Wednesday, April 22, 2015

காமத்துப்பால் II





இரண்டாம் பத்து
11
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர்வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை

தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்து வீழ்கிறது
அண்டத்தின் இடியொலி

கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்

சம்போ மகாதேவா
சம்போகம்.

12

குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கியில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு

13
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்லக் கால்வைக்கிறது
வரைபடத்தின் தலைவரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்

14

கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்

15

தனிமையைக்
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்

16

கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்

17

கட்டளையை யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்..

எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது

18

தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு

சலித்த காமத்தில்
இறப்பின் ருசி

19

தின்னத் தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெரிகிறது
எரிப்பின் மிச்சத்தின்
இறுதியாய் வீசப்படும்
என் முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை தனது நீர்க்கரத்தால் வாரிச்சுருட்டும்

விதி வலியது கண்ணே

20

அம்மா
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி

பசி மிகுந்த சொற்களோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி

அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசி மிகுந்த குருதிச் சூட்டோடு

முன்னொரு காலத்தில் கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்

அம்மா….

Thursday, February 19, 2015

சுக்குமிளகுதிப்பிலி.





புதிய புத்தகம் பேசுது, 2015, ஜனவரி, மலர் 12, இதழ் 11 ன்றை முன் வைத்து
ஓர் எதிர்வினை.


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர், முதன்மை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவுக்கும், பேட்டியாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவை முன் வைத்தும்..

புதிய புத்தகம் பேசுது மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜனப் பத்திரிக்கை என்பதை நினைவில் வைத்தே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

புத்தகம் பேசுது அட்டைப்படமாக கோணங்கியை பதிந்ததும், அவரது அரசியல் சொல்லாடலாக ( என்னால் அரசியல் இன்றி எதையும் அணுகமுடியாது)  “கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற வார்த்தையைப் பதாகையாய் அட்டைப் படத்தில் இட்டதும், நூலின் மத்தியில், கோணங்கியின் விரல்கள் காட்டும் வித்தைக்கு கீழே இதுவும் ஒரு வித்தையாய் அமைந்திருக்கிறது.

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வர்தும் என்ற சொல்லாடல் கோணங்கியை முதலில் கலைஞன் என உறுதி படுத்துவதோடு, மனித குல மீட்சிக்காக போராடிய பல எழுத்தாளக் கலைஞர்களை அவருக்குத் தெரியும் என்ற தொனியும் உள்ளது. அதோடு அச்சுறுத்தும் வகையில் சமூகத்தின் மீட்சி கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்னும் பிரகடனத்தையும் முன் வைக்கிறது.  அப்பிரகடனத்திற்கு ஆதாரமாக, மனிதகுல மீட்சிக்காக பாடுபட்ட கலைஞன் ஒருவனைக் கூட எழுத்தாக்கம் பெற்ற பேட்டியில் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை தனிப்பட்ட முறையில் அப்படிச் சொல்லியிருந்தால் மனிதகுல மீட்சிக்காக கதை எழுதிய அக்கலைஞனை நானும் நம்பத் தயராயிருக்கேன். நிற்க

உரையாடல் முழுவதும்( இது எழுத்து வடிவில் பார்த்ததால் இதற்கு உரையாடல் என்ற மதிப்பைத் தருகிறேன்.. ஆனால் இது வெட்டி அரட்டை என்றே என் புத்தி வாசிக்கிறது.)  முழுவதும் சுயபுராணத்தை தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதே என் வாசிப்பு.  அதற்கு முழுகாரணம் பேட்டியாளர் கிட்டத்தட்ட கோணங்கியின் மாபெரும் தொழுகையாளராய் மட்டுமே காணக்கிடைக்கிறார். பேட்டி என்றால் என்னவென்றே தெரியாது, தான் நம்பிய மனிதகுல மீட்சியாளனை இச்சமூகமும் நம்ப வேண்டும் என்ற வேண்டுகோளும் கோரிக்கையுமே அதில் கொட்டிக்கிடக்கிறது. பேட்டியின் தலைப்பில் இருந்த மீட்சியானது எவ்வகையிலானது, மீட்சியளிக்கத்தக்கப் படைப்புகளை எழுதியவர்கள் யார் என்ற கேள்வி வரும் வரும் என கடைசிக் கேள்விவரை நான் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இக்கடிதத்தின் வாயிலாக கோணங்கி, தான் நம்பிய அந்த மனித குல மீட்சியை நடத்தும் கலைஞனை அடையாளம் காட்ட வேண்டும். முதல் கேள்வி வழக்கமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றே தொடங்க வேண்டும்… நல்லது.. அது புதிய வாசகர்களுக்கு கோணங்கியை அறியத்தரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த கேள்விதான் பேட்டியை உளறலாய் முன் வைக்கிறது. பேட்டி எடுப்பவரும் உளறி, பேட்டியாளரும் போட்டி போட்டு உளறும் ஒரு பேட்டியை இதற்கு முன் எண்ணற்ற தடவைகள் வாசித்திருக்கிறேன். அதில் இது தலைசிறந்த இடத்தை வகிக்கிறது.

உழைக்கும் மக்களின் தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்துக்கான மாற்றங்களை மார்க்சியத்தில் கண்டடைந்த ஒரு கட்சியின் வெகுஜனப் பத்திரிகை.. இன்னும் யதார்த்த வாதத்தின் அடிப்படையை கட்டுக்குலையாமல் காப்பாற்றி வைத்திருக்கும் ஒரு அமைப்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பேட்டியாளரிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி - கரிசல் காட்டு வெயில், அதில் மண்டையைக் கொடுத்தால் கடித்துக்கொள்ளும் வெள்ளரிக்காய், இதன் சுவைகளைக் கூறுங்கள் என்று. இதுதான் பேட்டியெடுக்கும் முறையா. இந்த உளறலை வைத்ததும் கோணங்கி வெள்ளரிக்காய் தோட்டம் போட்ட கதையை தண்ணீர் பாய்ச்சிய கதையை, மற்றும் அடுத்தடுத்த கேள்விகளில் வெள்ளரிக்காய்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன…இருந்ததில் நல்ல வெள்ளரிக்காயாய் பாரதி புத்தகாலயத்தில் வரப்போகிறது… இந்த வருடத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம் எனத் தொடர்கிறது.. என்ன கூத்து இது.

தோழர்களே, இதில் என் முக்கியமான கேள்வி அசல் வெள்ளரிக்காய் (ஈறுகளுக்கு நைந்து கொடுப்பதாயும் தாடையைப் பதம் பார்க்காத பிஞ்சு வெள்ளரிக்காய்காளாகவும் உள்ள,  மதினி மார்கள் கதையையும் கொல்லனின் ஆறு பெண் மக்களையும்- பாரதி புத்தகாலயம் வெளியிட இருக்கிறது என்று பேட்டியிலும் வெள்ளரி வியாபாரம்)  என கலைஞன் கோணங்கி கருதும் மற்ற பிதிரா, உப்புக்கத்தி, உடைபடும் நகரம். பாழி, பிதிரா, தா, இருள்வ மௌத்திகம் போன்ற வெள்ளரிக்காய்களை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்குமா( இன்னும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டிய வார்த்தை புத்தகாலயம் என்பதாகும்- கோயில் கருவரையில் சாமி இருக்கும் விழுந்து கும்பிடு எழுத்துக் கலையில் எழுத்தாளன்தான்  சாமி அவனைக் கும்பிடு.. என்ன தோழர்களே இது,. அறிவைத் தொழுதலா மார்க்சியப் புரிதல்) என்பதையும் சொன்னால் மேற்கண்ட வெள்ளரிக்காய் வியாபரம் பற்றியும் வெள்ளரிக்காய்கள் பற்றியும் நான் பேசத்தயார்.

முக்கியமாக யதார்த்தவாத்தின் அடிப்படையை இன்னும் நகர்த்தி பல இசங்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பி வைத்த ஒரு அமைப்பு இப்படி ஒரு தனிமனித புளங்காங்கிதத்தை,  தான் அடைந்ததோடு அதை வாசகர்களும் அடைய வாய்புத் தருவது ஏன்? கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு கோணங்கி எப்ப்டி சட்டை போடுகிறார் எப்படி தலை சீவுவார் என்பது ஆராய்ச்சிக்கு உரியதாக இருப்பது அவரளவில் நல்லதே. அதையே இலக்கிய வெள்ளரிக்காய் எனக் கூவி விற்பதது ஏன்? இதில் எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், புதிதாக எழுத வரும் வாசகன் வாயில் வெள்ளரிக்காய் விதையைத் திணித்து இதுதான் கலை, இதை எழுதியவன்தான் கலைஞன், அக்கலைஞனை நம்புவதுதான் உனக்கும் உன்னைப் போன்ற உருவங்களைக் கொண்ட மனிதகுலத்துக்கும் ஒரே மீட்சி எனச் சொல்லாமல் இருந்தால் சரி.

மிகவும் வருத்தமாக இருக்கிறது. பேட்டியாளரிடம் கோணங்கியை வாசித்தவனாக நான் உரையாடவும் காத்திருக்கிறேன்.

நேரில் உரையாட விருப்பமில்லையெனில் எனது பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும்கூட போதும்:

1.    கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற இந்த “தத்துவத்தின்” மூலம் சமூகத்தின் மீட்சிக்கு கோணங்கியும் அதை ஆவலுந்த கேட்ட கீரனூர் ஜாகிர் ராஜாவும் அதை பத்திரிக்கையில் அனுமதித்திருக்கும் ஆசிரியர் குழுவும் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன?

2.    கலை மனிதகுலத்தை மீட்குமெனில், மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சிக்கான, அரசியலுக்கான (பாராளுமன்றவாதமானாலும்கூட பரவாயில்லை) எல்லாவற்றிற்கும் மேலாக  புரட்சிக்கான தேவை இருக்கிறதா இல்லையா? கலையா? புரட்சியா? எது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீட்சிக்கான ஆயுதம்?

3.    கலை என்பது உங்களது பதிலாக இருந்தால், த.மு.எ.க.ச இதுவரை ‘உற்பத்தி’ செய்த, ‘அரவணைத்து’ கௌரவித்த கலைஞர்கள் மனிதகுல மீட்சிக்காக ஆற்றிய பங்கென்ன, இதுவரை கிட்டிய மீட்சிகள் என்னென்ன? மீட்சிக் கர்த்தாக்களாகிய அக்கலைஞர்கள் பட்டியல் கிடைக்குமா? ‘கலைஞர்களால்’தான் மனிதகுல மீட்சி நிகழப்போகிறது என்பதாக கோணங்கியின் பேட்டியின் மூலம் புத்தகம் பேசுகிறது முன்வைக்கிறதா?

4.    என்னைப் பொறுத்தவரையில் கலைஞன் என்றாலே அவன் எழுத்தாளன் மட்டுந்தானா…என் வாசிப்பின் அறிவில் எழுத்தை ஒரு துறையாக மட்டுமே கொள்கிறேன். பழக்கத்தில், ஓரளவு வாசிப்பில், சாத்தியப்பட்டிருக்கும் எழுத்தை மனித குல மீட்சிக்காக எப்படி முன்வைப்பீர்கள். விளக்குவீர்களா…

5.    இறுதியாக, விஞ்ஞானபூர்வமாக சமூகத்தை ஆய்வு செய்து, சமூக ஒடுக்குமுறைக்கான காரணிகளையும், அதைக் களைவதற்கான செயல்திட்டத்தையும் கொடுத்த கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோ மற்றும் இதர புரட்சியாளர்களின் சிந்தனைகளை வழியொட்டி செயல்படும் செயல்வீரர்களால் மனிதகுல மீட்சி சாத்தியமாகப் போவதில்லை, ஆனால் நிகண்டுகளையும், கூகிள் தேடல் பொறியில் கிடைக்கும் சில ‘உயிரிகளின்’ பெயர்களையும் ஒட்டி வெட்டி, அனகோண்டாவின் வாய்க்குள் சிக்கி வெளித்தள்ளப்படும் ஒரு காட்டெருமையின் சிதறுண்ட எலும்புத்துண்டுகள் போல் தமிழை, படிமத்தை இரைத்து, கூழ் காய்ச்சிக் கொடுக்கும் கோணங்கி போன்ற கலைஞர்களால்தான் மனிதகுல மீட்சி சாத்தியமாகப்போகிறது இல்லையா தோழர்களே?


நகைச்சுவைக்காக

“இயேசுவை நம்புவதும் இயேசுவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி”

 “அல்லாவை நம்புவதும் அல்லாவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுலமீட்சிக்கான ஒரே வழி”

 “இராமரை நம்புவதும், ராமரை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி

கடுங்குறிப்பாக

“கோணங்கியை நம்புவதும் (அவரை பேட்டியெடுப்பதும்), கோணங்கியை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழி ”

உரையாட வருபவர்களின் கவனத்திற்கு;

மார்க்சை நம்புவதும் மார்க்சை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியா என்ற கேள்விக்கு அதன் இலக்கியத்தன்மை மதத்தன்மை நீக்கி பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன்.

மரியாதையுடன்

வசுமித்ர.


Sunday, February 8, 2015

கொஞ்சம் மனது வைய்யுங்கள் தோழர் ஃப்ராய்ட்!

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கவிதை.





நான் ஒரு நீண்ட துப்பாக்கியை கனவு கண்டேன்
நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!
ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட
மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட
என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்பு படுத்தக்கூடும்
தயவுசெய்து
உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!
என்னிடமிருப்பதிலேயே
பெரும்பிரச்சனைக்குரிய உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்
அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டு தின்ன இயலாது
தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!
நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்
நான் சாமான்யை
எனக்கு குழந்தைகள் இருக்கின்றன
உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்
ஓர் எளிய  நீதிக்காக 
சட்டத்திற்கு கேட்காதவாறு
ஐந்து தோட்டாக்களை நான்பயன்படுத்திவிட்டேன்
நீங்கள் மனதுவைத்தால்
தடயங்களேதுமின்றி
அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.




வெய்யில்

Monday, February 2, 2015

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்.





தமிழ் புனைவு வெளியில் மொழியின் அர்த்தங்களை, அதன் குறுக்கு வெட்டுத்  தோற்றங்களை, கற்பனையின் யாதார்த்தத்தை, மொழியின் வாழ்நிலத்தில் சொற்களை விதைத்த நாவல் தாண்டவராயன் கதை என்பதே என் வாசக எண்ணம். இதை மீறி ஒரு கதை கூறலும் அதன் காத்திரமும் இன்று வரை தமிழ் புனைவில் சாத்தியமாகாத ஒன்று. அப்புனைவைக் கடக்க வேண்டுமெனில் அதுவும் நூலாசிரியனான பா. வெங்கடேசனாகவே இருக்க வேண்டும். ( இது உண்மையில் அவருக்கு அவராலேயே இடப்பட்ட சவாலாகத்தான் இருக்கவேண்டும்) இதை ஒரு வாசகனாக துணிந்து கூறுகிறேன். இலக்கியத்தை ஒரு துறையாகக் கொண்டு, புனைவை அதன் இன்னொரு கூறாகக் கொண்டு வாசித்தால் தமிழ் புனைவு வெளியில்  தாண்டவராயன் கதை பயணித்த தூரமும் நிகழ்த்திய பாய்ச்சலும் அசாத்தியமானது. அதன் மொழிச்செழுமை ஈடு செய்ய முடியாதது.

டிஸ்கவரிச் சேனல்களில் ஒளியாக உலாவும் மிருகத்தின் கனபரிமாணங்களை வார்த்தைப்படுத்தியும், பழம் பெரும் கதையாடல்களின் கனவை அத்தல் குத்தலாக வெட்டியும்,  பன்மொழி திரைப்படங்களின் சப் டைட்டில் வசனங்களைத் திருடியும்,  தங்களது வரிகளைக் மாற்றுவாக்கம் செய்து.. அதை தன் விரலால் எழுதிப் பார்த்ததினாலேயே.. தன்னை வியப்பதோடு மட்டுமில்லாது கண்டுபிடித்தேன் எனக் கூச்சலிட்டுக்கொண்டே, திருடிய வரிகளை, விளம்பரப்பட பாணியில் கத்தலும் கதறலுமாய் முன் வைத்தும், வார்த்தைகளுக்கு நிறமற்ற சாயத்தைப் பூசி, அதை தங்கள் காமாலைக் கண்களால் கண்டு களித்து, வெற்று அலங்காரம் ஊட்டி எழுதி வரும் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில், விஞ்ஞானத்தின் ஒரு  கருவியான,  ஒரு புகைப்படக் கருவி, தன் வல்லமையால் தன்னை வைத்திருக்கும் ஒரு மனிதனை ஓவியனாய் மாற்றும் வித்தையிலிருந்து தொடங்கி,   ஆதாமும் ஏவாளும் தின்று முடித்த ஆப்பிளின் எச்சில் விதைகளிலிருந்து கிளர்ந்து எழும் சாப வனத்தின் வாயிலாக ஒரு கதை சொல்லி தனது நாவலைக் கட்டமைத்து,  மொழியின் எண்ணற்ற சாத்தியங்களை வழங்கியிருக்கிறான் பா. வெங்கடேசன்.

இலக்கியத்திற்கென வழங்கும் பரிசுகளில் ஒரு இறுதி முடிச்சு நோபல் பரிசுதானென்றால் அதைத் தாண்டவராயன் கதைக்கு வழங்கலாம்.

நேரம் இருப்பின், நாவல் மொழியின் வரைபடங்களை இன்னும் விரிவாக எழுதுவேன்.



Saturday, September 13, 2014

விடியல் பதிப்பகத்தின் மோசடி.



விடியல் டிரஸ்ட், மற்றும் விடியல் பதிப்பகத்தின் மோசடி குறித்த ஓர் அறிவிப்பு.

வணக்கம்,

குறளி ஒரு சிற்றிதழாகத் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதை ஒரு பதிப்பகமாக முன்னெடுக்கும் வேலைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டப் பணியாக தோழர்கள் எஸ். பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ள சிலப் புத்தகங்களை பதிப்பிப்பது எனும் முடிவெடுத்தோம். எஸ். பாலச்சந்திரனும், கோவிந்தசாமியும் மொழிபெயர்த்து தற்போதைய அளவில் 2014 ல் குறளி வெளியீடாக , முதற்கட்டமாக வெளிவரும் புத்தகங்கள்:

பெட்ரோ பராமோ
எரியும் சமவெளி
ஜோதி ராவ் பூலே
முமியா சிறையும் வாழ்வும்
சூரியனைத் தொடரும் காற்று
இந்தியா; காலத்தை எதிர்நோக்கி
பாட்ரிஸ் லுமும்பா அரசியல் சிந்தனைகள்
போர் தொடர்கிறது
தெபாகா எழுச்சி
லுமும்பா இறுதி நாட்கள்
மார்டின் லுதர் கிங்,

ஆகிய 11 புத்தகங்கள் அக்டோபர் இறுதியில் வெளிவருகிறது. இது தவிர எஸ். பாலச்சந்திரன், வெ.கோவிந்தசாமி இவர்களது  மற்ற புத்தங்களுக்குமான உரிமையும் குறளி பதிப்பகத்திடம் உள்ளது.

தோழர்கள் இருவரும் புத்தக உரிமையை எங்களுக்கு வழங்கும்போது ஒரு  பைசா கூட பெறாமல் அவ்வுரிமங்களை எங்களுக்கு வழங்கினர். எங்களுக்கு உரிமம் கொடுத்தது போக சில புத்தகங்களை எங்களுக்கு முன்னமே என்.சி.பி.எச்க்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் உரிமம் கொடுத்துள்ளனர். நிற்க.

மேற்சொன்னப் 11 புத்தகங்களையும் செழுமைப்படுத்தி வெளியிடும் பணியில் குறளி பதிப்பகம் ஏராளாமான பணத்தையும், காலத்தையும் செலவிட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை செய்து, புத்தகங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்களாமே…நல்லது… நாங்கள் பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி, இவ்விரண்டு நூல்களையும் விடியல் பதிப்பக வெளியீடாக கொண்டு வருகிறோம்  எனத் தகவல் சொன்னார்.  எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

விடியல் சிவா உயிரோடு இருந்த காலத்திலேயே அவரோடு பிணக்கு ஏற்பட்டு தோழர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும் விடியலில் இருந்து வெளியேறி இருந்தனர். விடியல் பதிப்பகத்திலிருந்து விலகியபோது தங்கள் படைப்புக்களை வெளியிடக் கூடாது என்று எழுத்து மூலமாக கடிதமும் அறிவிப்பு, கொடுத்திருந்தினர். எனவே சிவா உயிருடன் இருந்தவரை அவற்றை வெளியிடவில்லை. பின்னர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும், அவர்களின் அறத்திற்கும் கொள்கைகளுக்கும் ஒத்து வரும் பதிப்பக சூழல் இல்லாத நிலையில்,  தங்களது மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்வதை தவிர்த்து வந்தனர். இச்சூழலில் விடியல் சிவா இறந்து விட்டார். விடியலை டிரஸ்டாக சுவீகரித்துக் கொண்ட ‘முதலாளிகளின்’ போக்கு எங்களுக்கும் உறுத்தலாக இருந்து வந்த நிலையில், தோழர் கொற்றவை மொழிபெயர்த்த ரோசா லுக்சம்பர்க் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் போனது. இந்நிலையில் பாலச்சந்திரனை சந்திக்க நேர்ந்தது.

இப்படிப்பட்டச் சூழலில் நாமே ஏன் பதிப்பகம் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டு வரக்கூடாது எனும் பேச்சின் முடிவில் உதயமானதே குறளி பதிப்பகம். இதில் ராஜாராமின் போக்கு விடியல் டிரஸ்டி-முதலாளி ராஜாராமின் பதிப்பக அபகரிப்புத் தாண்டி, தோழர் சிவாவின் உறவினரும் தோழருமான கல்யாணி குறித்து அவர் பேசிய ஆணாதிக்க ஆபாசப் பேச்சுக்கள்  செய்திகளாக எங்களுக்கு வரவே, இனி விடியலோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம்.

பால் ஃப்ராலிச் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரோசா லுக்சம்பர்க் – அவரது வாழ்க்கையும், பணிகளும் எனும் புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். விடியலுக்கு அதைக் கொடுப்பதாக சிவா இருக்கும் போது முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவின் மறைவுக்குப் பின்னர், ராஜாராமின் ‘உண்மை’ குணங்கள் தெரிய வருவதற்கு முன் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை விடியலுக்கு மெயில் அனுப்பியிருந்தார் கொற்றவை. விடியல் ராஜாராம் மற்றும் ராமச்சந்திரனின் அதிகாரப் போக்கு பிடிக்காமல் போனதன் விளைவாக அப்பதிப்பகத்திற்கு தருவதாக இருந்த லுக்ஸம்பர்க் புத்தகத்தையும் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என முறைப்படி அறிவித்தார் கொற்றவை. மேலும் அப்புத்தகத்தில் ஆங்காங்கு திருகுவேலைகள் செய்யாதீர்கள் என்பதையும் சொன்னோம். எங்களது இந்த முடிவுக்கு விடியல் பதிப்பகத்தின் புத்தகவிற்பனையாளர் ராமச்சந்திரனின் அணுகுமுறையும் கூடுதல் காரணம். (அப்புத்தகத்தையும் அவர்கள் இதுபோல் திருகு வேலைகள் செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது)

பின்னணி இப்படி இருக்க, பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. யுவான் ரூல்ஃபோவின் படைப்புகளை செழுமைப்படுத்தி புதிய இணைப்புகளோடு வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று விடியல் டிரஸ்டி ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டையும் விடியல் பதிப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அது எப்படி முடியும் அதற்கான உரிமத்தை தோழர் பாலச்சந்திரன் குறளி பதிப்பகத்திற்கு வழங்கி இருக்கிறாரே என்றோம். அதற்கு விடியல் டிரஸ்டி ராஜாராம் அம்மொழிபெயர்ப்புக்கு பாலச்சந்திரன் உரிமை கோரமுடியாது என்று சொன்னதோடு அது ‘கூட்டு உழைப்பு’ என்றும், அது போல் பலவேலைகள் நடந்திருக்கிறது அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார். அதற்கு  நாங்கள் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றதும் ‘வேலைகள் முடிந்து விட்டது வரும் செவ்வாய் புதனில் புத்தகம் வெளி வரும்’, (வரும் செவ்வாய் புதன் 16.09.2014, 17தேதிகளில் வெளிவருகிறது) அவர் பேசினால் நாங்க சமாளிச்சுக்கிறோம் என தெரிவித்தார். பாலச்சந்திரனிடம் நாங்கள் பேசியபோது - அவர் இது ஒரு  முறையற்ற செயல், கயமைத்தனம் அயோக்கியத்தனம் எனக் கூறியதோடு தோழர் கோவிந்தசாமியிடம் கலந்தாலோசித்ததன் படி, வழக்குத் தொடருவதே சரியான வழி என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு மொழிபெயப்பாளர் ராஜாராம் சொன்ன வி.நடராஜ் அவர்களை பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மாதிரியான செயல் இது எனக் கேட்டதற்கு அவர் இவ்வேலையை கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) சொல்லித்தான் செய்கிறேன் அவர்தான் இதைச் செய்யச் சொன்னான் எனக் கூறியுள்ளார் எரியும் சமவெளி தொகுப்பில் பாலச்சந்திரன் மொழிபெயர்த்த 15 கதைகளை அப்படியே எடுத்தாள்வதோடு. மேலும் இரு சிறுகதையைச் சேர்த்து வெளியிடப் போகிறோம். இது கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை)  சொல்லியே நடக்கிறது. மேலும் இதை அவர்கள் புதிதாகச் செய்து தரச்சொன்னாலும் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படையாகத் தெரியும் அம்சம் எஸ் பாலச்சந்திரனின் உழைப்பை சுரண்டும் நோக்கமே. இதில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம். மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன் எம். (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) மூவரும் சேர்ந்து செய்யும் சதியெனவே கொள்கிறோம். சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மேல தொடுப்போம் என்பதை குறளி பதிவு செய்கிறது. மேலும் அவர் பாலச்சந்திரனிடம் இதைச் சொல்லும் போது எங்களது பார்வைகள் பதிவுகள் பதிப்பகத்திற்காக சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நூல்களையும் உங்களிடம் கேட்டு நீங்கள் கொடுக்கவில்லை, அதனால் இதை விடியலில் கொண்டு வருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பெயர்தான் புரட்சிகரப் பதிப்பகமா…தோழர்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனுக்கே தெரியாமல் பதிப்பை மறுபதிப்பு செய்வது என்பது திருட்டுக்கு நிகரானது. அதை விடியல் பதிப்பகம் செய்திருக்கிறது தோழர்களே.
                                            
இது விசயமாக. மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனும், குறளி பதிப்பகமும் வழக்கு தொடரும் என்று ராஜாராமிடம் தெரிவித்தபோது, ராஜாரம் “நீங்க  வழக்கு தொடர்ந்துக்கோங்க” என்று அதிகாரத் தொணியோடு முடித்துக்கொண்டார்.

விடியல் பதிப்பகத்திற்கு டிரஸ்டி-முதலாளி ராஜாராம் தலைமை ஏற்ற பிறகு இது அவர்களின் கைவந்த கலையாக மாறிவிட்டது. தோழர் முருகவேளின் 
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் புத்தகத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பு என்ற பெரியரில் போப்பு என்பவரை வைத்து ஆங்காங்கு அடித்தல் திருத்தல் வேலை செய்து தலைப்பில் உள்ள ‘ஒப்புதலை’ நீக்கிவிட்டு மோசடித்தனத்துடன் வெளியிட்டது.

இதில் மாபெரும் அறுவெறுப்பு எனச் சொல்லத்தக்கது என்னவெனில், ஏற்கனவே முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழெட்டுப் பதிப்புகள் கண்ட ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ’ மொழிபெயர்ப்பை ஆங்காங்கு சில்லறை வேலைகள் செய்து பதிப்பித்ததோடு பின்னுரையில் சிவா உயிரோடு இருந்த பொழுது திருத்த நினைத்தார். இப்பொழுது இறந்துவிட்டார். அதனால் திருத்த முடியவில்லை, அவரது ஆத்மா சாந்தியடையும் விதமாக இம்மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என்ற தொனியில் அப்புத்தகத்தை போப்பு என்பவரின் மொழிபெயர்ப்பாக வெளியிட்டது.

இப்போது அதே போல் தோழர் எஸ் பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பை நாங்கள் வெளியிடுகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்ற வார்த்தைகளை விடியல் ட்ரஸ்டி ராஜாராம் முன் வைக்கிறார்.

முருகவேளுக்கு செய்த அதே மோசடியை தோழர் பாலச்சந்திரன் விசயத்திலும் செய்யத் துணிந்த விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளை அதன் ஆதிக்கப் போக்குகளை முறையாக வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்வோம். பத்திரிக்கைகளுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் விடியல் பதிப்பகத்தின் மோசடிகளை எடுத்துரைப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன். அப்புத்தகத்தில் தனக்குதவியர்களின் பெயர்களை அவர் எழுதியதற்கு, அதைக் கூட்டுழைப்பு எனச் சொல்லும் டிரஸ்டி ராஜாராம் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர்களின் திருகுவேலையாக, சம்பந்தப்பட்ட புத்தகத்தில் வேறொருவரை வைத்து ஆங்காங்கு சில வார்த்தைகளை மாற்றி வெளியிட்டால் அந்த அயோக்கியத்தனத்தையும் சான்றாராதரத்துடன் வெளிக்கொணருவோம்.

நம்மை போன்ற சிறு பதிப்பகங்களில் செழுமை படுத்த உதவுவோர் பெரும்பாலும் சக தோழர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை பதிப்பகங்கள் என்றால் ‘பதிப்பாசிரியர் (எடிட்டர்)’ இருப்பார். ஆனால் சின்ன சின்னத் திருத்தங்கல் சரி பார்த்தல்கள் மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு இணையாக முடியாது. அதன் காரணமாகவே உரிமம் மொழிபெயர்ப்பாளரிடமே இருக்கும்.  அப்படி இருக்கையில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் எனும் ராஜாராமின்  தொனியில் தெரிவது முதலாளித்துவ அதிகாரம், சட்டத்தை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும் எனும் ஓர் அகந்தை.  

தோழர்களே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதற்கான அறிவூட்டும் படைப்புகளைக் கொண்டுவருவதாக மார்தட்டிக்கொள்ளும் விடியல் பதிப்பகம், இப்போது உழைப்பாளிகளைச் சுரண்டி, மொழிபெயர்ப்பாளரின் தக்க அனுமதி இன்றி மோசடி செய்து காசு பார்க்கும் இழி நிலைக்கு இறங்கி விட்டது. இந்நிலைக்கு உடந்தையாக மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன்.எம் (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) உடந்தையாக இருக்கின்றனர் என்பதை அறிய எங்களிக்கு அதிர்ச்சி அளித்தது. (நடராஜை வைத்து கொண்டு வரவிருக்கிறோம் என்று ராஜாராம் சொன்னதை அடுத்து, அவரையும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் என்று ஆலோசித்தோம். பாலச்சந்திரன் தொடர்பு கொண்டு கேட்க -  கண்ணன் சொல்கிறார் நான் செய்கிறேன் என்று நடராஜ் பதில் அளித்திருக்கிறார்…).

நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு தக்க எதிர்வினையாற்ற இருக்கிறோம் என்பதை குறளி பதிப்பகம் அறிவிக்கிறது.

கூட்டு முயற்சி என்ற அபத்தமான வார்த்தையை வைத்து, விடியல் பதிப்பகமானது இவ்வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறது என்பதை இதன் வாயிலாக பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் அறிவித்துக்கொள்கிறோம். விடியலின் இந்த மோசடிக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது எனும் வேண்டுகோளையும் இதன் மூலம் வைக்கின்றோம்.

விடியல் டிரஸ்ட்- விடியல் பதிப்பகத்தின் மோசடிக்கெதிராக குறளி பதிப்பகம் களம் இறங்கிப் போராடும். பதிப்புலகில் தொடர்ந்து வரும் விடியல் பதிப்பகத்தின், உழைப்புச் சுரண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

Related Links

வியாபாரிகளிடம் சிக்கியுள்ளதா விடியல் பதிப்பகம்? - http://tinyurl.com/kvqk3xm

விடியல் பதிப்பகத்தின் விசமத்தனம் - HTTP://WWW.KEETRU.COM/INDEX.PHP/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24651-2013-08-19-18-17-58


Wednesday, June 18, 2014

மகளை எழுத்தாளாராக்குவேன் என கனவு காணும் ஜெயமோகனுக்கு...





ஜெயமோகனுக்கு...

அன்புள்ள ஜெயமோகன் உங்களது நாலந்தர எழுத்து வல்லமை இதற்கு மேல் செல்ல முடியாது என்பதற்கு நீங்கள் பெண்களின் கூட்டறிக்கை குறித்து எழுதிய பதிலே சாட்சி. பெண்கள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாது தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என வகைபிரித்துப் பேசியிருக்கிறீர்கள். அவ்வறிக்கையில் வசைகள் அவதூறுகள் எங்கு உள்ளன என குறிப்பிட்டால் இன்னும் பேசலாம். உண்மையில் வாழும் மனிதர்களின் உடற் குறைபாடுகளை உங்களளவுக்கு கேவலமாகப் பேசும் பிறிதொரு எழுத்தாளப் பிறவி இத்தமிழில் இல்லை என்றே நான் சொல்லுவேன்.

கார்ல்மார்க்ஸ் தொடங்கி கமலாதாஸிலிருந்து வளர்ந்து மனுஷ்யபுத்திரனை நொண்டிநாய், அதுவும் வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் காலச்சுவடு நாய் என எழுதிய நீங்கள் இதை வசை என்று அழைக்காமல் என்னவென்று சொல்லுவீர்கள். இதுகுறித்து ஒருமுறை நான் உங்களுக்கு கடிதம் எழுத நீங்கள் என்னை மனநலம் பேணுமாறு எழுதினீர்கள். அப்படியென்றால் யாருக்கு மனநிலை தவறியிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த இந்துத்துவ கோவணாண்டிகளின் தாடி மயிரும் பட்டொளியாக ஒளிரும் காட்சியாகப் படும்போது கார்ல்மார்ஸின், மாவோவின் அந்தரங்க உறுப்பின் தேட்டத்தை விசாரித்தீ்ர்கள்.

எனக்கு இவ்வகை விசாரணைகள் புதிதல்ல. உங்களை ஒத்த சில இலக்கிய தூயத்துவ மடாதிபதிகளை, இலக்கியத்தில் மொழியினால் ஆன சாத்தியங்களை முவைத்த காரணத்திற்காக, நகுலன் மகாத்மாவென்றும் அவர் சாப்பிடும் பிராந்தியில் கம்பன் கம்பூன்றி தெளிவாக நடந்து வருகிறான், தேவதேவனின் கண்களில் ஞான ஒளி மின்னுதடா சர்வேசா, அவருடைய தாடியில் தொங்குடதா தமிழ்கூறும் நல்லுகம் தேவதச்சனின் வெற்றிலை மணத்தில் மணக்குதடா தத்துவ முத்து என தலை முதல் உள்ளங்கால்கள் வரை வர்ணிப்பதும் நான் கவனித்து வருவதுதான்.

ஆனால் இதே வர்ணனை சிலாக்கியங்கள், மார்க்சிய தத்துவ ஆசிரியர்களை விமர்சிக்க வரும்போதும் மட்டும், வறட்டு வறட்டுனெ கவட்டையைச் சொறிந்து கொண்டு விமர்சிப்பதையும் கவனிக்க முடியும். கேட்டால் கலை இலக்கியம் அந்தரத்தில் தொங்கும் பொற்கனி, அதை உள்ளொளி முள்ளெலி, ஆன்ம சுத்தி, இன்னபிற பெருங்காயங்களோடு நெஞ்சில் கைவைத்துப் படிக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் படிக்கவே ஞான வெள்ளெழுத்துக் கண் வேண்டும் என்கிற உளறல்களையும் அறிந்தே வருகிறேன்.

கவிதையை, படைப்பை விட்டுவிட்டு எழுத்தாளனின் தாடி மயிர், குடிக்கும் பிராந்தி. போடும் குசு, வெற்றிலை மணம், பட்டுவேஷ்டி, ஒட்டுக்கோமணம் பற்றியே இங்கு இலக்கிய ஞானபீடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதை செவ்வனே செவ்விலக்கிய அமைப்பாக்கி, விஷ்ணு புர பஜனை மடத்தை தோற்றுவித்தது தாங்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் சீரிய பார்வை, விசாலமான நெற்றி, கூர்த்த நாசி நிமிர்ந்த நன்னடை கொண்டவர்களுக்கே அந்தரங்க எழுத்து கைகூடும். உடற்குறை உள்ளவர்களுக்கு, சில்லறைகளுக்கு எந்த எழுத்தும் வராது. உங்களது விமர்சனங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளனின் உடலை தடவித்தான் வருகிறது. அவ்வகை விமர்சன முறையை நான் கைக்கொண்டால் உங்கள் காதை முன் வைத்தே ஒரு லட்சம் பக்கங்கள் எழுத முடியும். அத்தகைய காது அது. ஆனால் அதற்குள் இருக்கும் சிலந்திக் கூடுகளை கலைக்க எனக்கு விருப்பமில்லை. எவ்வுயிர்களும் இவ்வுலகில் வாழவேண்டும் என்பதே என் நிலை.

எழுத்தாளானர் சார்பு நிலை அற்றவன் எனில் நித்ய சைதன்ய நிதியின் மயிர்கள் எங்கெல்லாம் மின்னியிருக்கிறது என நீங்கள் எழுத வேண்டும். உங்கள் படைப்புகளை வாசித்தவர்களிடமே பேசுகிறேன் என்ற இன்னொரு உளறலையும் வைக்கிறீர்கள். உங்கள் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து எழுதிய ஒரு மாணவன் இருக்கிறானா... அல்லது மாணவி இருக்கிறாளா.. அல்லது உங்களது விஷ்ணு புர பஜனை மடங்களில் அழுக்குச் சட்டையோடும் ஏதேனும் சில்லறைகள் தட்டுப்படுகிறதா. அவ்வாறு வரும் ஒரு நபரின், உங்கள் வாசக வாசகியின் பெயரைச் சொல்லுங்களேன். அந்நபரைப் உங்களது நபரைப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் யார் நீங்கள் உங்கள் வாசகர்களாக கருதும் நபர்கள் யார் அவர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்கள், எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று திறந்த மனதுடன் உங்களால் உரையாடமுடியுமா.

அவ்வறிக்கை சமகால இலக்கியத்தில் மிக மோசமான ஆணாதிக்க மனநிலையோடு இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றிய அறிக்கை. அதில் சில்லறைத்தனங்கள் இருக்கிறதென்றால், அது உங்களைப் பற்றிய அறிக்கை. அதில் நோட்டையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அறிக்கையாளர்களுக்கு எவ்வகையில் எவருக்குப் பதில் அளிப்பது என்கிற தேர்வே அதைச் செய்திருக்கிறது.

அதில் உங்களது அடிப்படைப் புரிதல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கூறுவது இன்னும் வருத்தமாக இருக்கிறது. அக்கப்போர்கள் என்றால் என்னவென நீங்கள் கூட்டும் விஷ்ணுபுர பஜனை மடத்திற்கு வந்தால் தெரியும். நான் எல்லாவற்றையும் விவாதிக்க உங்களின் வாசகனாகவே வருகிறேன், ஆனால் சப்பளக்கட்டைகள் நாம தேய நாமக்கட்டிகள் இவை எதுவும் கொண்டு வரமாட்டேன். அனுமதிப்பீர்களா... நீங்கள் எழுதியுள்ள இப்பதிலில் எனக்குப் பீதியை ஏற்படுத்தியது உங்களது மிகப்பெரிய தூய உலகியல் கனவென நீங்கள் சொன்னது. உங்களது மகள் எழுத்தாளாரக வேண்டும்... அச்சா..

ஏன் அவர்கள் வேறு துறையை தேர்ந்தெடுத்தால் உங்களது ஆகப்பெரிய தூய உலகியல் கனவு கலைந்து விடுமா. வார்த்தைகளை இடம் தேர்ந்து சுட்ட நினைத்திருக்கிறீர்கள் ஜெயமோகன். இன்னும் சொல்லப் போனால் உங்கள் மகள் அளவுக்கு சுரணையுள்ள மகள்கள்தான் அவ்வறிக்கையை எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை பெயரில் ஒரு மலையாள மொழிபெயர்ப்பை எடுத்தாண்டு, கவனக்குறைவு என்று சொல்லிவிட்டு சொல் புதிதை மூடினீர்கள். அவர் இன்று வரை எழுதிய நாலு வரிகளையாவது கவனத்திற்கு கொண்டு வரமுடியுமா.

உங்களது உளவியல் மிக மோசமான ஆண்நோய்க்கூறு தாக்கிய ஒன்று. இந்நோய் உங்களை உங்களிடமிருந்தே அரித்துக்கொண்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியதுதான்.. உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உங்களது மகனும் மகளும் இயங்குவார்களானால் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் கல்லூரிகளில் கூட என் குழந்தைகளை சேர்க்க நான் அச்சம் கொள்ளுவேன். வக்கிரம் எழுத்தாகும் போது அது எவ்வகையில் செயலுரும் என்பதை நானறிவேன். நீங்கள் அறிவுத்தளத்தில் உரையாடிய அனைத்து மனிதர்களும் உன்னதங்கள் என்றா சொல்லுகிறீர்கள்.. இதை விட வேறு நகைச்சுவை எதுவும் இல்லை ஜெயமோகன் விஷ்ணு புர மடத்திற்கு வந்து பட்டுக்கோவணம் கட்டிய அந்நபர்களை நீங்கள் அறிவாளிகள், அறிவாயுதங்கள்: என்றே அழைத்துக்கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

குழாயடிகளில் நீங்கள் கண்டது உங்களுக்கு வெறும் வசையாக இருக்கலாம் அந்தளவிலான பேச்சுக்கும் ஒரு தூய மதிப்பு இருக்கிறது. என்னசெய்வது உங்களது வீட்டில தெருக்குழாயில் தண்ணீர் படிக்கும் வசதி இல்லை. அப்படி இருந்திருந்தால் உங்களது மகளும் மனைவியும் குழாயடிச் சண்டை குறித்த சிந்தனைகளை உங்களுக்குக் கற்றுத் தருவார்கள். மிக கனத்த உங்களது மனத்தை நான் புண்படுத்த விரும்பவில்லை ஜெயமோகன் ஏனாயில் அது வக்கிரத்தால் அழுகிக்கொண்டு சீழ்பிடித்து பிதுங்கிக்கொண்டிருக்கிறது. சில்லறை உலகில் இல்லாது முற்றும் துறந்து அம்மணமாகும் ஞான உலகத்தை நோக்கிய உங்களது பெரு உலகுக்கு என்னால் வரமுடியாது. மேலும் அது அவமானகரமான செயல்.

கும்பல் சில்லறை என்றால் விஷ்ணு புர மடத்தில் பட்டுவேட்டி கட்டிய அந்த கோமணங்கள் யார்.. அவர்கள்தான்.. முழுமுற்றும் அறிந்த அறிவுப் பேராயுதங்களா.. அங்கெல்லாம் சில்லறை உலகு குறித்துப் பேசாமல்... வேறு என்ன பேசுகிறீர்கள்.


அவ்வளவே.

கூடிய விரைவில் இன்னும் விரிவாக எழுதுவேன். விரிவஞ்சி குறுக்கியிருக்கிறேன்.



Monday, April 7, 2014

லஷ்மி சரவணக்குமாரைக் கட்டிக்கப் போற பெண், மற்றும் லஷ்மிசரவணக்குமாரால் வாழ்நாள் தோழர் என அறிவிக்கப்பட்ட கார்க்கி அவர்களுக்கு..





//இந்த இடத்துல லஷ்மின்னு இல்ல, வேற யார் இருந்தாலும் எனக்கு கோவம் வந்திருக்கும் ண்ணா... ஆனா லஷ்மிங்கறதால தான் அந்த ஸ்டேடஸ் போட்டேன்அதற்கு தான் ண்ணா முதல்லயே சொல்லியிருந்தேன். எனக்கு எந்தவொரு பிரச்சனையும் தெரியாதுன்னு. ஒருவேளை நான் அப்போ அவனோட இருந்திருந்தா, கண்டிப்பாக எதிர்ப்பு சொல்லியிருப்பேன். ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னுஇனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு//

என்பதோடு பொது வெளியில் பதில் சொல்லுங்கள் எனச் சொன்னீர்கள். நான் பொதுவெளியில்தான் உரையாடுகிறேன்.. உரையாடியபடியே இருக்கிறேன். உங்கள் உரையாடலுக்காக காத்திருக்கிறேன்....



உரையாடலம் வாங்க.....

Sunday, April 6, 2014

பத்துமணிப் போராளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் விதமாக....






உளவியல் குறிப்பு. 1

வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளையில் இறந்தகால மரபு ஒரு பேய்க்கனவைப் போல் அழுத்திக்கொண்டிருக்கிறது.
-லூயி போனாபார்ட்டின் பதினெட்டாம் புரூமோர்.


பேச்சை விரும்புகிறவனாக நான் இருக்கிறேன். புண்ணைக் கீறி சீழைப் பிதுக்கியெடுப்பது போல் சில வார்த்தைகள் என்னிடம் உண்டு. என்ன செய்யமுடியும், செலுத்தப்பட்டவைகளை வெளியே எடுப்பதென்பது நலமான செயல். அவைகள் உடலிலேயா தங்கி மூளையை துருப்பிடிக்கச் செய்யும் கரியை தன்னகத்தே கொண்டிருக்கலாம். அனுமதிக்கக் கூடாது. நான் சிந்திப்பதென்பது வசைகளை ஆராய்வதற்கல்ல. ஆனால் அவை எழுதவற்கான உளவியல் முனைப்பு அவர்களுக்கு எங்கு தொடங்கியது என்பதுதான்.

உள்ளொதுங்கிய அல்லது விடைத்த, மற்றும் புடைத்த உறுப்புக்களின் மேல் கொள்ளும் அவா நிரம்பியவர்கள், காமத்தை நேரடியாக தங்கள் மூளையில் ஒரு கையால் திணிக்கிறார்கள். அதேசமயம் ஆர்வமும் ஆச்சரியம் கொள்ளும்படியாக தங்களது இடதுகையால் அவ்வுறுப்புக்களை, அன்பின் பெயரால் தங்களது பிரியமானவர்களின் வாய்களில் திணிப்பதோடு, தங்கள் வாய்களிலும் திணித்துக்கொண்டு அலைவதேன் என்ற கேள்வியை முன் வைத்து நகர விரும்புகிறேன்.
துளைகளையும், ஒரு துண்டுச் சதைகளின் மீதும் அளவற்ற அவர்களது அவாவின் உந்தலில் அதை சோதனை செய்யும் ஒரு உறுப்பாய் மாற்றி பரிசோதனைக் கூட மேஜையில் வைக்கிறார்கள்.  அவர்கள் நிகழ்த்தும் பரிசோதனைக் கூடத்தில் அவர்களே ஒரு பரிசோதனை உயிராய் இருக்க அவர்களை சம்மதிக்காச் செய்யாத கருத்து எதுவாக இருக்கும். இதன் நோக்கம் இதுவென்று தெரிந்தும், விருப்பத்தை அறிவித்து மினுங்கும் கண்களோடு தங்கள் வாயை அருகே கொண்டு சென்று தங்களது விருப்பத்தையும் கழுத்தின் கீழ் தொங்கும் இரும்புச் சங்கிலியையும் அவர்கள் வசம் ஒப்படைக்கும் மனப்போக்கையும் காண்கிறேன்.

எனது 35 வருட வாழ்க்கையில் உறவுகளைச் சீர்படுத்துவதில் நிலைபேறவடைது குறித்து  நான் கண்டுணர்ந்தது ஒன்றேதான்.
பத்திருபது வருடங்கள்...  உண்டு, உறங்கிய, ஆணையோ பெண்ணையோ இன்னும் குறிப்பாக தான் மெய்யுறு புணர்ச்சியை நிகழ்த்திய அவ்வுடலின் புணர்ச்சிக்கு மிக உகந்த உறுப்பை, பரிசோதனைக் கூடத்தில் கண்ணைக் கூசசெய்யும் விளக்கின் கீழ், அறுக்கப்பட்ட சதையாய் ஒருவன் வைப்பதும், அதை ஆவலோடு காயம்பட்ட மிருகத்தின் விழிகளால், எச்சிலூற கவனிக்கும் ஏனையோருக்கும் நான் சொல்வது ஒன்றேதான். இருப்பின் பிரச்சினை காரணமாக சுயத்தையே முழுக்க சந்தேகப்படுதலும், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள எண்ணற்ற காரியங்கள் செய்வதும், அதற்கு வழித்தடங்களை அமைப்பதும் ஏன். இவை எவ்வளவு நாட்களுக்கு தாங்கும்.
பொதுவாக நள்ளிரவில் யாரும் அழைக்கலாம் என்பது அன்பர்களின் விருப்பத்திற்கொன்றாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதை நான் மதிக்கிறேன்.எனவே அவர்கள் தங்களது தொலை தொடர்பு எண்களை பொதுச்சுவற்றில் அறிக்கையாக இடுங்கள். கண்காணிக்கும் விழிகள் காவல் காத்துக் கொள்ளட்டும். எதிர்கொள்ளுங்கள். இரவுக்கென்றே ஆக்கப்பட்ட சில  பிராணிகளும் இன்னபிற விலங்குகளும் உண்டு. ஓநாய்களும் உண்டு.
அவைகள் எதிர்கொள்கையில், விலங்கின்  கடைவாய்ப் பல் ஆழமாகப் பதியனிடுகையில் பத்திரிக்கையில் அறிவியுங்கள். உதவப் போராளிகளும் உண்டு.  இவ்வகையான போராட்டங்களில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அத்தோடு இலக்கியத்தையும், புரட்சியையும் சுதந்திரம் எனும் கருப்புப் போர்வையில் சுற்றி, சுயமரியாதையை கூட்டிக்கொடுக்கும் காரியத்தையும் முக்காடிட்டு செய்யத்தூண்டுவது எதனால் என்பதுதான் எனது கேள்வி.
எல்லா தகைமைகளையும் கொன்று விட்டு எச்சிலூறப் பார்க்கும் உங்களது விழிகளுக்கும், இடுப்புக் கீழ் தொங்கும் உங்கள் சதையும், உங்கள் துளையும் அறுத்தெடுக்கப்பட்ட  உறுப்பாய் அதே மேஜைக்கு அப்பபரிசோதனையாளனால் சூடாக பரிமாறப்படும் பொழுது எச்சிலொழுகிய உங்களது கண்களில் எவ்வகையான அறுவெறுப்புத் தேம்பிப் படறும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு அறுவெறுப்பாய் இருக்கிறது.  

அம்மா என்று அழைத்து அடுத்த நொடி படுக்கையைத் தட்டிப் போடும் அவ்வக்கிரங்களுக்கு உங்களது தொலை தொடர்பு எண்களை தயவு செய்து கொடுங்கள். அனைத்தின் சுதந்திரத்தையும் மெச்சுகிறேன். இரவை நானும் கூட வரவேற்கிறேன். அத்தோடு அம்மா அக்கா தங்கைகளுக்கும் அவர்களது எண்களைக் கொடுங்கள். அவர்களும் இத்தகைய சுதந்திரத்தை அனுமதித்தான் அது எத்தகைய சுதந்திரம். நாம் அனுமதிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கும் வழங்க. அல்லது எடுக்க நாம் உதவ வேண்டும். முடிந்தால் முதற்கட்டமாக உங்கள் முகநூலில் உங்கள் தொடர்பு  எண்ணைப் பதியுங்கள். அதுவே இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கட்டும். இன்னும் குறிப்பாக முகநூலில் பேச வரும் ( குறைந்தபட்சம் வெறும் எழுத்து வடிவில் பேச வரும்) அன்பர்களை ஏன் உங்கள் பக்கங்களைக் கூடப் பார்க்க விடாமல் தடை செய்கிறீர்கள்.

உத்தமகுணங்கள் கொண்ட ஆண்கள் இரவில் மட்டுமல்ல, பகலிலும் நடுப்பகலிலும் தயாராக இருக்கிறார்கள். நான் இரவுக்காக மட்டும் அல்ல பகல், நடுப்பகல், நள்ளிரவு வரை அவர்களை நீங்கள் வரவேற்பதற்காக... உங்களுக்கு என் அன்பின் ரத்தினக் கம்பளத்தை விற்கிறேன்.  எல்லாவற்றையும் பேசியும் மட்டுமல்ல, எழுதியும் கடக்கலாம். எனவே முகநூலில் யாரையும் தடை செய்யாதீர்கள். அனுமதி அளியுங்கள். பகலும் காமத்தைக் கடந்ததுதான் அன்பர்களே.
துரதிருஷ்டம். சொல்லி அழக்கூட திராணியின்றி, எத்துணையற்று தனியே அழும் மனநிலை வாய்க்கவா இத்தனை போராட்டம். இதைத்தான் அவர்கள் காதல், நட்பு, இன்னபிற உறவுகளோடு பொருத்திக்கொள்கிறார்களா.
அறுவைச் சிகிச்சை என்பது சதையின் வெற்றிடத்தை ஆராய்வதல்ல, உண்மையில் ஆராய்சியாளன் தான் தேடிய சிந்தனையில் அது ஒளிந்து இருக்கிறது.
எந்த வசையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றென இருந்ததில்லை, என்பதை நான் அறிவேன். சிந்திக்க முடியாதவர்களின் மூளை என்ன விதமாக இயங்கும் என்பதையும், ஓய்வுபெற்ற மனிதனின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்றழைக்கப்படுவதையும் இக்கணத்தில் பொருத்துகிறேன். அடிமைகள் சுதந்திரமாக இருப்பதற்கு முதலாளிகளின் அனுமதி தேவையெனும்போது அங்கு அடிமை தான் அடிமை எனும் அடையாளத்தையும் கூட இழக்கிறான். 

சிறுகுறிப்பாக
நள்ளிரவில் உங்களுக்கு  அழைப்பு வந்து சமூகத்தை சீர்திருத்தும் காரியங்களைச் செய்ய உங்களுக்கு உதவ உங்கள் குடும்பத்தார்களையும் அழையுங்கள். அவர்கள் எண்களையும் பகிருங்கள். இது போன்ற அழைப்புக்களில் நாம் மட்டுமல்ல நம் குடும்பமும் விழித்திருக்கச் செய்யவேண்டும். இத்தகைய உன்னத காரியங்களை அவர்களும் கண்டுகளிக்க வேண்டும். புரட்சி ஓங்குக.

இன்னமும் உரையாடக் காத்திருக்கிறேன்.

உரையாடலாம் வாங்க.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...