்சி என்பது நாய் பன்றி முதலிய உடல்கள் வாயிலாகவும் நரகங்களிலும் கூட அனுபவிக்கப்படுகிறது.
- அத்யாத்ம ராமாயணம்:
ஸர்கம் 4, ஸ்லோகம் 50.
Thursday, December 2, 2010
நந்தலாலா: இலக்கியவாதிகளின் அம்மணத்தைக் கூவிச் சொல்லும் குழந்தை.
நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?
நஞ்சுடைய பாம்பை அணிகலனாய் கழுத்தில் சூடிய தில்லை நாதனே சிவனே நீங்கள் எடுக்கப் போவதோ பிச்சை அதற்கெதற்கு எக்காளம் ஊதவேண்டும், யானையில் ஊர்வலம் வரவேண்டும், கடல் ஒலிபோல் முழங்கும் ஆரவாரங்கள் எதற்கு உடன் வரும் கூட்டம் எதற்கு, அணியும் அரச விருதுகள் எதற்கு, எடுக்கப்போவதோ பிச்சை, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.
- கவி காளமேகம்
நந்தலாலாவை வைத்து இலக்கியவாதிகளின் பொருள்படும் விளக்கங்கள், மகிழ்வுகள், கண்ணீர் மல்கல்கள் அனைத்தும் காணவேண்டிய திருக்காட்சிகள், இசையருவியில் சாரு, மனுஷ்ய புத்திரன், பிரபஞ்சன், பவா செல்லத்துரை பேசி பேசி மாய்ந்தது கண்டு மனம் வருத்தமடைகிறது. ( இதில் பவாவும் பிரபஞ்சனும் பகடைக் காய்கள்) . லெனின் சொன்னதைப் போல எவ்வளவு பெரிய மேதையாய் இருந்தாலும் அவன் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக்கொண்டிருக்கும் என்று கூறியதை உணரமுடிகிறது. சாரு உயிர்மையில் அவர் ரசனையை, படத்தைப் புரிந்துகொண்ட விதத்தை அலறியிருக்கிறார். முதலில் கிக்கிஜிரோ நந்தலாலாவின் ஒருவரிக்கதையாம். சாரு எங்கே சென்று அந்தப்படத்தைப் பார்த்தீர்கள் உங்களுக்காக ஜப்பான் இயக்குனர் நந்தலாலாவுக்கும் கிக்கிஜிரோவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை வெட்டி ஒட்டப்பட்ட காட்சிகளை வைத்துக் காட்டினாரா...
அறுவெறுப்புதரக்கூடிய விசயம் இதில் என்னவென்றால் சாரு மனுஷ்யபுத்திரன், இதற்கிடையில் ஜெயமோகன் இம்மூவரும் (three idiots) அறம் பற்றிக் கதைக்காத நாளில்லை, எழுதாத பத்திரிக்கைகளில்லை சாருவுக்கும் ஜெயமோகனுக்கும், (இவர்கள் idiots ஐயும் தாண்டி) ஒரு ஒற்றுமையுண்டு அதன் பொதுப்பெயர் திருட்டு, மனுஷ்யபுத்திரன் திருட்டுக்கு உடந்தை. ஜெயமோகன் தன் மனைவியின் பெயரில் ஒரு மலையாள இசைக் கட்டுரையைத் திருடி போடவைத்தவர், அவ்வப்போது வசனங்களையும் சுடுவார். (அங்காடித்தெரு படத்தில் கதை நாயகன் முதலாளியைப் பார்த்து யானை வாழ்ற காட்டிலதான் எறும்பும் வாழுது என்ற வசனம், இதைப் பாராட்டி என் நண்பர் உங்காளு அந்த இடத்தில மிரட்டிடான்யா என்றார்...சிறிது நாள் கழித்து பாலகுமாரன் தன் மாத நாவலில் ஒரு அன்பருக்குச் சொன்ன பதில் அது என்று கண்டேன்..அதில் யானைக்குப் பதில் சிங்கம்...இன்னும் சொல்வதற்கு ஏராளம் உண்டு) சாரு முழுத் திருடர் ஆபிதின் நாவல்களை அப்படியே தன் பெயரில் வெளியிட்டவர். மனுஷ்ய புத்திரனோ பிழைப்புக்கு இலக்கியத்தைச் சுரண்டும் வியபாரி. நான் கடுமையாக எழுதக்கூடாதென்ற மனநிலையில்தான் இதை எழுதுகிறேன்...கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.
சாருவின் விமர்சனம் தினத்தந்தியில் 2.12.2010 ல் பக்கம் 18ல் நந்தலாலா படவிளம்பரத்தில் கொட்டை எழுத்தில் அவர் எழுதியிருப்பது தாய்மடி தேடிய அற்புதமனிதனின் காவிய பயணம், ஆனால் உயிர்மை விமர்சனத்தில் அவர் கூறியிருப்பது, அந்தத் தாய்மையை சற்று தள்ளிவைத்துப் பார்த்தால் படம் புரியுமாம், சாரு மனதில் வாசக மதீப்பீடு எவ்வளவு கேவலமாய் உள்ளதென்று இதன் மூலம் அறியலாம்.
மனுஷ்ய புத்திரன் வெளியிட்ட சாருவின் “கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்” புத்தகத்தில் திகம்பரன் என்று தலைப்பிடப்பட்டு பக்கம் 94ல் பட்டினத்தார் தாயைப் பற்றி விரிவாகப் பாடிய பாடலை குறிப்பிட்டு அப்படிப்பட்ட துறவியவையே தாய்ப்பாசம் விட்டு வைக்கவில்லை ஆனால் பெரியார் அப்படியில்லை, பெரியார் தன் தாயைப் பற்றி “மிகுந்த பிற்போக்குச் சிந்தனையும் மனிதாபிமானமும் அற்று வாழ்ந்த என் தாய் இவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்ந்திருக்கக்கூடாது, அதற்கு அவருக்கு அருகதை இல்லை” எனச்சொன்னதாக பதிவுசெய்துவிட்டு தன் தாய் பற்றி அவர் சொல்லுகிறார்
சாருவின் தாய்பக்தி 1
(பக்கம் 94, பாரா 2)
“என் மனைவி அவந்திகா அற்புதமான குணநலங்கள் வாய்க்கப்பெற்றவள். அப்பேர்ப்பட்ட பெண்ணை என் தாயார் அவமானப்படுத்தினார்கள்:. மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள் கார்த்திக் என்னுடைய ரத்தம் அல்ல என்பதால் அவனையும் அதே போல் கேவலப்படுத்தினார்கள். ஆனால் இதே அம்மா என்னை மிகவும் பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்தான், தங்கத்தட்டில் தாங்குவது என்பார்களே, அப்படி என்னைத் தாங்கியவர்கள்தான் ஆனால் அவந்திகாவை அவர்கள் தொடர்ந்து வதை செய்தபோது அம்மாவைப் பார்ப்பதையே நிறுத்திவிடேன், ஆறேழு வருடங்கள் இருக்கும் . அவர் இறந்த செய்தி வந்தது, சென்றேன். கொள்ளிவைக்கச் சொன்னார்கள் மறுத்து விட்டேன்.”
நிற்க
மேற்கூறிய அதே புத்தகத்தில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்று தலைப்பிட்டு உள்ளே சாரு சொல்கிறார் “ என்னை மாற்றிய புத்தகங்கள் என்பதை விட என்னை மாற்றிய சிந்தனையாளர் என பெரியாரை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு ஏன் அவரை நான் ஆசானாக ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு அவர் மிக அழுத்தமாக சுட்டிக்காட்டியது பெரியார் தாய்மையைப் பற்றி விமர்சனம் செய்திருப்பதை.
2 சாருவின் தாய்பக்தி சமூக பக்தியாய் மாறிய கதை
(அதே புத்தகம் பக்கம் 130)
“உதாரணமாக, என்னுடைய தாயார் மரணமடைந்தபோது நானே வீட்டின் மூத்தமகன் என்பதால் சடலத்துக்கு கொள்ளி போடுதல் முதலான சடங்குகளைச் செய்வதற்காக அழைக்கப்பட்டேன், ஆனால் சுயம்மரியாதைத் திருமணம் செய்துகொண்ட என்னுடைய தந்தை மரணச்சடங்கின் போது வைதீக முறையைக் கடைபிடித்ததாலும்,பிராமணர்களின் உணவுக் கலாச்சாரத்தை நான் சில காலத்துக்குக் கடை பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாலும் என் தாய்க்குச் செய்யவேண்டிய கடமையை நான் செய்யவில்லை. நான் எந்த சாதிக்கும் எதிர்ப்பாளன் அல்ல, ஆனால், தாய்க்குத் தனயன் செய்யவேண்டிய இறுதிக்கடமை என்ற பெயரில் வேறோர் கலாச்சாரம் என் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டதால் நான் அந்தச் சுடுகாட்டில் அதை மறுத்தலித்தேன்.
காரணம் என்னுடைய ஆசான் பெரியார். அவர் தன்னுடைய தாயாரைப் பற்றிச் சொல்கிறார் இவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துக்களையுடைய ஒரு பெண்மணி இவ்வளவு காலம் உயிரோரு இருந்திருக்க எவ்வித நியாயமும் இல்லை” அதனால்தான் குறிப்பிட்டேன் என் ஆசான் பெரியார்.
நிற்க
பெரியார் தன் தாயைப் பற்றி உண்மையிலேயே சொன்னது.
“ பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள்; நன்றாய் சம்பாதித்து ,நன்றாய் செலவு செய்தவர்கள்; பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள் ; அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள்; எத்தனையோ பேரைத்திருத்திய இராமனால்( ஈ. வெ. ரா) அம்மையாரிடம் தன் கொள்கையைச் சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடங்கொடுக்கவில்லை.
கடைசி வயதில் அம்மையாரைப் பார்க்க வந்தவ்ர்களிடம் என் மகன் ராமனைச் சிறிது பார்த்துக்கொள்ளுங்கள், இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என ஆவலாய்ச் சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலாக்கள் சவுகத் அலி மகமது அலி இருவரும் அம்மாயாரின் தலையில் தங்கள் தலையை ஒட்ட்வைத்து வாழ்த்தும் படி கேட்டபோது – தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தைச் சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக்காடி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படி செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் – காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னைத் தொட்டுவிடுவார்களோ என்று பயந்து , ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்றுதான் அவர்களுடன் பேசுவார். மூட நம்பிக்கைகளுக்கும், குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்ந்து முடிவெய்திவிட்டார்.
எனக்கு அவர் முடிவெய்தியதுபற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. என் கோரிக்கை – எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்தி விடவேண்டுமென்பதே!
என் இஷ்டம் நிறைவேறியது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி ! பூரண மகிழ்ச்சி!
- குடிஅரசு 2.08.1936
நண்பர்களே பெரியார் தன் குடும்ப விபரங்களைக் கூறிவிட்டு தன் தாய் பற்றி இவ்வாறு பதிகிறார். பெரியார் என்னென்ன காரணங்களுக்காக இப்படி எழுதியிருக்கிறார் என்பதை கீழ்கண்ட புத்தகத்தில் படிக்கலாம்.
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் -பெரியார் ஈவெ ராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு பதிப்பாசிரியர் வே ஆனைமுத்து
பக்கம்3110.
சாரு பெரியாரின் வார்த்தைகளை என்ன விதமாக அணுகியிருக்கிறார் அதை சாரு எப்படி எழுதுகிறார் என்பதை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும், அதையும்தாண்டி அவர் தன் தாய்க்கு கொள்ளி வைக்காமல் போனதற்கான காரணங்களாக கூறிய குழப்பங்களையும் கவனிக்கவேண்டும், உயிர்மை விமர்சனத்தில் நந்தலாலா திரைப்படத்தில் தாய்மை பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது அப்படி புரிந்து கொண்டால் அது தட்டையான பார்வையாம். இதை எந்தத் தளத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்று பார்க்கவேண்டும். மிஷ்கின் ஆட்டியர் என்றால் `தகேஷி கிட்டானேவை என்ன சொல்வது. இதுதான் உலகத்திரைப்படங்கள் பற்றிய சாருவின் அளவுகோல்.
ஒரு பேட்டியில் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்ப்பவன் வேலைக்காக பொய்கள் சொல்லலாம், இலக்கியத்தில் உண்மை சொல்லவேண்டும் இங்கேயும் வந்து பிருஷ்டத்தைக்காட்டினால் என்ன சொல்வது என்று கேட்ட சாரு இப்பொழுது உடலின் நவத்துவாராங்களையும் யாருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார் ...காட்டுவதும் ஏன். யாருக்கு எது பிழைப்பு.
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பற்றி விமர்சனத்தில் உடலைச் சுட்டிக்காட்டியதற்கு நொண்டிநாய் என்று சொல்லுகிறான் என அதன் வாசிப்பின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய சாரு சொல்கிறார் நந்தலாலா திரைப்படத்தை தாய்மையைச் சொல்லும் படமாகப் பார்க்கக்கூடாதாம். அதே ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனை நொண்டி நாய், வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் அதன் கூவல் பற்றியெல்லாம் சொல்புதிது இதழில் வெளியிட்டிருந்தாரே. அப்பொழுது சாரு என்ன செய்தார். அப்பொழுது புத்திரனுக்கும் அறம் இல்லை. ஜெயமோகன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் அறம் இருந்தது. மறுபடி சாரு வந்து சுட்டிக்காட்டியதும் அறம் விளங்கிவிட்டது.
இடையில் ஜெயமோகன் படம் பற்றி திருட்டானாலும் பரவாயில்லை...இருக்கட்டும் என்று கருத்து வேறு கூறுகிறார். ஜெயமோகன் உங்களால் வேறு எப்படிச் சொல்லமுடியும். தொழிலுக்கு வந்தாயிற்று காப்பாற்றிக் கொள்ளவேண்டியதுதான்.
சாரு தமிழ் சினிமாவை விமர்சிக்க உங்களைவிட்டால் ஆளில்லை என்கிற தோற்றத்தை அவ்வளவு கஷ்டப்பட்டுக் காட்டிவிட்டு ஆனந்த விகடனில் எழுதுகிறீர்கள் நடிக்கும்போதுதான் தெரிகிறது அது எவ்வளவு சிரம்ம் என்று. ஏன் நீங்கள் நடிக்காதவரை, உலக சினிமாக்களை தமிழக சினிமாக்களை தோண்டித்துருவி பின்நவினத்துவங்களோடு விமர்சிக்கும் போது தெரியவில்லையா, நன்றி சாரு தொடர்ந்து இதே தொனியில் அனைத்தையும் பதிவு செய்யுங்கள், நந்தலாலா உலகப்படம் என்கிற உங்கள் திரை அறிவை நான் மெச்சிக்கொள்கிறேன்.
இசையருவியில் வந்த இயக்குனர் பேட்டியில் மனுஷ்ய புத்திரன் அந்த மாதிரி வீடுகளெல்லாம் அவர் பார்த்தேயிராத வீடாம் அதுவும் சவப்பெட்டிக் கதவுகள் வீடே மரணத்தோற்றம்...புரிந்துகொள்ளமுடிகிறது.
மனுஷ்யபுத்திரன்... சுஜாதா எழுதிய ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலுக்கு நீங்கள் பின்னட்டையில் எழுதினீர்களே ஒரு குறிப்பு அதையும் புரிந்துகொள்கிறேன். நீங்கள் அதில் எழுதியிருப்பது....
“சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப்படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும் லட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்கிறார்.....”
ஆம் புத்திரன், சுஜாதா அளித்தார் இன்னும் உங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கிறார், புதிதாக அளிப்பவர்களையும் தேடிக்கொள்ளுங்கள்.
மன்னிக்கவேண்டும். எழுதக்கூசுகிறது. இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் அறத்தை விளக்கும் சன்னிதானங்கள். இவ்வளவு கேவலமாக வாசகர்களை மதிப்பிடும் இவர்களை என்ன செய்வது.
ஓய்வில்லாது அறத்தைப் பேசும் இவர்கள் ஒரு படத்தை இவ்வளவு தூக்கு தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால்.. மற்ற படங்களை...யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என நீங்கள் பண்ணும் அரசியலை குறைந்த பட்சம் நீங்கள் ஒரு காலத்தில், அல்லது தோன்றியபொழுதில் திட்டிய வைரமுத்து செய்ததில்லை. அவர் முதலமைச்சருக்கு நண்பர்...தம்பி. ஆனால் புத்தகங்களை விற்க நீங்கள் பண்ணும் காரியங்கள் சகிக்கமுடியாததாக இருக்கிறது.
வெளியீட்டு விழாக்களுக்கு நீங்கள் அழைக்கும் சினிமா ஊடகத் துறையினரை நானும் வரவேற்கிறேன். இலக்கியத்தின் காட்சி ஊடகமாக அவர்கள் அதை அவர்கள் நாளை வெளிப்படுத்தக்கூடும். அதே போல் அவர்களை விமர்சனக் கூட்டங்களுக்கும் அழையுங்கள், வெளியிட்ட நூலை, அவர்கள் பெற்றுக்கொண்ட நூல்களைப் படித்து விமர்சனம் செய்யச் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்து புத்தகங்களை வெளியிட வரும் நடிகர்கள், இயக்குனர்கள், சம்பந்தப்பட்ட புத்தகத்தை விமர்சனம் செய்து ஒரு நாலுவரியை வெளியிட்டதுண்டா... தேவைப்படாதென்று தெரிந்தால் சினிமாவை நக்கல் செய்வது. தேவைப்படும்பொழுது துதி பாடுவது. இதுதானா மனுஷ்யபுத்திரன் உங்கள் தலையங்கத்தில் தலைகொதிக்க நீங்கள் எழுதும் அறம்.
சினிமாக்காரர்களை இலக்கியம் தெரியாதவர்கள் என்பது, அவர்கள் அழைத்தால் பங்கிட்டு விட்டு அவர்தான் இலக்கியத்தின் பிதாமகன் என்பது. நீங்களா தமிழுக்கு இலக்கியத்தை சொல்லித் தரவந்தவர்கள். எனக்கு மிகவும் வெட்கமாகவும் அறுவெறுப்பாகவும் இருக்கிறது.
உண்மையில் நந்தலாலா இலக்கியவாதிகளின் அம்மணத்தை கன்னத்தில் அறைந்து சொல்லும் கவிதை.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோவென்று போவான்.
- மகாகவி.
Subscribe to:
Posts (Atom)
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை” ரூமி வ சு மி த் ர “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...
-
அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவரு...
-
அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...
-
சு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...
-
கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...
-
இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...
-
நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...