Tuesday, April 3, 2012

கவிஞர் ராஜசுந்தரராஜனுக்கு....ஒரு எழுத்துக் கழிவுக் குப்பையின் வாழ்நிலையை முன்வைத்து...






வணக்கம் ராஜசுந்தரராஜன்....


உங்களது கேள்வி எனது பெயரின் பின்னொட்டான மித்ர என்ற வார்த்தைக்குள் இருக்கும் நேசத்தை விளக்குவாத எனக்கு அமைந்தது. அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. காந்தி என்ற பெயரில் எனக்கு மொடக்குடி நண்பர் உண்டு. இதுல இன்னும் விசேஷம் அவர் கோட்சேவை ரெம்ப நல்ல பையன்ப்பா...என்பார். நிற்க.

வலசை முதல் இதழ் உங்களுக்கு அச்சலாத்தி. எனக்கு அதன் தலையங்கம் உட்பட எல்லாம்.....அய்யோ...அம்மா....

அய்யா....

நேசமித்ரன் கோணங்கியை நகல் எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஒரு வேளை அது ஜெராக்ஸ் என்ற அர்த்ததில் இருந்ததானால் தாங்கள் அப்படி புரிந்து இருக்கலாம். தோழரே...நகல் என்பதற்கு மூலத்தை வாசித்த அனுபவமாவது வேண்டும் பின்னட்டை முன்னட்டை, உள்ளே பக்கங்களை முகத்துக்குக் காற்று வருவது போல் புரட்டிவிட்டு அதில் உள்ள நடையை கேணைத்தனமாக வாந்தியெடுப்பதை நகல் எனச் சொல்ல முடியாது. மேலும் எவரை நகல் செய்தால் தன் பிழைப்பு ஓடும் என்பதன் பின்னால் உள்ள அரசியல்.
2,3,வருடத்துக்குள் இலக்கியச் சங்கங்களில் தன்னை பிரதிஷ்டை செய்ய பல இலக்கியவாதிகளைக் கண்டு தோளில் கைபோட்டு, இடுப்பைப் பிடித்து போட்டோ எடுப்பதுதான் நேசமித்ரனின் இலக்கிய கிராப்ஃட். பேருந்து நிலையங்களில் லேகியம் விற்பவருக்கும் அமிதாப் பச்சனுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும். நேசமித்ரன் எனும் குருவிலேகிய விற்பனையாளர்...ஒவ்வொரு பேருந்துநிலையத்திலும் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் கைதட்டி கூவியழைத்து உண்மையில் எழுத்து வைத்தியனான கோணங்கியின் பதங்களை கூவி கூவி பாட்டிலில் அடைத்து அய்யா சாமி அம்மா சாமி என விற்பதன் மூலம் தன்னை வைத்தியனாய் நிறுவுவது...என்ன ராஜசுந்தரராஜன் இது......

நேசமித்ரன் எழுத்துக்கள் வெறும் கழிவுக் குப்பை. மறுசுழற்சிக்குக்கூட உதவாத குப்பையே நேசமித்ரனின் எழுத்துக்கள். எந்த வரிகளையும் மேற்கோள் காட்டாதபடி வீசி நாறிக்கிடக்கும் பெருங்கிடங்கு. நீங்கள் வாசித்த எனது 2,3,கவிதைகளிலாவது பிரேம் ரமேஷ் சாயல் இருந்தால் விளக்கலாம். வாசித்தறிந்த தகவல்களை  கவிதைகளாகத் தொகுக்கிறார் நேசமித்ரன்...என்று கூறியிருக்கிறீர்கள். உண்மையில் அதுவும் அப்படி இல்லை அய்யா...அதன் பேர் வாசித்தவைகள் அல்ல....வாந்தியை விழுங்குவது. அஃதே.
கோணங்கியின் மீதுள்ள அன்பும் மதிப்பும்தான் அவரை என்னை விமர்சிக்கச் சொல்லும் தைரியத்தையும், அதே சமயம் போலி நகல் குப்பைகளையும் கழித்துக் கட்டச் சொல்கிறது. என் வாசிப்பைப் பொருத்தவரை அறுத்து வெட்டி ஒட்ட முடியா நமது காலத்தின் மகத்தான புனைவுக் கவிஞன் கோணங்கி.

கதிரைவேற் பிள்ளை, அபிதாம சிந்தாமணி ,சூடாமணி பிங்கலம் திவாகரம், போன்ற நிகண்டுகளையும், அறிவியல் கலைச் சொற்களையும், பின் கோணங்கியின் புத்தகங்களையும் இன்னும் ரைட்டர்ஸ் கைடு, டூரிஸ்டர் கைடுகளையும் அருகே வைத்துக் கொண்டு இணைச் சொற்களை கோணங்கி போல் எழுதுவதாக தன்னைக் கற்பித்துக் கொண்டு கோணங்கியை முழு நிர்வாணமாக்கி கதறக் கதற வன்புணர்ச்சி செய்வது. அதை விடக் கொடுமை, தான் செய்த வன்புணர்ச்சியை விமர்சனம் என அவரையே கேட்க வைப்பது. அதைவிட வன்முறையின் உச்சம் (அது பொருக்கமாட்டாமல்தான் கூட்டத்தில் ஆதிரன் நீ கோணங்கியின் பின்னொட்டு என உங்களது பாணியில் நாசூக்காகச் சொன்னார். நான் கொஞ்சம் காத்திரமாகத்தான் சொன்னேன். )நிலைமை எவ்வளவு மோசம் பாருங்கள். நான் நேரடியாக விவாதத்திற்கு வருகிறேன். கோணாங்கியை ஓரளவுக்கு வாசித்தவன் நான். அதுகுறித்த விமர்சனங்களையும் எனது பதிவில் வைத்துள்ளேன். அது குறித்தும் நேசமித்ரனிடம் உரையாட காத்திருக்கிறேன். நான் பேசும்போது மொங்கா மொங்கா என்று முகத்தில் குத்திவிடும் அபாயம் உள்ளதால் நேசமித்ரன் என்னிடம் பேசமுடியாமல் இருப்பதாக புகார் வைத்திருக்கிறார். ஒரு வேளை எனைக் குத்த வைத்து என்னை இலக்கியவாதி லிஸ்டில் இருந்து தூக்கிவிடலாம் என நினைக்கிறாரோ என்னவோ. அய்யா என் கவிதை வேறு, மூக்கில் குத்தும் நான் வேறு. அவர் என்னுடன் உரையாட விரும்பினால் உங்களை வைத்தே மத்தியஸ்தம் பண்ணலாம். நிச்சயமாக மூக்கில் குத்தமாட்டேன். இளைஞர்களின் உடல் வன்முறையை முதியவர்கள் காணும் போது ஏற்படும் மன வன்முறையை என்னால் நிகழ்த்த முடியாது.

மேலும் வாசித்தறிந்த தகவல்களை கிராப்ட் மூலம் பெருங்கவியாக மாற்றலாம் அய்யா. ஏன் சொல்கிறேனென்றால். அறிவை ஐரோப்பா மூவகையாகவும், இந்திய வேத அறிவு மூவகையாகவும், பௌத்தம் மூவகையைச் சொன்னாலும் அதில் இரண்டை இறுதியில் விலக்குவதாயும் இருக்கிறது. பார்ப்பது ( பிரதியட்சம்.... வாசிப்பது)கேட்பது(ஸ்ருதி ), ஊகம் (அனுமானம்)இது போன்ற முறைகளின் மூலமாகவே அறிவும் அனுபவங்களும் பகிரப்படுகிறது. அப்படியிருக்கையில் கிராப்ஃட் என்பதும் ஒரு தொழிநுட்பம்தான் ஆனால் நேசமித்ரன் தன்னை ஒரு இலக்கியவாதியாக அறியச் செய்யும் முயற்சியில்தான் அவரது கிராப்ஃட் அதாவது அரசியல் இருக்கிறதே ஒழிய படைப்பில் அது எதுவும் இல்லை.

நடந்த உரையாடல்களை நீங்கள் வாசித்தறிந்திருந்தால் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் எனது அனைத்து கேள்விகளுக்கும் கையப் பிடிச்சு இழுத்தியா பாணியில் பதிலாகவே அவர் வைத்தார். கேள்விக்கு பதில் என்ற எளிய வகையை அடித்து மூக்கை உடைப்பாய் என்று முன் வைத்தார்.இதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர் பூக்கோ... சாக்கோ.. தெரிதா...தெர்தா..என எழுதுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. எல்லா பொறணிகளையும் பேசிவிட்டு பேசவே இல்லை என்ற அவரது பெருங்கருணை எனக்கு உண்மையில் அச்சத்தையே ஊட்டுகிறது. ஆனால் இவ்வச்சம் எனக்கு புதிதல்ல.
நேசமித்ரன் வாசித்தறிந்த கிராப்ஃட்....என்று நீங்கள் சொல்வதுதான் பெருங்கொடுமை. அப்படி அவர் வாசித்து விதந்தோதிய கவிதைகள் ஏதேனும் உண்டா..அல்லது விமர்சனங்கள்...எதுவும் இல்லை. அவர் என்னை விதந்தோதி எழுதிய சிற்சில வரிகளும் ஆஹோ ஓஹோ வகையாறா ரசிகத் தொட்டியைச் சேர்ந்தவைகள்தான். புதிதாக எழுத வருபவர்களை நேரடியாக இல்லாமல் சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். அவர் புதிதாக எழுத வரவில்லை...புதி புதிதாக கழிவுக் குப்பைகளைத் தள்ளவே வந்திருக்கிறார். உங்கள் கருணை எனக்கு வாய்க்காவிட்டாலும், குறைந்த பட்சம் வளரும் படைப்பாளி வளர்ந்த படைப்பாளி பாதி வளர்ந்த படைப்பாளி என்ற பேதங்களில் எனக்கு உவப்பில்லை. ஒரு விமர்சனத்தை தாங்கமுடியாத இளம் படைப்பாளி எப்படி நாளை ஆகப் பெரிய விசயங்களை கையாளமுடியும்.

வளரும் படைப்பாளிகளை விமர்சித்தால் மனம் கோணும்...அப்படியா!. அய்யா... அது உண்மை இல்லை. வயதான படைப்பாளிகளை விமர்சித்தால் இங்கு சகலமும் அல்லவா கோணுகிறது. வன்மமும் வெற்றுக் கூச்சலும் தங்களது கால்களை அவமானகரமாக விரித்து நாற்காலிகளில் அமர்கிறது. என்ன செய்யமுடியும். படித்தேன் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இளையமனம் முதிய மனம் என்ற பேதமெல்லாம் எனக்கில்லை. என்னுடைய கவிதைகளுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் என் கவிதைகள் உங்களை கிறங்கடித்திருக்கிறது என நான் பொருள் கொள்ளலாமா...அவைகளில் ரமேஷ் பிரேம் பாதிப்பு அல்லது பிரேமிள் பாதிப்பு உண்டா..

ரமேஷ்-பிரேதன் எழுத்துக்கள் குறித்து நீங்கள் வைத்த வாதம் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இப்பொழுது அவர்களை நீங்கள் ஒரு முறை மறுவாசிப்புச் செய்யலாம். மேலும் அவர்கள் இருவரும் கவிதைகள் கட்டுரைகள், மற்றும் தத்துவத்தை கேள்விகேட்டல் என பழவகைகளில் தங்களது எழுத்துக்களை முன் வைத்தவர். பிரேமிள் கவிதைகளை முன் வைத்து ஒட்டுமொத்த ரமேஷ் பிரேதன் எழுத்துக்களை நீங்கள் வகைப் படுத்துவது. நீங்கள் பிரேமிளையும், ரமேஷ் பிரேமையும் இப்பொழுது மறுவாசிப்புச் செய்வதன் மூலம் அது தவறென உணரமுடியும். அவ்வளவே. அவர்கள் மூவருக்கும் படைப்பு ஒற்றுமைகளிலோ,படைப்புக்களிலோ எந்த சம்பந்தமும் இல்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் அவர்கள் தன்னளவில் படைப்பாளிகள். நிற்க.


மேலும் உங்கள் வாயிலாக இரண்டாவது வலசையில் மொழிபெயர்ப்புச் செய்த சக்திச் செல்வியின் டயானாக் கவிதை குறித்த உங்களது அபிப்ராயத்தைச் சொன்னால் மூணாவது இதழ் இன்னும் கொஞ்சம் தேறும் இல்லையா. அய்யா.... கயவாளித்தனத்தை தேர்ச்சி என்றால் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. சம்பந்தப்பட்ட கவிதையை வாசித்தவனாக நான் மொழிபெயர்ப்பாளருக்கு வைக்கும் முடிபு இதுதான் இவ்வளவு கேவலமான மொழிபெயர்ப்பைச் செய்வதற்க்கு உங்களுக்கு தைரியம் ஊட்டியது யார்....ஆரம்பத்தில் இருந்தேவா இல்லை இடையிலேயா...

மூலப் பிரதி 
மொட்டைப் பிரதி 
குட்டைப் பிரதி...
கார்லோஸ்...
பூக்கோ...
ஜிங்கிலுஸ்சுலதான்....
மங்குலுவஸ்தான்...
யஸ்கா பாரூட்வி....
என பல பெயர்களை வாந்தியெடுக்கும் நேசமித்ரன்... புகைரத பயணச்சீட்டில் உள்ள ஆங்கிலத்தைக் கூட வாசிக்கத் தெரியாதென என்னைச் சொன்ன நேசமித்ரன்... இக்கவிதையை தனது இதழில் அச்சேற்றியிருப்பது அவரது கோங்கில அறிவையும் அதன் பின்னாலுள்ள டோங்கில அரசியலையும் ஓரளவுக்கு எனக்குச் சொல்லுகிறது.

வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் அலைந்து திரிந்ததால் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் நிச்சயம் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன் என் பொருட்டாவது அக்கவிதையை தாங்கள் எனக்கு மொழிபெயர்த்து உதவினால் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்பதோடு நான் நண்பர்களோடு நடத்தும் குறளி இதழில் அச்சேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். எனக்கிந்த உதவியைச் செய்யுங்கள்.
உங்கள் விளம்பர மோகம் பற்றி நான் கூறியது உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பெருங்காயாமாகியிருந்தால் இன்னுமொரு மன்னிப்பு. நீங்கள் நேரடியாகவே தம்பி எனது படைப்புக்களை படி எனச் சொல்லலாம். என்ன படித்துவிட்டுப் பேசுவேன். அவ்வளவே.

வெளி நாடுகளில் இருந்ததால் சமகால படைப்புக்களை வாசிக்கமுடியவில்லை என நீங்கள் நேரடியாகச் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இங்கு நிகழ்காலத்திலும் எதையும் படிக்காது ஜும்புல்லிக்கா பறவை ஏகிக் கூர் நுனி தனிதமன் ஜெல்லி ஜவ்வுடு பரவல்தான் இலக்கியவாதி மனமாக தன்னை நினைத்துக்கொள்கிறது.

அய்யா இறுதியாக மறுபடியும் நான் கூறுவது ஒன்றுதான் எனது கேள்விகளுக்கு நேசமித்ரன் பதில் சொல்லாத காரணம் நான் நடுமூக்கில் நச்சுன்னு குத்துவேன் என்பதால்தான். இல்லையென்றால் அவர் நிறைய பதில்களைச் சொல்லியிருப்பார் என்ற தோற்றப் போலியையும் வாந்தியெடுக்கிறார். போதாக் குறைக்கு தன் எழுத்துக்கள் சொற்செட்டு அடர்த்தி என்றெல்லாம் சொல்லும் போது எனக்கு அளவிடமுடியா கடுப்பு வருகிறது. அகராதியில் ஒரு சொல்லுக்கு பல சொற்செட்டுகள் உண்டு அதற்கெல்லாம் நேசமித்ரன்தான் காரணமா. அயோக்கியத்தனத்தின் உச்சமில்லையா இது.

செநெல் கீறி முளைக்கா
வன்நிலத்தில் தூவிக் கிறங்க
அசோக் பைரில்லம் தெளிச்சூரிய நிழல்.

இவ்வகையானவை எல்லாம்  கவிதையா அய்யா....

அய்யா...நேசமித்ரனின் வார்த்தைகளில் உள்ள மாற்று உளவியலைமுன் வைத்து உரையாடினால் இவ்வளவு மோசமாக எழுதினால் எவனும் அடிப்பானோ என்ற ஒரு உள்ளுணர்வு பயம்தான் என நினைக்கிறேன்.
அய்யா முகவீதியையும் நாடோடித் தடத்தையும் நான் வாசிக்க எண்ணியதுண்டு. மேலும் அத்தொகுதிகளில் வசந்த குமாரின் நேர்த்தியான அட்டைப் படங்கள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்புத்தகங்களை வாங்கலாமென்றால் திருவாளர் நேசமித்ரன் தொந்தரவு செய்துவிடுகிறார். உங்களது கவிதை பற்றின ஒரு பார்வையை ஒளிக்குறிப்புகள் என அவரது தள முகப்பில் இட்டது உங்கள் மீதான வாசிப்பை என்னைத் தள்ளிப் போடச் செய்தது. அது தவறுதான். மாற்றிக்கொள்கிறேன். 

மேலும் இதில் நேசமித்ரனுக்கும் பங்குண்டு...அவரது பிளாக் முகப்பில் சே குவேரா படத்தைப் போட்டு ஒரு வாசகத்தைச் சே சொன்னதாக சொல்லியிருந்தார். “ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால் நீ என் தோழன்”, அய்யா உண்மையில் இது நேசமித்ரனின் வார்த்தைகள் ஆனால் அதைச் சே படத்தைப் போட்டு மொழிபெயர்ப்பென்ற பெருங்கேவலத்தைச் செய்திருந்தார். எனது புகை ரத பயணச்சீட்டை ஆங்கிலத்தில் வாசிக்கமுடியாத அறிவுதான் சே அப்படிச் சொல்லியிருக்கமாட்டாரே...அவரு துப்பாக்கி தூக்குற ஆளாச்சேன்னு ஆங்கில அறிவு மற்றும் அதன் சீவியான நேசமித்ரனிடம் அது நடுங்குவாயானால் இல்லை பொங்கினாயானால்....எனக் கேட்டேன். ஒரு சிறு நன்றியுடன் உடனே நடுங்குவாயானால் பொங்குவாயானால் என மாற்றம் நிகழ்ந்தது. சேர்ந்தாற்போல் ஒரு நாலு வார்த்தையை அதன் தத்துவப் பின்புலத்தோடு பெயர்க்க முடியாத ஒரு மண்ணாந்த்தை என் ஆங்கில அறிவைக் கேள்வி கேட்பது எனக்கு மிகுந்த அவமானத்தை தருகிறது. காலனியாதிக்க மலத்தையும் மக்கிய குப்பைகளையும் அதுவும் வெறு பெயர்களாய் எழுதி மதிக்கிற போக்குக்களை என்னால் மரியாதை கொடுத்து விளிக்கமுடியாதய்யா. எனக்கு ஆங்கிலம் சொல்லித் தர வெ.ஶ்ரீராம், சா,தேவதாஸ், குப்புசாமி மற்றும் கொற்றவை இருக்கிறார். மேலும் இதுவரை வாசித்து வந்த என் வாசக அறிவு ஒரு படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.

அய்யா என் வார்த்தைகளில் உள்ள தவறுகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் மிக்க மகிழ்வேன். மேலும் இளைய மூத்த என்ற பதங்களில் எனக்கு உவப்பில்லை. காலந்தாழ்த்தி பிறந்ததனால் நான் என்ன செய்யமுடியும். காலத்தைக் குறை கூற முடியாதில்லையா. நாம் குறிப்பதோ மனிதக் காலம்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை பொருட்படுத்தி பதில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. அதேபோல் இக்கடிதத்தில் நான் வைத்திருக்கும் கேள்விகளையும் தங்கள் பார்வையில் விளக்கினால் என்னால் உரையாடமுடியும். 

ஆனால்...அய்யா.... எனது எந்தக் கேள்விக்கும் பதில் வைக்காது அரைவேக்காட்டுத் தனமாய் அடிப்பேன் எனப் பயந்து ஓடியதாகச் சொன்ன நேசமித்ரனுக்குச் சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது... அடிக்கமாட்டேன்...வாங்க பழகலாம் என்பது உட்பட...அதே காத்திருப்புடன்...

எனது தொகுதிகள்

1 ஆகவே... நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன.
2 கள்ளக்காதல். ( ஆதிரனோடு சேர்ந்து) 
3 நித்ரா நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி.
4 எர்னெஸ்த்தோ செ கெபாராவைக் கொலை செய்தல்.
அய்யா இவைகளை நீங்கள் காசு கொடுத்து கூட வாங்கவேண்டாம். உங்கள் மேல் உள்ள ப்ரியத்தால் இதை இலவசமாகவே அனுப்பி வைக்கிறேன், விலாசத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். ஆனால் அதே ப்ரியத்தோடு உங்கள் கவிதை பற்றி கொட்டை எழுத்தில் தனது பக்கத்தில் பதிந்திருக்கும் நேசமித்ரன் எனும் ஒரு எழுத்தாளக் கழிவுக் குப்பைக்கு விமர்சனமாக எழுதி அனுப்புங்கள். சம்பந்தப் பட்ட தொகுதிகளில் ரமேஷ் பிரேம் பாதிப்பிருந்தால் உடனே சுட்டுங்கள்.ஏனெனில் உடனே என் எழுத்தை நான் மறுபடி வாசிக்க வேண்டும். அல்லது எழுதுவதை நிறுத்த வேண்டும். அதோடு நான் வைத்த வலசைகுதிரையை பற்றின கேள்விகளுக்கு அவரை பதிலளிக்கச் சொல்லுங்கள்...அதில் முதல் கேள்வி சக்தி செல்வி மொழிபெயர்த்ததாகச் சொல்லப்படும் டப்பா மொழிப்யர்ப்பு பற்றியும்...மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளையும் இணைக்கச் சொல்லுங்கள். டயானா பற்றிய குறிப்பிருந்தது...டயானாவைச் சீரழித்தவர் பற்றின குறிப்பும் எனக்குத் தேவை...

உங்களை நம்பி காத்திருக்கும்
வசுமித்ர.


14 comments:

  1. வணக்கம் வசுமித்ர. தொடர்ந்த இத்திசை நோக்கிய தாக்குதலின் பயன் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? இனியும் இதன் தொடர்ச்சிக்கான தேவை இருக்கிறதா?

    ReplyDelete
  2. வணக்கம். வா. மணிகண்டன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொள்கீறீர்கள். மகிழ்ச்சி. மணிகண்டன். நடக்கும் விவாதத்தை நீங்கள் முழுமையாக படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். கேள்விகளை முன் வைத்தால் நேசமித்ரன் அவர்கள் நீ அடிப்பாய் அதனால் முகப்புத்தகத்தை விட்டு நீக்கினேன் அறுவெறுப்பாக இருக்கிறது என்றார். இப்பொழுது நீங்கள் இதைத் தாக்குதல் என்றீர்கள். மணிகண்டன் உண்மையில் நான் அடிக்கத்தான் ஆசைப்படுகிறேனே என்ன. என் கேள்விகளை முன் வைத்து ராஜசுந்தரராஜன் பதில் சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்வார் என்று நினைக்கிறேன். அதைவிடுங்கள். சிற்றிதழ் என்று ஒன்றுக்குப் பெயர் வைப்பதன் மூலம் அதில் உள்ள எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் வாசிக்கவேண்டுமா என்ன. எல்லாவற்றிற்கும் பயன் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள். அப்படியென்றால் தாங்கள் கேள்வியின் பயன் என்ன. நான் ஒரு வாசகன் மணிகண்டன்.....பாராட்டினால் மட்டும் ஈறுகள் தெரிகிறதே....கேள்விகள் என்றால் தாக்குதலா...தாங்கள் விளக்கலாம். இதன் தொடர்ச்சிக்க்கு ராஜ சுந்தரராஜன் பதில் சொல்வார். இதுவும் தொடரும். ஒரு வாசகனாக நான் படித்தவற்றை விமர்சனம் செய்வது என்று முடிவுக்கு வந்துள்ளேன். என் விமர்சனம் தேவைப்படுகிறது என நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்களின் தேவை கருதியும் இது தொடரும். இதில் உங்களுக்குச் சொல்ல ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தாராளமாகச் சொல்லலாம். இதன் பயன் நிச்சயம் கோணங்கியைக் காப்பாற்றூவதாகவும்...வாசகர்களை காப்பாற்றவுமாக இருக்கும் என நான் முன்னமே சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  3. இந்த இடத்தில் தாக்குதல் என்ற சொல் ஆளை அடித்தல் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக வேறொருவருடன் எனக்கு சிறு சர்ச்சை உருவானது. மோதலினால் பயனில்லை என நினைத்து பின் வாங்கினேன். அந்தச் சமயத்தில் என்னிடம் பேசிய இன்னொரு நண்பர், ஒருவனை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி நின்றுகொண்டு ஓங்கி அறைய வேண்டும் என்றார். வெறும் ஸ்டேட்மெண்டாக இது வன்முறையாகத் தோன்றினாலும் அவர் சொன்னதன் அர்த்தம் அழுத்தமான தரவுகளுடன் விவாதத்தை முன் எடுக்க வேண்டும் என்பதாக எடுத்துக் கொண்டேன். அதே ‘தாக்குதல்’தான் நான் பயன்படுத்தியிருப்பது. தவறான அர்த்தத்தில் இல்லை.

    முந்தைய எனது கேள்வியின் நோக்கம்- இந்த விவாதம் தொடர்வதற்கான தேவை இருக்கிறதா என்பதை கேட்கவே.

    ReplyDelete
  4. வணக்கம் மணிகண்டன்....நான் தாக்குதல் குறித்தான சந்தேகங்களை உங்களிடம் கேட்கவில்லை. நடந்த உரையாடலில் ஒருவர் நீ அடிப்பாய் வன்முறையாளன் அதனால் உன்னை பிளாக் செய்தேன் என்று சொல்லும் போது என் தரப்பை சொல்வது தேவையற்றது என்று தாங்கள் நினைத்தால் என்னால் எதுவும் செய்யமுடியாது. மேலும் உங்களுக்கும் எனக்கும் நடந்த சில பதிவுகள் எந்தத் தேவை குறித்து நடந்ததோ அதே தேவையை முன்னிட்டே இதுவும் நடக்கிறது. இதன் தேவை குறித்த உங்களது சந்தேகம் எழும்பும் இடத்தை நீங்கள் தெளிவாக விளக்கினால் நானும் பேசலாம். நேசமித்ரன் குறித்த எனது விமர்சனங்களில் ஏதேனும் பொருட்படுத்த முடியாத விளக்கங்கள், உங்களுக்கு இது தேவையா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தால். அது குறித்து சொல்லுங்கள் விரிவாகப் பேசலாம்.

    ReplyDelete
  5. வசுமித்ர- நேசமித்ரனின் ”நீ அடிப்பாய்” என்ற குற்றச்சாட்டுக்கு எதிரான உங்கள் தரப்பு விளக்கத்தை நீங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டதாகவே நம்புகிறேன். உங்களின் படைப்புகளை ரமேஷ் பிரேதனின் நகல் என சொன்ன நேசமித்ரன் அதற்கான தரவுகளை முன் வைத்ததாகத் தெரியவில்லை. அவர் அதற்கான தரவுகளை முன் வைக்காத போதும் உங்களின் வினாக்களுக்கான பதில்கள் சொல்லப்படாதபோதும் இந்த தொடர்ச்சியான பதிவுகளுக்கான தேவை குறித்து சந்தேகம் வருகிறது.

    ReplyDelete
  6. வசுமித்திரன்,
    ஏதாவது போலித்தனத்தையோ, ஏமாற்றுதலையோ குறிக்க, " அரசியல் " என்ற பதத்தைப் பிரயோகிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் என்றாலே அநாகரிகமாகப் பார்க்கப் படுவதையே இது காட்டுகிறது.

    ReplyDelete
  7. வணக்கம் மணிகண்டன்...என் தொடர்ச்சியான பதிவுகளுக்கு இதுவரை எந்த பதிலும் வராதது எனக்கும் பெரும் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. என்ன செய்யலாம்....

    ReplyDelete
  8. வணக்கம் குருசந்திரன்...உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடே. ஆயினும் மேற்கண்டது அரசியல் மக்களுக்கானது என்பது போய் எதையும் விற்பனைப் பண்டமாய் மாற்றி போலித்தனத்தை ஊன்றச் செய்து, விளம்பரங்கள் மூலம் தனது கருத்தே சிறந்த கருத்து என்பதையும் உள்ளடக்கமாகக் கொண்டது. மேலும் அரசியல் என்றலே அநாகரீகம் என்று பொருள் கொள்பவனல்ல நான். அதே சமயம் புனிதப் படுத்துவதையும்.....

    ReplyDelete
  9. வசுமித்திரன்,
    ஏதேனும் ஒரு விஷயத்தை நாம் புனிதமாகப் பார்த்துத் தானே ஆகே வேண்டும். ஒரு ' ஒழுங்கான அமைப்பிற்கு ' அதுதானே அடிப்படை. நீதிமன்றத்தில் கீதையை வைத்து " சத்தியம் " வாங்குவது கூட இதன் அடிப்படையில் தானே. அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்கள் சராசரிகள் தானே !

    ReplyDelete
  10. எனக்கு சத்தியம் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அவசியம் ஏற்படின் கேட்பவர்களுக்காக பொய்ச் சத்தியம் செய்வேன். எதையும் புனிதமாக பார்க்கக் கூடாதென்கிற உயர்ந்த புனிதம் என்னுடையது. அவ்வளவே....பெரும்பான்மையான மக்களுக்கு கடவுளும் ஒரு பொம்மைதான்.

    ReplyDelete
  11. வசுமித்ரன்,
    யதார்த்தத்தின் முன்பு எப்பேர்பட்ட புனிதமும் அடிபட்டுப் போகிறது. இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பவனுக்கு உணவு கொடுக்க கடவுள் வரமாட்டார். யதார்த்தம் தான் எந்த மனிதனின் ரூபத்திலோ வந்து பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறது. அதுவும் வாயைத் திறந்து கேட்டால் தான் கிடைக்கும். பசித்திருக்கும் போது கடவுளை நிந்தித்த அந்த மனிதன், பசி எனும் துன்பம் விலகிய பிறகு, மீண்டும் அது போன்ற ஒரு துன்பம் ஏற்படாமல் இருக்க, ஏதாவது ஒரு வேலை தேடித் போகிறான். வேலை கிடைப்பது அவன் கையில் இல்லை. அவனுக்கு நம்பிக்கை கொள்ள கடவுள் தேவைப்படுகிறார். அந்த நம்பிக்கையின் படி அவனுக்கு வேலையும் கிடைக்கிறது. இப்போது அவன் அந்தக் கடவுளுக்கு அதாவது தன்னை மீறிய ஒரு சக்தி ஏற்படுத்திய நம்பிக்கைக்கு அவன் நன்றி உள்ளவனாக இருக்கிறான். அந்த நம்பிக்கைக்கு ஒரு உருவம் கொடுக்க முனைகிறான். அந்த உருவத்தை இறைவனின் குறியீடாகக் கருதுகிறான். அவன் தொடர்ந்து நம்பிக்கையோடு இருக்க, அந்த உருவத்தை அவன் புனிதமாகக் கருதுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

    ReplyDelete
  12. கொஞ்சம் புரிகிறது கொஞ்சமே கொஞ்சம்

    ReplyDelete
  13. வணக்கம் குருச்சந்திரன். பிடித்துக் கொள்ள ஏதாவது வேண்டும்தானே.

    வணக்கம் கென். புரிந்தவரைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. வசு,

    எனது வேண்டுகோள் மிக எளிமையாக இருந்தது: //இருவருமே, கோணங்கி - நேசன் & ரமேஷ் ப்ரேம் - வசு மேற்கோள் காட்டாமலே பழித்துப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்டுவார்களே ஆயினும் இது என்னத்துக்கு?//

    இதை இப்படியே நேசமித்ரன் வலைத்தளத்திலும் இட்டு அவரையும் வேண்டி இருந்தேன்.

    அடுத்து, நீங்கள் என்னை விளித்து ஒரு பதிவு இட்டிருந்ததினால், அதை மதித்து அதிலும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதில், விமர்சன எழுத்தில் ஈடுபடும் அளவுக்கு வலுவில்லை எனக்கு என்றும் எழுதி இருந்தேன். பிறகும் என்னை மொழிபெயர்க்கும் வேலைக்கும் விமர்சனத்துக்கும் தூண்டுகிறீர்கள்.

    உங்கள் நூலகளையும் ரமேஷ் ப்ரேம் நூல்களையும் கட்டாயம் வாசிப்பேன். அவ்வளவுதான் என்னால் முடியும். நன்றி! வாழ்க!

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...